Sunday, July 06, 2008

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

இஸ்லாம், அழைப்புப் பணி

4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்

நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) 'ஹிர்கலுக்கு' எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ஹிர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.

வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ''நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)

இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் ''நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:

அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)

அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.

மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?

அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.

மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.

(தனது மொழிபெயர்ப்பாளரிடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.

அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.

மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?

அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.

மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?''.

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?

அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.

மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.

மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை.

மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?

அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)

மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?

அபூஸுஃப்யான்: ஆம்!

மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?

அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.

மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?

அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.

அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளரிடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:

உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ''அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'' என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார். அடுத்து, உன்னிடம் ''இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'' எனக் கேட்டேன், ''இல்லை'' என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.

அடுத்து உன்னிடம் ''இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோர்களில் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். அடுத்து உன்னிடம் ''(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'' எனக் கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா''? என்று உன்னிடம் கேட்டேன் ''அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'' என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.

அடுத்து உன்னிடம் ''அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'' என்று கேட்டேன். ''அதிகரிக்கின்றனர்'' என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து உன்னிடம் ''அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'' என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள். அடுத்து உன்னிடம் ''அவர் மோசடி செய்ததுண்டா''? என்று கேட்டேன். நீ ''இல்லை'' என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.

அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ''அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய். ''நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'' என்றார். பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.

அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ''எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்' பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.

அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.

மேலும், நபி (ஸல்) அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா (ரழி) திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் 'ஹிஸ்மா' என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவன் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபியவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில் ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த 'ஹிஸ்மா' என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது (ரழி) அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.

ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி (ஸல்) அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவன் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர். எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாரிஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.

போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்யூம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

2 comments:

Unknown said...

இப்போது நான் முக்தஸர் ஸஹீஹ் முஸ்லீமின் முன்றாவது பாகம் (ட்ராப்ட் பிரதி) படித்துக் கொண்டிருந்தேன். இதே ஹதீஸ் அங்கேயும் உள்ளது.

நபியவர்களின் எந்த வார்த்தையில் குற்றத்தைக் கண்டார்களோ தெரியவில்லை.

நேரடியாக மூல நூலைப் பார்க்க வேண்டும். மொழித் தகராறெனில் மூலத்தின் மொழி பெயர்ப்பை பார்க்கலாம்.

மொழி பெயர்ப்பின் மொழி பெயர்ப்புக்கு மீண்டும் மொழி பெயர்த்தால் அவர்களின் இந்த நிலைதான் ஏற்படும்.

எடுத்திட்டமைக்காக ஜஸாகல்லாஹ் தோழரே.

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

பிற மத நண்பர்கள் விமர்சனம் செய்திருக்கும் பதிவு,

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

விளக்கம் அடுத்த பதிவில்.