Tuesday, January 07, 2014

உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?




உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை; வைத்து விளையாடினால் அது பொம்மை. இங்கு எண்ணம் - நோக்கம் வேறுபடுகின்றது. மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்துவிடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் இருந்தாலோ அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்தனர்.

நபி(ஸல்) அவர்கள், ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பாளர்: ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2091).

சிறுவர் சிறுமியருக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் நோன்புக்கான பயிற்சி அளிக்க நபித்தோழியர் சிறுவர், சிறுமியரை நோன்பு நோற்க ஆர்வமூட்டுவார்கள். குழந்தைகள் பசியில் அழுதால், விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்து அவர்களின் கவனத்தைத் திருப்புவார்கள் என மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம். விளையாட்டுப் பொருட்களில் பொம்மைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக, முதல் பகுதியில் இரண்டாம் வகை ஹதீகளில் 5,6,7 ஆகிய அறிவிப்புகளை மீண்டும் பார்வையிடுவோம்.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். (முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா! இவை என்ன?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, "அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். "குதிரையின் மேல் என்ன?" என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். "குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

7ஆவது அறிவிப்பில், கைபர் அல்லது தபூக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது. நபி (ஸல்) அவர்கள் கைபர் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது என்று வைத்துக் கொண்டாலும், கைபர் யுத்தம் முடிந்த ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

6ஆவது அறிவிப்பில், ''ஒன்பதாம் வயதில் விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன'' என்பதையும் 7ஆவது அறிவிப்பின்படி கைபர் போர் நடைபெற்ற காலத்தையும் கணக்கிட்டால்  உயிரினங்களின் உருவ பொம்மைகள் சுமார் ஆறு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்திருக்கின்றன என்பது தெளிவு.

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள். அன்று மாலை நேரத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள் (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை). (அறிவிப்பாளர்கள்: மைமூனா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4273, நஸயீ 4283, அபூதாவூத் 4157, அஹ்மத். இதே கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு: முஸ்லிம் 4272).

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துத் திரும்பும்போது, மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களை மணமுடித்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் நபியவர்களின் துணைவியரில் ஒருவரான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நாய் நுழைந்திருந்து பிறகு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு அல்லது எட்டாம் ஆண்டு நடந்திருக்க வேண்டும் என்று விளங்க முடிகிறது.

இறைச் செய்தியைக் கொண்டு வரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எந்த நேரத்திலும் - எந்தப் பொழுதிலும் செய்திகளைச் சொல்ல வரக்கூடியவர். நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு ஜிப்ரீல் (அலை) வழக்கம்போல் வரும் தருணத்தில் வீட்டிலிருந்த நாயும், உயிரினங்களின் உருவங்கள் வரைந்த திரைச் சீலையும் தடையாக இருந்து, ஜிப்ரீல் (அலை) வீட்டிற்குள் செல்ல இயலாமல் ஆனது. ஆனால், ஆறு ஆண்டு காலம் ஆயிஷா (ரலி) அவர்களின் உயிரின உருவ பொம்மைகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவை தடையாக இருக்கவில்லை! நபி (ஸல்) அவர்களும் உருவ பொம்மைகளை அப்புறப்படுத்தச் சொல்லவும் இல்லை! இதிலிருந்து உருவ பொம்மைகளை வணங்கி வழிபாடு நடத்தாமல், மதிப்பற்ற வகையில் விளையாட்டுப் பொருளாக வீட்டில் வைத்திருக்கலாம் என விளங்குகிறோம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிருள்ளவற்றின் உருவ பொம்மைகளை வைத்து விளையாடியிருப்பதால், பொம்மைகள் வீட்டிலிருக்கத் தடை இல்லை என்பது தெளிவு. இவை கார்ட்டூன், அனிமேஷன் போன்றவற்றுக்கு அனுமதியாகவுள்ளது. மேலும், கார்ட்டூனும் விளையாட்டுப் பொம்மைகளே. அவை தந்திர அமைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கருவியின் மூலம் இயக்கப்படுகின்றன. கார்ட்டூன் மூலம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுத்தரலாம்!

குறிப்பு: நாய்கள் பற்றிய மேலதிகத் தகவல்.

இறைமறை 005:004 வசனக் கருத்தின்படி பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், வேட்டைப் பறவைகளை வளர்க்க - வைத்திருக்க அனுமதியுண்டு.

"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).

வேட்டை நாய்களையும், காவல் நாய்களையும் வளர்க்கலாம். நாய் வாய்வைத்தப் பாத்திரத்தை ஏழு தடவை மண்ணிட்டுக் கழுவவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நாய்களை வீட்டிற்குள் நுழையவிடாமல் வெளியில் வைத்து வேட்டை நாய்களை / காவல் நாய்களை வளர்க்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகள் என்று சிலர் வீட்டில் படுக்கையறையில் வைத்து வளர்க்கின்றனர். என்னதான் உயர்சாதியாக இருந்தாலும் நாய், நாய்தான். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் தளர்த்தப்பட்டு, வெறிநாய்களையும், ஷைத்தானைப் போன்று திடுக்கிடச் செய்து இடரளிக்கும் கன்னங்கரிய நாய்களையும் கொல்லும்படி கூறிய சட்டம் நீடிக்கின்றது.

அடுத்து,

முதல் வகை ஹதீஸ்களில் 3வது ஹதீஸில், "என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் பார்ப்போம்.

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

படைத்தல் என்பது இறைவனின் தனித் தகுதிக்கு மட்டுமே உரிய ஓர் ஆற்றல். இதில் யாருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை! இந்தக் கருத்தில் இறைமறையில் பல வசனங்கள் உள்ளன. இறைவனுக்கு இணைகற்பித்தோர் தன்னிச்சையாகப் பல தெய்வங்களை உருவாக்கி, அந்தச் சிலைகளிடம் தமது தேவையைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தனர். அப்போது அருளப்பட்ட வசனம் இது,

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் செவிசாயுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் ஓர் ஈயைக்கூடப் படைக்க இயலாது. ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் ஈயிடமிருந்து அதை மீட்டெடுக்கவும் அவர்களால் இயலாது. (உதவி) தேடுபவனும், தேடப்படுபவனும் பலவீனர்களே! (அல்குர்ஆன் 022:073).

இறைத் தன்மையின் முதல் தகுதி, அவன் படைப்பாளனாக இருக்கவேண்டும். நீங்கள் அழைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட அல்லது ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது என்று கூறி, ''மனிதர்களே! ஓரிறைவனைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவையெல்லாம் பொய்க் கடவுள்களே'' என உரைத்து, தமக்குத் தாமே எவ்வித உதவியும் செய்ய இயலாத பொய்த் தெய்வங்களின் முன் நின்று உங்கள் தேவைகளை வேண்டுவது மூடநம்பிக்கை என்று மேற்கண்ட வசனம் இடித்துரைக்கின்றது.

இங்கு, தாம் வடிவமைத்தவற்றின் முன் தாம் அடிமையாக நின்று வணங்கி வேண்டுவது கண்டிக்கப்பட்டு, சிலைகளுக்கு இல்லாத ஆற்றலை இருப்பதாக உணரும் மூடநம்பிக்கை தகர்க்கப்படுகின்றது.

மற்றபடி, படம் பார்த்துப் பெயர் சொல் எனக் கொசுவத்தி விளம்பரத்திற்காக கொசுவை வரைந்தவர் கொசுவைப் படைத்துவிட்டார் என்று அர்த்தம் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் உள்ளது போல், கோதுமையை வரைபவர் கோதுமையைப் படைக்கிறேன் என்ற எண்ணத்தில் ஓவியம் தீட்டுவதில்லை / அதைப் புகைப்படம் எடுப்பதில்லை. மாறாக, தாம் வடிக்கும் சிலைக்கு அல்லது வரையும் உருவத்திற்கு ஆற்றல் இருப்பதாக எவர் நம்புகிறாரோ அவருக்குத்தான் ''ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது'' என சவால் விடப்படுகின்றது!

ஓர் உயிரின உருவத்தை நகலெடுக்க, இறைவனின் அசல் படைப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிப்படம் ஓடிக்கொண்டிருக்க, அதில் பேசுபவர் எதிரில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் தான் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதனால் ஒளிப்படத்தில் வருபவர் படைக்கப்பட்டார் என்று பொருள் கொள்வது பிற்போக்கு சிந்தனை! ஒளிப்படத்தில் பேசியவர் மரணித்து விட்டார் என்று அறிந்தபின், ஒளிப்படத்தில் உள்ளவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் நம்பமாட்டோம். ஆகவே, படைப்புக்கும், படைப்பின் நகலுக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.

இறுதியாக,

குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் இதுவரை எடுத்துரைத்தக் கருத்துக்களிலிருந்து, உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்கிற காலச் சூழ்நிலையில் இருக்கிறோம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில்தான் உருவப்படத்தின் தேவையுள்ளது எனச் சிலர் சொல்கின்றனர். ஆனாலும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களும் அன்னிய நாடு செல்ல வேண்டுமாயின் பாஸ்போர்ட் வேண்டும், பாஸ்போர்ட்டுக்கு உருவப்படம் கட்டாயத் தேவை என்பதையும் நாட்டின் குடியுரிமைக்கான உருவப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டையும் கட்டாயத் தேவை என்பதையும் மறந்து இவர்கள் கருத்துரைக்கின்றனர்.

இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட நாடுகளிலும் உருவப்படங்கள் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன. அந்நாட்டு ரூபாய் நோட்டுக்களிலும் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேலை செய்வதற்காக அங்குத் தங்கும் அன்னிய நாட்டினருக்கு புகைப்படம் பதியப்பட்ட அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டையும் வழங்கப்படுகின்றன. இதை ஆதாரமாக இங்குச் சொல்லவில்லை. இவற்றை எதிர்ப்பதற்கு இஸ்லாத்தில் சான்றுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்!

மக்கள் தொகை அதிகரிக்க நிர்வாக வசதிக்காக பூமியில் நாடுகளின் எல்கைகள் போடப்பட்டன. ஒரு நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலம் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நகரங்கள் கிராமங்கள் என அடையாளப் படுத்தப்படுப்பட்டன. ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரின் ஊர் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது என்கிற முகவரியுடன் அவரின் புகைப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயமாக அவரிடம் இருந்தாக வேண்டும். இது காலத்தின் தேவை! இதற்கு இடையூறாக இஸ்லாம் சட்டம் எதையும் விதிக்கவில்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

காலத்துடன் கைகோர்த்து பயணிக்கும் விஷயமிது. உருவப்படம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தாத ஒன்றை முஸ்லிம்களின் மீது திணித்தால், மக்களுடன் சேர்ந்து வாழ இயலாமல் முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகித் தனித்து விடப்படுவார்கள். 'அவை எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை' என்று குடும்பத்துடன் வனம் சென்று வசித்தாலும் அங்கும் ஆட்சியாளர்களின் கை நீண்டு ID CARD - அடையாள அட்டையைக் காட்டு என அதிகாரம் செலுத்தும். எனவே, உருவப்படங்கள் விஷயத்தில் இஸ்லாம் மீதான பிற்போக்குச் சிந்தையைக் களைந்து, இஸ்லாம் இம்மண்ணுக் கேற்ற மார்க்கம் என்கிற முற்போக்குச் சிந்தனையை வளர்ப்போம்!
முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ன்றி: சத்தியமார்க்கம்.காம்

Wednesday, December 04, 2013

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

அல்லாஹ்வின் பண்புகளுக்கு நிகராக ஒப்பிட்டு எவரையும் சொல்ல இயலாது. மனிதனின் பண்புகளோடு இறைவனின் பண்புகளையும் சமமாகக் கருதிடக்கூடாது. அன்பு, கருணை, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை இவை மனிதர்களுக்கும் உண்டு என்றாலும் இறைப் பண்புகளின் உயர் நிலைக்கு நிகராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட, அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று தமிழில் கூறுகிறோம்.

அன்பு, பாசம், கருணை, இரக்கம், பரிவு என இவ்வாசகங்களுக்கெல்லாம் நூலிழை வித்தியாமேயன்றி இவை நெருக்கமான ஓர் அர்த்தத்தைத் தரும் பல சொற்களாகும்.
 
(நபியே) நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும், அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அதனை அவனே தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்அன் 022:065)

தனது அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடக்கூடாது என்று வானத்துக்குக் கட்டளையிட்டு இறைவன் தடுத்து வைத்திருக்கிறான். இவ்வாறு தடுத்து வைத்திருப்பது மனிதர்களின் மீதான அளவற்ற கருணையினாலும், நிகரற்ற அன்பினாலுமே என்று விவரித்து இறைமறை வசனங்கள் கூறகின்றன.

இவ்வசனத்தில் அன்பும், கருணையும் சேர்ந்தாற்போல் சொல்லப்பட்டாலும், கருணையைவிட அன்புக்கு ஒருபடி உயர்வுண்டு என்பதை வரும் நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம்,

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: (புகாரி 6000, முஸ்லிம் 5310, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)

தாயின் கால்களுக்கிடையில் விளையாடும் குட்டியை மிதித்து விடுவோமோ என்கிற உள்ளுணர்வில், உயிரினப் பிராணிகளும் கால்களை உயர்த்திக்கொள்வதும், தன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அன்னியப் பறவைகள் குஞ்சுகளின் அருகில் வந்தால் தாய்ப் பறவை சீறிப் பாய்ந்து போரிடுவதும் அன்பு எனும் பாசத்தினால் ஏற்படும் உள்ளுணர்வாகும். இது உயிரினங்களின் உறவினால் ஏற்படும் இயல்பு. அல்லாஹ் இரட்சகனாக இருப்பதால் மனிதர்களிடம் அன்பு செலுத்துவது இறைவனின் நியதி எனலாம்.
தாய்மையின் அன்புக்கு நிகராக எவரையும், எவற்றையும் ஒப்பிட்டுச் சொல்லிட இயலாது. தாயின் அன்பைவிட அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த அன்பு வைத்துள்ளான்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரி 5999 முஸ்லிம் 5315)

இறைவன் பூமியில் இறக்கிய நூறில் ஒரு பங்கு அன்பிற்கே உயிரினங்கள் உறவுகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகின்றது என்றால் மீதம் தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடம் வைத்திருக்கும் அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையவன் என்று சொல்லுவதே பொருத்தமாகும்.

கருணை

(நபியே) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், ''உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன் என்றும், குற்றவாளிகளான கூட்டாத்தாரை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட மாட்டாது'' என்றும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 006:147)

''இறைவன் விசாலமான கருணையுடையவன்'' என்பதை ''இறைவன் விசாலமான அருளுக்குரியவன்'' என்றும் சொல்லலாம். அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மிகப் பெரும் கருணையாளன் என்பதால், குற்றவாளிகளுக்கு அவன் அளிக்கவிருக்கும் தண்டனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதையும் மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே, குற்வாளியின் மீது நீதிபதிக்கு அன்பு ஏற்பட்டால் சட்டத்தை வளைப்பான் என்பது பூமியிலுள்ள நீதிபதிகளுக்குப் பொருந்துமேயன்றி, வானத்திலுள்ள தன்னிகரற்ற தனி நீதிபதி இறைவனுக்குப் பொருந்தாது.

...நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். (அல்குர்ஆன் 6:165)
பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுக்குரியவனுமாவான். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை! அவனிடமே மீளுதல் உள்ளது. (அல்குர்ஆன் 040:003)

''அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்'' என்கிற இக்கருத்திலமைந்த ஏராளமான வசனங்களை இறைமறையில் காணலாம். இறைவன் தீர்ப்பளிப்பதில் மேலான நீதிபதி:
 
..தீர்ப்பளிப்போரில் நீ மிகச் சிறந்த தீர்ப்பளிப்பளிப்பவனாவாய்... (அல்குர்ஆன் 011:045) 

அல்லாஹ் தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா? (அல்குர்ஆன் 095:008)

இறைவனின் பண்புகள் அனைத்தும் அளவற்றவையே ஆனாலும் அவனது பண்புகள் அவனுடைய தீர்ப்புக்கு எவ்வித இடையூறாக அமையாது.
மனிதர்களிடையே எவ்வாறு அன்பு ஏற்படுகின்றதோ அதுபோல் மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நபிமொழி வலியுறுத்துகிறது.

''மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி 7376, முஸ்லிம் 4638,  திர்மிதீ, அஹ்மத்)

''என் மீது அன்பு செலுத்து''
''அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள்'' என்று இஸ்லாம் எங்கும் கூறவில்லை என்பது சரியான புரிதல். ஏனெனில் ''அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்" (112:002) அன்பு, கருணை எதுவுமே அவனுக்குத் தேவையற்றதாக இருக்க அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள் எனச் சொல்வதும் பொருத்தமாக இல்லை! - தேவையற்றவனுக்கு அன்பு தேவை இல்லை!. ஆனால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று இறைமறை கூறுகின்றது:

அல்லாஹ் அல்லாதவர்களை (அவனுக்கு) இணையாளர்களாக எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால், நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிக உறுதியானவர்கள்... (அல்குர்ஆன் 002:165)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்... (அல்குர்ஆன் 003:031)

அல்லாஹ்வை நேசித்தல் என்றால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி இஸ்லாம் வழங்கியுள்ள வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி, இஸ்லாமின் வழிகாட்டல்படி வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வதுமாகும். இவ்வாறு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை அல்லாஹ்வும் நேசிப்பான்.

விரிவஞ்சி இத்துடன் முடிக்கின்றோம்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது. (006:149)
(இறைவன் மிக்க அறிந்தவன்)

குர்ஆனில் இருக்கிறதா?

ஐயம்:
"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" எனும் வசனத்தை தமிழில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா? - சாணக்கியன்.

தெளிவு:

பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான், அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள் இணைந்து, அரபு மொழியின் சந்தி இலக்கணத்துக்கு இயைந்து, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான தமிழ்சொற்கள் முறையே:

பி=ஆல்
இஸ்மு = பெயர்
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய கடவுள்
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்

அன்பு, அருள், பரிவு, கருணை, இரக்கம் போன்ற பல பொருள்களைத் தன்னகத்தே கொண்ட 'அர்ரஹீம்' எனும் செறிவுச் சொல்லானது 'ரஹிம' எனும் வேரடி வினையிலிருந்து பிறந்த பண்புப் பெயராகும். 'ரஹீம்' எனும் சொல்லோடு இணைந்த 'அல்' எனும் பெயர்ச் சொல், குறிப்பாக உணர்த்துவதற்குப் பயன் படுத்தப்பட்டதாகும். அதாவது குறிப்பாகு பெயர். 'அல்-ரஹீம்' எனும் சொல், அரபு மொழியின் புணர்ச்சி இலக்கணப்படி 'அர்ரஹீம்' என மொழியப்படும்.

எனவே, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்னும் அரபுச் சொற்றொடருக்கு, "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்" எனும் தமிழ் மொழி பெயர்ப்பு, சரியானதே!

இந்தச் சொல், இறைமறையின் 113 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இறை வசனங்கள் சிலவற்றின் உள்ளும் இடம்பெற்றுள்ளது. அவையாவன:

"மேலும், உங்கள் கடவுள் ஒரேயொருவன்தான்; அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்" 002:163.

"வணக்க வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்" 059:022.

"(இவ்வேதம்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிமிருந்து இறக்கியருளப்பட்டது" 041:002.

"திண்ணமாக நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்பதை (நபியே!) என் அடியார்களிடம் அறிவித்துவிடுவீராக!" 015:049.

oOo


ஐயம்:

திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி "அனுவளவும் நீதி தவறாத நீதிமான்" என்று சொல்கிறான். "தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்" என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் "என் மீது அன்பு செலுத்து" என்று சொல்லவில்லை. நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான். "அன்பே சிவம், God is love" போன்ற சிந்தனையெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. "கண்ணன் மீது காதல் வரலாம். அல்லாஹ் மீது பயம் வரவேண்டும்" என்பதுதான் இஸ்லாம்.

அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? - சாணக்கியன்.

தெளிவு:

"என் மீது அன்பு செலுத்து" என்று அல்லாஹ் தன் அடியார்களுக்கு எந்தக் கட்டளையும் இடவில்லைதான். மாறாக, "என்னை அஞ்சி வாழுங்கள்" என்பதாகவே இறைமறை நெடுகிலும் கட்டளையிடுகின்றான். அதேவேளை, "பசியுடன் உணவு கேட்டு உங்களிடம் வருபவருக்கு அன்புடனும் பரிவுடனும் உணவளிப்பது என்னிடம் நீங்கள் காட்டும் அன்புக்கு ஒப்பாகும்" என்று அல்லாஹ் கூறுவதாக அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம் ஹதீஸ் 4661 கருவின் சுருக்கம்).

"அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி" என்பதை 'அர்ரஹீம்' எனும் சொல்லுக்குத் தமிழாக்கம் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால், முதல் ஐயத்துக்கான தெளிவைப் படித்துக் கொள்ளுங்கள். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன் என்பது மட்டுமே சரி" என்று ஒற்றைப்படுத்தினால் அது பிழையாகும். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன்" என்பதும் சரி. போலவே, அன்பாளன், மன்னிப்பவன், கொடையாளன், நீதிபதி ஆகிய அவனுடைய எல்லாப் பண்புப் பெயர்களுக்கும் நிலைமொழியாக 'நிகரற்ற' வரும். ஏனெனில் அவனே நிகரற்றவன்தான்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது... (006:149).

(இறைவன் மிக்க அறிந்தவன்).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

மேலதிகமாக ஹதீஸ்களின் விளக்கம்: ''அளவற்ற அருளாளனன், நிகரற்ற அன்புடையோன்''

Monday, December 02, 2013

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

ஐயம்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?

அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நண்பர் கேட்கிறார். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. - சாணக்கியன்.

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவர் தயவும் தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக் குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும் இருந்ததோடு, இறைவனுக்கு இணைகற்பிக்கும் பல தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள் என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப் பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால் அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச் சாப்பிட்டுவிட்டால் அது தியாகம் ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம் இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, ''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன் நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!

"என் இறைவா! நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்" (அல்குர்ஆன் 037:100-101)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக அவரின் சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் இஸ்மாயீல்.

இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அ(தற்க)வர், "'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது,

"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். அவருக்குப் பகரமாக, மகத்தான பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
(புகழ்) நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்
(அல்குர்ஆன் 037:102-110).

நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின் முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில், மகனை அறுப்பதாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என அதைச் செயல்படுத்திட தந்தையும், மகனாரும் முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தையில்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது.

இது ஒருபுறமிருக்க:

''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட, வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை) என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம் படைத்தவரும் சகிப்புத் தன்மை மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும் வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை வசனம் குறிப்பிடுகின்றது. இறைக் கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில் இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச் செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப் பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப் பகரமாக்கினான் இறைவன்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை இறைவன் தன் வேதத்தில் அருளிப் பதித்தான்:

"(நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். மேலும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத் தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர் தன் இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"
(அல்குர்ஆன் 005:054-055).

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இத்தியாக தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன். உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர் அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை தாமும் புசித்து மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும் தியாகம் செய்வதாகவும் பொருளில்லை! மாறாக, படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள் என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!

மற்றபடி இத்தியாக நாளில் எந்த முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும் என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்'' இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை. எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில் தியாகம் செய்திட வேண்டும் என்பதே மேற்காணும் நிகழ்விலிருந்து முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்
             

Saturday, November 30, 2013

உருவப்படம் வரைதல் - ஓர்ஆய்வு

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணம் அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

''குர்ஆன் மொழி பெயர்ப்பை தமிழில் தருவது ஹராம்'' என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி
அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், "உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில்
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, "இதைத்தான்
அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர். 

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், ''எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவேக் கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 007:028)

மனக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

...எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?...என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) ...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாம் வணங்குவதை விட்டும் எம்மைத் தடுக்கின்றீரா?...என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம் என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.
உருவச் சிலைகள், உருவப் படங்கள் இவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும், விற்பதும்,  உருவப்படங்கள் வரைதலும், விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ரு - மண்ணறையை வணங்குதல்.

நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத, கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 0435-0437, முஸ்லிம் 0921, நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்)

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற
(கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 0427, 0434, 1341, 3873, முஸ்லிம் 0918, நஸயீ 0704, அஹ்மத் 23731)

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும்
உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப்படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி             ஆராதிக்கப்படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல "தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

        
தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி        
வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

''மண்ணறைகள் (கப்ருகள்) மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்)

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், அவரது கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்)

இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.
உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வதுத் தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்து விடலாம். 

முதல் வகை ஹதீஸ்கள்.

1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963, முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்)

2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தியி(ன் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களின் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937, முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்)

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559 முஸ்லிம் 4292, அஹ்மத்)

முஸ்லிம் 4292 இல், ''மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281)

5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்)

6) உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293)

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின்
கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.

"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான்.

உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம் வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக் கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது" "வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு
வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும்
இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.


இரண்டாம் வகை ஹதீஸ்கள்.

(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள். மேலும், எங்களிடம் குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது. அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை நாங்கள் அணிந்துவந்தோம். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்)

(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281)

(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே ''அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்'' என்று இடம்பெற்றுள்ளது)

(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்)  உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479)

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) 
அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378)
 
விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932)

(7வது அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம், உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.
உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப்    
புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட
பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின்
உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள்
சட்டப்படி நுழைய இயலாது.

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் "காணவில்லை" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல்
நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன! இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு
செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை!

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?



மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!


(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்? அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம். 
உலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் 
எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"

இல்லை!, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது! ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக
வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக்
குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. 
மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப் படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை. 
முற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

உருவப் பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?
(இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில்)
உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

நன்றி: சத்தியமார்க்கம்.காம்