Wednesday, July 27, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -1

கி.பி 7ம் நூற்றாண்டில் மனிதம் செத்துப்போய்விட்ட நிலையில், அரபியப் பாலைவனத்தில் ஜீவ உற்றாக எழுந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியால் மனிதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. நிலைகெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்.. என்ற சொல்லுக்கு அன்றைய அரபியர்கள் பொருத்தமாக இருந்தார்கள். தறிகெட்டு வாழ்ந்த அம்மக்களை ஒழுக்க சீலர்களாகவும், உன்னத நெறியைப் பேணியவர்களில் முதன்மையானவர்களாவும் மாற்றி அம்மக்களை வென்றெடுத்தது இஸ்லாம்.

இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனின் போதனைகளை ஆரம்பத்தில் மிக வன்மையாக எதிர்த்தவர்கள் - இஸ்லாத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்துவிட வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர்கள் - இறுதி வேதத்தை மக்களுக்குப் போதிக்க இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பொய்யர், பைத்தியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் எள்ளியவர்கள் திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்காக தங்கள் உயிர்களையும் தியாகம் செய்யவும் முன் வந்தார்கள். மிக சொற்ப நாட்களிலேயே உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஆசிரியர்களாக பரிணமித்து, நபித்தோழர்கள் எனும் மிக உயரிய அந்தஸ்தைப் பெற்று அன்றும் இன்றும் உலக முடிவுநாள் வரையிலும் வரலாற்றுப் பக்கங்களில் ஜொலிப்பார்கள். இத்திருப்புமுனைக்குக் காரணம் இறைவனின் வேதமாகிய திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்தான்.

23 ஆண்டுகள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி வழியாக இறைவன் தன் வார்த்தைகளை அருளியதுதான் திருக்குர்ஆன் எனும் வேதமாகும். திருக்குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) அவர்களே இயற்றினார்கள் என்று விமர்சிப்பவர்களின் கூற்றில் உண்மையிருக்குமென்றால் இறைத்தூதர் என்ற அந்தஸ்தில் இல்லாமல் தனியொரு மனிதரைப்பின் பற்ற அன்றைய மக்கள் முன் வந்திருக்க மாட்டார்கள் - முன் வந்தாலும் தொடர்ந்து அதில் நீடித்திருக்க மாட்டார்கள். என்னதான் கெட்டிக்காரத்தனமாக இருந்தாலும் ஒரேக் கொள்கையில், முரண்பாடில்லாமல் 23 ஆண்டுகளாக மக்களைத்தக்க வைப்பதென்பது தனியொரு மனிதனால் இயலாத காரியம்.

23 ஆண்டுகளாக இறைவனால், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வஹீயின் - இறைச் செய்தியின் மூலம் அருளப்பட்ட திருக்குர்ஆனில் அன்றைய மக்கள் முரண்பாடுகளைக் கண்டிருந்தால் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தைப் புறக்கணித்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இஸ்லாத்தின் அடிச்சுவடுகூட அடையாளம் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.

மாறாக மொழி, இன வேறுபாடு எதுவுமின்றி ஆன்மீகம், அரசியல், அறிவியல், குடும்பவியல், குற்றவியல், சமூகவியல், கல்வியியல், கொள்கையியல், பொருளாதாரம் அனைத்து துறைகளிலும் - மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை ஏற்படும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் - முரண்பாடற்ற - தீர்க்கமான தீர்வு கூறும் திருமறைக்குர்ஆன், உலகளாவிய நிலையில் மாந்தர்களை தம் கொள்கையின் பால் ஈர்த்திருப்பதே இது இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

14 நூற்றாண்டுகளுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல என்று பிரச்சாரம் செய்பவர்கள், 20ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்புகளாகிய அறிவியல் உண்மைகளைப்பற்றி பேசும் திருமறை வசனங்களை அறிவுப்பூர்வமாக மறுக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அன்புடன்,
அபூ முஹை

விஞ்ஞான ஒளியில் என்கிற ஆய்வுக் கட்டுரை சகோதரர் ஏ. கே. அப்துல் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்டது. அறிவியலும், பொருளாதாரமும் அரசாட்சி செய்யும் எல்லா வசதிகளும் கொண்ட இன்றைய இணையத்தள உலகில் - சரியானது என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை பற்றி, 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு, எவ்வித வசதிகளோ, எவ்வித அறிவியல் உண்மைகளும் வெளிவர வாய்ப்புகளே இல்லாத காலகட்டத்தில் அருளப்பட்ட அருள்மறை குர்ஆன் கூறுவதை ஒப்பிடுகிறார் கட்டுரையாசிரியர்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1


நாம் வாழும் இந்தப் பூமியும், அதைச் சூழ்ந்து நிற்கும் ஆகாயமும் அதில் காணப்படும் எண்ணற்ற கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படித் தோன்றின என்ற வியப்பும் வினாவும் மனித உள்ளத்தில் தொன்று தொட்டே அலை பாய்ந்து கொண்டிருந்தன. இதற்கு விடை கூற முற்பட்ட விஞ்ஞானிகள் ஒரு கருதுகோளை (Hypothesis) முன் வைத்தனர். 'நெபுலா' என்ற மேகத்திரளிலிருந்து, முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும், அப்படித் தோன்றிய நட்சத்திரங்களுள் ஒன்றுதான் சூரியன் என்றும் கூறினர். பின்னர் சூரியன் திடீரென வெடித்துச் சிதறிய போது அத்துண்டுகள் கோளமாயின என்றும், அக்கோள்களிலிருந்து துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறுகின்றனர்.

இக்கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்த கால கட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் இக்கொள்கைக்கு சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் பாதைகள், அவை சூரியனை நோக்கிச் சுற்றும் திசை, சூரியனின் அச்சில் சுழற்சி (Axial Rotation) ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல: மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்க முடியும் எனக் கூறி, அண்டம் எப்போதும் உள்ளது: அதற்கு ஆரம்ப முடிவு என்பது இல்லை எனவும் கூறினர்: இக்கூற்று இயல் மாறாக் கொள்கை (Steady State Theory) என்ற கவர்ச்சிகரமான பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஞ்ஞான உண்மைகள் இத்துடன் திருப்திப் பட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இக்கொள்கைக்கு பாதகமாக அமைந்து விட்டன.

அண்டத்தின் வெப்பச் சூழலைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இயல் மாறாக் கொள்கையை ஏற்பதற்குத் தேவையான வெப்பத்தை விடக் குறைந்த வெப்பத்தையும், அண்டத்தில் எங்கு பார்த்தாலும் இருண்ட பின்னணியைத் தோற்றுவிக்கும் அளவிற்கு குறைந்த ஒளியையும் கண்டதோடு, ஆண்டொன்றுக்கு 4 க.கி.மீ. (4 Km3) ல் ஒரு ஹைட்ரஜன் அணு உற்பத்தியாவதையும், கண்டனர். எனவே 'இயல் மாறக் கொள்கை' கேள்விக் குறியோடு தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கி நிற்கிறது.

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்திலும் தப்பி அவைகளையே தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குப் பெற்ற கருதுகோளாகத் தற்போது விஞ்ஞானிகளிடம் புகழ் பெற்று வருவது பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) யாகும். இக் கொள்கை என்னவெனில், இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும், இன்னும் ஏனைய பருப் பொருட்கள் யாவும், ஏறத்தாள பூமியைவிட 318.5 மடங்கு எடை உள்ள வியாழன் (Jupitor) கிரகத்தை ஒத்து, ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஏதோ வானியல் காரணத்தால் தூள் தூளாக வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இந்த நிகழ்ச்சி ஏறத்தாள 1800 கோடி வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் பிறகு ஒரே புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுத் துகள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பருப்பொருட்களையும் தோற்றுவித்தது.

இவ்வாறு பூமி உட்பட இருந்த கோள்களும், ஏனைய துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தத் தூசுப்படலத்தில் இருந்து ஏறத்தாள 500 லிருந்து 750 கோடி வருடங்களுக்கிடையில் தனித் தனியாக பிரிந்தன என இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகிறது.

அண்டத்தின் வரலாற்றை மனிதன் தன்னுடைய நவீன விஞ்ஞான அறிவையும், கருவிகளையும், பொருளாதார வசதியையும், தீராத வேட்கையையும், விடா முயற்சியையும் பயன்படுத்தி கண்டறிந்த இந்த விஷயங்கள் தொடர்பாக, இவ்வாறான வசதிகளோ, வேட்கையோ, இல்லாமல் வெறும் புராணக் கதைகளை பேசி வந்த 14 நூற்றாண்டுக்கு முந்தைய காலக் கட்டத்தில் பரிசுத்த குர்ஆன் என்ன கூறியது எனச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

'நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் (இக்குர்ஆன் என்னுடைய வசனம் அல்ல என்று கூறி) நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (அல் - குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா 30வது வசனம்)

என்ன அற்புதமான வார்த்தைகள்!. இவ்வண்டத்தில் இருக்கும் யாவும் இரண்டறக் கலந்து ஒரு புகை மூட்டத்திலிருந்து தான் உற்பத்தியாகித் தனித் தனியே பிரிந்தன என்ற நவீன விஞ்ஞானக் கொள்கையை எவ்வளவு அற்புதமாகக் குர்ஆன் படம் பிடித்துக் காட்டிவிட்டது!.

நவீன விஞ்ஞானத்தின் அபிமான நண்பர்களே! பண்டைக் காலங்களில் உழைக்காமல் சோம்பி, அடிமைப்பட்டிருந்த பாமரனின் உழைப்பையும் சுரண்டி, உண்டு கொழுத்த கொடிய குழுவோரின் கதைகளையும், நாடு துறந்து, வீடு துறந்து, காடு கண்ட மனிதர்களின் கற்பனைக் கனவுகளையும், வேதங்களாய் ஏந்தி வந்த பட்டியலில்.. அறியாமலே.. படித்து உணராமலே.. பத்தோடு பதினொன்றாக உங்களில் சிலர் அருள்மறை குர்ஆனையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது அறியாமையல்லவா?. நீங்கள் மெய்யாகவே எதில் அபிமானம் கொள்கிறீர்களோ.. அந்த விஞ்ஞானமே, அருள்மறை குர்ஆன் மெய்யான வேதம் என்பதற்குச் சாட்சியாகி நிற்பதைப் பார்த்தீர்களல்லவா!. பிறகு ஏன் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்?. நீங்கள் குர்ஆனை ஏற்க மறுத்தால், குறைந்த பட்சம் அதை உலகுக்கு போதிக்க அனுப்பப்பட்ட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

இப்பூலகின் அறியாமையைப் போக்கிச் சன்மார்க்கம் செழிக்க அண்ட சராசரங்கள் யாவையும் தன் வல்லமை ஒன்றைக் கொண்டே படைத்துப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் இணை, துணையில்லாத அந்த ஏக இறைவனிடமிருந்து அந்த மாநபி முஹம்மத் (ஸல்) பெற்றுத் தந்த பரிசுத்த குர்ஆன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

இவ்வண்டத்தின் படைப்பைத் துவக்குவதற்காக பூமியின் மீது இருக்க வேண்டிய, முளைக்க வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்த.. 'பின்னர்.. ஆகாயத்தின் பால் திரும்பினான். அது ஒரு புகையாக இருந்தது..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 41 ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 11வது வசனம்)

இப்போது சொல்லுங்கள்!. நவீன கம்யூட்டர் யுகத்தின் கண்டுபிடிப்புகளை வரிக்குவரி பிறழாமல் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய சூழ்நிலையில் ஒரு மனிதரால் கூறியிருக்க முடியுமா?. ஆனால் அப்படி கூறியிருக்கிறார் என்பது தற்போது உலகறிந்த உண்மை. இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வர விரும்புகிறீர்கள்?. நாம் முன்னரே கண்டது போல் திரு நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதரென்றா?. அல்லது அவர் போதித்த இந்த அற்புதமான உண்மைகளைக் கொண்ட பரிசுத்த குர்ஆன் அண்ட சராசரங்களையும் படைத்த மெய்யான இறைவனின் வேதமென்றா?.

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். எல்லாம் வல்லவனும், பேரருளாளனும், இப்பரிசுத்த குர்ஆனின் ஆசிரியனும் யாரோ அவன் நம் அனைவருக்கும் நல்ல முடிவை - சரியான முடிவைத் தேர்வு செய்யத் துணை புரிவானாக!

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Saturday, July 16, 2005

முஹம்மது நபி தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என்று இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் கூறுகிறது. ஆரோக்கியம் என்பவர் "முகம்மது செய்த கொலைகள்'' என்ற தலைப்பில் கவ்வைக்குதவாத - இஸ்லாத்திற்கு வெளியே எழுதியதை இஸ்லாத்தின் ஆதாராமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை முன் வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் அதுதான் அறிவு சார்ந்த விமர்சனமாக இருக்கும் இது பற்றி பலமுறை முஸ்லிம்கள் வலைப்பதிவில் எழுதி விளக்கியிருக்கிறார்கள்.

டாக்டர் ஏ.என் சலீம் எழுதியதாக, முகம்மது செய்த கொலைகள் என்று அடுக்கியுள்ள ஆரோக்கியம் அவர்கள் அந்தக் கொலைகளின் செய்திகள் இடம் பெற்ற நேரடி ஹதீஸ் நூல்களின் பெயர்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அதுவரை இது அவதூறாகவே இருக்கும்

ஒரு ஹதீஸின் விளக்கம்.

பனூ முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்கு கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்'' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில் அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புகாரி,7409)

உடலுறவின் போது கர்ப்பம் தரிக்காமல் இருக்க உச்சக்கட்டத்தில் விந்தை வெளியேற்றுவதற்கே அரபியில் ''அஸல்'' என்று சொல்லப்படும். இப்படிச் செய்யலாமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்று நபித்தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். ''நீங்கள் அஸல் செய்தாலும் செய்யா விட்டாலும் கருவறையில் இறைவன் படைக்க நாடியதை படைத்தே தீருவான்'' இறைவன் படைக்க நாடியதை யாராலும் தடுக்க முடியாது இறைவன் படைக்க நாடாததை யாராலும் படைத்து விட முடியாது'' என்கிற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து ஆணுறையைப் பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியருக்கு குழந்தை ஜனித்தது என்று செய்திகளில் படித்த நினைவு முழுச் செய்தியும் சரியாக நினைவில்லை இந்த செய்தியை அறிந்தவர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

கரு ஏற்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் இறைவன் நாடினால், பல லட்சம் உயிரணுக்களில் ஒரேயொரு உயிரணு நீந்திச் சென்று கருவை ஏற்படுத்திவிடும் - இறைவன் நாடியதை படைத்தேத் தீருவான். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே தற்காலிகக் கருத்தடையை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் ஆதாராமாகக் கொள்வார்கள்.
மேற்கண்ட நபிமொழிக்கு அச்சில் ஏற்றுவதற்கு கை கூசும் அளவுக்கு, ஆரோக்கியம் அவர்கள் விளக்கவுரை!? எழுதினார். கண்டு கொள்ள நாதி இல்லை!

பனூ முஸ்தலிக் போர் பற்றி நான் கண்ணியமாகவே விளக்கமளித்திருந்தேன். ''அப்புறம் ஏன்லா உங்கள் ஊரில் அங்கங்கு குண்டு வெடிக்காது? என்று ஆரோக்கியம் நாகரீகமற்ற தலைப்பை வைத்திருந்தார். கண்டு கொள்ள நாதி இல்லை!

நல்லாடியாரின் ஜுலை 15,2005ன் பதிவு சற்று நிதானமிழந்து - அவசரத்தில் பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நல்லாடியாரின் பதிவைக் கண்டித்து களமிறங்கிய நடுநிலையாளர்கள், ஆரோாக்கியம் அவர்களின் நாகரீமற்ற எழுத்தை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன். இங்கே முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்..

எழுதுகின்ற விஷயத்தைக் கவனியுங்கள், எழுதுபவர் யார் என்ற கவனம் வேண்டாம். வேண்டுமென்றே எழுதும் - பிறர் எழுத்துக்களில் உள்ள வன்முறையை ஊதாசீனப்படுத்துங்கள். நிதானத்தை இழந்துவிட வேண்டாம், நீங்கள் நடுநிலை சமுதாயம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு, தாமதம் ஆனாலும் தக்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவமரியாதையாகப் பேசுவது நயவஞ்சகத் தன்மையிலொன்றாக இஸ்லாம் கூறுகிறது. (எழுதியவற்றில் பிழையிருந்தால் திருத்துங்கள்.)

அன்படன்,
அபூ முஹை

Friday, July 08, 2005

திருக்குர்ஆன் சில வசனங்கள் விளக்கம்!

இறைத்தூதர், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பல கடவுட்க் கொள்கையாளர்களும், யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அதனால் முஸ்லிம்கள் பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரிறைக் கொள்கையாளர்களாகிய முஸ்லிம்களும் பல தெய்வக் கொள்கையாளர்களாகிய நிராகரிப்பாளர்களும் உறவினர்களாக இருந்தார்கள். உதாரணமாக: அலி (ரலி) சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக இருந்தார், அவரின் தந்தை அபூ தாலிப் நிராகரிப்பாளராக இருந்தார். அது போல் பத்ருப் போரில் அபூ ஜஹ்ல் கொல்லப்பட்டபின் நிராகரிப்பாளர்களின் தலைவராக அபூ ஸுஃப்யான் பொறுப்பேற்று இஸ்லாத்தை மிக வன்மையாக எதிர்த்தார். இவரின் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் இவர்) ஆரம்பகாலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக தந்தை அபூ ஸுஃப்யானின் கொடுமை தாங்க முடியாமல் அபீஸீனியாவுக்கு (ஹஜ்ரத்) நாடு துறந்து சென்றார்கள்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் இருந்தனர் இதே நிலையில் அவர்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்கு தகவல் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே திருக்குர்ஆன் பல வசனங்களில் இவ்வாறு கட்டளையிடுகிறது.

3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4:139.இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும் காஃபிர்களிலிருந்தும் யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

60:1. ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள் ''நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்'' ஆனால் நீங்கள் மறைத்துவைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும் உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

60:2. அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும் தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள். தவிர நீங்களும் காஃபிர்களாக - நிராகரிப்பாளர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

வெளிப்படையாக எதிப்பைக் காட்டி உள்ளுக்குள் உங்களை ஓழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள். (3:118)
உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (5:57)
உங்களுக்குப் பகைவர்களாக இருப்பவர்களையும், கைகாளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்.(60:2)
ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டதற்காக உங்கள் பகைவர்களாக இருந்து உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் ஊரை விட்டே விரட்டியவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:1)
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் வீடுகளை விட்டும் வெளியேற்றியவர்களையும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:9)
உங்களோடு போரிடாமலும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை விரட்டாத முஸ்லிமல்லாதவர்களிடம் நீங்கள் நட்பு பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள். (60:8) என்று இஸ்லாம் திறந்த புத்தமாக - வெளிப்படையாகத் தெளிவாகவே உள்ளது.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

போரில் எதிரிகளை சந்திக்கும் போது வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று சொல்லாமல், எதிரிகளுக்கு முதுகு சொறிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதிரிகளை வெட்டித் தாக்காவிட்டால் எதிரிகள் முஸ்லிம்களை வெட்டுவார்கள் போரில் இருபக்கமும் தாக்குதலும், உயிரழப்பும் ஏற்படுவது போர் மரபு. போரில் சொல்லப்படும் ஒரு வசனத்தை போருக்கு வேளியே - சாதாரண நிலையிலும் நிராகரிப்பாளர்களை வெட்டச் சொல்வதாகத் தொடர்ந்து திரித்துச் சொல்வது ஒருவித நோயின் அறிகுறியே!

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் - இணை வைப்போர்களில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

போரிடாமல் அபயம் கேட்கும் நிராகரிப்பாளர்களை ஆதரிக்கச் சொல்லும் 9:6வது வசனம் இவர்களின் நோயை உறுதி செய்கிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களும் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தார்கள் (புகாரி, 1356) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச உடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். (புகாரி, 2068,2916) யூதப் பெண்ணின் விருந்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள், (புகாரி, 2617) யூதர்களே நியாயம் கேட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (புகாரி, 2412,2417) இவர்கள் அனைவரும் போர்ப் பிரகடனம் செய்யாமல் முஸ்லிம்களுடன் சகோதரத்தனத்துடன் பாசமாகப் பழகியவர்கள். நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சர்கள் கூட வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர்.

9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும் (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம், என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

31:14.நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள், இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."

31:15. ஆனால் நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம், ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள், (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."

ஒரிறைக் கொள்கையை வெறுத்து, நிராகரித்தவர்கள் தந்தை, தனயன்களாகிய குடும்பத்தார்ளேயானாலும் மார்க்க விஷயத்தில் அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்று 9:23 வது வசனம் கட்டளையிடுகிறது. இணைவைக்கும் விஷயத்தில் தாய் தந்தைக்குக் கட்டுப்படக்கூடாது என்பதைத் தவிர மற்ற அனைத்து உலக விஷயங்களிலும் பெற்றோருக்குக் கீழ்படிய வெண்டும் என்றும் 29:8, 34:14,15 ஆகிய வசனங்கள் அறிவுறுத்துகிறது. ''நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!'' என்று இறைவன் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய வசனம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒரு லேட்டஸ்ட் அவதூறு.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இது ஜான் டிரஸ்ட் வெளியிடும் தமிழ் மொழி பெயர்ப்பு குர்ஆன் ஆகும். தமிழில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்தற்காக வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்குவதற்கு இந்த வசனம் போரைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு அரபு மூலத்தில் நேரடியாக வசன வாக்கியங்கள் இருக்கின்றன. அதிலிருந்துதான் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்கள் 47:4ம் வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்கியுள்ளார்கள். இதை சப்பைக்கட்டுகள் என்பவர்கள் இப்படி விமர்சித்துள்ளார்கள்..

//*அடைப்புக்குறிக்குள் உள்ளவை தமிழில் குரான் http://www.tamililquran.com/ மொழிபெயர்த்தவரின் சப்பைக்கட்டுகள். அவை ஒரிஜினலில் இல்லை என்ற ஞாபகத்துடன் படிக்கவும். இதன் நேரடி அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கவும். இதில் இருக்கும் வார்த்தைகள் எப்படி தமிழில் சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்க்கவும்.*//

அடைப்புக் குறிக்குள் உள்ளவை அசல் மூலத்தில் இல்லை என்பவர்கள் //*அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.*// என்று கூறியுள்ளதால் இதை பற்றி சப்பைக்கட்டியவர் விளக்கிய பின் சப்பைக்கட்டுவது யார்? என்று திருக்குர்ஆனிலிருந்தே விளக்கங்களை வைத்து நாம் நிரூபிப்போம். (இன்ஷா அல்லாஹ்)