Tuesday, January 07, 2014

உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?




உருவ பொம்மைகள் வீட்டில் வைத்திருக்கலாமா?

உயிரினங்களின் உருவச் சிலைகளுக்கும் உருவ பொம்மைகளுக்கும் வித்தியாசமில்லை. வணங்கி வழிபாடு நடத்தினால் அது சிலை; வைத்து விளையாடினால் அது பொம்மை. இங்கு எண்ணம் - நோக்கம் வேறுபடுகின்றது. மரியாதை தரும் வகையில் இருந்தால் அது வணக்கத்தின் துவக்கமாக அமைந்துவிடும். விளையாட்டுப் பொருளாகவோ மிதிபடும் மதிப்பற்ற வகையில் இருந்தாலோ அவை வீட்டில் இருக்கத் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில், அன்னையர் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்தனர்.

நபி(ஸல்) அவர்கள், ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (அறிவிப்பாளர்: ருபய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) நூல்கள்: புகாரி 1960, முஸ்லிம் 2091).

சிறுவர் சிறுமியருக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் நோன்புக்கான பயிற்சி அளிக்க நபித்தோழியர் சிறுவர், சிறுமியரை நோன்பு நோற்க ஆர்வமூட்டுவார்கள். குழந்தைகள் பசியில் அழுதால், விளையாட்டுப் பொருட்களைச் செய்து கொடுத்து அவர்களின் கவனத்தைத் திருப்புவார்கள் என மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்குகிறோம். விளையாட்டுப் பொருட்களில் பொம்மைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக, முதல் பகுதியில் இரண்டாம் வகை ஹதீகளில் 5,6,7 ஆகிய அறிவிப்புகளை மீண்டும் பார்வையிடுவோம்.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். (முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன,

7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா! இவை என்ன?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, "அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். "குதிரையின் மேல் என்ன?" என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். "குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

7ஆவது அறிவிப்பில், கைபர் அல்லது தபூக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது. நபி (ஸல்) அவர்கள் கைபர் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது என்று வைத்துக் கொண்டாலும், கைபர் யுத்தம் முடிந்த ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

6ஆவது அறிவிப்பில், ''ஒன்பதாம் வயதில் விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன'' என்பதையும் 7ஆவது அறிவிப்பின்படி கைபர் போர் நடைபெற்ற காலத்தையும் கணக்கிட்டால்  உயிரினங்களின் உருவ பொம்மைகள் சுமார் ஆறு ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்திருக்கின்றன என்பது தெளிவு.

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள். பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள். அன்று மாலை நேரத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள். அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள் (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை). (அறிவிப்பாளர்கள்: மைமூனா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4273, நஸயீ 4283, அபூதாவூத் 4157, அஹ்மத். இதே கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு: முஸ்லிம் 4272).

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு உம்ரத்துல் களாவை முடித்துத் திரும்பும்போது, மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களை மணமுடித்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் நபியவர்களின் துணைவியரில் ஒருவரான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நாய் நுழைந்திருந்து பிறகு அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு அல்லது எட்டாம் ஆண்டு நடந்திருக்க வேண்டும் என்று விளங்க முடிகிறது.

இறைச் செய்தியைக் கொண்டு வரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எந்த நேரத்திலும் - எந்தப் பொழுதிலும் செய்திகளைச் சொல்ல வரக்கூடியவர். நபி (ஸல்) அவர்களின் வீட்டுக்கு ஜிப்ரீல் (அலை) வழக்கம்போல் வரும் தருணத்தில் வீட்டிலிருந்த நாயும், உயிரினங்களின் உருவங்கள் வரைந்த திரைச் சீலையும் தடையாக இருந்து, ஜிப்ரீல் (அலை) வீட்டிற்குள் செல்ல இயலாமல் ஆனது. ஆனால், ஆறு ஆண்டு காலம் ஆயிஷா (ரலி) அவர்களின் உயிரின உருவ பொம்மைகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்தும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவை தடையாக இருக்கவில்லை! நபி (ஸல்) அவர்களும் உருவ பொம்மைகளை அப்புறப்படுத்தச் சொல்லவும் இல்லை! இதிலிருந்து உருவ பொம்மைகளை வணங்கி வழிபாடு நடத்தாமல், மதிப்பற்ற வகையில் விளையாட்டுப் பொருளாக வீட்டில் வைத்திருக்கலாம் என விளங்குகிறோம்!

ஆயிஷா (ரலி) அவர்கள் உயிருள்ளவற்றின் உருவ பொம்மைகளை வைத்து விளையாடியிருப்பதால், பொம்மைகள் வீட்டிலிருக்கத் தடை இல்லை என்பது தெளிவு. இவை கார்ட்டூன், அனிமேஷன் போன்றவற்றுக்கு அனுமதியாகவுள்ளது. மேலும், கார்ட்டூனும் விளையாட்டுப் பொம்மைகளே. அவை தந்திர அமைப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, கருவியின் மூலம் இயக்கப்படுகின்றன. கார்ட்டூன் மூலம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுத்தரலாம்!

குறிப்பு: நாய்கள் பற்றிய மேலதிகத் தகவல்.

இறைமறை 005:004 வசனக் கருத்தின்படி பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை நாய்கள், வேட்டைப் பறவைகளை வளர்க்க - வைத்திருக்க அனுமதியுண்டு.

"எந்த வீட்டார் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டை நாயையும் தவிர". என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) வழியாக புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ. அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமீ ஆகிய நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன).

வேட்டை நாய்களையும், காவல் நாய்களையும் வளர்க்கலாம். நாய் வாய்வைத்தப் பாத்திரத்தை ஏழு தடவை மண்ணிட்டுக் கழுவவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நாய்களை வீட்டிற்குள் நுழையவிடாமல் வெளியில் வைத்து வேட்டை நாய்களை / காவல் நாய்களை வளர்க்க வேண்டும். நாய்களைச் செல்லப் பிராணிகள் என்று சிலர் வீட்டில் படுக்கையறையில் வைத்து வளர்க்கின்றனர். என்னதான் உயர்சாதியாக இருந்தாலும் நாய், நாய்தான். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார்கள். பின்னர் தளர்த்தப்பட்டு, வெறிநாய்களையும், ஷைத்தானைப் போன்று திடுக்கிடச் செய்து இடரளிக்கும் கன்னங்கரிய நாய்களையும் கொல்லும்படி கூறிய சட்டம் நீடிக்கின்றது.

அடுத்து,

முதல் வகை ஹதீஸ்களில் 3வது ஹதீஸில், "என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதைப் பார்ப்போம்.

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

படைத்தல் என்பது இறைவனின் தனித் தகுதிக்கு மட்டுமே உரிய ஓர் ஆற்றல். இதில் யாருக்கும் எவ்விதப் பங்கும் இல்லை! இந்தக் கருத்தில் இறைமறையில் பல வசனங்கள் உள்ளன. இறைவனுக்கு இணைகற்பித்தோர் தன்னிச்சையாகப் பல தெய்வங்களை உருவாக்கி, அந்தச் சிலைகளிடம் தமது தேவையைக் கேட்டுப் பிரார்த்தனை செய்தனர். அப்போது அருளப்பட்ட வசனம் இது,

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் செவிசாயுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களால் ஓர் ஈயைக்கூடப் படைக்க இயலாது. ஈ, அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் ஈயிடமிருந்து அதை மீட்டெடுக்கவும் அவர்களால் இயலாது. (உதவி) தேடுபவனும், தேடப்படுபவனும் பலவீனர்களே! (அல்குர்ஆன் 022:073).

இறைத் தன்மையின் முதல் தகுதி, அவன் படைப்பாளனாக இருக்கவேண்டும். நீங்கள் அழைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட அல்லது ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது என்று கூறி, ''மனிதர்களே! ஓரிறைவனைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவையெல்லாம் பொய்க் கடவுள்களே'' என உரைத்து, தமக்குத் தாமே எவ்வித உதவியும் செய்ய இயலாத பொய்த் தெய்வங்களின் முன் நின்று உங்கள் தேவைகளை வேண்டுவது மூடநம்பிக்கை என்று மேற்கண்ட வசனம் இடித்துரைக்கின்றது.

இங்கு, தாம் வடிவமைத்தவற்றின் முன் தாம் அடிமையாக நின்று வணங்கி வேண்டுவது கண்டிக்கப்பட்டு, சிலைகளுக்கு இல்லாத ஆற்றலை இருப்பதாக உணரும் மூடநம்பிக்கை தகர்க்கப்படுகின்றது.

மற்றபடி, படம் பார்த்துப் பெயர் சொல் எனக் கொசுவத்தி விளம்பரத்திற்காக கொசுவை வரைந்தவர் கொசுவைப் படைத்துவிட்டார் என்று அர்த்தம் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் உள்ளது போல், கோதுமையை வரைபவர் கோதுமையைப் படைக்கிறேன் என்ற எண்ணத்தில் ஓவியம் தீட்டுவதில்லை / அதைப் புகைப்படம் எடுப்பதில்லை. மாறாக, தாம் வடிக்கும் சிலைக்கு அல்லது வரையும் உருவத்திற்கு ஆற்றல் இருப்பதாக எவர் நம்புகிறாரோ அவருக்குத்தான் ''ஒரு கொசுவைக்கூட படைக்க இயலாது'' என சவால் விடப்படுகின்றது!

ஓர் உயிரின உருவத்தை நகலெடுக்க, இறைவனின் அசல் படைப்பு முன்மாதிரியாக விளங்குகிறது. தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிப்படம் ஓடிக்கொண்டிருக்க, அதில் பேசுபவர் எதிரில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியில் தான் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருப்பார். இதனால் ஒளிப்படத்தில் வருபவர் படைக்கப்பட்டார் என்று பொருள் கொள்வது பிற்போக்கு சிந்தனை! ஒளிப்படத்தில் பேசியவர் மரணித்து விட்டார் என்று அறிந்தபின், ஒளிப்படத்தில் உள்ளவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் நம்பமாட்டோம். ஆகவே, படைப்புக்கும், படைப்பின் நகலுக்கும் பெரும் வித்தியாசமுள்ளது.

இறுதியாக,

குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் இதுவரை எடுத்துரைத்தக் கருத்துக்களிலிருந்து, உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்கிற காலச் சூழ்நிலையில் இருக்கிறோம். இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில்தான் உருவப்படத்தின் தேவையுள்ளது எனச் சிலர் சொல்கின்றனர். ஆனாலும், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்களும் அன்னிய நாடு செல்ல வேண்டுமாயின் பாஸ்போர்ட் வேண்டும், பாஸ்போர்ட்டுக்கு உருவப்படம் கட்டாயத் தேவை என்பதையும் நாட்டின் குடியுரிமைக்கான உருவப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டையும் கட்டாயத் தேவை என்பதையும் மறந்து இவர்கள் கருத்துரைக்கின்றனர்.

இஸ்லாமிய நாடு என அறிவிக்கப்பட்ட நாடுகளிலும் உருவப்படங்கள் சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளன. அந்நாட்டு ரூபாய் நோட்டுக்களிலும் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேலை செய்வதற்காக அங்குத் தங்கும் அன்னிய நாட்டினருக்கு புகைப்படம் பதியப்பட்ட அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் அட்டையும் வழங்கப்படுகின்றன. இதை ஆதாரமாக இங்குச் சொல்லவில்லை. இவற்றை எதிர்ப்பதற்கு இஸ்லாத்தில் சான்றுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம்!

மக்கள் தொகை அதிகரிக்க நிர்வாக வசதிக்காக பூமியில் நாடுகளின் எல்கைகள் போடப்பட்டன. ஒரு நாடு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு மாநிலம் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, நகரங்கள் கிராமங்கள் என அடையாளப் படுத்தப்படுப்பட்டன. ஒருவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரின் ஊர் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் எந்த தாலுகாவில் உள்ளது என்கிற முகவரியுடன் அவரின் புகைப்படம் பதிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயமாக அவரிடம் இருந்தாக வேண்டும். இது காலத்தின் தேவை! இதற்கு இடையூறாக இஸ்லாம் சட்டம் எதையும் விதிக்கவில்லை என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

காலத்துடன் கைகோர்த்து பயணிக்கும் விஷயமிது. உருவப்படம் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தாத ஒன்றை முஸ்லிம்களின் மீது திணித்தால், மக்களுடன் சேர்ந்து வாழ இயலாமல் முஸ்லிம்கள் நெருக்கடிக்கு உள்ளாகித் தனித்து விடப்படுவார்கள். 'அவை எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை' என்று குடும்பத்துடன் வனம் சென்று வசித்தாலும் அங்கும் ஆட்சியாளர்களின் கை நீண்டு ID CARD - அடையாள அட்டையைக் காட்டு என அதிகாரம் செலுத்தும். எனவே, உருவப்படங்கள் விஷயத்தில் இஸ்லாம் மீதான பிற்போக்குச் சிந்தையைக் களைந்து, இஸ்லாம் இம்மண்ணுக் கேற்ற மார்க்கம் என்கிற முற்போக்குச் சிந்தனையை வளர்ப்போம்!
முற்றாய் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

ன்றி: சத்தியமார்க்கம்.காம்