Monday, October 22, 2007

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-3)

சனி, 20 அக்டோபர் 2007

ஹிஜ்ரத் - நாடு துறத்தல் ஒரு பார்வை!


மூன்றாம் பகுதியை வாசிக்கத் துவங்கும் முன் முன்சென்ற பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பார்வையிட்டுக் கொள்ளுங்கள்.

இஸ்லாமியச் சொல் வழக்கில் “ஹிஜ்ரத்” என்றால் நாடு துறத்தல் என்று பொருளாகும். பிறந்த நாட்டை, வாழ்ந்த பூமியை, வசிக்கும் இல்லத்தை, தமக்குச் சொந்தமான நிலங்களை ஒட்டுமொத்தமாகத் தியாகம் செய்துவிட்டு எந்த அறிமுகமும் இல்லாத அந்நிய நாட்டில் குடியேறுவதாகும். நாடு துறத்தல் பற்றி வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டம் சுருக்கமாக:

ஹிஜ்ரத் என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து, சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரைத் துறந்து அந்நிய நாட்டுக்கு அந்நிய ஊருக்குச் செல்வதாகும். இவ்வாறு நாடு துறப்பவர்கள், செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம்; உடைமைகள் அபகரிக்கப்படலாம்; செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று அறியாத நிலையில் மேற்கொள்ளும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இப்படியொரு நாடு துறத்தல் எனும் தியாகத்தைச் செய்தவர்கள் இதற்கான மகத்தான கூலியை இறைவனிடம் பெற்றிருக்கிறார்கள் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. ஹிஜ்ரத் பற்றிய இறைவனின் கட்டளைகளையும், அதைச் செயல்படுத்திய நபியவர்கள் மற்றும் நபித்தோழர்கள் பற்றியும் சற்று விரிவாகப்பார்ப்போம். அதற்குமுன்,

"இந்தியா ஒரு காஃபிர் நாடு எனவே இந்தியாவில் முஸ்லிம்கள் வசிப்பது ஹராம் - விலக்கப்பட்டது" என்று சில இஸ்லாம் விரோத சக்திகள் கூக்குரலிடுகின்றன. இந்தியாவில் ஒரு மதம் சார்ந்த ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு இஸ்லாம் ஒரு பேரிடராக இருப்பதால் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாத்தையே திருப்பிவிட முயற்சிக்கும் ஒரு சதி வேலையே "இந்தியா போன்ற காஃபிர் நாட்டில் முஸ்லிம்கள் வாழக்கூடாது!" என்ற வாய் கிழிய ஓதும் இப்புதுமந்திரம்.

இந்தியா ஆங்கிலேய அடிமைத்தளையிலிருந்து மீண்டு சுதந்திரம் அடைந்த காலகட்டங்களுக்குப் பின், அதுவரை இந்தியா சுதந்திரம் அடைவதற்காக பாடுபடாமல் அன்னியனின் ஆட்சியில் உயர் பதவிகளை தக்கவைத்து அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், இந்தியா சுயாட்சி பெற்றதன் ஊடாகவே முஸ்லிம்கள் பெருவாரியாக வசித்து வந்த பகுதிகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட உடன் அவர்கள் கனவு காணும் மதஆட்சியை இந்தியாவில் நிறுவி விடலாம் என மனப்பால் குடித்தனர். ஆனால் அதன் பின்னரும் இந்திய மண்ணின் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே பரவி வசித்து வந்த முஸ்லிம்கள் அதற்கு மிகப்பெரும் இடையூறாக இருந்தனர்.

முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து ஒதுக்காமல் தங்களின் கனவு ஈடேறாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்ட அவர்கள், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் முஸ்லிம்களை இந்தியாவில் நிம்மதியாக வாழ விடாமல் அனைத்து விதத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தத் துவங்கினர். இதன் பல்வேறு வடிவங்கள் தான் சூரத், பாகல்பூர், பம்பாய், குஜராத், கோயம்புத்தூர் போன்ற இடங்களில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட இனக்கலவரங்களும் பாபர் மசூதி போன்ற எண்ணற்ற இறையில்லங்கள் இடிப்பும் ஆகும். இத்தருணங்களின் போதெல்லாம் முக்கியமாக இவர்களின் வாயில் இருந்து உதிர்ந்த வாசகங்கள் மிக முக்கியமானவைகளாகும். “முஸ்லிம்களே! இந்தியாவில் வாழ உங்களுக்கு உரிமையில்லை; ஒன்று நீங்கள் கப்ருஸ்தானுக்குச் செல்ல வேண்டும்; அல்லது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்”.

இதுதான் அவர்களின் நோக்கம். சுதந்திரம் அடைந்த கடந்த 60 வருடக்காலமாக இவர்களால் நிகழ்த்தப்பட்ட அனைத்து அட்டூழிய, அராஜகங்களையும் சகித்துக் கொண்டு சொந்தம் மண்ணை விட்டு வெளியேறாமல் இருக்கும் முஸ்லிம்களை என்ன செய்வது என்று புரியாமல் வழிதேடியவர்களின் புதிய கண்டுபிடிப்பு தான் “இந்தியா காஃபிர் நாடு”, “முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு இடையில் வாழக் கூடாது”, எனவே “முஸ்லிம்கள் உடனடியாக வேறு இஸ்லாமிய நாடுகளுக்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும்” இது இஸ்லாமிய சட்டம் என்ற பூச்சுற்றல்.

இதனை அடிப்படையாக வைத்து, அரேபிய நாட்டின் ஆட்சியர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றவில்லை! எனக் கூறி, “அரேபிய பூமி எல்லா முஸ்லிம்களுக்கும் ஹிஜ்ரத் செய்யும் நிலமாக இருக்க வேண்டும்” என்று ஹிஜ்ரத் என்றால் என்னவென்றே விளங்கிக்கொள்ளாமல் இந்த அரைவேக்காடுகள் முஸ்லிம்களுக்குப் பாடம் நடத்த வந்திருக்கின்றனர். அதாவது முஸ்லிம்களெல்லாம் அரேபியா மண்ணிலேயே வசிக்க வேண்டும், முஸ்லிமல்லாதவர்கள் ஆட்சியராக இருக்கும் மற்ற பூமியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்று சொல்ல வருகிறார்கள்.

இஸ்லாத்தின் பெயரைக் கூறிவிட்டால் நம்பிவிடுவார்கள் முஸ்லிம்கள் என்று எண்ணியது சரி தான். ஆனால் அதனை ஆய்ந்துப் பார்க்காமல் அப்படியே நம்பி இருக்கும் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று எண்ணியது தான் இவர்கள் செய்த அபத்தம்.

இவர்களின் கருத்தில், முஸ்லிம்கள் இந்நாட்டின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் அரேபியா நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் என்ற சூழ்ச்சிகள் மறைந்திப்பது மட்டுமல்லாது, ஹிஜ்ரத் பற்றிய அறியாமையும் தாராளமாக நிறைந்திருக்கின்றன. ஹிஜ்ரத் என்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பிழைப்புக்காகச் செல்வது போல் அல்ல! அல்லது இந்தியாவிலிருந்து சுற்றுப்பயணமாக பல நாடுகளுக்கு ஜாலி டிரிப் - மகிழ்ச்சியான பயணம் சென்று வருவது போலவும் அல்ல!

ஹிஜ்ரத் மிகவும் கடுமையானது, ஹிஜ்ரத் கடமையாக்கப்பட்ட நேரத்தில் அக்கடமையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். ஹிஜ்ரத்தை மேற்கொள்ளும் சமயத்தில் அதிலிருந்து தவறினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. இஸ்லாமிய ஒளியில் ஹிஜ்ரத்தினைக் குறித்து சற்று விரிவாக இங்கு காண்போம்:

நபித்துவ வாழ்வில் முதல் ஹிஜ்ரத்:

இறைத்தூதுவராக, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஆரம்பக் காலகட்ட இஸ்லாமியப் பிரச்சாரத்தைத் துவங்கிய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள், இஸ்லாத்தின் மார்க்க கடமைகளை நிறைவேற்ற இயலாமல் மக்கா நகர் முஷ்ரிகின்களால் சித்ரவதை செய்யப்பட்டார்கள். சிலர் கொலை செய்யப்பட்டு மாண்டும் போனார்கள். குறைஷியருக்கு அஞ்சி இறைக் கடமைகளை நிறைவேற்ற இயலாமல் தவித்துக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு, இதற்கான வழிகாட்டலை இறைவன் அறிவித்தான்.

“நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 039:010)

குறைஷியரிடமிருந்து உயிரையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொள்ள ஹபஷா(அபிசீனியா)விற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு தொடக்கக்கால நபித்தோழர்களை நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அனுமதியுடன், தாம் பிறந்த மண்ணைத் துறந்து முஸ்லிம்கள் ஹபஷாவிற்குப் பயணம் மேற்கொண்டனர். "எங்களுக்கு வீடு, சொத்து எதுவுமே வேண்டாம்" என்று முடிவெடுத்து எல்லாவற்றையும் இழந்து செல்லத் தயாராக இருந்தாலும் நாடு துறந்து செல்வது முஸ்லிம்களுக்கு இலகுவானதாக இருந்திருக்கவில்லை. மக்காவை விட்டு வெளியேற முயன்ற முஸ்லிம்களின் முயற்சியைக் குறைஷியர் அறிய நேர்ந்தால் அவர்களை விலங்கிட்டுக், கைதிகளாக்கி அடைத்து வைத்தார்கள். அதனால் நாடு துறந்து செல்வதும் அத்துணை எளிதாக இருக்கவில்லை!

முதலாவதாக நாடு துறந்து சென்றவர்களில் பன்னிரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் இருந்தனர். அவர்களுக்குத் தலைவராக உஸ்மான் பின் அஃப்பான்(ரலி) அவர்கள் இருந்தார்கள். இப்பயணத்தில் அவர்களின் மனைவியான (நபி(ஸல்) அவர்களின் மகள்) ருகையாவும்(ரலி) உடன் இருந்தார்கள். “நபி இப்ராஹீம்(அலை), நபி லூத்(அலை) ஆகிய இருவருக்குப் பின் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்த முதல் குடும்பம் இதுதான்” என்று இவ்விருவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டில் நடைபெற்றது.

இரண்டாவது ஹிஜ்ரத்:

முஸ்லிம்கள் பெருமளவில் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செல்ல ஆயத்தமானார்கள். ஆனால் இந்த இரண்டாவது ஹிஜ்ரத் முந்திய ஹிஜ்ரத்தை விட மிகக் கடினமானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் இப்பயணத்தை குறைஷிகள் அறிந்து கொண்டதால் அத்திட்டத்தை அழிக்க வேண்டுமென்பதற்காகத் தீவிரமான முயற்சியில் இறங்கினர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் பயணம் அவர்களுக்குச் சாதகமாகி நிராகரிப்பவர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாகவே பயணத்தைத் துரிதப்படுத்தி ஹபஷா சென்றடைந்தனர். இம்முறை 83 ஆண்களும் 18 பெண்களும் ஹபஷா சென்றனர்.

ஹபஷாவிற்குச் சென்ற முஸ்லிம்களை, குறைஷியர் அங்குச் சென்றும் திரும்ப மக்காவுக்குக் கொண்டு வர முழு முயற்சி மேற்கொண்டனர். அன்றைய ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷி நீதமானவராக இருந்ததால் குறைஷியரின் சூழ்ச்சிகள் பலிக்கவில்லை. அதனால் முஸ்லிம்களை மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வருவதில் தோல்வியடைந்த குறைஷியர், மக்காவில் எஞ்சியிருந்த மற்ற முஸ்லிம்களிடம் மேலும் மூர்க்கத்தனமானக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

நபியவர்களின் ஹிஜ்ரத்:

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மதீனாவாழ் முஸ்லிம்கள், மக்கா வாழ் முஸ்லிம்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். அதன் பேரில் முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கும் ஹிஜ்ரத் சென்றார்கள். இவ்வாறாக முஸ்லிம்களின் ஆதரவு மேலோங்க குறைஷியர் குல முஷ்ரிகின்கள் கொந்தளித்தனர். இறுதியாக இஸ்லாத்தை முடக்கிட நபி(ஸல்) அவர்களையும் குறிவைத்துக் கொல்லத் திட்டம் தீட்டினார்கள். நபி(ஸல்) அவர்களைத் தீர்த்துக்கட்ட மூன்று ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

1. ஊரை விட்டு வெளியேற்றுவது.

2. சங்கிலியால் விலங்கிட்டு ஒரு அறையில் அடைத்து சாகும்வரை அப்படியே விட்டுவிடுவது.

3. கொன்று விடுவது.

இம்மூன்று யோசனையில் மூன்றாவதைச் சிறந்த திட்டமென ஏற்று, நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்து விடுவதைக் குறைஷி முஷ்ரிகின்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதற்கான ஆட்களும், நாளும் தேர்ந்தெடுக்கப்பட்டத் தருணத்தில், இறைவனின் உத்தரவினால் ஏற்கெனவே மதீனாவாசிகளோடு மக்காவில் வைத்து செய்து கொண்ட அகபாவின் இரண்டாவது உடன்படிக்கையின்படி மதீனாவாசிகள் தந்த ஆதரவையேற்று நபி(ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள்.

“இன்பத்திலும் துன்பத்திலும் (இறைக் கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும்; கட்டுப்பட வேண்டும். வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும். நன்மையை ஏவவேண்டும்; தீமையைத் தடுக்க வேண்டும். அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது. ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காகச் சண்டையிடக்கூடாது. நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். உங்களையும், உங்களின் மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும். இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத் தருவான்” இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் அகபாவில் வைத்து உரை நிகழ்த்தினார்கள்.

அப்பொழுது அகபாவில் மதீனாவாசிகள் நபி(ஸல்) அவர்களுக்குக் கீழ்க்கண்டவாறு உறுதியளித்தனர்:

“செல்வங்கள் அழிந்தாலும், (எங்களில்) சிறப்பிற்குரியவர்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம்; கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான் இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று மதீனாவாசிகள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “சொர்க்கம் கிடைக்கும்” என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் ‘உங்களது கையை நீட்டுங்கள்' என்று கூற நபி(ஸல்) அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.

மதீனாவாசிகள் அகபாவில் வைத்து ஏற்கெனவேச் செய்து கொடுத்த இந்த ஒப்பந்தத்தின்படி நபி(ஸல்) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்களும் துன்பத்தோடும் துயரத்தோடும் உயிருக்கு அஞ்சிய நிலையிலும் ஹிஜ்ரத் பயணம் சென்றார்கள். ஹிஜ்ரத் - நாடு துறந்தவர்கள் பற்றியும் அவர்களுக்கான நற்கூலிகள் பற்றியும் திருமறை குர்ஆன்...

ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன், 009:020)

கொடுமைப்படுத்தப்பட்டப் பின்னர், அல்லாஹ்விற்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் (இதை) அறிந்து செயற்படுவார்களாயின் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது. (அல்குர்ஆன், 016:041, மேலும் பார்க்க: 016:110)

அல்லாஹ்வுடைய அருளையும் அவனுடைய பொருத்தத்தையும் அடைவதற்காகத் தங்கள் செல்வத்தை இழந்து இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டுப் புலம் பெயர்ந்த ஏழைகளுக்கும் (போர் பொருட்களில்) பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் இடையறாது உதவிகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன், 059:008)

இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன். (அல்குர்ஆன், 022:058.)

ஹிஜ்ரத்தின் நோக்கம்:

ஆரம்பக் காலகட்டத்தில் மிகச் சொற்ப விசுவாசிகளைப் பெற்றிருந்த இஸ்லாம், முஸ்லிம்கள் மார்க்கத்தைப் பேணவும், உயிர்களைக் காத்துக்கொள்ளவும் ஹிஜ்ரத் எனும் நாடு துறக்கும் தியாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாம் ஹிஜ்ரத்தைக் கடமையாக்கியது என்பதை இஸ்லாத்தின் வரலாற்றுப் பதிவுகள் சான்று பகிர்கின்றன. அதன்படி ஹபஸாவை நோக்கிய முதல் இரு ஹிஜ்ரத்கள் அமைந்தன.

மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத், குறைஷியரிடமிருந்து தப்பிச் செல்வதோடு, நிரந்தமாக அன்றைய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்காகவும், அதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்று மார்க்கத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற வகையிலும் அமைந்தது. அதாவது எதிரிகளிடமிருந்து தப்பியோடுவதைத் தவிர்த்து அவர்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைமையின் கீழ் வலுவான சக்தியாக முஸ்லிம்கள் ஒன்று சேரவேண்டும் என்ற காரணத்திற்காகவும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வது அன்றைய முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்தது.

இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நடந்த முதலாவது யுத்தமாகிய பத்ர் போரில், 317 பேர்களே முஸ்லிம்களின் படை தரப்பில் இருந்தனர். இது எதிரிகளின் படையில் நான்கில் ஒரு பங்கு. எதிரிகளின் படையில் 1300 பேர்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்ர் போர் நடந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் தமது இறைவனை நோக்கி. “அல்லாஹ்வே! இக்கூட்டத்தை இன்று நீ அழித்து விட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள். அல்லாஹ்வே! நீ இக்கூட்டத்தை அழிக்க நாடினால் இன்றைய தினத்திற்குப் பின் உன்னை யாரும் வணங்க மாட்டார்கள்” என்று இறைவனிடம் கையேந்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் உதவி புரிந்தான்.

அன்று 317 பேர்களைப் பெற்றிருந்த முஸ்லிம் படைகளைக் கொண்டுதான் தூய இஸ்லாத்தின் ஏகத்துவக்கொள்கை நிலைநாட்டப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதனாலேயே அன்றைய முஸ்லிம்களின் ஹிஜ்ரத் எனும் தியாகத்தை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டதாக அருள்மறை குர்ஆன் கூறுகிறது...

“ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸாரிகளிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான்... (அல்குர்ஆன், 009:100)

ஹிஜ்ரத் செய்தவர்களுடன், அன்ஸார்களையும் சேர்த்தே இறைவன் குறிப்பிட்டு கூறுகிறான். இதற்கும் முக்கியக் காரணங்கள் உண்டு. (இதை தொடரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன், இரக்கமுடையோன். (அல்குர்ஆன், 009:117)

ஹிஜ்ரத்திற்கான முக்கியக் காரணிகள், சிரமமான காலத்தில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல், பொருளிழப்பாலும், உயிரிழப்பாலும் மார்க்கத்துக்கு உதவும் உண்மை நோக்கில் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பின்பற்றியவர்களை மேற்கண்ட வசனம் சிறப்பித்து கூறுகிறது. தொடர்ந்து வரும் வசனத்தில்...

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள்... (அல்குர்ஆன், 057:010)

மக்கா வெற்றிக்குப் பின் மார்க்கம் நிலையாக மேலோங்கியது. மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காகச் செய்த தியாகங்களுக்கு சமமாக மக்கா வெற்றிக்குப் பின் செய்யப்படும் தியாகங்கள் வராது. அதாவது, மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்திற்காக நாடு துறந்த, அறப்போர் செய்த தியாகங்களுக்கு மகத்தான பதவியுண்டு. மக்கா வெற்றிக்குப் பிறகு செய்யும் தியாகங்கள் அதற்குச் சமமாக இல்லை!

ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி(ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும் தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று கூறினார்கள். (புகாரி, 4307. முஸ்லிம், 3796, 3797)

வாழ்க்கையும் மார்க்கமும் கேள்விக்குறியாகும் மேற்காணும் கொடுமையான சூழல் இல்லையென்றால், ஹிஜ்ரத் கடமையன்று என மேற்கண்ட நபிமொழியைப் போல் சில நபிமொழிகள் தெளிவாக உணர்த்துகின்றன. அவற்றை அடுத்த பகுதியில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, October 16, 2007

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

புதன், 03 அக்டோபர் 2007

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

கட்டுரையின் முதல் பகுதியினைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியம் என்பது போலவும், அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்து வராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக்குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோ, கடமையையோ நிர்பந்திக்கவும் இல்லை.

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன், 002:286)

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், ‘என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.” (முஸ்லிம்: 3803, புகாரி: 7204 )

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, “உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

“குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காண இயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ''ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
(முஸ்லிம்: 4849)

(“உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோடு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அது போன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்." (அல்குர்ஆன் 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

மேலும்,

“மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.
(புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத்தக்கது.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று அப்போது கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

“முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொரு இடத்தில் நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் என்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால் சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்க வேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக் கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் முர்ஸல் வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய படையினரிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வது தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர்ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிகீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

இப்படி விளங்கினால் திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரத் எப்பொழுது, யாருக்குக் கடமையாகும் என்பதையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அது கடமையா என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

< பகுதி -1

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

புதன், 19 செப்டம்பர் 2007

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், "இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை'' என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித்தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சுலைமான் என்பவர், "இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்" என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரியான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:


//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?' என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (4:97) //- சுலைமான்.


முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

"இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்" என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரின் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்து அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப் படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது...

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, "காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை" எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்கு விளக்க வந்திருக்கிறார். - (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) - அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் கூறவராத ஒரு கருத்தை நிலைநாட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?" என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596 வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி 'இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத்ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 'குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது' என்று இவர்கள் கூறினர்.

பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்... (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாடு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கிய வர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

''மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் 'இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம்கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இறங்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.// - சுலைமான்.

- இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

பகுதி-2