Monday, July 07, 2008

ஓமன் நாட்டு அரசனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-8

இஸ்லாம், அழைப்புப் பணி

8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்

நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் 'ஜைஃபர்' மற்றும் அவரது சகோதரர் 'அப்து'க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:

''அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''

இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.

''நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும் உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்'' என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அதற்கவர் ''எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான் உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு ''நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?'' என்றார்.

அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.

அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.

அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாத்தை ஏற்று நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை) நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய நேர்வழியைக் காட்டினான்.

அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?

அம்ர்: சமீபத்தில் தான்.

அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய்?

அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்.

அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவன் ஆட்சிக்கு என்ன செய்தனர்?

அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.

அப்து: அவைத் தலைவர்களும் பாதிரிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?

அம்ர்: ஆம்!

அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக் கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.

அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.

அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.

அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.

அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?

அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர் எப்போது இஸ்லாத்தை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது ''அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் 'யன்னாக்' என்பவன் ''உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின் புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?'' என்று கேட்டான். அதற்கு ஹிர்கல் ''ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில் அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்'' என்றார்.

அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!

அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.

அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?

அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். (பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்து மீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.

அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர் விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு) வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.

அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து விடுவார்கள்.

அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?

அம்ரு: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவ கொடுக்க வேண்டுமென கடமையாக்கி இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.

அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா (தர்மம்) ஏழைவ வசூலிக்கப்படும்?

அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.

அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும் அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.

அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். ''அவரை விட்டு விடுங்கள்'' என்று அவர் கூற, அவர்கள் என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்ற போது அந்தப் பணியாட்கள் என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரிஎன, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் ''உமது தேவை என்னவென்று சொல்'' என்றார்.

நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப் பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப் பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.

பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் ''குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம் சொல்ல மாட்டாயா?'' என்றார். அதற்கு நான் ''குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில் ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்'' என்றேன். அதற்கவர் ''அவருடன் யார் இருக்கிறார்கள்?'' என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாத்தை விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.

''இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாத்தை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின் வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான் போகிறது. எனவே, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்'' என்று கூறினேன். அப்போது அவர் ''என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா'' என்றார்.

இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் ''அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம் இல்லையென்றால் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார். மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து ''என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை'' என்றேன். அவர் என்னை அவன் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.

அவர் என்னிடம் ''நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன். மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்'' என்று கூறினான். இதனைக் கேட்டு ''சரி! நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்'' என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன் என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று ''நம்மால் அவரை வெல்ல முடியாது. அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது'' என்று கூறினார்.

மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு உதவியும் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்) அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர் சிலர் மறுத்து விட்டனர். என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது.

நூல்: ரஹீக்

தொடர்புடைய முந்தைய பதிவுகள்,

யமாமா, சிரியா இரு அரசர்களுக்கும் நபியவர்கள் எழுதிய கடிதம்-6,7

பஹ்ரைன் ஆளுனருக்கு நபியவர்களின் கடிதம்-5

ஹெர்குலிஸ் மன்னனுக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-4

பாரசீக மன்னனுக்கு நபியர்கள் எழுதிய கடிதம்-3

எகிப்து மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-2

அபிசீனியா மன்னருக்கு நபியவர்கள் எழுதிய கடிதம்-1

யூத, கிறிஸ்தவர்களின் பிளவுகள்.

No comments: