Wednesday, November 29, 2006

நரகவாசிகளின் உணவு என்ன?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.'' (திருக்குர்ஆன், 004:082)

''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.


What will be the food for the people in Hell? The food for the people in Hell will be only "Dhari" [Sura 88:6], or only foul pus from the washing of wounds [S. 69:36], or will they also get to eat from the tree of Zaqqum [S. 37:66]? Together, these verses constitute three contradictions.

கேள்வி:- 4. நரகில் இருப்போரின் உணவு என்ன? நரகிலிருப்போரின் உணவு "தரி" [சூரா 88:6] அல்லது புண்களில் இருந்து வடியும் சீழ் [69:36] அல்லது ஜக்கும் என்ற மரத்தின் கனிகள் [37:66] இந்த மூன்று வசனங்களும் முரண்படுகின்றன.

நரகவாசிகளின் உணவாக திருக்குர்ஆன் கூறும் வசனங்களில் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. என்று சொல்லி, 037:066, 069:036, 088:006 ஆகிய வசனங்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்த வசனங்களைப் பார்ப்பதற்கு முன் பொதுவாக தண்டனைகளின் அடிப்படையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாக் குற்றவாளிகளும் சமமில்லை. குற்றங்களின் அளவைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு குறைந்த அல்லது அதிகபட்சத் தண்டனைகள் விதிக்கப்படுகிறது. சில நாட்கள் கைதியும், சில மாதங்கள் கைதியும், சில வருடங்கள் கைதியும், ஆயுட்கைதியும், மரணதண்டனை கைதியும் இப்படி தண்டனை வழங்கப்பட்ட எல்லாக் கைதியும் சிறையில் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் தண்டனை பெறுவதில் சமமாகி விட மாட்டார்கள். ஆனால் இவர்கள் சிறைக் கைதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! தண்டனை பெறுவதில் வித்தியாசப்படுவார்கள்.

நரகவாசிகளின் உணவாகச் சொல்லப்படும் திருக்குர்ஆன் வசனங்களும், நரக தண்டனைப் பெற்றவர்களின் வேறுபட்ட செயல்களுக்கான தண்டனையாகவே மாறுபட்ட உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. இதை முரண்பாடாகச் சொல்பவர்கள், அந்த வசனங்களின் முன் வசனங்களையும் படித்து சிந்தித்திருந்தால், முரண்படுவதாகச் சொல்வது தவறு என்பதை மிகச் சாதாரணமாகவே விளங்கியிருக்கலாம். வசனங்களைப் பார்ப்போம்...

''இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா.?''

''அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.''

''அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.''

''அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.''

''அவர்கள் அதிலிருந்து சாப்பிடுபவர், அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.''
(037:062-066)

********************************************

''அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.''

''ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.''

''இன்றைய தினம் அவனுக்கு இங்கே உற்ற நண்பன் எவனுமில்லை.''

''சீழைத் தவிர, அவனுக்கு வேறு உணவுமில்லை.''
(069:033-036)

********************************************

''அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.''

''அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.''

''சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.''

''கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.''

''முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.''
(088:002-006)

****************************************

இவ்வுலக வாழ்க்கையில் செயல்பட்ட தீமைகளுக்குத் தக்கவாறு மறுமையில் நரக தண்டனை விதிக்கப்படும். அப்படி தண்டனை பெற்றவர்கள் ஒரே தரத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களின் உணவும் வெவ்வேறாக இருக்கும் என்பதை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து மேலதிக விளக்கம் இல்லாமலேப் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது, 037:066வது வசனத்தில் சொல்லப்படும் நரகவாசிகளின் உணவு, 069:036வது வசனத்தில் சொல்லப்படுபவர்களுக்கில்லை. 088:006வது வசனத்தில் சொல்லப்படும் உணவு மற்ற இரு வசனங்களிலும் சொல்லப்படும் நரகவாசிகளுக்கு இல்லை. மொத்தத்தில், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் நரகவாசிகள் என்றாலும் தண்டனையின் படித்தரத்தில் வித்தியாசம் இருக்கும், அதுபோல் உணவும் மாறுபட்டிருக்கும். எனவே திரக்குர்ஆனின் இந்த வசனங்கள் முரண்படுவதாகச் சொல்வது முறையாக விளங்காத நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

அன்புடன்,
அபூ முஹை

வேதமில்லாத சமுதாயம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.


Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

கேள்வி:- 3. எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று திருக்குர்ஆன் 010:047வது வசனம் கூறுகிறது. இந்த விளக்கத்தின்படி அனைத்துச் சமுதாய மக்களுக்கும் இறைவன் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறான். அது பற்றிய வசனங்கள்...

முதல் வகையான வசனங்கள்.

''ஒவ்வொரு சமூகத்தாருக்கும் தூதர் உண்டு. அவர்களுடைய தூதர் வந்ததும் அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.'' (010:047)

''அல்லாஹ் வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.'' (016:036)

''எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.'' (035:024)

(இன்னும் ஒரு சமுதாயத்துக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள் பார்க்க: 010:075. 036:13,14.)

010:047. 016:036. 035:024 ஆகிய திருக்குர்ஆன் வசனங்கள் எல்லா சமூகத்தினர்களுக்கு நபிமார்களை அனுப்பியதாகக் கூறி. அச்சமூட்டி எச்சரித்து இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே இல்லை என்றும் கூறுகிறது. இனி இதற்கு முரண்பாடாகக் கருதும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்...

இரண்டாம் வகையான வசனங்கள்.

''இதற்கு முன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்பவராகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)
(028:046)

''உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.'' (032:003)

''அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044)

''எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இவர்களை நீர் எச்சரிப்பதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.'' (036:005,006)

முதல் வகையான (010:047. 016:036. 035:024) வசனங்கள், அறிவுரை கூறியும் எச்சரிக்கை செய்தும், நபிமார்கள் அனுப்பப்படாத சமுதாயங்கள் எதுவும் இல்லை என்று கூறுகிறது.

இரண்டாம் வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள், இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதுவரை தூதர் அனுப்பப்படாத சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் என்றும் கூறுகிறது. இந்த இருவகையான வசனங்களிலும் முரண்பாடு இருப்பதாகக் கொள்ள முடியாது. ஏற்கெனவே எல்லா சமுதாயத்தினருக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது, இறுதியாக தூதர் அனுப்பப்படாமலிருந்த சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரித்துத் தூதரை அனுப்பி நிறைவு செய்யப்பட்டது.

முரண்படுவதாகச் சொல்பவர்களும் இந்த வசனங்களைச் சொல்லி முரண்படுவதாகச் சொல்லவில்லை. இந்த வசனங்களைச் சுட்டிக் காட்டி, இவற்றோடு வேறு வசனங்களையும் ஒப்பிட்டு அதனால் முரண்படுவதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் பார்ப்போம்.

(இதையும் எண்ணிப் பாருங்கள்; ''கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்'' (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூறுங்கள்) ''இறைவா! இந்த ஊரைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக'' என்று இப்ராஹீம் கூறியபோது, ''(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன், பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன், வேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான்.

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ''எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்'' (என்று கூறினர்).

''எங்கள் இறைவனே! எங்களை உனக்கு முற்றிலும் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையோன்.
''எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.''
(002:125-129)

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களை முன் வைத்து ஏற்கெனவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர் மைந்தர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் மக்காவாசிகளுக்கு நபியாக அனுப்பப்பட்டவர்கள்தானே, இந்த இரு நபிகளின் மூலம் வேதங்களும் வழங்கப்பட்டவர்கள் தானே என்றும் கேட்டு, அரபியர்களுக்கு ஏற்கெனவே நபிகள் அனுப்பப்பட்டிருக்கிறது அதனால் இரண்டாவது வகையான (028:046. 032:003. 034:044. 036:005,006) வசனங்கள் முரண்படுகிறது என்று சொல்ல வருகிறார்கள்.

அதாவது மக்காவாசிகளுக்கு முன்பு தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறது ஆனால் ஏற்கெனவே தூதர்கள் அனுப்பப்பட்ட சமுதாயத்துக்கு மீண்டும் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார் என்ற வாதத்தை வைத்து -

''அவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044) - திருக்குர்ஆன் இந்த வசனத்தையும் இது போன்ற இரண்டாம் வகையான வசனங்களையும், 002:125-129 ஆகிய வசனங்களோடு ஒப்பிட்டு முரண்படுத்துகிறார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை திருக்குர்ஆன் (002:125-129 ) வசனங்கள் விவரிக்கின்றது. இந்த 2500 ஆண்டுகளுக்கிடையில் அரபு நாட்டில் வேறெந்த இறைத்தூதரும் அனுப்பப்படவில்லை! இங்கே அரபிய சமுதாயங்கள் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்...

அரபிய சமுதாயங்கள்.

வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வம்சாவழி அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கின்றனர்.

1. அல் அரபுல் பாயிதா.
இவர்கள் பண்டையக் கால அரபியர்களான ஆது, ஸமுது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹிழ்ர மவ்த் ஆகிய வம்சத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்து விட்டதால் இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.

2. அல் அரபுல் ஆரிபா.
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யாஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினராவர். கஹ்தான் வம்ச அரபியர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவார்கள்.

3. அல் அரபுல் முஸ்தஃரிபா.
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வம்ச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.

இந்த வரலாற்று குறிப்புகளிலிருந்து ஆது, ஸமூது கூட்டத்தினர் அழிக்கப்பட்டார்கள் என்று அறிய முடிகிறது. இதையேத் திருக்குர்ஆனும் உறுதி செய்கிறது. ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதையும், ஆது சமுதாயத்துக்குப் பின் வந்த ஸமூது கூட்டத்தினரும் அழிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் 007:072-078 வசனங்கள் கூறுகிறது.

மக்காவில் எவருமே குடியிருக்காத நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது மனைவி அன்னை ஹாஜராவையும் கைக்குழந்தையாக இருந்த தமது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் மக்காவில் குடியமர்த்தியதற்கு முன்பே இரண்டாம் ஜுர்ஹும் என்ற யமன் கோத்திரத்தினர் மக்கா வழியாக போக்குவரத்திலிருந்தனர். அன்னை ஹாஜரா, மகன் இஸ்மாயீல் (அலை) இவர்களின் பொருட்டு இறைவன் ஜம் ஜம் என்ற நீரூற்றை வெளிப்படுத்தினான் இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் அன்னை ஹாஜராவின் அனுமதியோடு மக்காவில் குடியேறினார்கள்.

ஜுர்ஹும் குலத்தார் மக்காவில் தங்கியதோடு, தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்பி அவர்களும் மக்காவில் குடியேறினார்கள். இதனால் ஜுர்ஹும் குலத்தார்களின் வீடுகள் மக்காவில் தோன்றின. குழந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களும் வளர்ந்து வாலிபமானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபு மொழியைக் கற்றுக் கொண்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் குலத்தாருக்கு மிகவும் பிரியமானவராகவம், விருப்பமானவராகவும் திகழ்ந்தார். இஸ்மாயீல் (அலை) பருவ வயதை அடைந்தபோது ஜுர்ஹும் குலத்தார் தம் குலத்திலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இந்தச் சம்பவங்களும் இன்னும் கூடுதலான விவரங்களையும் (புகாரி 3364 ) நபிவழிச் செய்தியிருந்து தெரிந்து கொள்ளலாம். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வம்சா வழித் தோன்றல்கள் இங்கிருந்துத் துவங்குகிறது.

''இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவூட்டுவீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.'' (019:054)

இஸ்மாயீல் (அலை) அவர்கள் இறைவனால் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார் என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. ஆனால் அவருக்கு வழங்கிய வேதம், காலப்போக்கில் அழிந்து விட்டன என்றே விளங்க முடிகிறது. அதற்குப் பின் - முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன் - வந்த இறைத்தூதர்களுக்கு வழங்கிய வேதங்களே உருப்படியாக இல்லையெனும்போது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு வழங்கிய வேதத்தின் நிலைப்பற்றி சொல்லத் தேவையில்லை.

இறைத்தூதர் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பின் - இறுதி இறைத்தூதருக்கு முன் - அரபு நாட்டில் எந்தத் தூதரும் தோன்றியிருக்கவில்லை. இந்த 2500 ஆண்டுகளாக எந்த வழிகாட்டியும் அனுப்படாத, வேதமென்று எதுமில்லாத ஒரு சமுதாயத்தின் தான்தோன்றித்தனமான ஆன்மீகம் எப்படியிருந்திருக்கும்? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் இப்ராஹீம் நபியின் மார்க்கத்துக்கு எதிரான மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கிக் கிடந்தனர்!

திருக்குர்ஆன் ஒரு வசனத்திற்கு வேறு ஒரு வசனமே விளக்கமாகும் என்ற அடிப்படையில், அன்றைய சமுதாயங்களில் வேதம் வழங்கப்பப்படாத சமுதாயம் இருந்தது என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து விளங்கலாம்...

''எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது. நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்'' என்றும், ''எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்'' என்றும் நீங்கள் கூறாதிருக்கவும் (இவ்வேதத்தை அருளினோம்) (006:156,157)

எங்களுக்கு வேதம் அருளப்படவில்லை என்ற நியாயமான கோரிக்கையை வைக்கும் சமுதாயம் ஒன்று அன்று இருந்தது.

மட்டுமல்ல, எங்களுக்கு வேதம் வழங்கப்படவில்லை அதனால் நாங்கள் நேர்வழி பெறவில்லை என, நாங்கள் நேர்வழி பெறாதது எங்கள் குற்றமில்லை என்ற நேர்மையானக் காரணத்தை சமர்ப்பிக்கும் நிலையிலும் அந்தச் சமுதாயம் இருந்தது.

எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கு வேதம் அருளப்பட்டது அதை நாங்கள் படிக்கத் தெரியாமல் இருந்தோம் என்பது அந்த சமுதாயத்திற்கு சமீப காலமாக அவர்களின் தாய்மொழியாகிய அரபி மொழியில் வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது இதையே -

''அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. உமக்கு முன்னர், நாம் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.'' (034:044) - என்று திருக்குர்ஆன் விளக்குகிறது.

''அவர்கள் வாசிக்கக்கூடிய வேதங்கள் எதையும் நாம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை எனும் போது, வேதம் வழங்கப்படாத சமுதாயத்துக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் தூதராக அனுப்பியிருக்கவில்லை என்பதே பொருள். அதாவது 2500 ஆண்டுகளுக்கிடையில் எந்தத் தூதரும் அனுப்பப்படாமல், வேதமும் வழங்கப்படாமலிருந்த அரபி சமுதாயத்துக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை நியமிக்கிறான் இறைவன். மேலும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் (002:129) இங்கு நிறைவேற்றப்படுகிறது.

அச்சமூட்டி எச்சரிக்க இறைத்தூதர் அனுப்பப்படாத சமுதாயத்துக்கு, முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்ற திருக்குர்ஆன் கூற்றில் எவ்வித முரண்பாடும் இல்லை! அதோடு, முழு மனித குலத்துக்கும் இறைத்தூராகவும், இறுதித்தூதராவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நியமிக்கப்பட்டு தூதுப்பணி நிறைவு செய்யப்பட்டது.

அன்புடன்,
அபூ முஹை

Sunday, November 26, 2006

.இறையடியார்களுக்கு...

ஓர் மீள்பதிவு!

இறையடியான் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் சகோதரர் ஒருவர் அண்மையில் இராமாயணம் பற்றிப் பதிவொன்று இட்டிருந்தார். இந்துத்துவ வெறியர்களின் பதிவுகளின் எதிர்வினைப் பதிவாக இருந்தாலும் அதில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சில கதை நிகழ்வுகளையும் பொருத்தமற்று எழுதிக் குழப்பியிருந்தார்.

அதற்கு எதிர் வினையாக, ஜெயராமன் எனும் பதிவர் 'இஸ்லாமிய ராமாயணம்' என்ற தலைப்பில் ஒரு மறு கட்டுரை வெளியிட அதில் வழக்கம்போல் இந்துமதத் தீவிரவாதிகள் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் உயிரினும் மேலான, அல்லாஹ்வின் தூதர் மீதும் புழுதியும் சேறும் வாரி வீசியிருந்தனர்.

இந்நிலை யாரால் ஏன் ஏற்பட்டது?

சிந்தித்துப் பார்த்தால் தவறு இறையடியான் என்ற வலைப் பதிவரிடம் என்பது புரியும்.

சினமோ சீற்றமோ கொள்ளாது காய்தல் உவத்தல் இன்றிச் சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றில் உள்ள உண்மை யாவருக்கும் புரியும்.

இராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த காப்பியம். வால்மீகி இராமாயணம், துளஸி இராமாயணம், ஆனந்த இராமாயணம் போன்று கம்பன் எழுதிய இராமாயணம் தமிழ் மொழியின் மிகச்சிறந்த காப்பியம். அதன் மொழியழகும் கவிதைச் சிறப்பும் தமிழர்கள் யாவராலும் போற்றப் படும். இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக எழுதவும் செய்யலாம். அதில் தவறில்லை. அல்லாஹ்வின் அருள் மறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் உரிமை உள்ள இவ்வுலகில் ஓர் இலக்கிய நூலை விமர்சிப்பதில் தவறேயில்லை.

ஆனால் ஒரு நூலை விமர்சிக்கப் புகுமுன், குறைந்த அளவு அதன் உள்ளடக்கம் என்ன? அதன் கதை மாந்தர்கள் யாவர்? அவர்களுக்குள் என்ன உறவு அல்லது தொடர்பு என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? பள்ளிக் கல்வியிலேயே இராமாயணம் தேர்வுக்குரிய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. சாதாரண எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்திருக்கும் ஒரு தகவல் இணையத்தில் வலைப் பதிவு செய்யும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் நம்ப முடியவில்லை.

இறையடியான் எவ்வித ஆய்வும் தெளிவுமின்றிப் பதித்த ஒரு பதிவினால் தமிழ் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வலையில் பதியும் இறையடியார்களே! உங்கள் சிந்தனைக்குச் சில..

இணையத்தில் ஓர் ஆக்கத்தைப் பதிவேற்ற எண்ணினால் அதற்கு முழு வடிவம் கொடுத்தபின் ஒரு முறைக்கு இருமுறை படித்து வேண்டிய திருத்தங்கள் செய்து பதிக்க வேண்டும். அதுவும் மேற்படியார் பதிந்துள்ளபடி விவாதத்துக்குரிய செய்திகளை மிகவும் கவனத்துடன் ஆதாரங்களைத் தேடிப் படித்துப் பின் பதிக்க வேண்டும். நாம் விமர்சிக்கப் புகும் நூலில் இருந்து அகச்சான்றுகள், அதற்கு வலுவேற்றும் புறச்சான்றுகள், பிற ஆய்வு நூலாதாரங்கள், வரலாற்று மற்றும் தொல்லியல், மானுடவியல் ஆதாரங்கள் இருப்பின் அவை என இப்படி எவையெல்லாம் நம் வாதங்களை வலுவேற்றுமோ அவை எல்லாம் தேடப்பட வேண்டும். சான்றாக, பாப்ரி மஸ்ஜித் விஷயமாக எழுதப் புகுந்தால் மேம்போக்காக எழுதாமல் மேற்சொன்ன அனைத்துவகைச் சான்றுகளையும் தரவுகளையும் தொகுத்து எழுதினால் அதன் பொலிவே தனிதான்.

ஆனால் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக இறையடியானது எழுத்திலிருந்து புலப்படவில்லை. எந்த நூலையும் ஆய்வு நோக்கில் படித்து எழுதியதாகவும் தெரியவில்லை. எதோ ஒரு நூலை அவசரமாகப் படித்து அல்லது ஓர் ஒலிநாடாவைக் கேட்டு அல்லது கேட்டவர் சொல்லக் கேட்டு அவசரமாகப் பதித்து 'பேஸ்த்' ஆகி நிற்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இதைத்தான், "தடி கொடுத்து அடி வாங்குவது" என்பர்.

"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்கக் கூடாது." இவரது சறுக்கலை வைத்தே ஜல்லியடித்துள்ள கூட்டம் இதை மெய்ப்பித்துவிட்டது.

பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்டாதீர்கள்; இதன் மூலம் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையில் சொன்னதற்குச் சரியான சான்றாகி விட்டார் இறையடியான்.

ஒரு கருத்தைச் சொன்னால் எதிரி வாயடைக்கும் வண்ணம் சொல்ல வேண்டும்.

மாறாக, அரைகுறைச் செய்திகளுடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியர்களிடம் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டதைப்போல் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

நாம் விமர்சிக்கும் எதிரிகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்ற எண்ணம் இருந்தால்தான் வாதங்களில் தெளிவும் வலுவும் ஏற்படும். மத்ஹபு, தர்கா, தரீக்கா என மேம்போக்காக வாதிடுவதுபோல் எண்ணி, அள்ளித் தெளித்த அவசரக் கோலம் அலங்கோலப் பட்டுவிட்டது.

எழுத்தில் சூடு இருப்பதை விடத் தேவையானது மறுக்கவியலா ஆதாரம். காளையொன்று கன்றீன்றது எனக் கூறக் கேட்டால் கறப்பதற்குச் சொம்புடன் ஓடக்கூடாது.

"நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றபடி, நீங்கள் எழுத விரும்பும் செய்தி பற்றி மேல் விபரங்களை, அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்கலாம்; முழுவடிவம் கொடுக்கும் முன் அத்தகைய அறிஞர்களிடம் காட்டலாம்.

பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட தளம், மன்றம், அரங்கம் பற்றியும் அங்குள்ள விதிகள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம். இல்லையேல், மூக்கறுப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பொதுவில் கொண்டு செல்லும் முன் இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மையா என்பதை முதலில் சிந்தித்துப் பார்த்துவிடுவது நலம்.

இரண்டாவதாக, கொண்டு செல்லும் குறிப்பிட்ட அந்த இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றவையா என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான நேரம் ஒதுக்கும் வாய்ப்பு தமக்கு இருக்கிறதா என்பதை முடிவு செய்த பின்னரே இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது நலம்.

ஏதாவது ஓர் அறிஞரின் கருத்தைத் தம் ஆக்கத்தில் மேற்கோளிட்டுவிட்டு, எதிர்வினை வரும்போது இதற்கு நான் முழுதும் உடன்படவில்லை என்றோ அல்லது அந்த அறிஞரிடம்தான் கேட்க வேண்டும் என்றோ சொல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாமல், தாமே எதிர்வினைகளை எதிர்கொள்வதற்காக, உடன்பாடான, தெரிந்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவதே நல்லது.

இணையதளத்தில் இதன் குறிப்புகளோ அல்லது மூலமோ இருக்குமாயின், அவசியம் சுட்டி கொடுக்கப்பட வேண்டும்.

எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்காகப் பாமர வாசகனுக்கு எளிதில் புரியாத பெரிய பெரிய சொற்களைப் போட்டு மிரட்டக்கூடாது. கூறியது கூறல் கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதற்காகக் குன்றக் கூறவும் கூடாது; மிகைப் படுத்தவும் கூடாது. சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவவும் கூடாது.

சுருங்கக் கூறின், ஓர் ஆக்கம் என்பது, 'மனித குலத்தின் மேன்மைக்கும் அமைதிக்கும் உரிய வழி'யின்அழைப்பாக இருக்க வேண்டும்.

நன்றி: புதுச்சுவடி

அன்புடன்,
அபூ முஹை

Friday, November 17, 2006

இறைவனைப் பார்க்க முடியுமா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.


Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

கேள்வி 2. அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)


ஆன்மீகத்தின் உயர்வான நிலை இறைவனைக் காண்பது என்பார்கள். ஆன்மீகவாதிகள் சிலர் இறைவனைப் பார்த்ததாகச் சொல்வார்கள். ஆனால் இவ்வுலகில் இறைவனைப் பார்க்க முடியாது என இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் உள்பட எந்த மனிதனும் நேரில் இறைவனைப் பார்க்க முடியாது என்றே திருக்குர்ஆன் உறுதியாகக் கூறுகிறது.

''பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான்'' (திருக்குர்ஆன், 006:103)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் '(அவனைச் சுற்றிலும்) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள். என்று அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். நூல், முஸ்லிம் தமிழ் 291. ஆங்கிலம், 0341.

இந்த உலகில் எந்த மனிதரும் இறைவனைப் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன், 006:103வது வசனம் கூறுகிறது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் - ''இறைவன் ஒளியாயிற்றே அவனை எப்படிப் பார்க்க முடியும்?'' - இம்மையில் இறைவனைப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். இம்மையைப் பொருத்தவரை இறைவனைக் காண முடியாது என்று சொல்லும் இஸ்லாம், மறுமையில் இறைவனைப் பார்க்க முடியும் என்றும் கூறுகிறது.

''அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும், தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்'' (075:022,023. இன்னும் பார்க்க: 002:046. 010:007,011.15,45. 018:105. 025:021. 032:010. 041:054. 083:015.)

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக (மறுமையில்) உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!'' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள். புகாரி, 554. (முஸ்லிம் தமிழ், 299. ஆங்கிலம் 0349.)

இனி... முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்று விளங்கும் திருக்குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.

முஹம்மது அல்லாஹ்வைப் பார்த்தாரா? ஆம்: பார்த்தார்! என்பதற்கு திருக்குர்ஆன் 053, 081 ஆகிய அத்தியாயத்திலுள்ள வசனங்கள்...
 
(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.

அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.

(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.

அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.

(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.

ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?

அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரயீல்) இறங்கக் கண்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
(திருக்குர்ஆன், 053:006-14)

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். (திருக்குர்ஆன், 081:23)

திருக்குர்ஆன் 053, மற்றும் 081 ஆகிய இரு அத்தியாயத்திலுள்ள வசனங்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்கள் என்கிறதே? என்று, இது 006: 103வது வசனத்திற்கு முரண்படுகிறது எனச் சொல்ல வருகிறார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனங்களுக்கு என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன், மிகச் சாதாரணமாக நடுநிலையோடு இந்த வசனங்களை அணுகினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பார்த்ததாக இந்த வசனங்கள் சொல்லவில்லை என்ற விளக்கத்தைத் தெளிவாகவே நாம் பெற முடியும்.

''அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்'' (081:23) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்...

''இது மரியாதைக்குரிய தூதரின் சொல்லாகும்'' (19)

''(அவர்) வலிமை மிக்கவர், அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்'' (20)

''வானவர்களின் தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்'' (21) இந்த மூன்று வசனங்களும் சந்தேகத்திற்கிடமின்றி வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றியேப் பேசுகிறது என்பது தெளிவு. ''அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்'' (081:23) என்று சொல்வது இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பிக்கும் வானவர் தூதரான ஜிப்ரீல் (அலை) அவர்களையே குறிப்பிடுகிறது.

''ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்'' (053:13,14) இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில்...

''அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை'' (3)

''அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை'' (4)

''மிக்க வல்லமையுடையவர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்'' (5)

''(அவர்) மிக்க உறுதியானவர், பின்னர் அவர் அடி வானத்தில் இருக்கும் நிலையில் தோன்றினார்'' (6,7)

''பின்னர் இறங்கி நெருங்கினார்'' (8)

அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு, அல்லது அதைவிட நெருக்கமாக இருந்தது'' (9)

''தனது அடியாருக்கு அவன் அறிவித்ததை அறிவித்தார்'' (10)

''அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை'' (11)

''அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?'' (12) இந்த வசனங்களும் இறைவனுக்கும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையில் தூதராக இருந்து வானுலக இறைச் செய்திகளை இறைத்தூதருக்கு அறிவிப்பவராக இருந்த வானவர் ஜிப்ரீலைப் பற்றியே இங்கு சொல்லப்படுகிறது. அதாவது...

''அவர் திட்டமாக அவரைத் தெளிவான அடிவானத்தில் கண்டார்'' (081:23) என்று இந்த வசனத்தில் யாரைக் குறிப்பிட்டு சொல்லப்படுகிறதோ, அவரையே மீண்டும் சந்தித்தாக - ''ஸிராத்துல் முன்தாஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்'' (053:13,14) - இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை சந்தித்ததும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான் என்பது இதன் முன் பின் வசனங்களிலிருந்து விளங்கலாம். மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தது இறைவனை அல்ல என்பதை அவர்களே விளக்கியுள்ளார்கள்...

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) ''அபூ ஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரிய இட்டுக் கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். நான் ''அவை எவை''? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ''யார் முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்'' என்று சொன்னார்கள். உடனே நான் சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ''இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசப்படாதீர்கள். வலிவும் மண்புமிக்க அல்லாஹ் 'அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்" (081:023) என்றும், 'நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்' (053:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின் வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அது (வானவர்) ஜிப்ரீலை (நான்) பார்த்ததையே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரண்டு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) ''அல்லாஹ் (பின் வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?'' என்று கேட்டார்கள்.

''கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான்'' (006:103)

அல்லது (பின் வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ''எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசியதில்லை. ஆயினும் வஹியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை, நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்'' (042:051) முஸ்லிம் தமிழ், 287. ஆங்கிலம் 0337. இன்னும் பார்க்க: புகாரி, 3232, 3233, 3234, 3235.
திருக்குர்ஆனுக்கு விளக்கமாகவே வாழ்ந்து காட்டிய இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விளக்கமே மிகச் சரியானது! எல்லா நேரத்திலும் வானுலக இறைச் செய்திகளை கொண்டு வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சேர்ப்பித்தது வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களே என்றாலும், இறைவன் தன்னைப் படைத்த நிஜமான, அசல் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) இரண்டு தடவைகள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்திருக்கிறார் என்பதை விளக்கவதோடு, மற்ற நேரங்களில், ஜிப்ரீல் (அலை) தமது நிஜத் தோற்றத்தில் அல்லாமல் சாதாரண மனிதரைப் போலவே இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து இறைவனின் வஹியை அருளியிருக்கிறார் என்றும் விளங்கலாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு தடவை வானவர் ஜிப்ரீலை நிஜத் தோற்றத்தில் சந்தித்தது சர்ச்சையாக இருந்ததால் அது பற்றிய தர்க்கத்தையும் சந்தேகத்தையும் நீக்கிடவே ''அவர் பார்த்ததில் அவருடைய உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா?'' (053:11,12) என ஏக இறைவன் தனது தூதரை மெய்ப்பிக்கிறான்.

இம்மையில், இறைத்தூதர்கள் உள்பட மனிதர்கள் எவரும் இறைவனைப் பார்க்க முடியாது (006:103) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததாகக் குறிப்பிடுவது (081:23, 053:13,14) நிஜத் தோற்றத்தில் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களை என்பதால் இங்கு திருக்குர்ஆன் வசனங்களில் முரண்பாடு எதுவுமில்லை என்பது தெளிவு!

**************************************

கேள்வி:- 3

Were Warners Sent to All Mankind Before Muhammad? Allah had supposedly sent warners to every people [10:47, 16:35-36, 35:24], Abraham and Ishmael are specifically claimed to have visited Mecca and built the Kaaba [2:125-129]. Yet, Muhammad supposedly is sent to a people who never had a messenger before [28:46, 32:3, 34:44, 36:2-6]. This article also raises other issues: What about Hud and Salih who supposedly were sent to the Arabs? What about the Book that was supposedly given to Ishmael? Etc.

எச்சரிப்பவர்கள் முஹம்மதுக்கு முன் இருந்த மனிதர்களுக்கு அனுப்பப்பட்டார்களா? அல்லாஹ் எல்லா மக்களுக்கும் எச்சரிப்பவர்களை அனுப்பி உள்ளான் [10:47, 16:35-36, 35:24], ஆப்ரஹாமும் இஸ்மவேலும் மக்கா சென்று காஅபாவைக் கட்டியவர்கள் [2:125-129]. இருப்பினும் இதற்கு முன் ஒரு தூதரும் அனுப்பப்படவில்லை என்று நம்பப்படும் மக்களுக்கு முஹம்மது தூதராக அனுப்பப்பட்டார் [28:46, 32:3, 34:44, 36:2-6]. இதில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஹூத், ஸாலிஹ் என்று அரபுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் பற்றி என்ன சொல்வது? இஸ்மவேலுக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்னாயிற்று?
மேற்கண்ட கேள்விகளில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

Saturday, November 11, 2006

முதல் முஸ்லிம் யார்?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன், 004:082)

''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.


கேள்வி:- 1. முதல் முஸ்லிம் யார்? - Who Was the First Muslim? Muhammad [6:14, 163], Moses [7:143], some Egyptians [26:51], or Abraham [2:127-133, 3:67] or Adam, the first man who also received inspiration from Allah [2:37]?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் யார்? முஹம்மது (6:14, 163) மோசஸ் (7:143) சில எகிப்தியர்கள் (26:51) ஆப்ரஹாம் (2:127-133, 3:67) அல்லது ஆதம் அல்லாஹ்வின் கட்டளை பெற்ற முதல் மனிதன் (2:37)?

விளக்கம்:- ஆண்களில், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! பெண்களில், ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஹவ்வா (அலை) அவர்கள்தான் முதல் முஸ்லிம்! என்பது முறையாக இஸ்லாத்தைப் படித்தவர்களின் சாதாரணப் பதிலாக இருக்கும். இதைப் புரியும்படி விளக்குவதற்கு முன், இவர்களிடையே இந்தக் கேள்விகள் எழுவதற்கு ''என்ன காரணம்?'' என்பதையும் தெரிந்து கொள்வோம்!

முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இஸ்லாத்தைப் போதித்தார்கள். அதனால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் இஸ்லாத்தின் நிறுவனர் என்ற தவறானக் கருத்து மேலைநாட்டவரிடம் நிலவுகிறது. மேற்கத்தியர்களின், அந்தத் தவறானக் கருத்தின் தாக்கம் மேற்கண்ட கேள்விகளிலும் பதிந்திருக்கிறது. இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் இஸ்லாம்தான் மார்க்கமாக இருந்தது. தூதர்கள் அனைவருமே இறைச் செய்தியைத்தான் கொண்டு வந்தார்கள். இஸ்லாத்தின் நிறுவனராக எந்த இறைத்தூதரும் இருந்ததில்லை. எல்லாக் காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்துக்காக இறைவனால் அருளப்பட்ட நற்போதனைகள் இஸ்லாம். இதை அறியாததால், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முன்பு இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருக்கவில்லை, அதனால் முஸ்லிம் என்பவர்களும் இருந்ததில்லை எனப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அகிலங்கள் அனைத்திற்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான் என்னும் ஓரிறைக் கொள்கை, மற்றும் மறுமை இருக்கிறது என்பது போன்ற கொள்கைகளே, முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா நபிமார்களும் போதித்தார்கள் சில கிளை சட்டங்கள் மட்டுமே வித்தியாசமாக சிலருக்கு வழங்கப்பட்டன. மற்றபடி அடிப்படைக் கொள்கைகள் எவ்வித மாற்றமும் இல்லாமல், எல்லா நபிமார்களுக்கும் ஒரே மார்க்கமே அருளப்பட்டது...

(முஹம்மதே) ''உமக்கு முன் தூதர்களுக்கு கூறப்பட்டதுவே உமக்கும் கூறப்பட்டுள்ளது.'' (திருக்குர்ஆன், 041:043)

''என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, 'இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்.'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, 3535.

அனைத்து இறைத்தூதர்களுக்கும் ஒரே மாதிரியான உபதேசங்களே அருளப்பெற்றது என்று திருக்குர்ஆன் 041:043வது வசனம் கூறுகிறது. எல்லா இறைத்தூதர்களும் சேர்ந்து இஸ்லாம் என்ற ஒரு வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார்கள் என்ற அழகிய உதராணத்தை நபிமொழி கூறுகிறது. ஆதியிலிருந்து இறுதிவரை எல்லா நபிமார்களுக்கும் இறைவன் வழங்கிய மார்க்கம் இஸ்லாம். ஒவ்வொரு நபியும் கொண்டு வந்த இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்! எனவே முஸ்லிம் என்ற பெயர், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தாருக்கு மட்டும் உள்ள பெயர் அல்ல. முந்தைய நபிமார்களின் உபதேசத்தை ஏற்றுப் பின்பற்றியவர்களும் இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களே!

இதற்கு விளக்கமாக திருக்குர்ஆனில் பல வசனங்களைப் பார்க்கலாம் குறிப்பாக திருக்குர்ஆன், 022:078வது வசனத்தில் ''உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில்...'' என நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாம் என்றே இறை வசனங்கள் கூறுகிறது. ''இதற்கு முன்னரும் இதிலும் அவன்தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்...'' என்று இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள் ''முஸ்லிம்கள்'' எனப் பெயர் சூட்டப்பட்டார்கள் என்பதை விளங்கலாம். நபி நூஹ் (அலை) அவர்களும் முஸ்லிமாக இருந்தார். (010:072) இஸ்லாத்தின் எதிரி ஃபிர்அவ்னும் மரணிக்கும் நேரத்தில், தன்னை முஸ்லிம் எனச் சொல்லிக் கொண்டான். (010:090)

இன்னும் முந்தைய நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேத வசனங்களையும் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என மறுமையில் சொல்லப்படும் என்பதை கீழ்வரும் வசனத்திலிருந்து...

''இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, முஸ்லிம்களாக இருந்தனர்.'' (திருக்குர்ஆன், 043:069)

************************************

கேள்விக்கு வருவோம்:- முதல் முஸ்லிம் யார்?

முஹம்மதா?

''கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவானக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்!'' (006:014)

''முஸ்லிம்களில் நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!'' (006:163)

மூஸாவா?

''நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' என்று (மூஸா) கூறினார். (007:143)

சில எகிப்தியர்களா?

''நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக...'' (026:051)

ஆப்ரஹாம் என்ற இப்ராஹீமா?

''எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் சந்ததிகளை உனக்குக் கட்டப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக!'' (002:128)

''அவரது இறைவன் 'கட்டுப்படு' என்று அவரிடம் கூறினான். 'அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்' என்று அவர் கூறினார்.'' (002:131)

''என் மக்களே அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக்கூடாது.'' என்று இப்ராஹீமும், யாகூப்பும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினார்கள். (002:132)

''...நாங்கள் அவனுக்கேக் கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினார்கள். (002:133)

''இப்ராஹீம்... அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார்...'' (003:067)

இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள், திருக்குர்ஆன் வசனங்கள் சில ஒன்றுக்கொன்று முரண்படுகிறது என்று மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் மனிதருக்கு அருளியதிலிருந்து தொடர்ந்து இறைவன் வழங்கிய ஒரே மார்க்கம் இஸ்லாமாகும். முதல் மனிதரிலிருந்து தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள்! என்பதற்கு விளக்கமாக திருக்குர்ஆன் வசனங்களை மேலே சொல்லியுள்ளோம்.

இனி...
''முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொன்னது அதற்கு முன் முஸ்லிம்களே இருந்திருக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது! இந்த ஆண்டு படித்த மாணவர்களிலேயே முதல் மாணவனாகத் தேர்வுப் பெற்றது ஒரு மாணவன் என்பதால் அதற்கு முன் எந்த மாணவனும் முதலிடத்தைப் பெறவில்லை என்று பொருளாகி விடாது.

ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றால், முதன் முதலில் முஸ்லிமானது நான்தான் என்று முதலில் இஸ்லாத்தை ஏற்ற அந்தக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சொன்னால், அதற்கு முன் முஸ்லிம்களே இல்லை என்று பொருள் கொள்ள மாட்டோம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக எற்றுப் பின்பற்றும் இந்த முஸ்லிம் சமுதாயத்தில், முஹம்மது (ஸல்) அவர்களே முதல் முஸ்லிம் ஆவார்கள். இறைச் செய்தி அவர்களுக்குத்தான் முதலில் அறிவிக்கப்படுகிறது. தமக்கு அறிவிக்கப்பட்ட இறைக் கட்டளையை முதலில் நிறைவேற்றும், முதல் முஸ்லிமாக அவர்கள் இருந்தார்கள். ''உங்களையெல்லாம் விட நான் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். இறை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றியதிலும் இந்த சமுதாயத்தின் அனைத்து முஸ்லிம்களை விடவும் உயர்வான முதன்மை இடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்படி இருக்க வேண்டுமென இறைவனால் கட்டளையிடப்பட்டிருந்தது...

''முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனக் கூறுவீராக. (039:012)

இறைத்தூதர்கள் அனைவருமே அந்தந்த சமூகத்தினர் பின்பற்றியொழுக வேண்டிய முன்னோடிகள் என்பதால், இறைத்தூதர்கள் யாவரும் அந்த சமுதாயத்தின் முதல் முஸ்லிமாக இருந்தார்கள். முஸ்லிம்களில் முதன்மையானவர்களாகவும் இருந்தார்கள். இது போல்...

''நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' என்று (மூஸா) கூறினார். (007:143)

இறைச் செய்திகள் முதலில் நபிமார்களுக்கே அறிவிக்கப்படுவதால், நம்பிக்கை கொள்வதிலும் நபிமார்களே முதலிடம் வகிப்பார்கள். இறைத்தூதரைப் பின்பற்றி இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் அதாவது, நபியை உண்மைப்படுத்திய சமூகத்தவரில் முதலாமவர்களாக இருக்க விரும்புபவர்களைப் பற்றியே கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் பேசுகிறது...

''நம்பிக்கை கொண்டோரில் முதலாமானோராக நாங்கள் ஆனதற்காக...'' (026:051)

இன்னும், இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகை நேரத்தில் முந்தைய வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களை ''முஸ்லிம்கள்'' என்று சொல்லிக் கொண்டார்கள்...

''... இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்'' என்று கூறுகின்றனர். (028:053)

*****************************************************************************
கேள்வி:- 2.

Can Allah be seen and did Muhammad see his Lord? Yes [S. 53:1-18, 81:15-29], No [6:102-103, 42:51].

இறைவனைப் பார்க்க முடியுமா? முஹம்மது இறைவனைப் பார்த்தாரா? ஆம் (53:1-18, 81:15-29) இல்லை (6:102-103, 42:51)

மேற்கண்ட கேள்வியில் சுட்டியுள்ள முரண்பாடு!? பற்றி அடுத்தப்பதிவில் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
அபூ முஹை

Sunday, November 05, 2006

இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், மறுமை நாள் - இறுதித் தீர்ப்பு நாள் என்ற அந்த நாள் நிச்சயமாக வரும் என நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்களில் மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருந்தார்கள். மறுமை வாழ்க்கையை அவர்களால் நம்ப முடியாமல் போனது, இந்த மண்ணுலக வாழ்க்கையைத் தவிர வேறு எந்த வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கையும்தான் நபிமார்களையும் அவர்களின் போதனைகளையும் நிராகரிக்கும்படிச் செய்தது...

''இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது, நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன், 006:029)

''மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.'' (திருக்குர்ஆன், 083:004 - 006)

இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் இறுதி நாளை மறுத்து வந்ததையும், அவர்கள் மறுப்புக்கு பதிலடியாக இறுதி நாள் நிச்சயமாக நிகழ இருக்கிறது என்று இறைவன் கூறியதையும் திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் காணமுடியும். இறுதித் தீர்ப்பு நாள் எப்போது வரும் - எந்த நேரத்தில் சம்பவிக்கும் என்பது இறைத்தூதர்கள் உள்பட - மனிதர்கள் எவருக்கும் தெரியாது. அது பற்றிய ஞானம் இறைவனிடமே உள்ளது...

''நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக அந்த நாளை மறைத்து வைத்திருக்கிறேன்.'' (திருக்குர்ஆன், 020:015)

''அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது..'' (திருக்குர்ஆன், 31:34)

இன்னும், மறுமை நாள் என்று சொல்லப்படும் அந்த இறுதி நாள் எப்போது வரும் என்பது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது என்பதை ஆணித்தரமாக மேற்கண்ட இரு வசனங்களும், இன்னும் இது போன்ற பல இறை வசனங்களும் கூறிக் கொண்டிருக்கிறது. இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியாது என்பதையும் சேர்த்தே இந்த வசனஙகள் உள்ளடக்கியுள்ளது. ஒரு முறை வானவர் ஜிப்ரீல் மனித உருவத்தில் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ''மறுமை நாள் எப்போது வரும்''? கேட்கிறார்...

...''மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல், மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.'' (திருக்குர்ஆன் 31:34) புகாரி, 50 (இது ஒரு நீண்ட நபிமொழியின் சுருக்கம்)

''மறுமை நாள் எப்போது வரும்''? என்றக் கேள்விக்கு அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது என்று 031:034வது வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். மேலும் ''மறுமை நாள் எப்போது சம்பவிக்கும்''? என்பது பற்றி இறைவன் எனக்கும் அறிவித்துத் தரவில்லை என்று பொருள்படும் வகையில் ''அதைப் பற்றிக் கேள்வி கேட்பவரை விட நான் அறிந்தவரல்ல'' என்று தமக்கு மறுமை நாள் எப்போது சம்பவிக்கும் என்பது தெரியாது என்று பதிலளிக்கிறார்கள்!

இறுதி நாள் எப்போது நிகழும் என்பது பற்றிய அறிவு இறைவனிடம் மட்டுமே உள்ளது என்றாலும் அந்த நாள் வருவதற்கு முன் நிகழவிருக்கும் சில சம்பவங்களை, அடையாளமாக, இறைவன் தனது தூதருக்கு அறிவித்திருக்கிறான். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் மனித சமுதாயத்திற்கு அதை அடையாளங்காட்டி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்...

இறுதி நாள் வருவதற்கு, முன் அடையாளமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல அறிவிப்புகள் செய்துள்ளார்கள். அதில் மிக முக்கியமானதாக 10 அடையாளங்களை அறிவித்திருக்கிறார்கள்.

1. புகை மூட்டம்
2. தஜ்ஜால்
3. (அதிசயமானப்) பிராணி
4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது.
5. ஈஸா (அலை) இறங்கி வருவது.
6. யாஃஜுஜ் மஃஜுஜ்
7,8,9. அரபு தீபகற்பத்தில் கிழக்கில் ஒன்று, மேற்கே ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது.
10. ஏமனிலிருந்து கிளம்பும் தீப்பிழம்பு மக்களை விரட்டி ஒன்று சேர்ப்பது.


''இந்த பத்து நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு நிமிட நேரத்தில் உலகெங்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கண்ட முன்னறிவிப்பு அடையாளங்களில் ஏதாவது ஒன்று எங்கு நடந்தாலும், நடந்து முடிந்தவுடன் அந்த செய்தி உடனடியாக உலகத்திற்கே செய்திகள் மூலம் தெரிந்துவிடும்.

மேலும், தஜ்ஜாலின் வருகை, நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவது, இவையெல்லாம் நிகழும் நேரத்தில் அந்த அதிசயங்கள் உலகெங்கும் அறிவிக்கப்படும். அதிலும் முக்கியமாக சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதை செய்திகள் இல்லாமலே ஒவ்வொருவரும் நேரில் காண முடியும். அதிசயப் பிராணி பற்றி திருக்குர்ஆன்...

''அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.'' (திருக்குர்ஆன், 027:082)

இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள உயிரினம், இறுதி நாளுக்கு முன்பு, இறுதி நாளின் அடையாளமாகத் தோன்றும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த அதிசயப் பிராணி தோன்றி மனிதர்களிடம் பேசினால் அதுவும் மிக அதிசயமாக உலகிற்கு அறிவிக்கப்படும்.

இங்கு நாம் அறிந்து கொள்வது:

இறுதி நாள் எப்போது? என்ற ஞானம் அல்லாஹ்வைத் தவிர, இறைத்தூதர்கள் உட்பட வேறு யாருக்கும் தெரியாது.

இறுதி நாள் ஏற்படும் முன் சில நிகழ்வுகள் சம்பவிக்கும். அந்த சம்பவங்கள் நிகழாமல் இறுதி நாள் ஏற்படாது!

''அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது, அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று அந்த நாள் வராது என்று அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா''? (திருக்குர்ஆன், 012:107)

''வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.'' (திருக்குர்ஆன், 016:077)

இவை அனைத்தும் இறைவனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது. இறுதி நாள் பற்றிய, அந்த சம்பவம் எப்போது நிகழும்? என்ற ஞானம் தமக்கு இல்லை என்றே சத்திய நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தூதுப் பணியைக் களங்கப்படுத்திட முயற்சிக்கும் நோக்கத்தில், ''இறுதி நாள் பற்றிய இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது'' என்று சில நபிமொழிகள் வைக்கப்பட்டிருக்கிறது...

//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து "இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்."

Book 041, Number 7051:
அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், "இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்"//

இது ஒரு சாதரண விஷயும். சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் மேற்கண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு பொய்ப்பித்து விட்டதாகத் தோன்றுகிறது. மேற்கண்ட நபிமொழிகளை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விளங்குவதற்காக கீழ்காணும் நபிமொழி...

''மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது.

இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள், சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.

மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார், இன்னும் அதைப் பருகி கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார், இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.

உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார், அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும்.'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி, 6506

உணவை வாயருகில் கொண்டு சென்றவர், அந்த ஒரு கவள உணவை உண்டிருக்க மாட்டார் அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் என்றால் அப்போ அன்றிலிருந்து இன்றுவரை யாருமே உணவு உண்ணாமல் இருந்தார்களா? அல்லது உங்களில் ஒருவர் உணவை வாயருகில் கொண்டு சென்றால் மறுமை சம்பவித்து விடும் என்று அர்த்தமா? இல்லை! பின் வேறென்ன பொருள் கொள்வது?...

அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது, அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.'' (திருக்குர்ஆன், 016:077)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள். புகாரி, 6503
இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பு, எந்த நபிமார்களுக்குப் பின்னும் மறுமை நாள் ஏற்படாது. இறுதித்தூதர் வருகைக்குப் பிறகுதான் மறுமை சம்பவிக்கும். அதையே ''நானும் மறுமையும் மிக நெருக்கத்தில் இருக்கிறோம்'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள்.

சிறுவருக்கு முதுமை ஏற்படுமுன்..

''கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி, 6511 (இதே ஹதீஸ் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது)

''மறுமை நாள் எப்போது?'' என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அங்கே இருந்தவர்களிலேயே வயதில் சிறியவரைக் காட்டி ''இவர் முதுடையடையும் முன்பே உங்கள் மீது மறுமை சம்பவித்துவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதாவது அந்தச் சிறுவர் உயிரோடு இருந்து, வளர்ந்து வாலிபமாகி, முதுமை வயதையடையும்போது, அங்கேயிருந்த அச்சிறுவரை விட வயது கூடியவர்கள் - முதியவர்கள் எவரும் உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் மீது மறுமை - இறுதிநாள் - Last Hour சம்பவித்து விடும்.

மனிதன் இறந்தவுடன், இறுதி நாள் என்ற மறுமை வாழ்வு துவங்கி விடுவதால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் மறுமை நாள்தான். மொத்தமாக உலகம், உலகத்திலுள்ளவைகளும் அழிந்து விடும் நேரத்தையும் மறுமைநாள் - இறுதிநாள் - Last Hour என்று சொன்னாலும் அந்த உலகம் அழியும் நாள் எப்போது என்று ''எனக்குத் தெரியாது'' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பற்றிய அறிவு அல்லாஹ்வைத் தவிர எவரிடத்திலும் இல்லை!

''அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள். நீர் கூறும், 'அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும். திடுகூறாக அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள், அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.'' (திருக்குர்ஆன், 007:187)

''நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளைய தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை. தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன் நுட்பம் மிக்கவன்.''(திருக்குர்ஆன், 031:034)

அன்புடன்,
அபூ முஹை