Friday, April 29, 2005

மரணிக்கும் போது நபியின் சொத்துக்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் - பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் - பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் - ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து - ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.

ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் - பொருள் - பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக - துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். இறுதியாக மக்கா நகர நிராகரிப்பாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டங்களைத் தீட்டி நாளும் குறித்தார்கள்.

நிராகரிப்பாளர்களின் கொலை முயற்சி திட்டங்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இறைவன் அறிவிக்க நாடு துறந்து மதீனா சென்றார்கள். நாடு துறந்து சென்ற நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மக்கத்து நிராகரிப்பாளர்கள் மேலும் வன்செயல்களைப் புரிந்து நபியையும், நபியைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் துன்புறுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் - மதீனாலிருந்த நிராகிப்பாளர்களும் நயவஞ்கச் செயல்களின் மூலம் நபியின் - நபியைப் பின்பற்றிவர்களின் முதுகில் குத்தினார்கள்.

இத்துன்பங்களையும் - சோதனைகளையும் இறைவழியில் சகித்துப் புறக்கணித்து சத்தியமே பெரிதென வாழ்ந்து மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். சிறிது காலத்தில் எவ்வித சண்டையும் இல்லாமல் மக்காவும் நபி(ஸல்) அவர்களின் ஆளுமைக்கு வந்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்கள். பெயரளவிற்குத்தான் மன்னரே தவிர நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின்பற்றியவர்களும் பட்டினிப் பட்டாளங்களாகத்தான் இருந்தார்கள். (முஹம்மது (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பிருந்த வசதிகளையும் - நபித்துவம் பெற்ற பின் இழந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் சொத்து மதிப்பீடு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து - தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இதுதான். அதிலும் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது என்று ஆவணங்கள் கூறுகின்றன. உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக, நபி (ஸல்) அவர்களின் இரும்புக் கவசம், ஒரு யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற தோட்டம் பெரிய மதிப்புடைய சொத்தாக இல்லை. அன்றைய காலத்தில் நிலத்திற்கென்று எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவரவர் நிலத்திலுள்ள மேடு, பள்ளத்தை சமண் படுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நபித்தோழர் அபூ கதாதா (ரலி) அவர்கள் தமது கவசத்தை விற்று ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியதாக அறிவிக்கிறார்கள் (புகாரி) ஒரு இரும்புக் கவசத்தின் மதிப்புத்தான், ஒரு விவசாயத் தோட்டத்திற்கான மதிப்பும். இதிலிருந்த அன்று, நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களுக்குத்தான் மதிப்பீடாக இருந்தது, நிலத்திற்கு மிகக் குறைந்த மதிப்பீடே இருந்திருக்கிறது என்பதை விளங்கலாம்

அன்றைய மதீனாவில் பெரும் செல்வந்தர்கள் குடிமக்களாக இருந்தார்கள். பிரஜைகளை ஆட்சி செய்யும் - ஆட்சித் தலைவர் மிகச் சாதாரணச் செல்வந்தராகக்கூட இருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் நபியின் வீட்டில் அடுப்பெரியும் அளவிற்கும் வசதியைப் பெற்றிராத ஏழையாகவே வாழ்ந்தார் - அதே நிலையில் மரணிக்கவும் செய்தார் என்று இஸ்லாத்தின் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்ல நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது - நபிமார்கள் விட்டுச் சென்று சொத்துக்கள் அனைத்தும் தர்மமேயாகும்.

நபிமார்களின் சொத்துக்கு வாரிசில்லை, என்பதை அடுத்துப் பார்ப்போம்.

Tuesday, April 26, 2005

நரகம் பற்றிய பயமேன்? 4

மறுமையை நம்பாதவர் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது. மறுமையின் நம்பிக்கையில் நரகத்தை நம்புவதும் அடக்கம். திருக்குர்ஆனில் பல இடங்களில் ''நரக நெருப்புக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்'' என அல்லாஹ் எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் எச்சரிக்கையின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் நரகத்தை நம்புகிறார்கள் - நரக நெருப்புக்கு பயப்படுகிறார்கள்.

ஒரு வாதத்துக்காக மறுமை - நரகம் என்றெல்லாம் கிடையாது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி, அல்லாஹ் கூறிய வழியில் - பொய் - களவு - சூது - கொலை - கொள்ளை - மோசடி செய்தல் - போதைப் பொருளை உபயோகித்தல் - விபச்சாரம் செய்தல் இன்னும் இது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களை விட்டும் விலகி இவ்வுலக வாழ்க்கையை நல்லொழுக்கத்துடன் அமைத்துக் கொள்கிறார்கள். நாளை மறுமையோ - நரகமோ இல்லா விட்டாலும். மறுமையையும் - நரகத்தையும் நம்பியதால் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு அந்நன்னம்பிக்கை துணையாக இருக்கிறது. (முஸ்லிம்கள் எல்லோரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்திடவில்லையே? என்ற கேள்வி இங்கு எழலாம், நரகத்தையும் நம்பிக்கைக் கொண்டு பஞ்சமா பாதகங்களைச் செய்யும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் சிபாரிசு பற்றிய தவறானக் கருத்துக்கு விளக்கமளிக்கும் போது இவர்கள் பற்றிய தெளிவு கிடைத்து விடும்)

மாறாக, மறுமை - நரகம் என்றெல்லாம் கிடையாது என நம்பி, இவ்வுலகத்தை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று தன் மனோ இச்சைப்படி ஒழுக்கக் கேடாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் நம்பிக்கைக்கு எதிராக, நாளை மறுமையும் - நரக தண்டனையும் உண்டென்று நிரூபிக்கப்பட்டால் இவர்களின் கதி? மீட்டெடுக்க முடியாத கைசேதத்திற்குத் தள்ளப்படுவார்கள். என்று சொல்லிக்கொண்டு நரகம் பற்றிய எதிர்வாதங்கள் மீண்டும் வைக்கப்பட்டால் நாமும் தொடர்வோம்.

நிரந்தர நரகவாசிகள்.
நரகத்தைப் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களை எடுத்தெழுதி, அதற்கு விளக்கமாக நச்சுக் கருத்தையே அள்ளி வீசியிருக்கிறார். இஸ்லாத்தை அறியாதவர்கள் வேண்டுமானால் நேசகுமார் கக்குவது விஷமென அறிந்து கொள்ள முடியாமல் மூக்கில் விரல் வைக்கலாம். இஸ்லாத்தை சிறிது அறிந்தவர்களிடம் அவரின் கருத்துக்கள் செல்லாக்காசு பெறாது.

தன் மத வேதங்களோடு - இஸ்லாத்தின் இறுதி வேதமான திருக்குர்ஆனையும் ஒப்பிட்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மனம் போன போக்கில் - தான் தோன்றித்தனமாக விளக்கமளிக்கிறார். ''நிரந்தரமாக நரகத்தில் தங்கியிருப்பார்கள்'' என்று நரகவாசிகளைப் பற்றி திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடும் போது, எதற்காக அத்தண்டனை என்பதற்கானக் காரணங்களும் அந்த வசனங்களில் விவரிக்கப்படுகிறது.

இவ்வுலகத்தில் மனிதனின் செயல்களுக்கேற்ப கூலியும் - தண்டனையும் வழங்கப்படுவதே மறுமை நாள். மனிதன் தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, திருந்தும் வாய்ப்பும் மறுமை நாளில் எவருக்கும் அளிக்கப்படாது. அதற்கான சந்தர்ப்பம் இவ்வுலகத்தில்தான் வழங்கப்படும்.

5:39. எவரேனும் தம் தீயச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான் என்பதை வலியுறுத்தி பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது. ''ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறு செய்பவர்களே! தவறிலிருந்து திருந்தி மன்னிப்புக் கேட்பவர்களே மேன்மையானவர்கள்''!! இந்தக் கருத்தில் பல நபிமொழிகளும் இருக்கின்றன. இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் - தவறு செய்தவர்கள் வருந்தினாலும் திருந்தினாலும் நிரந்தர நரகம்தான் என்று இஸ்லாத்தின் மீது நச்சுக் கருத்தைத் தடவுகிறார் பாருங்கள்.

ஒரு முறை தீர்ப்பு வழங்கிவிட்டால் அவ்வளவுதான், பின் அதை என்றென்றைக்கும் மாற்றவே முடியாது. தவறு செய்தவர்கள், திருந்தினாலும், மனம் மாறி வருந்தினாலும் - நிரந்தர நரகம்தான்( " அவர்கள் என்றென்றும் (நரகத்தில்) தங்கி இருப்பர்" திருக்குரான் வசனங்கள் 2:39, 2:81, 2:217, 2:257, 2:275,3:116, 4:14, 4:169, 5:37,7:36, 98:6 - "மறுமையின் (தீர்ப்பு நாளின்) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்." திருக்குரான் வசனம் 20:127 )


இதுதான் அவர் இஸ்லாத்தை விளங்கிய லட்சணம்.

இனி...
நபி (ஸல்) அவர்களின் சிபாரிசு பற்றி பார்ப்போம்.

Monday, April 25, 2005

நரகம் பற்றிய பயமேன்? 3

பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அந்த அறிவைக் கொண்டு நன்மையைத் தேர்ந்தெடுப்பது போல, நன்மையெனக் கருதி தீமையையும் தேர்ந்தெடுத்து விடுகிறான். தான் சரிகண்டு - தேர்ந்தெடுக்கும் ஒரு செயல் தனக்கு நன்மையாக இருந்தால் போதும், (பிறருக்கும் தீமையாக இருந்தாலும் பராவாயில்லை) என்று அவனின் அறிவு ஏற்றுக் கொள்கிறது.

மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.
மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் மிக முக்கியமானது உணவாகும். இந்த உணவைப் பெற்றுக் கொள்வதில் அவன் பல வழிகளில் முயற்சிக்கிறான், அவன் முயற்சிக்கும் அத்தனை வழிகளும் சரியே என்று மனிதம் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமானமாக:-

1. உணவின் தேவை அவசியமுள்ளவன், ''நேர்மையாக'' உழைத்து ஈட்டிய பொருளிலிருந்து உணவைப் பெற்று உண்ணுகிறான் இவனது பசி அடங்கி விடுகிறது.

2. உணவின் தேவையுள்ள மற்றொருவன், உழைப்பதை விட எளியதாக இருக்கிறது என்றெண்ணி , திருட்டின் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு ''தவறான'' முறையில் உண்ணுகிறான் இவனது பசியும் அடங்குகிறது.

இருவரின் நோக்கமும் ஒன்றுதான், இருவரின் பசியும் அடங்கி விட்டது. திருடிச் சாப்பிட்டவனின் முயற்சியும் சரிதான் என்று எவரும் சொல்லமாட்டார்கள், தரத்தில் இருவரின் செயல்களும் ஒரே மாதிரி இல்லை என்பதை எந்த அறிவும் மறுக்காது. தனிமனிதனிலிருந்து தொடங்கும் இந்த சிறு உதாரணத்தையே - இல்லறம், கூட்டு வாழ்க்கை, சமூகம், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தேசம், சர்வதேசம், வல்லரசுகள் வரை பொருத்திக் காட்டலாம்.

இரு முயற்சிகளும் சமமாகுமா?
வாழ்வாதாரத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் மனிதனுக்கு இருவழி முயற்சிகள் உண்டு. இரு வழிகளில், பகுத்தறிவு எதை வேண்டுமானாலும் தெர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நேர்மையான முயற்சிக்குப் பரிசும் - தவறான முயற்சிக்கு தண்டனையும் உண்டு என்பதே எல்லா மதங்களின் நியதி.

நேர்மையான உழைப்பின் மூலம் பொருளீட்டியவனும், அடுத்தவர்களிடம் கோள்ளையடித்து, பிறரை வஞ்சித்து மோசடி செய்துத் தவறாகப் பொருளீட்டியவனும் சமமாக முடியாது. இதைச் சமமாக எண்ணுபவர்களின் நிலை எப்படி இருக்கிறதென்றால் - ஒழுங்காக இரவும், பகலும் அக்கறையுடன் பாடங்களைப் படித்து நன்றாகத் தேர்வெழுதி 90க்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களும் - சரியாகப் படிக்காமல் ஊர் சுற்றிவிட்டு பரீட்சையில் 10க்கு மேல் மதிப்பெண்கள் வாங்காத மாணவர்களும், சமமானவர்களே! எல்லாரையும் பாஸாக்கி விட வேண்டும் என்று சொல்லும் அறிவுசாரா வாதத்தையே ஒத்திருக்கிறது.

நாம் சென்ற பதிவில் சொல்லியது போல், வஞ்சித்தவனும் - வஞ்சிக்கப்பட்டவனும் சமமானவர்களே! என்றால், நல்ல உள்ளங்கள் தம்மைத் தீயவற்றிலிருந்து விலக்கிக் கொண்டு வாழ்வது அர்த்தமற்றதாகி - எல்லோரும் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் -நன்மை, தீமையென்று பிரித்துக் கொண்டு வாழவேண்டிய அவசியமே இல்லை.

குற்றவியல் சட்டங்கள்.
அனைத்து நாடுகளும் மனிதர்களின் தவறுகளுக்குத் தக்கத் தண்டனையளிப்பதற்காக குற்றவியல் சட்டங்களை இயற்றி வைத்திக்கிறது. அனைத்து குடிமக்களின் மீது சமமாக இந்தச் சட்டங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்துகின்றதா? நிச்சயமாக இல்லை. பணம் பத்தும் செய்யும் என்பார்கள், வலியவன் - எளியவன் மீது அக்கிரமம் செய்து விட்டு தனது குற்றத்தை மறைக்க அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் பணத்தைப் பாய்ச்சித் தன்னைக் குற்றத்திலிருந்துக் காப்பாற்றிக் கொள்கிறான். பாதிக்கப்பட்டவன் நீதி கேட்டு அதிகாரிகளை நாடினால் ஏற்கெனவே விலை போனவர்கள் - நீதி கேட்டு வந்தவனின் மீது பொய்யான குற்றங்களை ஜோடித்து குற்றவாளியாக்கி தண்ணடனைக்குள்ளாக்கி விடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை எழுத்தில் வடிக்க இயலாது.

கொலை செய்து மனித உரிமையை மீறியவன் - கொலைகள் செய்வதைத் தொழிலாகக் கொண்டவன் - போதைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து மனித சமுதாயத்தை சீரழிப்பவன் - உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து மனித சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவன் - போலி மருந்துகளை தயார் செய்து மனித சமுதாயத்துக்கு ஆபத்து விளைவிப்பவன். இன்னும் மதங்களின் பெயரால் வெறி பிடித்து வன்முறையில் ஈடுபடுபவன் - பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துத் தள்ளுபவன் - அதிகாரிகள், ஆட்சியாளர்கள் லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு அநீதம் இழைக்கும் அக்கிரமக்காரர்கள். இன்னும் இதுபோன்ற அயோக்கியர்களெல்லாம் இவ்வுலகின் குற்றவியல் தண்டனைகளிலிருந்து தப்பித்து மிக நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வநியாயக்காரர்களுக்கெல்லாம் தண்டனை என்பதே இல்லையா? நரக தண்டனை பற்றிய நம்பிக்கை இல்லாதவர்கள், இதற்கு நேர்மையான பதிலை வைக்கட்டும்.

நரகம் பற்றிய நம்பிக்கை.
நரக தண்டனை உண்டு! என்பது அனுபவத்தால் விளைந்த நம்பிக்கையல்ல. இறைவனை விசுவாசிப்பதில் ஒரு கிளை நம்பிக்கையே நரகத்தைப் பற்றிய நம்பிக்கையாகும். நரகத்தையும் நம்பாமல் இஸ்லாத்தின் இறைநம்பிக்கை முழுமைபெறாது. (இந்த கோட்பாடு ''நரகத்தையும் கடவுளுக்கு மேலாக அதிகாரம் உள்ளதாக கற்பிதம் செய்கின்றன'' என்ற அவதூறையும் இனிவரும் பதிவுகளில் நேசகுமார் சேர்த்துக் கொள்ளட்டும்.)

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, April 20, 2005

நரகம் பற்றிய பயமேன்? 2

தண்டிக்கும் கடவுள்களெல்லாம் அன்புக்கு மாறிவிட்டனவாம், இனி மனிதர்களுக்கு கடவுள் தண்டினை என்பது இல்லவே இல்லை, எல்லாமே அன்புதான். மிச்சம் - மீதமிருந்த கடவுள் பயத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் பஞ்சமா பாதகங்களை துணிந்து செய்யலாம் கடவுள் தண்டிக்கவே மாட்டார், மாறாக அன்பையேக் காட்டுவார்.

//*முதலாவது காரணம், தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்புவடிவான கடவுளுக்கு அனைத்து மதங்களும் மெல்ல நகர்ந்துவிட்டன. ருத்ரன் சிவனானது போல - ஜெஹோவாவுக்கும் கர்த்தருக்குமான பரினாம வளர்ச்சியைப் போல. ஆனால் இஸ்லாத்தில் இன்னமும் இந்த பழைய கடவுட் கோட்பாடே நிலவிவருகிறது. இது முக்கிய காரணம்*//

ருத்ரன் சிவனானதால் தானோ, காவித் துறவிக்கு கொலை சிந்தனை உதித்து - ஐம்பது லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான கொலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ருத்ரன் அன்பாகி விட்டதால் - என்ன அக்கிரமம் செய்தாலும் கடவுள் தண்டிக்கவே மாட்டார் என்ற தைரியத்தில் துறவியும் - மனிதனை வெட்டி சாய்க்கத் துணைபோயுள்ளார் - குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும், அவதூறு சொன்னவர்களையும் கடவுள் தண்டிக்க மாட்டார், அவதூறு சொன்னதற்காக அன்பு காட்டுவார். அவதூறால் அவமானப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானதெல்லாம் வெறும் பிரமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் - அதாவது அவதூறு சுமத்தப்பட்டவனுக்கும் கடவுள் அன்பு காட்டுவார், அவதூறைச் சுமத்தியவனுக்கும் கடவுள் அன்பு காட்டுவார் என்பது உறக்கத்தில் உளறிய நல்லவொரு கடவுட் கோட்பாடு(?)

இன்னும் கேளுங்கள்.
கொலை செய்தவனுக்கும் அன்பு - கொலையுண்டவனுக்கும் அன்பு - பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கும் அன்பு - செய்யப்பட்டவளுக்கும் அன்பு - திருட்டு, பாக்கெட்டடி, கொள்ளையடித்தவனுக்கும் அன்பு - பறிகொடுத்தவனுக்கும் அன்பு - உணவுப் பொருளில் கலப்படம் செய்தவனுக்கும் அன்பு - கலப்படத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அன்பு - போலி மருந்தைத் தயாரித்தவனுக்கும் அன்பு - போலி மருந்தை உபயோகித்துச் செத்தவர்களுக்கும் அன்பு - அரசியல் என்ற பெயரில் குடிமக்களின் வரிப்பணத்தை ஆயிரமாயிரம் கோடியாகக் கொள்ளையடிப்பவர்களுக்கும் அன்பு - விழித்துக் கொண்டே பறிகொடுத்த மக்களுக்கும் அன்பு. மொத்தத்தில் நியாயம் - அநியாயம் என்ற பாகுபாடு இல்லாமல், அநியாயம் செய்தவன் மீதும் அன்பு - அநியாயம் செய்யப்பட்டவன் மீதும் அன்பு. இதுதான் தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்பே வடிவான கடவுளுக்கு மாறிய நவீனயுகக் கடவுட் கொள்கை. மனிதன்தான் அடிக்கடிக் கொள்கைகளை மாற்றிக் கொள்வான். கடவுளும் கொள்கைகளை மாற்றிக் கொள்வதென்பது, கடவுட் கொள்கைகளை மனிதன் தீர்மானிக்கிறான் என்றே பொருள்.

இஸ்லாத்தின் இறைக் கொள்கைகளில் இந்தத் தடுமாற்றங்கள் இல்லை. அன்பு காட்டும் இறைவன் தண்டிக்கவும் செய்வான் என்பதே இஸ்லாம். அநீதி இழைக்கப்பட்டவன் மீது அன்பு காட்டுவதும் - அநீதி இழைத்தவனை தண்டிப்பதும் இறைத்ததன்மைக்கு முரணானதில்லை. தன்னை வணங்குபவர்களை நேசிப்பதும் - வணங்காதவர்களைத் தண்டிப்பதும் இறை நியதிக்கு மாற்றமானதில்லை. இது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன்..

கிறிஸ்துவக் கடவுட் கொள்கை
நேேசகுமார் தமது இத்துப் போன வாதத்திற்கு வலு சேர்க்க கிறிஸ்த்துவ மதத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் - தண்டிப்பதிலிருந்து, அன்புக்கு மெல்ல நகர்ந்த மதங்களில் கிறிஸ்த்துவத்தையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் பைபிள் இவருக்கு மாற்றமாகக் கூறுகிறது.

''என் நாமத்தினால் அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதாவன் எவனோ அவனை நான் ''விசாரிப்பேன்'' (பழைய ஏற்பாடு, உபாகமம்-18, வசனம்-19)
கத்தோலிக்க பைபிளில் இவ்வசனத்தின் இறுதி வாக்கியம் ''அவனை நான் பழி வாங்குவேன்'' என்றுள்ளது.

''பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் ''விசாரிக்கப்படுவார்'' (உபாகமம் 5:9, யாத்ராகமம் 34:7)


இறுதித் தீர்ப்பு நாள் விசாரணை உண்டு என்பதையே பைபிளின் வசனங்களும் உறுதி செய்கிறது.

''பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி 'கர்த்தாவே! கர்த்தவாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை..'' (மத்தேயு 7:21-23)

ஒரிறைக் கொள்கையை நிராகரித்தவர்கள் பரலோக ராஜ்யத்தில் (சொர்க்கத்தில்) பிரவேசிப்பதில்லை என்றும் - கிறிஸ்த்துவ மதக் கடவுளும் ''விசாரித்துத் தண்டிக்கக் கூடியவரே'' என்று கிறிஸ்துவ வேதமான பைபிள் கூறுகிறது.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, April 17, 2005

நரகம் பற்றிய பயமேன்? 1

ஒருவன் தனதுத் தந்தையை நோக்கி ''நீ எனக்குத் தந்தையே இல்லை'' என்று தன்னைப் பெற்றத் தந்தையைப் நிராகரித்தானாம். ஆனால் தந்தையின் சொத்தில் மட்டும் எனக்கு வாரிசுரிமையுண்டு என்று உரிமை கொண்டாடினானாம். இதையொத்ததாகவே இருக்கிறது ஓரிறைக் கொள்கையை மறுத்து நிராகரித்து விட்டு, ஒரே இறைவன் ஆயத்தப்படுத்தியுள்ள பரிசுகளில் பங்கு கேட்பதும்.

மறைவானவற்றை நம்புதல்.
ஓரிறைக் கொள்கையின் நம்பிக்கையில் ஒன்றுதான் ''அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்'' (2:2) என்பதும் அடங்கும். மறைவானது - மனித புலன்களுக்கு புலப்படாதது என்பது ஜிப்ரீல் உள்பட வானவர்கள், ஜின்கள், சுவர்க்கம், நரகம், மனிதன் மரணித்தபின் அவனின் செயல்களுக்கேற்ப அடக்கஸ்தலத்தில் ஏற்படும் இன்பங்களும், துன்பங்களும், ஒரு நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்படும் - அழிக்கப்பட்டு முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் - உலகம் அழிக்கப்படுவதற்கு முன் அந்த வினாடி வரையுள்ள மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் - உயிர்ப்பிக்கப்பட்ட அனைவரும் அல்லாஹ்வின் சன்னதியில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். இதையே மறுமைநாள் - இறுதிநாள் என்றும் சொல்வார்கள். இவையும், இன்னும் இது போன்ற மறைவானவைகளைப் பற்றியும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே ''அவர்கள் மறைவானவற்றையும் நம்புவார்கள்'' என்பதன் பொருளாகும்.

நியாயத் தீர்ப்பு நாள் பற்றி இஸ்லாம் இப்படிக் கூறுகிறது.
20:15. ''ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது ஆயினும் அதை மறைத்து வைத்துள்ளேன்.

இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் அனைத்து மனிதர்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் சன்னதில் ஒன்று சேர்க்கப்படுவார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் செயல்களுக்குத் தக்க பிரதிபலன்கள் வழங்கப்படும் என்பதை மரணத்திற்குப் பின் உள்ள மறுவுலக வாழ்க்கை என இஸ்லாம் கூறுகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்றும் போதனை செய்தபோது, நபி(ஸல்) அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதைவிட மறுமை வாழ்க்கையையே கடுமையாக எதிர்த்தார்கள். மறுமை வாழ்க்கையை நம்பாமல் ''மரணத்திற்குப் பின் எழுப்பப்பட மாட்டோம்'' என்ற நிராகரிப்பாளர்களின் வாதமும், அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வசனங்களும் சில..

6:29. அன்றியும் ''இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

6:30. இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று ''ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)'' என்று இவர்கள் கூறுவார்கள், அப்போது ''நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அல்லாஹ் கூறுவான்.

11:7 (நபியே! அவர்களிடம்) ''நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், ''இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

16:38. இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.

17:49.இன்னும்; ''(இறந்து பட்டு) எலும்புகளாகவும் உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?'' என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.

37:53. ''நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவுமாகி விட்டபின் (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?'' என்றும் கேட்டான்.)

56:47.மேலும் அவர்கள், ''நாம் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகி விட்டாலும் நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?'' என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர் ''அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

79:10. ''நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?'' என்று கூறுகிறார்கள்.

79:11. ''மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?''
79:12. ''அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்'' என்றும் கூறுகின்றார்கள்.


83:4,5. மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

மரணத்திற்குப் பின் உள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி இங்கு சுட்டிக் காட்டிய இறைவசனங்களோடு இன்னும் அதிகமான வசனங்களைத் திருக்குர்ஆனில் காணமுடியும். மறுமை, சொர்க்கம், நரகம், வானவர்கள், ஜின்கள், அடக்கஸ்தல வேதனை இவையனைத்தும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நம்பிக்கை. மறுமையில் நபி (ஸல்) அவர்களோடு இன்னும் பல முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக சிபாரிசு செய்வார்கள், இதுவும் முஸ்லிம்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இந்நம்பிக்கையோடு துளியும் சம்பந்தப்படாத - நிராகரிப்பாளர் நேசகுமார் ஆன்மீக இஸ்லாமும் அரசியல் இஸ்லாமும் - II என்ற தனது கட்டுரையில் நரக வேதனையைப் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களை பிரசுரித்து இஸ்லாத்தையும், இறைத்தூதரையும் சாடியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கங்களை அடுத்தடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம் அதற்கு முன்..

இறுதி வேதமாகிய திருக்குர்ஆன், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்படுவதற்கு முன் எல்லா சமுதாயங்களுக்கும் நபிமார்களை அனுப்பி, வேதங்களையும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான், என திருக்குர்ஆன் சொல்லிவிட்டு அவ்வேதங்கள் அனைத்தும் சேர்ததலுக்கும், நீக்கங்களுக்கும் உள்ளாகி மனிதக் கரங்களால் கறைப்படுத்தப்பட்டன என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. இதை உண்மைப்படுத்து வகையில் நேசகுமாரின் கருத்தைப் பாருங்கள்.

//*ஆனால் ஏனைய மதங்கள் எல்லாம் இந்த கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர். எல்லா மதங்களிலும் இன்று மிகச் சிறுபான்மையினராக உள்ள மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள் மட்டுமே தூசு படிந்த தமது மதநூல்களில் விவரிக்கப் பட்டிருக்கும் இந்த நரகங்களைக் கண்டு பயந்து போயுள்ளனர், மற்றவர்களைப் பயமுறுத்திவருகின்றனர். இஸ்லாமியர் அல்லாத பெரும்பாலானோர் இவற்றைப் பெரிது படுத்துவதில்லை. மற்ற மதங்களில் இவ்வாறிருக்கையில், இஸ்லாமிய சமுதாயம் இந்த விஷயத்தில் இன்னமும் கற்காலத்திலேயே இருக்கிறது. அதற்குக் காரணமும் உண்டு. மதத்தின் பிடி கிறித்துவத்தில், இந்துமதத்தில், ஏனைய மதங்களில் தளர்ந்துவிட்டது இன்று. ஆனால், இஸ்லாத்தில் அப்பிடி ஸ்தூலமகவும், சித்தாந்த ரீதியாகவும் பலமாக முஸ்லிம்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கும் அப்பால் இரு முக்கியக் காரணங்கள் உள்ளன,*//


நரகத்தைப் பற்றி அச்சமூட்டி, எல்லா வேதங்களிலும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நபிமார்கள் அனைவரும் நரகத்தைப் பற்றி அச்சமூட்டியிருக்கிறார்கள். அதாவது எல்லா மதங்களும் நரக வேதனைக்கு அஞ்சும்படியே போதித்திருக்கின்றன.

//* மதத்தின் பிடி கிறித்துவத்தில், இந்து மதத்தில், ஏனைய மதங்களில் தளர்ந்து விட்டது இன்று.*//


என்று எழுதிய நேசகுமார், மதங்கள் இவர்களைத் தளர்த்தியதா? அல்லது இவர்கள் மதங்களைத் தளர்த்தினார்களா? என்ற விபரங்களை புரியும்படி எழுதவில்லை. ''நீக்கங்கள் உண்டு'' என்று எழுதிக் கொள்ளாமல் மதங்களில் சொல்லப்பட்ட நரக எச்சரிக்கையை தமது கரங்களால் நீக்கிவிட்டு ''மதங்கள் தளர்ந்து விட்டது இன்று'' எனக் கைக் கூசாமல் எழுதுகிறார்.

//*ஆனால் ஏனைய மதங்கள் எல்லாம் இந்த கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர்.*//

அதாவது வேதங்களின் போதனையால் முன்பு நரகத்தை நம்பியவர்கள், பின் நரகக் கட்டத்தை விட்டு முன்நகர்ந்து விட்டனர் என்பது ஒரு ஸ்திரமான கடவுள் நம்பிக்கை இல்லாதவரின் உளறலாகவே இருக்கிறது.

//*ஆனால், இஸ்லாத்தில் அப்பிடி ஸ்தூலமகவும், சித்தாந்த ரீதியாகவும் பலமாக முஸ்லிம்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.*//


அல்லாஹ் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி ''நபியே நீர் அச்சமூட்டி, எச்சரிப்பவர் தவிர வேறில்லை'' என்று திருக்குர்ஆனில் சில வசனங்களில் கூறுவதைக் காணலாம். நரகத்தைப் பற்றிய நம்பிக்கையும், அச்சமும்தான் மனித வாழ்க்கையில் அனைத்துத் துறைகளிலும் நீதியை நிலைநாட்டுவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு:- ஜின் இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது, ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறது. ஜின் இனத்திலும் சந்ததிகள் பெருக்கம் உண்டு, ஜின் இனத்தில் சொர்க்கம், நரகம் செல்பவர்களும் உண்டு, நபி (ஸல்) அவர்கள் ஜின் இனத்துக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள், ஜின் இனத்துக்கு ஜின்களிலிருந்தே தூதர்கள் அனுப்பப்பட்டார்கள், மனிதர்களை விட ஜின்கள் பலம் வாய்ந்தவை, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே மனிதர்களும், ஜின்களும் படைக்கப்பட்டார்கள், வானவர்கள் போல் ஜின்களும் மறைவானப் படைப்பு எனவே ஜின்கள் மனிதர்களுக்குத் தெரிய மாட்டார்கள்.

நேசகுமார் ஜின்களை ''ஆவி'' என்று எழுதுகிறார். ஆவி, பேய், பிசாசு, காத்து, கருப்பு இது போன்றவையெல்லாம் மூடநம்பிக்கை என்று இஸ்லாம் சொல்கிறது. எனவே ஜின்னை ஆவியென்று நேசகுமார் எழுதியதை நம்பவேண்டாம்.

மீண்டும் சந்திப்போம்.

Saturday, April 16, 2005

தலைமைக்குக் கட்டுப்படல் நிர்ப்பந்தமா?

திருக்குர்ஆன் 4:59ம் வசனத்தைச் சுட்டிக்காட்டி அந்த வசனத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளங்கிக் கொள்ள முடியாதக் கருத்தை,(நிர்ப்பந்திக்கிறது) தமது கைச் சரக்காகச் சேர்த்து முன் வைத்திருக்கிறார். இது நேசகுமாரின் நுனிப்புல் மேயும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

4:59 வசனத்தை விளங்குவதற்கு முன், திருக்குர்ஆன் வசனங்களை விளங்குவதற்கு, திருக்குர்ஆன் என்ன நிபந்தனை விதிக்கிறது என்பதை விளங்குவோம்.

25:73. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.)

அல்லாஹ்வின் வசனங்கள் என்றாலும் அதை செவிட்டுத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் நம்பாமல் அந்த வசனத்தில் சொல்லப்படும் விஷயங்களை சிந்திக்கச் சொல்கிறது. அறிவைக் கொண்டு, ஆய்வு செய்து இறைவசனத்தில் சொல்லப்படும் நன்மை, தீமைகளை விளங்கி செயல்படவே கட்டளையிடுகிறது. இன்னும் பிரபல்யமான ஒரு நபிமொழியையும் நாம் தெரிந்து கொள்வோம்.

''ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போதுமானதாகும்'' நபிமொழி.

ஒருவர் கேள்விப்படும் செய்தி, தகவல் இது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். இதைப்பரிசீலிக்காமல் தமது காதில் விழும் செய்திகள் அனைத்தையும் மற்றவருக்குச் சொல்வது பொய் பரப்புவதற்கு துணை போவதாகவே இருக்கும். ஆகவே உண்மையா, பொய்யா என்பதை நன்கு பரிசீலித்தப் பின்னரே தாம் கேள்விப்பட்ட தகவலை ஒருவர் அடுத்தவரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அவரும் பொய்யராகவேக் கருதப்படுவார். இதை மனதில் பதித்துக் கொண்டு மேலே செல்வோம்.

//*இவற்றிற்கு மேலும் சில நிபந்தனைகளும் பல இடங்களில் உண்டு. ஆவிகள்(ஜின்), அமானுஷ்ய சக்திகள், வானவர்கள்(ஜிப்ரில்,ஜிப்ரியீல் என்றழைக்கப் படும் காப்ரியேல் போன்றவர்கள்), ஜிப்ரிலின் மகத்தான செயல்பாடுகள் என ஒரு மாய மந்திர உலகை கண்முன் நிறுத்தி அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாது அல்லாஹ்வின் தூதருக்கும், இஸ்லாமிய தலைமைக்கு அடிபணிந்து நடப்பதற்கும் நிர்ப்பந்திப்பது(பார்க்க திருக்குரான் வசனம் 4:59) என பல விதங்களில், பல இஸ்லாமிய சமூகங்களில் வேறு வேறு விதமான அரசியல் இஸ்லாம்கள் பின்பற்றப் படுகின்றன, முன்வைக்கப் படுகின்றன.*//

நேசகுமார் பயம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மனம் போன போக்கில் பொய்யான விளக்கங்களை தைரியமாக முன் வைக்கிறார். இது பொய்யர்களாலேயே சாத்தியம் என்பதை ''கேள்விப்படுவதையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறருக்கு அறிவிப்பதே பொய்யர் என்பதற்கு போதுமானதாகும்'' நபிமொழியும் உறுதி செய்கிறது.

அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுவதுஅல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுவது பற்றி 3:32, 3:132, 4:13, 4:69, 4:80, 5:92 இன்னும் பல வசனங்கள் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும், அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு போதித்த அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் போதனைகள். இறைத்தூதர்கள் மூலமாகவே இறைவன் மக்களுக்கு நல்வழிகளைப் போதிக்கிறான். தூதருக்குக் கட்டுப்படுதல் என்பது ஒரு மனிதருக்குக் கட்டப்படுவது போன்றதல்ல, எவரும் பெற முடியாத இறைத்தூதுவத்திற்குக் கட்டுப்படுவதாகும்.

தூதருக்குக் கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது ஒரு போதும் சாத்தியமில்லை. ஏனெனில் எவரும் அல்லாஹ்விடமிருந்து நேரடியாகச் செய்தியைப் பெற்று நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர் வழியாகவே இறைவனை நம்புகிறார்கள். தூதருக்குக் கட்டுப்படாமல் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன் இறைநம்பிக்கையை விட்டு வெளியேறியவனாவான். இதனால் சில அரை வேக்காடுகள் சொல்வது போல் ''அல்லாஹ்வைவிட தூதருக்கு வழிபடுகிறோம்'' என்பது பொருளல்ல.

4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்.

இறைத்தூதருக்குக் கட்டுப்படுவதை, தனக்குக் கட்டுப்படுவதாக அல்லாஹ் கூறிகிறான். சற்று நிதனாமாக சிந்தித்தால் செயல் ரீதியாக, இறைத்தூதருக்குக் கட்டுப்படாமல் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது என்பது அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

4:59ம் வசனத்தைப் பற்றிப் பார்ப்போம்.
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

திருக்குர்ஆனில் பல வசனங்கள் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்றுரைக்கிறது. 4:59வது வசனத்தில் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதோடு, ''உங்களின் தலைவருக்கும் கட்டுப்படுங்கள்'' என்று கூறுகிறது. இவ்வசனத்தை நடுநிலையோடு சிந்தித்தால் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதையே இறுதி முடிவாகச் சொல்கிறது. எப்படி?

தலைமைக்குக் கட்டுப்படுதல்.
தலைவருக்குக் கட்டுப்படுதல் என்றால் தலைவர் என்ன சொன்னாலும் அதற்குக் கட்டப்பட வேண்டும் என்பது பொருளல்ல. ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் சாதியினத் தலைவர்களும் எது சொன்னாலும் அதில் அடங்கியுள்ள தீமைகளைப் பரிசீலிக்காமல் அதை அப்படியேக் கண்மூடி பின்பற்றும் பக்தர்கள் போல - தொண்டர்கள் போல் செயல்பட இஸ்லாம் சொல்லவில்லை. தலைமைக்குக் கட்டுப்படுவது பற்றியும் இஸ்லாம் அளவுகோல் விதித்திருக்கிறது அதைப் பார்ப்போம்.

''பாவத்தைக்கொண்டு ஏவப்படாதவரைத் தமது விருப்பிலும், வெறுப்பிலும் தலைமைக்கு செவிமடுத்துக் கீழ்படிய வேண்டும். பாவத்தைக்கொண்டு ஏவப்பட்டால் செவிமடுக்கவோ, கீழ்படியவோ கூடாது'' (நபிமொழி)

தலைமைக்குக் கட்டுப்படும் அளவுகோலாக பல நபிமொழிகள் இருந்தாலும், அறிவுடையோர் விளங்கிக்கொள்ள இந்தவொரு நபிமொழியே போதும். தலைவர்களுக்குக் கட்டப்படும் போது தீமையான செயல்களின் ஏவல்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால் - இதில் கருத்து வேறுபாடு உருவானால் திருக்குர்னிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்தும் ஆதாரங்கள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆதாரம் இருந்தால் மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆதாரம் இல்லையென்றால், திருக்குர்ஆன் நபிவழிக்கு மாற்றமாக தலைவர்கள் கட்டளையிட்டிந்தால் அதற்குக் கட்டுப்படத் தேவையில்லை.

4:59. உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

சமுதாயத்தில் கருத்து வேறுபாடு உருவானால் ''அதை அல்லாஹ்விடமும், அல்லாஹ்வின் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்'' என்று கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் தீர்வு காணச் சொல்வதோடு, இதுதான் சிறப்பான, அழகான தீர்வாக இருக்கும் என்றும் 4:59ம் வசனத்தின் இறுதிப்பகுதி எடுத்தியம்புகிறது.

தலைவரைக் கண்மூடிப் பின்பற்றினால்.
தலைவரின் கட்டளைப்படி, மலையிலேறி விறகு சுமந்து வந்து, தரையில் குழி தோண்டி விறகை குழியில் போட்டு தீயை மூட்டி எரிகின்ற தீயில் குதியுங்கள் என்று தலைவர் சொல்ல அதில் குதிப்பவர்கள் அந்தத் தீயிலிருந்து வெளியேறவே முடியாது - அதாவது நரகவாசிகள் என்று இஸ்லாம் கூறுகிறது. கண்மூடிப் பின்பற்றுபவர்களின் கதி இதுதான். இன்னும், அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்படாமல், தலைவருக்கும் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களின் நிலை என்ன? என்பதையும் இவ்விரு வசனங்களிலிருந்தும் விளங்கலாம்.

33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் ''ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!'' என்று கூறுவார்கள்.

33:67. ''எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.

தலைவர்களைக் கண்மூடிப் பின்பற்றி நரகத்தைச் சென்றடைந்தவர்களின் அவலமே 33:66,67 வசனங்களில் எடுத்துச் சொல்லப்படுகிறது. இதற்கு முரணாக 4:59வது வசனத்தை விளங்கி, ''இஸ்லாமிய தலைமைக்கும் அடிபணிந்து நடப்பதற்கு நிர்ப்பந்திருக்கிறது'' என இஸ்லாம் கூறாததை - தமது சுய விளக்கத்தை அவதூறாக வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

நற்சிந்தனையாளர்களுக்கோர் இறைவசனம்.
5:2. நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்.

Saturday, April 09, 2005

கற்காலம் ஓர் விளக்கம் -1

கற்காலம் கட்டுரை பற்றி, கற்காலம் சொல்லும் கருத்து(!?) என்ற பதிவில் சில முரண்பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த பதிவில், அக்கட்டுரையில் ''திருக்குர்ஆனின் ஆதாரங்கள்'' என்று குர்ஆன் வசனங்களுக்குத் தவறானக் கருத்தையே விளக்கப்பட்டிருக்கிறது. 24:5 இறைவசனத்தில் ''திருந்தி மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க வேண்டும்'' என்ற வாசகத்தை ''விபச்சாரம் செய்தவர்கள் திருந்தினால் மன்னிக்க வேண்டும்'' எனப் பொருத்தியிருப்பது தவறான விளக்கம் என்பது பற்றி பார்ப்போம்.

பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான வதந்திகளை ''அப்படித்தான் இருக்கும்'' என்றும் ''எனக்கு அப்பவேத் தெரியும்'' என்றும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களை தொடர்புபடுத்தும் செய்திகளை ஆர்வத்துடன் கேட்கவும், அதை நம்பவும், பிறருக்கு பரப்புவதில் இன்னும் கூடுதலான அக்கறையும் எடுத்துக்கொள்வார்கள்.

பெண்கள் பற்றிய கிசுகிசு என்றால் செய்தி ஊடகங்கள், பரப்பாகச் செய்திகளை வெளியிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மனிதர்களிடையே, வாய்களால் கூறித்திரியும் அவதூறுச் செய்திகளை சாதாரணமாக நாம் எண்ணினாலும், இறைவனிடத்தில் மிகப்பெரிய பாவமாகும் என்பதை திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள், இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

பெண்களின் மீது அவதூறு கூறி, பெண்களின் கற்பொழுக்கத்திற்கு மாசு கற்பிக்கும் எவரும் தங்களின் வாதத்திற்கு வலு சேர்க்க நான்கு சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும், நான்கு சாட்சிகள் இல்லாமல் பெண்களின் ஒழுக்கத்திற்கெதிராக குற்றம் சுமத்தினால், அது அவர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தாலும் அவதூறு சுமத்திய குற்றத்திற்காக அவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள், பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

இவ்விரு வசனங்களும் தொடர்ச்சியானக் கருத்துக்களையே முன் வைக்கிறது. ''அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள், அவர்கள்தான் தீயவர்கள்'' (24:4) என்று சொல்லிவிட்டு, அடுத்த வசனத்தில் ''இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர'' என 24:5 வசனம் விளக்குகிறது.

அதாவது, ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சுமத்தி, நான்கு சாட்சிகள் கொண்டு வராதவர்களை தண்டியுங்கள். ''அவர்கள் தீயவர்கள்'' (24:4) ''அவர்கள் தாம் அல்லாஹ்விடம் பொய்யர்கள்'' (24:13) எனவே ''அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்'' (24:4) என்று பொய்யர்களின் சாட்சியத்தை இனி எந்த சந்தர்ப்பத்திலும், எந்த விஷயத்திலும் ஏற்காமல், அவர்களைப் புறக்கணிக்கச் சொல்கிறது. அவதூறு கூறுவதிலிருந்து மீண்டு, ''மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர, அல்லாஹ் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.'' என்ற (24:5) வசனம் அவதூறு கூறுபவர்கள் திருந்தினால் மன்னிப்பதையே குறிக்கின்றது என்பது தெளிவு.

24:9ம் வசனத்திற்கும் தவறான பொருளே!

பெண்கள் மீது அவர்களின் ஓழுக்கம் பற்றி அவதூறு கூறி குற்றம் சுமத்துபவர், அதை நிரூபிக்க நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும் என்ற 24:4,13 ஆகிய வசனங்கள் தெளிவுபடுத்துகிறது, இது எல்லோருக்கும் பொதுவான சட்டமாக இருந்தாலும், கணவன், மனைவி மீது அவளின் ஒழுக்கத்தைப் பற்றி குற்றம் சுமத்தினால், குற்றத்தை நிரூபிக்க கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும் என்பது பொதுவான சட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெறுகிறது.

தாகாத முறையில் அன்னிய ஆணுடன் தன் மனைவியை நேரில் பார்த்த கணவன், இதற்காக நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும், நான்கு சாட்சிகள் இல்லையெனில் எண்பது சவுக்கடியைத் தண்டனையாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் மனைவியுடனேயே வாழ வேண்டும் என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும் என்பதாலேயே கணவன் தன் மனைவியின் ஒழுக்கம் பற்றி குற்றம் சுமத்தினால் இதற்கு பரிகாரம் என்ன என்பதை 24:6,7,8,9 ஆகிய வசனங்களில் தனி சட்டமாக முன் வைக்கப்படுகிறது.

24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன் நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,

24:7. ஐந்தாவது முறை ''(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி,

24:9. ஐந்தாவது முறை, ''அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

கணவன், மனைவி மீது அவதூறு கூறி சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவர்கள் இருவரும் ''சாப அழைப்புப் பிரமாணம்'' ('லிஆன்') செய்து பிரிந்து விட வேண்டும் என்று இறைவசனங்களும், (பார்க்க தமிழ் புகாரி, ஹதீஸ் எண், 4747) நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது. கணவன், மனைவியரிடையே சாப அழைப்புப் பிரமாணம் செய்து பிரியச் சொல்லும் 24:9ம் வசனத்தை, பொதுவான பாலியல் குற்றத்திற்கான சட்டமாகத் தவறாக விளங்கி முரண்பட்டு அதே கண்ணோட்டத்துடன்'

//*ஈரானிய, நைஜீரிய, பாகிஸ்தானிய, சவூதி அரேபிய நீதிமன்றங்களின் கண்ணில் இந்த வசனங்கள் படவில்லையா?*//

இஸ்லாமிய நீதி மன்றங்களைத் தவறாகச் சாடியிருப்பது ''அபாண்டமான அவதூறு'' என்பதை சகோதரர் நாகூர் ரூமி அவர்கள் உணர வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.