Thursday, November 28, 2013

கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?

ஐயம்:
"அல்லாஹ் அனுமதித்திருந்தால், மணைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்" என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது.

அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?. "அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன், தலையே போனாலும் சரி" எனும் சத்தியத்தை மனிதகுலத்துக்கு எடுத்துரைத்த பெருமானார்(ஸல்), இப்படி "கணவனே கண்கண்ட தெய்வம்" எனும் பொருள்படும் ஹதீஸை சொல்வாரா?.

எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிடம் கேட்டால், மழுப்பலும் மௌனமும்தான் பதிலாக வருகிறது. தயவு செய்து நீங்களாவது தெளிவு செய்யுங்கள். நன்றி. - சாணக்கியன்

தெளிவு:

பூணூல் அணியும் சாணக்கியரே! மார்க்க அறிஞர்களிடம் கேட்டேன் தெளிவான பதில் இல்லை என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

''அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டேன் தலையே போனாலும் சரி!'' என்கிற ஓரிறைக் கொள்கையைப் பிரகடனப்பத்துவது தான் இஸ்லாம். சத்திய இஸ்லாத்தை ஏற்று, ஓரிறைக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் எந்தச் சூழ்நிலையிலும், தனக்கு மரணம் உறுதி என்று அறிந்தாலும், அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு சிரவணக்கம் செய்யமாட்டார்.

கேள்வியில் குறிப்பிட்டுள்ள, ''அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?'' என்று கணவருக்கு மனைவி சிரவணக்கம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதைப் போலவும், அதற்கு அல்லாஹ் அனுமதி வழங்கவில்லை என்பது போலவும் தவறானக் கருத்தை இங்கே சித்தரித்துக் காட்டப்படுகிறது. தொடர்புடைய நபிவழிச் செய்தியை முழுமையாக அறிந்து கொள்வோம்:

ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து முஆத் (ரலி) அவர்கள் மதீனா வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு சிரவணக்கம் செய்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''முஆத் என்ன இது?'' என்று (வியப்போடு) கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நான் ஷாம் நாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள (கிறிஸ்தவ) மக்கள் தங்களின் பேராயர்களுக்கும் கத்தோலிக்கத் தலைவர்களுக்கும் சிரவணக்கம் செய்வதைத் தற்செயலாகக் கண்டேன். அப்போதே மனதுக்குள் தங்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும் என விரும்பினேன்'' என்றார்கள்.

அதற்கு, ''இவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன். முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! ஒரு பெண் தன் கணவருக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றாத வரை தன் இறைவனின் கடமையை நிறைவேற்றியவளாகமாட்டாள். ஒட்டகத்தின் சேணத்தில் அவள் அமர்ந்திருக்கும்போது அவளை அவர் கேட்டாலும் அவள் மறுக்கலாகாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி) நூல்கள்: இப்னுமாஜா, அஹ்மத், சுருக்கமாக இதன் கருத்து தீர்மிதீ 1079)

போராயர்களும் - பாதிரிமார்களும், மடாதிபதிகளும், சங்கராச்சாரியர்களும், அரசியல் தலைவர்களும், பெரியோர்களும் மக்கள் தங்களுக்கு சிரவணக்கம் செய்ய வேண்டுமென விரும்புகின்றனர். மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதை மக்களும் உணருவதில்லை. சிரவணக்கம் செய்யப்படுபவர்களும் உணர்ந்து இவ்வாறு செய்யாதீர்கள் எனப் போதிப்பதில்லை.

ஆன்மீகம், அரசியல் என இரு துறைகளிலும் ஒப்பற்றத் தலைவராக நபி (ஸல்) திகழ்ந்தார்கள். அன்றைய பிறமதங்களின் மதகுருமார்களுக்கும், தலைவர்களுக்கும் மக்கள் சிரவணக்கம் செலுத்தி வந்தனர். இவற்றைக் கண்ணுற்ற முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக்கொண்ட நபித்தோழர்கள், நாம் சிரவணக்கம் செலுத்துவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடத் தகுதியானவர் யாரிருக்க முடியும் என நபி (ஸல்) அவர்களுக்குச் சிரவணக்கம் செய்யத் தயாராக இருந்தனர். ''அவ்வாறு செய்யாதீர்கள்'' என்று கூறி அல்லாஹ்வைத் தவிர, எவருக்கும் சிரவணக்கம் செய்யலாகாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

''நாங்கள் சிரவணக்கம் செய்திட தகுதியானவர் நீங்கள்'' என நபித்தோழர்கள் வாதிடவும் செய்தனர். இருந்தும் மனிதன் மனிதனுக்குச் சிரவணக்கம் செய்யலாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு! வரவேற்புக்காகவேயன்றி ஒருவருக்காக எழுந்து நிற்பதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தமக்காக யாரும் எழுந்து நிற்கவும் வேண்டாம் எனவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளைப் பிறப்பித்தார்கள்.

ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், அடக்குமுறை இஸ்லாமில் மேலோங்கியுள்ளது என்கிற குதர்க்க குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியில் எவ்வித சான்றும் இல்லை என்றிருந்தும் இஸ்லாமை மாசுப்படுத்திட, கணவனுக்கு மனைவி சிரவணக்கம் செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுவதாக தவறாகப் புனைந்து பிறமதத்தினர் இஸ்லாமை விமர்சிக்கின்றனர். ''கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் போன்ற பிறமதக் கொள்கையைப் போன்று இஸ்லாமிலும் உள்ளதுபோல் விமர்சிக்கின்றனர்.

''தாயின் காலடியில் சொர்க்கமுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாயின் காலடியில் சிரவணக்கம் செய்து தாயை வணங்க வேண்டும் என்று புரிந்து கொள்வதில்லை. தாய்க்குச் செய்யும் பணிகளை முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் செய்திட வேண்டும்.என்பதே இதன் பொருளாகும்.

''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்.'' என்பதில் அல்லாஹ்வையன்றி எவருக்கும், எதற்கும் சிரவணக்கம் செய்தல் கூடாது என்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.

''உலகை விடச் சிறந்தது நற்குணமுள்ள மனைவியாவாள், தன் மனைவியிடம் அழகிய முறையில் நடந்து கொள்பவரே உங்களில் சிறந்தவராவார்'' என இஸ்லாமியப் பார்வையில் நற்குணமுள்ள மனைவி அமைவதும், நற்குணமுள்ள கணவன் அமைவதும் அருட்கொடையாகும். இவ்வாறு தொலைநோக்குப் பார்வைகொண்ட இஸ்லாமியத் திருமணம் பெண்மையின் மாண்பைப் போற்றியும், ஆணின் சிறப்புதனை வெளிப்படுத்தியும் உயர்த்திக் காட்டுகின்றது.

திருமணம் ஆண் பெண்ணிடையே அன்பு, நேசம், கருணையை நிலைத்தோங்கச் செய்யவேண்டும். இல்லையேல் மணவாழ்வு நெருக்கடியாகி மன உளைச்சல் மேலோங்கிவிடும். மனித வாழ்வில் திருமண உறவு முக்கியப் பங்காற்றுவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அமைதி, நேசம் வளர பல போதனைகள் இறைமறை வசனங்களிலும், நபிமொழிகளிலும் அறவுரைகளாக நிறைந்து காணப்படுகின்றன.
அவற்றுள் இல்லற வாழ்வில் இணைந்த தம்பதியர் ஒருவருக்கொருவர் நன்றி மறத்தல், நிராகரித்தல் கூடாது என்பதை வலியுறுத்தும் ஹதீஸைக் காண்போம்:

'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 29, முழு ஹதீஸையும் காண்க, புகாரி 1052 முஸ்லிம் 1659)

மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள விளக்கம், மணவாழ்வில் இணைந்து வருடங்களைக் கடந்த ஒவ்வொரு கணவருக்கும் புரியும். கணவன் காலமெல்லாம் நல்லவற்றை மனைவிக்குச் செய்து வந்தாலும், மனைவிக்குப் பிடிக்காத ஒரு செயலைக் கணவன் செய்து விட்டால் ''உனக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?'' என்று கூறி அற்ப விஷயத்துக்காக கணவனை மறுத்து, கணவனுக்கு நன்றி மறக்கும் மனைவியைப் பற்றி இங்கு கூறப்படுகின்றது.

இவ்வகை மிகைப்படுத்திப் பேசும் பெண்களின் போக்கைக் கண்டித்தும் ''அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் சிரவணக்கம் செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பது பொருத்தமாகவுள்ளது. ஏனெனில், இறைவனுக்கு சிரவணக்கம் செய்வதில் நன்றியினைத் தெரிவிப்பதற்காகவும் சிரவணக்கம் செய்வதுண்டு.

மனைவிக்கு எவ்வளவு சிறந்த கணவனாக இருந்தாலும் அவனுக்குக் கட்டுப்படுதலும் கடப்பாடு கொள்தலும் சிரவணக்கத்துக்கு நெருக்கமான தாழ்மையுடன் இருக்கலாம்; ஆனாலும் இறைவனுக்கு மட்டும் உரிய வணக்கமான ஸஜ்தா எனும் சிரவணக்கத்தை ஒரு மனைவி, தன் கணவனுக்குச் செய்ய அனுமதி இல்லை - அவன் தன் மனைவியின் மதிப்பில் எத்துணை உயர்ந்திருந்த போதிலும்.

இதனை குதர்க்க நோக்கன்றி இயல்பறிவு கொண்டு விளங்கினால் முரண்பாடு ஏற்படாது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: http://satyamargam.com/islam/for-muslims/2214-wives-to-prostrate-husbands.html

Friday, December 23, 2011

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் (திர்மிதீ); உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

ஆனால், கடன் உள்ளவர் இஸ்லாம் அனுமதித்துள்ள வேறு வழியில் மக்கா செல்வதற்கான வசதியைப் பெற்றிருந்தால் அவருக்குக் கடன் உள்ளது என்று வைத்துக்கொண்டாலும் அவர் இப்போது ஹஜ் செய்வது கூடுமா கூடாதா என்றால், கடன் உள்ளவர் ஹஜ் செய்யலாம் என்பதே இஸ்லாத்தின் நிலைபாடாக உள்ளது. கஅபா அமைந்திருக்கும் நாட்டில் இருந்தாலும், அங்குப் பணியாற்றும் நிறுவனத்தில் ஹஜ்ஜுக்கு விடுப்புக் கிடைத்தாலும், சென்றுவர பொருளாதாரம் இருந்தாலும் கடனாளி ஹஜ் செய்தல் கூடாது என்பதற்கான தெளிவானத் தடையேதும் குர்ஆன், சுன்னாவிலிருந்து நம்மால் அறிய முடியவில்லை!

பயணத்தில் உண்பதும் உடுத்துவதும் ஹலாலாக இருக்கவேண்டும் என்று பொதுவாக இஸ்லாம் கூறுவதால், இதன் அடிப்படையில் ஹஜ் பயணத்திற்கான செலவுகள் ஹலாலாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது ஹராம் அல்ல! அதனால் கடன் உள்ளவர் மக்கா சென்றால் அவர் ஹஜ் செய்வதற்குக் கடன் இடையூறாக இருக்கும் என்பதற்குப் போதிய தெளிவுகள் இல்லை!

ஹஜ்ஜுடைய காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பேரூந்து வாகனம் மூலமாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் பயணிகளுடன் வரும் பேரூந்து வாகன ஓட்டிக்குக் கடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவரும் குறிப்பிட்ட எல்லையை அடைந்ததும் ஹஜ் பயணிகளுடன் தாமும் இஹ்ராம் அணிந்து "லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்" என்று தல்பியா முழங்கியபடி வாகனத்தைச் செலுத்தி மக்காவிற்குள் நுழைந்து தங்க வேண்டிய இடங்களில் தங்கி, செய்ய வேண்டிய ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் இவர் உழைப்பிற்கான ஊதியத்துடன் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறார். 2:198வது வசனத்தின் கருத்துப்படி ஹஜ்ஜின்போது நேர்மையான முறையில் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதில் அல்லாஹ் தடைவிதிக்கவில்லை!

அதுபோல், மற்ற நாடுகளிலிருந்து விமானம் மூலமாக வரும் ஹஜ் பயணிகளைக் கொண்டுவந்து ஜித்தாவில் சேர்க்கும் விமான ஓட்டி, அவரும் ஹஜ்ஜை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தேதியில் வந்து விமானம் புறப்படும் நாளில் வேலையை ஏற்றுக் கொள்கிறேன் என ஹஜ் கிரியைகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆகுமானதே!

ஹஜ் கடமை என்பது கிரியைகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவதாகும். "பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்" என்கிற (62:10) வசனத்தினடிப்டையில் வேலைக்கென சவூதிக்கு வந்தவர் ஹஜ்ஜின் நாட்களில் மக்கா சென்று குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட கிரியைகளை நிறைவேற்றினால் அவருடைய ஹஜ் கடமையும் நிறைவேறிவிடும்.

கடன் உள்ள நிலையில் மரணித்தவருக்குக் கடன் மன்னிக்கப்படுவதில்லை. இது எல்லாருக்கும் உள்ள பொதுவானதாகும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவருக்கும் இது பொருந்தும்!

கடனாளியாக இருந்து, அந்தக் கடனை அடைக்காமலும் வாய்ப்புக் கிடைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றாமலும் மரணித்த ஒருவரையும் கடனிருந்தும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிவிட்டு மரணித்த ஒருவரையும் ஒப்பு நோக்கினால் இந்த உண்மை புரியும்.

oOo


ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் வாய்ப்பை வழங்கும்போது, ஆதாரமில்லாத பொருந்தாக் காரணங்களை நாமாகக் கற்பித்துக் கொள்ளாமல், மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜை நிறைவேறுவதற்கு முனைப்புக் கொள்ளவேண்டும். ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஆர்வமூட்டும் சான்றுகளைக் காண்போம்:

அருள்வளமிக்கதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதுதான். அது, பெரும் பேறு பெற்றதாகவும் உலகத்தாருக்கான நேர்வழி மையமாகவும் திகழ்கிறது.

அதில் தெளிவான சான்றுகளும் மக்காமு இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் மறுதலித்தாலும் (அதனால் அல்லாஹ்வுக்கு இழப்பில்லை. ஏனெனில்) அல்லாஹ் அகிலத்தாரிடம் தேவையற்றவன் ஆவான்
(அல்குர்ஆன் 3:96,97).

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) (நூல்கள்: புகாரி 8, முஸ்லிம் 20, திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதேர?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடைமயாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் (எதுவும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு எதை விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்தெதல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாக(த் தேவையற்ற) கேள்விகள் கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டைளயிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(முற்றாக) விட்டுவிடுங்கள்!" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (நூல்கள்: புகாரி 7288, முஸ்லிம் 2599, நஸயீ).

தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமையான அமல்களை அறிவித்திடும் குர்ஆன் வசனங்களைப் போன்று, மேற்காணும் இறைவசனங்களும் நபிவழி அறிவிப்புகளும் ஹஜ் செய்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும் என வலியுறுத்துகின்றன.

கடமையான மற்ற அமல்களை நாம் வாழுமிடங்களில் இருந்தே நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், ஹஜ்ஜுக் கடமையை, மனிதர்களுக்கென முதல் முதலாக அமைக்கப்பட்ட இறை ஆலயம் என அல்லாஹ் அறிவித்திருக்கும் மக்காவில் அமையப்பெற்ற கஅபத்துல்லாஹ்வைச் சென்றடைந்து அதைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் தங்கியிருந்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிட வேண்டும்.

ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்) (அல்குர்ஆன் 22:27).

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மூலமாகவே அல்லாஹ் ஹஜ்ஜின் அறிவிப்பை ஏற்பாடு செய்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து விளங்குகிறோம். ஹஜ்ஜுக்கான அறிவிப்பைக் கேட்டு ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக அருகிலிருப்போர் நடந்தும், தூரத்திலிருப்போர் வாகனங்களில் பயணித்தும் கஅபத்துல்லாஹ்வை வந்தடைவார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மக்களில் அங்குச் சென்றுவரச் சக்தி பெற்றோர் அல்லாஹ்வுக்காக அவ்வில்லத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும் (அல்குர்ஆன் 3:97).

ஒரு முஸ்லிம் இன்று உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர் மக்காவுக்குச் சென்று வர சக்தி பெற்றிருந்தால் அங்குச் சென்று ஹஜ் செய்வது அவருக்குக் கடமையாகும். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள 'சக்தி' என்பது ஹஜ் கிரியைகளுக்காகத் தொலை தூரம் செல்வதால் சென்று திரும்பும் நாட்களுக்கான பொருளாதாரமும் உடல் ஆரோக்கியமும் முக்கியத் தேவைகளாகும்.

அடுத்து, தொலை தூரம் சென்று வர வாகனம் அவசியம். 'சக்தி' என்பதில் வாகன அவசியமும் உள்ளடங்கும். ஆகவே, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி பெற்றோர் என்பதில் பொருளாதாரம், உடல் ஆரோக்கியம், மற்றும் வாகன வசதியும் வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ்ஜுச் செய்வதைத் தடுத்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன. ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக விட்டுச் சென்றனர். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான(பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி 1863, மேற்கண்ட அறிவிப்பு முஸ்லிம் 2408, 2409)

இதன் அறிவிப்பாளர் அதாவு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்". (அப்பெண்ணின் பெயர் 'உம்மு ஸினான்' என்பதாகும்).

ஹஜ்ஜுக்குச் சென்று வர வாகனத் தேவையுள்ளது. இது அந்தந்தக் காலத்திற்கேற்ப வாகனங்கள் மாறிக்கொள்ளும். சென்று வரும் சக்தியை முன்னேற்பாடு செய்துகொள்ள வேண்டும். என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் நன்மை மிக்கது, தக்வா(என்னும் இறையச்சமே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள் (அல்குர்ஆன் 2:197).

ஹஜ்ஜுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்பதில் உணவும், வாகன வசதியும் அடங்கிவிடும்.

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள். மேலும், 'நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம்' என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ், "(ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் இறையச்சமே) ஆகும்" என்ற வசனத்தை இறக்கினான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்: புகாரி 1523).

2:197வது வசனம் அருளப்பட்ட பின்னணி, தொலைவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வோர் தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு செல்லாமல் மக்கா சென்று தமது தேவையை யாசித்துப் பெற்றுள்ளனர். இவ்வாறு செய்யாமல் உங்களுக்கான பொருட்களை முன்னேற்பாடாக சேகரித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இதனால் யாசிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லலாமே தவிர, வயிற்றுப் பசிக்குக்கூட யாசிப்பது கூடவே கூடாது என்று தடைவிதிப்பதாக ஆகாது. "குர்பானி இறைச்சியை ஏழைகளுக்கும், யாசிக்காதோருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக் கொடுங்கள்" என்று 22:28, 36 ஆகிய வசனங்கள் கூறுகின்றன!.

சக்தி பெறுதலைத் தாமாக முயற்சி செய்து சக்தி பெறுதல் என்றும் எதிர்பாராமல் வேறு வகையில் மக்கா சென்று விடுவது என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். நாம் கவனிக்கத் தக்கது அவை ஹலாலான வழியில் உள்ளதா என்பதை மட்டுமே.

எனவே, ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கு ஹலாலான வழியில் சக்தி வழங்கப்பட்டவர்கள், கடன் என்ற காரணத்துக்காக அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை.

(இறைவன் மிக்க அறிந்தவன்).


Friday, August 07, 2009

இஸ்லாம் போர்க்களத்தில் சிறுவர்களைக் கொல்லச் சொல்கின்றதா...?

''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லாதீர்கள்'' என்ற நபிமொழிக்கு முரணாக ''போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நேர்ந்தால் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே'' என மற்றுமொரு நபிமொழி அறிவிக்கின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான கருத்துடன் உள்ளதே என்று தோன்றினாலும், சரியாகப் புரியப்படாத சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். நபித்துவத்தைக் களங்கப்படுத்துவதற்கென்றே களமிறங்கியவர்கள் இவ்விரு வகை நபிமொழிகளையும் முன்னிருத்தி, இஸ்லாமை மாசுப்படுத்திட பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி வருகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

மற்றோர் நபிவழிச் செய்தி

''பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை விதித்தார்கள்'' (புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)

போர்க் காலங்களில் எதிரிகளுடன் யுத்தம் தொடங்கிய நிலையில் போர்க்களத்தில் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கக்கூடாது. என முஸ்லிம் அணியினருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விதித்தப் போர் விதியாகும். போர்க்களத்தில் எதிரிகளின் பெண்களையும், சிறுவர்களையும் தாக்கிக் கொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கின்றார்கள்.

முஸ்லிம் அணியின் சார்பாக பெண்கள் அறப் போரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம் அணியில் நின்று யுத்தக்களமிறங்கி எதிரிகளுடன் சண்டையிடுவது பெண்களுக்குக் கடமையல்ல.

"இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்" என்றார்கள். (நூல்: புகாரி 1520, 1861, 2875, 2876)

பெண்கள் போர்க்களத்தில் ஆயதமேந்தி அறப்போர் செய்வது தடுக்கப்பட்டிருந்தாலும், எதிரிகளுடன் யுத்தம் நடத்தும் போர் வீரர்களாகிய தமது அணியினரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுப்பது, காயமுற்றால் சிகிச்சையளித்து, காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவது போன்ற சேவைகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை!

அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சுரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. (நபிமொழிச் சுருக்கம் புகாரி 3811, 4064)

"(பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும், மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களையும், (காயமுற்றவர்களையும்) மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்." (புகாரி, 2882, 5679)

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் (என் தாயார்) உம்மு ஸுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள். காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்'' (முஸ்லிம், 3698)

ஆயுதம் தாங்கி நேரடியாக போர்க்களத்தில் எதிரிகளுடன் போரிடுவது பெண்களுக்கு கடமை இல்லை என்றாலும் தற்காப்புக்காக பிச்சுவாக் கத்தி போன்ற சிறு ஆயுதத்தை வைத்துக்கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை. (முஸ்லிம் 3697)

முஸ்லிம் அணியின் சார்பாக போர் வீரர்களுக்கு உதவும் அடிப்படையில் போர்க்களத்தில் பெண்கள் கலந்துகொண்டு சேவை செய்யலாம். முஸ்லிம் அணியில் இருக்கும் பெண்கள் போராளிகளாக இல்லை என்பது போல் எதிரணியில் இருக்கும் பெண்களும் போராளிகளாக இல்லாமல் இருக்க வேண்டும். இரு அணிகளிலும் சேவைக்காகவே பெண்கள் உள்ளனர் போராளிகளாக இல்லை. என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு அணியினருக்கும் பிற அணியிலுள்ள பெண்கள் எதிரிகளைச் சார்ந்தவர்கள். பெண்கள் போராளிகளாக இல்லை எனினும் போரில் வெற்றிப்பெற்ற அணியினர் தோல்வியுற்ற எதிரணியினரின் பெண்களையும் போர்க் கைதிகளாக சிறைப்பிடிப்பர்.

போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்பது போர்க்களத்தில் போராளிகளாக இல்லாத பெண்களையேச் சுட்டுகின்றது. யுத்தத்தில் நேருக்கு நேர் எதிரணியைச் சந்திக்கும்போது பெண் போராளித் தாக்க வந்தால் அவரை எதிர்த்துத் தாக்கவேண்டும் என்பதே போர் விதி! பெண்களைத் தாக்கக்கூடாது என்ற சட்டத்தை இங்கு கடைபிடித்தால் எதிரியான பெண் போராளியால் ஆண் போராளிக் கொல்லப்படுவார். போரில் பெண்களைக் கொல்லக்கூடாது என்கிற விதி தாக்கவரும் பெண் போராளிகளுக்குப் பொருந்தாது!

உஹதுப் போரில் வீரமரணமடைந்த ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலைக் கிழித்து ஈரக்குலையைக் கடித்துத் துப்பிய பெண்மணியாகிய ஹிந்த் (ரலி) அவர்கள் அப்போது முஸ்லிம்களுக்கு எதிரணியில் இருந்தார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. நேருக்கு நேர் எதிரிகளைச் சந்திக்கும் போரில் மூர்க்கத்தனமாக தாக்கவரும் எதிரி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்த்துத் தாக்க வேண்டும்.

போர்களத்தில் பெண்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டால்

''இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள். (நூல்கள் - புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)

முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,

''குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)

போரில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கூடாது என்ற (நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587) நபிமொழிக்கு முரணாக, போரில் பெண்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டால் அவர்களும் எதிரிகளைச் சார்ந்தவர்களே என்று (நூல்கள்: புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590) மேற்கண்ட நபிமொழிகள் உரைக்கின்றது. இது எதிர்மறை முரணாகத் தோன்றினாலும், போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லக்கடாது என்பது விதி! போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் கொல்ல நேர்ந்தால்... என்பது விதிவிலக்கு!

இருஅணியினர் யுத்தம் செய்யும்போது முஸ்லிம் அணியினருக்கு இணைவைப்பாளரின் அணியினர் எதிரிகள். இணைவைப்பாளரின் அணியினருக்கு முஸ்லிம் அணியினர் எதிரிகள். இரு அணியினரின் குடும்பத்தினரும் பிற அணியினருக்கு எதிரிகளைச் சார்ந்தவர்கள் என்பதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை! முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் யுத்தம் செய்யாத வரை இவர்கள் நேரடி எதிரிகள் அல்ல. அதே நேரத்தில் எதிரிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது இருஅணியினருக்கும் பொருந்தும்.

போர்க்களத்தில் பெண்களையும் சிறுவர்களையும் தாக்கக்கூடாது எனத் தடை உள்ளதால் திடீர் தாக்குதல் நடத்தும்போது போரில் நேரடியாக ஈடுபடாத பெண்களையும் சிறுவர்களையும் திட்டுமிட்டுத் தாக்கும் எண்ணமில்லை என்றாலும் தெரியாமல் அவர்கள் தாக்கப்பட்டால் என்ன செய்வது? என்பதே இரண்டாவது வகையான ஹதீஸ்கள் விளக்குகின்றன. இதை இன்னும் சற்றுத் தெளிவாக இடம்பெறும் செய்தியில் விளக்கம் கிடைக்கின்றன.

''எங்களின் குதிரைகள் இணைவைப்பாளர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும் மிதித்து விட்டன'' என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். ''அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சார்ந்தவர்களே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ, 1495. அஹ்மத், இப்னுமாஜா)

போர்க்களத்தில் எவ்வித திட்டமுமின்றி எதிர்பாரா விதமாக பெண்களும் சிறுவர்களும் தாக்கப்பட்டால் அது குற்றமாகாது என்பதை எடுத்துரைப்பதே நோக்கமாகும். போர்க்களத்தில் இவைத் தவிர்க்க இயலாது. எடுத்துக் காட்டாக:

எதிரிகளின் இராணுவ முகாமைத் தாக்கும்போது அவர்களின் குடும்பத்தினரும் அங்கு இருந்து திடீர் தாக்குதலில் பெண்களும், சிறுவர்களும் சிக்கிப் பாதிக்கப்படுவார்கள். இது தாக்கியவர்களின் குற்றமல்ல! தாக்கப்பட்ட எதிரிகள் இராணுவ முகாமில் குடும்பத்தினரை வைத்திருந்தது குற்றமாகும். போர் சூழலில் குடும்பத்தினர் இராவணுத்துடன் சேர்ந்திருக்காமல் அவர்களை பாதுகாப்பான தனி இடத்தில் வைக்க வேண்டும். இராணுவத்துடன் சேராமல் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்ட எதிரிகளின் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களைத் தேடிச் சென்று அவர்களைத் தாக்கக்கூடாது. இது போர் என்ற பெயரில் செய்யும் வன்முறையாகும். இதை முதல் வகையான ஹதீஸ்கள் தடைவிதிக்கின்றன.

இராணுவத்தினருடன் சேர்ந்து - கலந்து முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருந்து எதிர்பாராமல் இராணுவ வீரர்களுடன் இக்குடும்பத்தினரும் தக்குதலுக்குள்ளாக நேரிட்டால் அது குற்றமில்லை என இரண்டாவது வகையான ஹதீஸ்கள் கூறுகின்றன.

இன்று நவீனகாலப் போர் முறைகளின் தாக்தலுக்கு பெரும்பான்மை அல்லது சிறிய அளவில் பொதுமக்களும் பலியாகின்றனர். இதற்கான காரணி: ''எங்கள் உளவுத்துறை மிகச் சரியான தகவல்கள் தந்து, நாங்கள் இராணு முகாமைத் தாக்கினோம். அங்கு இராணுவத்திருடன் பொதுமக்கள் இருந்தால் அல்லது பொதுமக்களுடன் இராணுவத்தினர் இருந்தால் எங்கள் குற்றமில்லை'' என்று தாக்கியவர்கள் எளிதாக சமாதானம் சொல்லி - எதிரிகளுடன் இருப்பவர் எதிரிகளைச் சார்ந்தவர்கள் என - மிகச் சுலபமாக பொருத்திவிடுகின்றனர்.

போர் சூழலில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்களும் அறியாமல் தாக்கப்பட்டால் போரில் இவைத் தவிர்க்க இயலாது. என்பதையே இரண்டாவது வகையான ஹதீஸ்களின் கருத்தாகும். இஸ்லாமை விமர்சிப்பவர்கள் முதல் வகையான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்து, இரண்டாவது வகையான ஹதீஸ்களை முன்னிலைப்படுத்தி உண்மைக்கெதிராக, பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்.

அன்புடன்,
அபூ முஹை

Friday, October 10, 2008

எழுத்துப்பிழையும், கருத்துப்பிழையும்

இஸ்லாம் பெயரால் இஸ்லாத்தின் மீது பொய்யையும் புனை சுருட்டையும் அரங்கேற்றும் தளங்களில், ''ஆன்சரிங்க் இஸ்லாம்'' என்ற இணையதளமும் ஒன்றாகும். இத்தளத்திற்கு சில நாடுகளில் தடை விதித்துள்ளனர். - (''ஆன்சரிங்க் இஸ்லாம்'' தளத்தைக் கண்டு இஸ்லாமிய உலகமே பயந்து ஓடுகிறது என்று அடுத்த பதிவில் பிறமத நண்பர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்) - திருக்குர்ஆனில் எழுத்துப் பிழைகள் உள்ளது, முரண்பாடுகள் உள்ளது என்று விமர்சிக்கும் பிறமத நண்பர்கள், தங்கள் விவாதத்திற்கான சான்றுகளை ''ஆன்சரிங்க் இஸ்லாம் என்ற தளத்திலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர். குறிப்பாக மர்யம் என்ற 019வது அத்தியாயத்திலிருந்து ஓரிரு வசனங்களை எடுத்து வைத்திருந்தனர். (பார்க்க: வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல் )

திருக்குர்ஆனில் முரண்பாட்டை நிறுவ முயலும் பிறமத நண்பர்கள் சுட்டிய 019:019வது வசனத்தை இங்கு பரிசீலிப்போம். 019:019வது வசனத்தின் அரபி மூலம், தமிழ் உச்சரிப்பில்,

''கால இன்னமா அன ரஸுலு ரப்பிகி லிஅஹப லகி குலாமன் ஸகிய்யா''

அரபியில் படிக்கும் (audio video) ஒலி மற்றும் எழுத்து,



இன்னும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்கள் அன்றாடம் அணுகும் சில திருக்குர்ஆன் (தமிழ், ஆங்கிலம் உருது மொழி பெயர்ப்புப்) பிரதிகளிலிருந்து படமாக, (படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாகப் படிக்கலாம்)



----------------


------------------


---------------


----------------


----------------


--------------


--------------


--------------


திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தில் இடம்பெறும் ''லிஅஹப'' வார்த்தையை (மட்டும்) சிகப்பு வண்ணத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள இந்த ஆவணங்களை பிறமத நண்பர்கள் தவறாக விளங்கி விமர்சித்திருக்கின்றனர் என்று அவர்களின் விவாதத்திலிருந்து விளங்க முடிகிறது. விமர்சனத்தைப் பார்ப்போம்,

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba

* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:

He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba



திருக்குர்ஆன் 019:019வது வசனத்தில் இடம்பெறும் ஒரு வார்த்தையில் - li'ahiba, liyihiba, amarani 'n 'hiba என - மூன்று விதமான உச்சரிப்புகள் உள்ளதாக பிறமத நண்பர்கள் இங்கு சுட்டுகின்றனர். இவர்கள் சுட்டியுள்ளது போல் ''hiba'' என்று மூலத்தில் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம் பெறவும்கூடாது. எனவே லிஅஹிப, லியிஹிப, அமரனி N ஹிப என்று பிறமத நண்பர்கள் எழுதியிருப்பது கவனக்குறைவான எழுத்துப்பிழையாக இருக்க வேண்டும். எழுத்துப் பிழை என்பதை ஒப்புக்கொண்டால் அதைத் திருத்திக்கொள்ளவும். அல்லது ''ஹிப'' என்று எழுதியது சரிதான் என்றால் பிறமத நண்பர்கள் அதற்கான மூல ஆதாரத்தை வைக்க வேண்டும்.

வழங்குவாயாக, தருவாயாக, அளிப்பாயாக போன்ற அர்த்தமுள்ள வார்த்தைதான் ''ஹப்'' என்ற அரபுச் சொல்லாகும் எடுத்துக்காட்டாக:



மேற்கண்ட படத்தில், திருக்குர்ஆன் - 003:036, 025:074, 026:083, 037:100 - வசனங்களில் சிகப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்கள். வசனங்கள் தமிழில்,

அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் 'இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். (003:038)

மேலும் அவர்கள்: 'எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (025:074)

'இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! (026:083)

'என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக' (என்று பிரார்த்தித்தார்) (037:100)

இந்த நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ''ஹப்'' என்ற சொல்லில் இருந்து பிறந்தது தான் ''ஹப, அஹப, லிஅஹப'' ''லியஹப'' என்ற வார்த்தைகளாகும். ''லிஅஹப'' என்றால் வழங்குவதற்கு, அளிப்பதற்கு, கொடுப்பதற்கு என்று பொருளாகும்.

'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன். பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்') என்று கூறினார். (019:019)

லிஅஹப என்ற அரபிச்சொல்: அன்பளிக்க, வழங்க, அளிக்க, கொடுக்க என்று பல தமிழ் விளக்கங்களில் மொழி பெயர்த்தாலும் பொருள் ஒன்றுதான். ஆனால், பிறமத நண்பர்கள் விமர்சித்திருப்பதுபோல் ''ஹிப'' என்று எந்தக் குர்ஆனிலும் இடம் பெறவில்லை! மாறாக, ''லி அஹப'' என்பதை ''லி யஹப'' என்று ஓதியிருக்கிறார்கள்.

வர்ஷின் ஓதும் முறை ''லி அஹப''

ஹஃப்ஸின் ஓதும் முறை ''லி யஹப''

இந்த வித்தியாசமான உச்சரிப்பில் ஓதும் நடைமுறையை முஸ்லிம்கள் - மறுக்கவில்லை - ஒப்புக்கொண்டு, இணையதளங்களிலும் வெளியிட்டுள்ள விஷயமாகும்.

தஃப்ஸீர் இப்னு கதீர்,



தஃப்ஸீர் தபரி,



தஃப்ஸீர் குர்துபி,



திருக்குர்ஆன் விளக்கவுரைகளில், இங்கு விவாதித்துக்கொண்டிருக்கும் மர்யம் அத்தியாயம் 019வது வசனத்தின் ''லிஅஹப'' என்ற வாசகத்தின் விளக்கவுரையும் மேற்கண்ட படங்களில் இடம்பெற்றுள்ளன. (சிகப்பு வண்ணத்திர் கட்டம் வரைந்ததில்) அபூ அம்ரு பின் அஃலா என்பவர் ''லிஅஹப'' என்பதை ''லியஹப'' என்று ஓதியிருக்கிறார் என்ற தகவலைத் தவறாமல் குறிப்பிட்டு, அப்படி ஓதியதால் திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து சிதைந்து விடுவதில்லை, மாறிவிடுவதில்லை. இரண்டும் ஒரு பொருளையே பறைசாற்றுகிறது என்றும் விளக்கவுரையில் கூறுகிறார்கள்.

''பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க - அன்பளிக்க வந்துள்ளேன்'' என்று வானவர் ஜிப்ரீல் கூறுகிறார்.

லி அஹப = நான் (ஜிப்ரீல்) அன்பளிக்க

லி யஹப = அவன் (அல்லாஹ்) அன்பளிக்க

இரண்டு வாசகமும் ஒன்றோடொன்று முரண்படாமல் மிகச் சரியான பொருளைப் பேசுகின்றன. இவ்விடத்தில் பிறமத நண்பர்கள் எதிர்பார்ப்பது போல் திருக்குர்ஆனில் முரண்பாட்டை இது ஏற்படுத்திவிடவில்லை என்பது தெளிவு. இங்கு பிறமத நண்பர்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம்,

தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)


பைபிளை எழுதிய நால்வரும் ஒவ்வொரு விதமாக முரண்பட்டு எழுதியுள்ளனர் என்ற விமர்சனத்துக்கு சரியான விளக்கம் கொடுக்க இயலாமல் - பைபிளில் முரண்பாடுகள் இல்லை என்று நிறுவவும் முடியாமல், பதிலுக்குப் பதில் என்ற தோரணையில் குர்ஆனில் எழுத்துப்பிழை உள்ளது, முரண்பாடு உள்ளது என்று பிறமத நண்பர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

இங்கு நாம் கூறிக்கொள்வது, எழுத்துப் பிழையும் கருத்துப் பிழையும் ஒன்றாகுமா? என்றால் ஒருபோதும் சமமாகாது. எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கருத்துப் பிழையை எக்காலத்திலும் திருத்திட முடியாது. கருத்துப்பிழை கொண்ட பைபிள் வசனங்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை. பைபிளில் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளது போல் திருக்குர்ஆனிலும் கருத்து முரண்பட்ட வசனங்கள் உள்ளன என்பதை நிரூபிக்க அவர்கள் வைத்துள்ளவை இதுதான், li'ahiba, liyihiba, amarani 'n 'hiba. இதைத் தமிழில் எழுதியிருந்தால் சாயம் வெளுத்துவிடும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதி என்னவோ உலக மகா வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விட்டது போல் குறிப்பிட்டுள்ளனர். அதுவும் திருக்குர்ஆனில் இல்லாத ''ஹிப'' என்ற வார்த்தையைச் சேர்த்துத் திருக்குர்ஆன் வசனத்தைத் திரித்துள்ளனர்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, September 25, 2008

வர்ஷ், ஹஃப்ஸ் காரீகளின் ஓதல்.

குர்ஆனை மனனம் செய்து அழுத்தமான உச்சரிப்புடன் நீட்டி, நிறுத்தி ஓதுபவரை ''காரீ'' என்று சொல்வார்கள். இன்றைய காரீகளுக்கு முன்னோடியாக இருப்பவர்கள் 'வர்ஷ். ஹஃப்ஸ்' என்ற இரு பிரபல்யமான காரீகளாவர். இன்று உலகிலுள்ள அனைத்துக் காரீகளும் இவ்விருவரின் மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று ஓதப்படும் கிராஅத்துகளில் சுமார் 30 சதவிகிதம் காரீகள் ''வர்ஷ்'' என்பவரின் கிராஅத் ஸ்டைலை பின்பற்றுகின்றனர். 70 சதவிகிதத்தினர் ''ஹஃப்ஷ்'' என்பரிவரின் கிராஅத் ஸ்டைலைப் பின்பற்றுகின்றனர்.

குர்ஆனைத் திறந்து வைத்துக் கொண்டு, அன்றிலிருந்து இன்றுவரை மாற்றப் படாத ஒரே வசனத்தை பொருள் மாறாமல் பலவாறு (7வகை என்பது குறைவு) ஓதுவதை ஹஃப்லா என்பர்.

பிரபல காரீகள் முஹம்மது ஸித்தீக் அல்மின்ஷாவீ, அப்துல் பாஸித் முஹம்மது அப்துஸ் ஸமத், மஹ்மூதுத் தப்லாவீ ஆகியோரின் ஹஃப்லாக்கள் கேட்டுப் பார்த்தால் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை பலவாறு ஓதிக் கொண்டிருப்பார்கள். இதற்கு அர்த்தமே அசல் ஒன்று; ஸ்டைல்கள் பல என்பதுதான்.

காரீகள் வசனங்களின் பின்னணிக்கேற்றவாறு குரலில் உணர்ச்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள். முக்கியமாக வரலாற்று வசனங்களை ஓதினால் சம்பவங்களை காட்சியாக குரலில் பிரதிபலித்துவிடுவார்கள். நாம் இங்கு விவாதிக்கவிருக்கும் மர்யம் - 019வது அத்தியாயம் முழுக்க உயர் கவி நடையில் அமைந்த அத்தியாயமாகும். ஓர் அற்புதத்தை நிறைவேற்ற மர்யம் என்றப் பெண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கிறான். இதனால் மர்யம் படும் துன்பம், ஊரிலுள்ளவர்களின் சந்தேகப்பார்வை, இடித்துரைப்பு, அவதூறு போன்ற இன்னல்களுக்கு அப்பெண் ஆளாகிறார். இந்தச் சுழ்நிலையை உணர்ச்சிப்பூர்வமாக காரீகள் ஓதுவார்கள்.

மர்யம் கையில் குழந்தையுடன் ஊருக்குள் நுழைகின்றார் அப்போது: ''யா உக்த ஹாரூன...'' ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்டவரில்லை. உன் தாயும் நடத்தை கெட்டவர் இல்லை. (நீ ஏன் இப்படியாகிவிட்டாய்) என்பது போல் சந்தேகக் கணைகளைத் தொடுக்கின்றனர் ஊர்மக்கள். இந்த வசனத்தை காரீகள் ஓதக்கேட்டால் சூழ்நிலை மிளிரும். இவ்வசனத்திலும் ''வர்ஷ், ஹஃப்ஸ்'' இரு காரீகளின் உச்சரிப்பு உள்ளதால் இது போன்ற வித்தியாசமான உச்சரிப்புகள் கொண்ட வசனங்களை மட்டும் ஒலியாக - ஆடியோவாக பதியும் முயற்ச்சி முடிந்தபின் ஒலியைக் கேட்கலாம். அதற்கு முன்,

''வர்ஷ், ஹஃப்ஸ்'' காரீகளின் வித்தியாசமான உச்சரிப்புகளை எழுத்தில் பார்க்கலாம்.

இங்கு படமாக இணைத்துள்ள பிடிஎஃப் ஃபைலின் சுட்டி

(படங்களின் மீது சொடுக்கினால் தெளிவாக வாசிக்கலாம்)

படம் 1 வர்ஷ் & ஹஃப்ஸ் இரு கிராஅத்தும் சேர்ந்தது.



படம் 2



படம் 3 வர்ஸ் கிராஅத் மட்டும்



படம் 4




பிடிஎஃப் படம் 1, 2ல் திருக்குர்ஆன் மர்யம் அத்தியாயம் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கருப்பு எழுத்துக்கள் வர்ஷ் கிராஅத்தாகும், ரோஸ் வண்ண எழுத்துக்கள் குர்ஆனிலிருந்து வித்தியாசமான காரீ ஹஃப்ஸின் உச்சரிப்புகள். பார்க்க படம் 2 கீழே: ரோஸ் வண்ண வட்டத்தில் அடிக்குறிப்பு.

படம் 1ல் முதல் வசனம் கருப்பு எழுத்துக்களில் உள்ள வர்ஷ் கிராஅத் முறைப்படி ''ஸகரிய்யா'' என்று முடிகிறது, முடிந்த இடத்திலேயே (ரோஸ் எழுத்தில் ஹஃப்ஸ் கிராஅத்) அ என்ற உச்சரிப்பைத் தரும் அம்சு என்ற எழுத்து ரோஸ் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது (படம் 1, 3ல் நாம் பச்சை வண்ணத்தில் சிறிய கோடிட்ட இடத்தைப் பார்க்கவும்)

அதாவது, முதல் வசனம் (வர்ஷ் கிராஅத் கருப்பு எழுத்து) ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''இஃத்னாதா ரப்பஹு...'' என அடுத்த வசனம் ஓதப்படும். இது காரீ வர்ஷின் கிராஅத் ஸ்டைல்.

ரோஸ் எழுத்து, ஸகரிய்யாயாயாயா... என்ற நீட்டலுடன் முடிந்து, ''அ இஃத்னாதா ரப்பஹு...'' என்று அடுத்த வசனம் ஓதப்படும். இங்கு இரு கிராஅத்துக்கும் உள்ள உச்சிரிப்பு வித்தியாசம் ''அ'' என்ற எழுத்து மட்டுமே ஹஃப்ஸ் கிராஆத்தில் சேர்த்து ஓதப்படுகிறது இது ஹஃப்ஸ் கிராஅத் ஸ்டைல்.

ஏன் இவ்வாறு ஓதுகிறார்கள்? என்றால் வித்தியாசமாக ஓதும் காரீகளே அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்: ''வித்தியசமான உச்சரிப்பில் ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்று காரீகளே சவால் விடுக்கிறார்கள்! இந்த உச்சரிப்புகளின் வித்தியாத்தை வைத்து,

//ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!

Quran or Qurans?!//

என்று அறியாமையில் வாதம் செய்யும் பிறமத நண்பர்களுக்கு - ''நாங்கள் எப்படி ஓதினாலும் குர்ஆன் வசனங்களின் பொருள் மாறாது'' என்ற காரீகளின் சவாலையே - இங்கு சொல்லிக்கொள்வோம்.

இன்னும், மர்யம் அத்தியாயத்தின் 4வது வசனம் (ஹஃப்ஸின் படி 3வது வசனம்) வர்ஷ் கிராஅத் முறைப்படி, ''வலம் அகும்பி'' என்று ஓதப்படும். (பார்க்க படம் 4ல் கருப்பு வட்டம்)

இதுவே, ஹஃப்ஸ் கிராஅத் முறைப்படி, ''வலம கும்பி'' என்று ஓதப்படும் (பார்க்க படம் 1ல் கருப்பு வட்டம்)

ஓதுதலில் உள்ள உச்சரிப்பு வித்தியாசங்கள் மர்யம் அத்தியாயத்தில் மட்டுமில்லை, திருக்குர்ஆனின் பல அத்தியாயங்களில் இது போன்ற வித்தியசமான கிராஅத்துகள் உள்ளன. இதனால் வசனங்களின் பொருள் சிதைந்து விடுவதில்லை, பொருள் மாறிவிடுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனடிப்படையிலேயே ''பல குர்ஆன்களா!?'' என்று பிறமத நண்பர்கள் விமர்சனம் எழுதியுள்ளனர்.


நான் என்ன சொல்லவருகிறேன்?

சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.

1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba

* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:

He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba

* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:

He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba


இங்கு பிறமத நண்பர்கள் ஆங்கில உச்சரிப்பில் சுட்டியுள்ள வார்த்தைக்கு மூலமொழி அரபியை வைப்பார்கள் என்று நம்புவோம்.

அவர்கள் எழுப்பியுள்ள மேற்கண்ட விமர்சனத்தில் திருக்குர்ஆன், 019:019வது வசனத்தில் இடம் பெறும் ''லி அஹப'' என்ற வார்த்தையை காரீகள் வித்தியாசமான உச்சரிப்பில் ஓதியிருக்கிறார்கள் என்பது உண்மையே, இதனால் வசனத்தில் பொருள் மாறிவிடுவதில்லை என்பதே ஏதார்த்தம். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணியப் பொருளை இவர்கள் பூதக்கண்ணாடியை வைத்து பெரிதாக்கிக் காட்டுவதுதான் இவர்களின் உண்மை சொரூபத்தை அடையாளம் காட்டிவிடுகின்றது.

அடுத்த பதிவில் ''லி அஹப'' என்பது குறித்து இங்கு பதிவு செய்வோம் இறைவன் நாடட்டும்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

ஏழு வட்டார மொழியில் குர்ஆன்!

குர்ஆன் பிரதிகளில் பிழைகளும், திருத்தமும்!