Tuesday, December 18, 2007

தியாகப் பெருநாள் செய்தி!

அனைவருக்கும் தியாகப் பெருநாள் வாழ்த்துகள்!


செவ்வாய், 18 டிசம்பர் 2007

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தாம் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை நெறி எத்துணை உன்னதமானது என்பதை அறியாமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் கோடானு கோடி என்ற உண்மை ஒருபுறம்; இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டுத் தடுமாறும் கூட்டம் மறுபுறம்; இஸ்லாத்தில் இல்லாதவைகளைக் கூடுதலாக விளங்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முயலும் கும்பல் இன்னொரு புறம்.

இவையன்றி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையை உரத்து முழங்கும் இஸ்லாத்தின் மீள்எழுச்சியைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கி விடப் பட்டிருக்கும் 'எழுத்துத் தீவிரவாத'க் கூலிக் கும்பல் இஸ்லாத்துக்கு எதிராக எல்லாவித உத்திகளோடும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாத்துக்கு எதிரானத் திட்டமிட்டத் திரித்தல்களையும் திருகுதாளங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கவும் சரியான தகவல்களைச் சான்றுகளோடு எடுத்து வைக்கவும் எழுத்துப் போராளிகள் நம் சமுதாயத்துக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராளிகள் எதிர் கொள்ள வேண்டியவர்களாக சல்மான், தஸ்லீம் போன்ற அபகீர்த்தியால் அறியப் பட்ட முஸ்லிம் பெயரைத் தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகளும் அதிகமாக அறியப் படாதவர்களாகத் தமிழுலகில் சிலரும் உளர்.

எழுத்துலகில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் இதனோடு முற்றுப் பெற்று விடவில்லை. எழுத்துலகம் எழுச்சியடைந்த 1950 களிலிருந்து 1990 வரையிலான காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கெதிரான மறைத்தல்கள், திரித்தல்கள் அனைத்தும் இக்காலகட்டங்களில் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு, அவற்றால் மக்கள் மனதில் இஸ்லாத்தைக் குறித்தத் தவறான எண்ணங்கள் உறுதியாகப் பதியும் விதத்தில் எழுத்துலகைக் கொண்டு எதிரிகள் சாதித்து விட்டதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு பின்லாடனின் பெயரைக் கூறி ஆப்கான் அரசையும் இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைக் கூறி ஈராக் அரசையும் வீழ்த்தி, இன்று லட்சகணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடைமையையும் சீரழித்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி, அடுத்து எந்த முஸ்லிம் நாட்டின் மீது அட்டூழியத்தை அவிழ்த்து விடலாம் என ஆய்ந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கு, அவைகள் செய்யும் அட்டூழியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரண்டு நிறுத்தாததன் காரணம் ஊடகங்களால் விதைக்கப் பட்ட இஸ்லாத்தைக் குறித்த எதிர்மறைத் திரிபுச் சிந்தனைகளே.

"ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்" எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்நிலையிலிருந்துச் சமுதாயத்தை மீட்டு எடுப்பதும் அதே பேனா முனையால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைச் சமுதாயச் சிந்தனையுள்ள அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

"அக்கிரமக்காரன் முன்பு அநியாயத்தை உரக்க, உறுதியாக எடுத்துச் சொல்வதையே போராட்டத்தில் உயர்ந்தப் போராட்டமாகக்" காணும் இஸ்லாத்தில், நிலையான மறுமை வெற்றியைக் கொய்தெடுக்க அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னுக்கு எதிராகக் குரலெழுப்பி, போராட்டத்தின் மறுவடிவமாகத் திகழ்ந்த மூஸா(அலை) அவர்களின் போராட்ட வழி முறையை, அல்குர்-ஆன் போதிக்கும் அறவழியை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தற்காலக் கட்டாயத் தேவையாகும்.

உண்மைகளை மறைத்து, திட்டமிட்டக் கட்டுக் கதைகளைச் செய்திகளாக உலகுக்குத் தரும் பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் மறைக்கப் பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மிகச் சில ஊடகங்களும் இல்லாமலில்லை. அவை வெளிக் கொண்டு வந்து வெளிச்சம் போடும் உண்மைகளால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அதன் சக்தியையும் கண்கூடாகக் காணும்போது சற்றே மனதுக்கு மகிழ்வேற்படுகிறது!. உதாரணத்திற்கு கத்தரில் இருந்து செயல்படும் 'அல் ஜஸீரா' தொலைகாட்சி, ஆப்கான் மற்றும் ஈராக் அநியாயமாக அழிக்கப்பட்ட வேளைகளில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. அக்கிரமக்காரர்களுக்கு இதுவரை அது சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அதே போன்று தனது பக்க நியாயத்தை உலகில் எவருமே நடுநிலையாக வெளிப்படுத்தத் தயாரில்லாமல் தனக்கு எதிராக அமெரிக்கா போர் தந்திரங்களைக் கையாண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் 'ப்ரஸ்' என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய ஒரு (ஈரானியத்) தொலைக் காட்சி, தனது பக்க நியாயங்களையும் அமெரிக்காவின் போர் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு காண்பித்தது. இன்று அதன் பக்கத்திலுள்ள நியாயங்களைப் பேசுவதற்கும் "அமெரிக்காவின் செயல் தவறானதுதான்" எனக் குரல் எழுப்பும் வகையில் மற்ற முக்கிய நாடுகளைத் தூண்டுவதற்கும் அணி திரளவும் ஒரு தூண்டுகோலாகாத் திகழ்கிறது.

அவ்வளவு தூரம் போவானேன். இந்தியாவில் சங் பரிவாரத்தின் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை அறியாதவர்கள் மிகச் சொற்பம். சங் பரிவாரத்தின் அரசியல் பிரிவு பாஜக ஆட்சியில் இராணுவத்திற்குச் சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிய லஞ்சம் வரை, இன்று காவி அரக்கன் நரேந்திரமோடி முஸ்லிம்களைக் குஜராத்தில், மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரங்களை மக்களுக்கு எதிராக உபயோகித்து, சொந்த மாநில மக்களையே வெறித்தனமாகக் கொன்று குவித்ததையும் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அனைத்து மக்கள் முன்னிலையிலும் கயவர்களின் முகமூடியைத் 'தெஹல்கா' தெளிவாக விலக்கிக் காண்பித்தது.

2000க்கு முன்னர்வரை மேற்குலக ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்பொழுது தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு உதவியது அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைகாட்சியின் பேனா கரங்களே. அவ்வாறே, இந்திய முஸ்லிம்களின் இரத்தத்தையும் சதையையும் உண்டு வாழும் காவிக் கூட்டமும் மக்கள் பணத்தை உண்டு வாழும் அரசியல்வாதிக் கூட்டமும் கவலையுடன் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் தெஹல்கா என்ற பேனா முனைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.

இதே போன்ற பேனா புரட்சி சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் போராட்டமாகப் பேனா முனையை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சமுதாய அங்கங்களுக்கு இப்புனிதத் தியாகப் பெருநாள் தினத்தின் செய்தியாகச் சத்தியமார்க்கம்.காம் ஒன்றைக் கூறிக் கொள்கிறது:

"எதிர்காலச் சமுதாயத்தின் நன்மைக்காக, உலக மக்களின் அமைதியான சுபிட்ச வாழ்விற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைத் தியாகம் செய்துக் கொள்ளத் தயாராகிக் கொள்ளட்டும். அந்தத் தியாகம் பேனா முனையினைக் கொண்டு ஆரம்பமாகட்டும். எடுங்கள் பேனாக்களை; எழுதுங்கள் நியாயங்களை - அக்கிரமக்காரர்களும் பயங்கரவாதிகளும் அடங்கும் வரை அல்லது அழியும் வரை!".

இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;
எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

2 comments:

நண்பன் said...

வலிமையான செய்தி.

நேர்மையுடன் தன் தரப்பு வாதங்களைக் கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் எடுத்து வைக்கும் அழைப்பிற்கு ஒரு பாராட்டு.

ஓட்டுகள் குத்தி ஆதரவு காட்டிய சகோதரர்கள், ஏனோ கருத்து தெரிவிக்க விரும்பவில்லை போலிருக்கிறது. தங்கள் அடையாளங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டாம் என்று நினைக்கிறார்களா, என்ன?

சகோதரர்கள் மனமுவந்து நியாயத்திற்கப்பாற்பட்ட விமர்சனங்களை எதிர்த்து எழுத வேண்டும் - நியாயாமான நேர்மையான மொழி நடையில் எழுதப்பட்ட விமர்சனங்களுக்கு ஆக்கப் பூர்வமான பதில் தரவேண்டும்.

ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக, அவர்களது அடையாளங்களை மொத்த இந்திய சமூகத்தின் மீதும் சாட்டி, மற்ற சகோதரர்களை புண்படுத்தா நடையில் எழுத வரவேண்டும்.

நியாயமான நேர்மையான எழுத்துகளுகளை மக்கள் என்றும் மதிப்பார்கள்.

அதே சமயம் - வெளியிலிருந்து வலிந்து திணிக்கப்படும் இழிவுகளைக் களைய முனையும் அதே வேளையில், 'நீ பெரியவனா, நான் பெரியவனா?' என்ற ரீதியில் அணி பிரிந்து அடித்துக் கொண்டிருக்கும் செய்திகளும் கண்ணில் படுகின்றன. தங்கள் சுய நலனை சமுதாய நலனைக் காட்டிலும் மேலானதாக நினைப்பவர்களையும் குறித்து கண்டித்து எழுத முன்வரவேண்டும்.

எழுத்தாளர்களைக் குறித்தான மாற்றுக் கருத்துகள் என்னிடமும் உண்டு. உள்விசாரணைகளாக எழும் அவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக விலக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வைக்க வேண்டியதில்லை. அவர்களது, 'ஆராய்ச்சிகள்' நல்ல பலன் கொடுக்கக் கூடும் - அறியப்படாத விஷயங்களைப் பற்றிய ஒரு விவாதங்களைத் தொடங்க உதவலாம். அவற்றைப் பற்றிய கருத்தாக்கங்கள் எவ்வாறிருப்பினும்.

சுயநலம் கொண்டு, இளைஞ்ர்களைத் தூண்டி, மோதவிட்டு, தங்கள் மேலாண்மையை, ஊர்தோறும் நிருவ நினைக்கும் சகோதரனை விட, ஒரு பழக்கம் குறித்து, தீவிர சிந்தனையுடனும், ஆர்வத்துடனும், கேள்வி எழுப்புபவர்கள் மோசமானவர்கள் அல்ல.

ஒரு சிறு 'மேதாவிகளுக்கு' நடுவே மட்டும் இயங்கும் இவர்களது செயல்பாடுகளை விமர்சித்து ஒரு தீர்வு கிட்டும் முன்னே, விசாரித்து தண்டனை வழங்கி, சுயசிந்தனைகளை முடக்கிப் போட நினைப்பது நல்லதல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாமிய அறிஞர்கள் அந்தக் காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப - தேவைக்கேற்ப மறுவாசிப்புக்கு இஸ்லாமிய விதிகளை உட்படுத்தியே வந்திருக்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில், இந்த மறுவாசிப்பும், விசாரணையும் நின்று போய்விட்டது.

அதன் பின், தங்களது விருப்பத்திற்கேற்ப வாசித்துக் கொள்ளும் நபர்கள் பெருகிவிட்டதனால், இஸ்லாம் தனது எளிமையைக் கைவிட்டு, இறுக்கம் நிறைந்த ஒரு மார்க்கமாக இவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. இதன் முக்கிய காரணம் - பொது நீரோட்டத்திலிருந்து விலகி, தனித்தீவாக சமுதாயத்தை மாற்றி, அதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை இறுக்கமாக சமூகத்தின் மீது இறக்கிவிடலாம் என்ற சிலரின் நப்பாசை தான்.

இந்தியாவின் முகல், துருக்கியின் ஓட்டமான் பேரரசுகள் தேயத் தொடங்கியதும், இஸ்லாத்தை அழிக்க நினைக்கிறார்கள் அதன் எதிரிகள் என்ற பயங்கரத்தை முன்நிறுத்தி, அதன் மூலம் எழும் உணர்வுகளை தங்கள் ஆதரவுத் தளமாக மாற்றிக்கொள்ள முற்பட்டனர். அத்தகைய போக்கு இன்றும் எங்கெங்கும் காண முடிகிறது. உதாரணமாக, கொமெய்னி, பின்லேடன், மற்றும் ஹமாஸ் இயக்கங்கள். இந்த மாதிரியான மதவாதத்தை முறியடிக்கவரையிலும், நாம் வெளியிலிருந்து எழும் கருத்துகளை மட்டுமே சாடிக் கொண்டிருந்து விட்டு எதையுமே சாதிக்கப் போவதில்லை.

இன்று உலகின் பெரும் சிந்தனை தளங்கள் இயங்கக் கூடிய மொழிகளை அனைவரும் கற்றுக் கொள்வது நல்லது. அதில் பரிச்சியம் ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம், ஒரு இடத்தில் நிகழ்பவைக்கு மட்டுமே எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பேன் என்றில்லாமல், ஒரு விரிந்த தளத்தில் தேவையான கருத்துப் பரிமாற்றங்களை ஏறிட்டுக் கொள்ளலாம்.

இது குறித்து மேலும் தெளிவு பெற விரும்புபவர்கள் - The Struggle within Islam என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அந்தப் புத்தகம் ஒரு வரலாற்று நூல் மட்டுமல்ல. ஆனால், அது ஒரு உள்முக விசாரணை. ஏன், இஸ்லாம் தன் பெருமைகளை இழந்தது என்ற கேள்வியோடு, இஸ்லாமிய ஆட்சியாளார்கள் குறித்து - நபிகளின் மரணம் தொட்டு ஆரம்பித்து, முகல் பேரரசின் வீழ்ச்சி, ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, மூர் இனத்தவர் ஸ்பெயினில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது என முழு வரலாற்றையுமே ஒரு கூரிய விமர்சனப் பார்வையுடன் எழுதி இருக்கிறார்
Dr, Rafique Zakaria.

எழுத வாருங்கள் என்ற அழைப்பு எத்தனை முக்கியமானதோ, அத்தனை முக்கியம் எதை எழுதுவது என்று. இந்த எதை எழுதுவது என்பதில், பலத்த சர்ச்சைகளும், மனத்தாபங்களும் எழலாம். ஆனால், இனியும் குறைபாடுகள் என்று இஸ்லாத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்து வைப்பதிலோ, அல்லது அது குறித்து நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள் - நாங்கள் இருக்கிறோம் என்ற சில சுயநலமிகளின் வார்த்தைகளை ஏற்று, பெரும்பான்மையானவர்கள் மௌனமாக இருப்பதுவோ சரியல்ல.

ஒவ்வொருவரும் தங்கள் சக்தியைக் கொண்டு, சுயமாக சிந்திப்பதுவும், தங்களுக்குச் சொல்லப்படும் செய்திகள் சரிதானா, நேர்மையானதா என்று எடை போட்டுப் பார்க்கும் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தால் தான், வலிமையான ஆயுதமாக பேனாவின் முனை மாறும்.

இல்லையென்றால், மேலும், மேலும் சாதரணனைக் குழப்பவும், திகைக்க வைக்கவும் தான் செய்யும்.

அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

அபூ முஹை said...

வழக்கம் போல் உங்கள் முத்திரை மிளிர்கிறது. வலிமையான செய்தியை விரிவாக்கியதற்கு நன்றி நண்பன்.

சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடந்த லீனா மணிமேகலையின் நிகழ்வுக்கு இஸ்லாத்தின் வேர்களே காரணம் என இதையும் விட்டு வைக்காமல், சம்பந்தமேயில்லாத இஸ்லாத்தின் மீதான தாக்குதலை வழக்கமாகத் துவங்கி விடுகின்றனர். இஸ்லாத்துக்கு முன்புவரை மனிதன் ஆடை உடுத்தும் நாகரீகத்தைப் பெறவில்லை, நபியவர்கள் வழியாக இஸ்லாம் மனிதனுக்கு முதல் முறையாக ஆடை உடுத்தும் சட்டம் இயற்றியது என்பது இவர்களின் கருத்து - இவர்கள் அறியாதவர்கள் - அதனால் தானோ என்னவோ, ஆடை, உடை சர்ச்சை எங்கு கிளம்பினாலும் இவர்களுக்கு இஸ்லாம் மீது அக்கறை வந்து விடுகிறது.

நண்பர்களின் நியாயமான விமர்சனங்களையும், அநியாயமான இழிவுகளையும் நேர்மையுடன் சந்திக்க முன் வர வேண்டும் என உங்களுடன் சேர்ந்து அழைக்கிறேன்.

- அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும். - நன்றி!