Tuesday, October 16, 2007

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

புதன், 03 அக்டோபர் 2007

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

கட்டுரையின் முதல் பகுதியினைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியம் என்பது போலவும், அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்து வராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக்குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோ, கடமையையோ நிர்பந்திக்கவும் இல்லை.

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (அல்குர்ஆன், 002:286)

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், ‘என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.” (முஸ்லிம்: 3803, புகாரி: 7204 )

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, “உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

“குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காண இயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ''ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.
(முஸ்லிம்: 4849)

(“உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோடு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அது போன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்." (அல்குர்ஆன் 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

மேலும்,

“மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.
(புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத்தக்கது.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று அப்போது கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

“முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொரு இடத்தில் நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் என்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால் சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்க வேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக் கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் முர்ஸல் வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய படையினரிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வது தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர்ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ''முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிகீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

இப்படி விளங்கினால் திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரத் எப்பொழுது, யாருக்குக் கடமையாகும் என்பதையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அது கடமையா என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

< பகுதி -1

No comments: