Thursday, December 22, 2005

மதமாற்றம் ஏன்? -3

ஐயம்:
2.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? (தருமியின் பதிவு)

தெளிவு:
''சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்'' (திருக்குர்ஆன், 55:14) ஆதாம் - ஆதம் இறைவனால் படைக்கப்பட்டார் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.

//இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.// மனிதன் உறைந்த இரத்தத்திலிருந்து படைக்கப்பட்டதாக சில மொழி பெயர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது. ''மனிதனை அவன் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான்''. (திருக்குர்ஆன், 96:2) திருக்குர்ஆன் மூலத்தில் ''அலக்'' என்கிற வார்த்தையை ''இரத்தக் கட்டி'' என்று தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவறான பொருளாகும்.

(இன்னும் சில வசனங்களில் ''அலக்'' என்ற வார்த்தையை மொழிபெயர்க்காமல் அப்படியே சொல்லப்பட்டுள்ளது.

''நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு ''அலக்கிலிருந்தும்'' பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்''. (திருக்குர்ஆன், 22:5)

''பின்னர் அந்த இந்திரியத் துளியை ''அலக்'' என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த ''அலக்கை'' ஒரு தசைப் பிண்டமாக்கினோம்''. (திருக்குர்ஆன், 23:14)

''அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் ''அலக்'' என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்''. (திருக்குர்ஆன், 40:67)

''பின்னர் அவன் ''அலக்'' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்''.) (திருக்குர்ஆன், 75:38)

கரு, அதன் வளர்ச்சிக் கட்டத்தின் எந்த நிலையிலும் ''இரத்தக் கட்டி'' என்ற நிலைக்கு வருவதில்லை. இது விஞ்ஞானத்தின் தீர்க்கமான முடிவு. ''அலக்'' என்பதற்கு 'பற்றிப் பிடித்துக் கொண்டு தொங்கும் பொருள்' என்பதே நேரடியான மொழிபெயர்ப்பாகும். கருத்தரித்ததும் அந்தக் கரு, கருப்பையின் சுவற்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு தட்டையான பொருளாக மாறி கருவறை சுவற்றோடு அப்பிக் கொள்கிறது. இப்போது அதை மருத்துவத்தில் (PLACENTA - நச்சுக் கொடி) சூலகத்தின் கருவக ஒட்டுப் பகுதியென்று குறிப்பிடுகிறார்கள்.

வளரும் கருவுக்கு அது குழந்தையாகி வெளியே வரும்வரை சுவாசப்பை, ஈரல், சிறுநீரகம் எல்லாமே இந்த ''பிளஸென்டா'' தான்! எனவே ஒரு குழந்தை உருவாவதற்குரிய எல்லாமாகச் செயல்படும் பிளஸென்டாவைத்தான் இறைவன் இங்கே ''அலக்'' என்று குறிப்பிடுகிறான். எனவே ''அலக்' என்றால் ''இரத்தக் கட்டி'' என்பது தவறான பொருளாகும்.

''அலக்'' என்பதற்கு இரத்தக் கட்டி என்கிற பொருள் தவறானது எனும்போது, அதைத் தொடர்ந்து //..ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?// என்ற தருமியின் சந்தேகக் கேள்வியும் தவறானதே.

ஐயம்:
3.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான - ‘இஸ்மயேலின்’ சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் - என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் “நல்ல″ வார்த்தைகள்…? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.

தெளிவு:
//ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் - பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா?// - ''ஆப்ரஹாமின் வழித்தோன்றல்கள் மட்டுமே இஸ்லாமியர்கள் - முஸ்லிம்கள் என்பது தவறு. ஆப்ரஹாமின் சந்திதிகள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.'' இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அடிமைகள் சிலரே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். அபிசீனிய நாட்டைச் சேர்ந்த கருத்த அடிமையான பிலால் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். இவர் ஆப்ரஹாமின் வழித்தோன்றலில் உள்ளவரல்ல.

இன்று உலகளாவிய நிலையில் பரந்து விரிந்து வேர்களைப் பதித்திருக்கும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து முஸ்லிம்களும் ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களல்ல என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும். முஸ்லிம்களில் - ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களும் இருக்கிறார்கள் - ஆப்ரஹாமின் வழித்தோன்றலல்லாதவர்களும் உண்டு. இஸ்லாத்தை ஏற்க ஆப்ரஹாமின் சந்ததிகளென்ற அந்தஸ்து அவசியமில்லை.

ஆப்ரஹாம் இறைவனின் தோழர் என்றும், இரண்டு மனைவியரை அவர் திருமணம் செய்திருந்தார், அவ்விருவரில் சாராள் முதல் மனைவி, ஆகார் இரண்டாம் மனைவி. ஆப்ரஹாமின் குடும்பத்தில் தோன்றிய முதல் குழந்தையை - இஸ்மவேலை - ஆகார்தான் பெற்றெடுத்தார் என்றும் பைபிள் கூறுகிறது. இதை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறது.

இஸ்மவேல் - இஸ்மாயீல் அவர்கள் பால்குடி பருவமாகயிருந்தபோதே - இஸ்மாயில் அவர்களையும், அவரின் தாயார் ஆகார் - ஹாஜராவையும், ஆப்ரஹாம் - இப்ராஹீம் அவர்கள் அழைத்து வந்து மக்காவில் குடியமர்த்தினார் இவர்கள் குடியேறிய வேளையில் அங்கு எவருமே குடியிருந்திருக்கவில்லை. இவர்களின் காரணமாகவே இங்கே ஸம், ஸம் என்ற நீரூற்றை இறைவன் தோன்றிடச் செய்தான். இந்த நீரூற்றின் காரணமாக ஜுர்ஹும் என்ற குலத்தார் இங்கே குடியேறினர். இஸ்மாயீல் அவர்கள் ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அரபி மொழியைக் கற்றுக்கொண்டார். இஸ்மாயீல் வாலிப வயதையடைந்தபோது அவருக்கு, தங்களில் ஒரு பெண்ணை ஜுர்ஹும் குலத்தார் திருமணம் செய்து வைத்தனர். (இது நீண்ட ஹதீஸின் சுருக்கம். பார்க்க: தமிழ் புகாரி 3364, 3365) இஸ்மவேல் - இஸ்மாயீலின் சந்ததிகளே அரபியர்கள்.

''இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' (திருக்குர்ஆன், 14:39) என்று ஆப்ரஹாம் - இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்கு நன்றி கூறிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்து பல ஆண்டுகள் சென்றபின், ஆப்ரஹாமின் முதல் மனைவி சாராவுக்கு ஈசாக் - இஸ்ஹாக் பிறந்தார். இஸ்ஹாக்கின் சந்ததிகளே இஸ்ரவேலர்கள். யாகூப், யூசுப், மூஸா, ஹாரூன், தாவூத், சுலைமான், ஸக்கரிய்யா, எஹ்யா, ஈஸா அடங்கிய அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில்தான் அனுப்பப்பட்டார்கள்.

ஐயம்:
4.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே ‘இறுதி’ வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் ‘இறுதி நிலை’தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் - அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.

தெளிவு:
உலகம் தோன்றி, முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் - ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை மூன்று மதங்களைத்தானா உலகம் கண்டிருந்தது? என்றால் நிச்சயமாக இல்லை! குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வேதம் என்று சொல்லிக்கொள்ளுமளவிற்கு, நபி மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தோரா - தவ்ராத் என்ற வேதமும், நபி ஏசு - ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட பைபிள் - இன்ஜில் என்ற வேதமும் ஆக இவ்விரு வேதங்கள் மட்டுமே இருந்தன, அதுதான் இங்கு சுட்டப்படுகிறது.

இதனால், தவ்ராத் வழங்கப்பட்ட இறைத்தூதர் மோசே - மூஸா (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகங்களுக்கு நேர்வழி காட்ட இறைத்தூதர்கள் அனுப்பப்படவில்லையென்றோ, இறை வேதங்கள் வழங்கப்படவில்லையென்றும் பொருளல்ல. அப்படி விளங்குவது குறுகிய கண்ணோட்டத்தையே உறுதிப்படுத்தும். (பழைய, புதிய ஏற்பாடுகள் திரிக்கப்பட்டதா? இதற்கான விளக்கத்தை தருமியின் ஐந்தாவது கேள்வியில் சேர்த்து தெளிவுபடுத்துவோம்.)

(வளரும்)

Friday, December 16, 2005

மதமாற்றம் ஏன்? -2

ஹாரிதின் மகள் ஜுவைரியா (ரலி) அவர்களின் நிலையை எண்ணி மனசு கஷ்டப்படுவதாக தருமி குறிப்பிட்டுள்ளார். பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டால் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது? பெண்ணொருத்தி துன்பத்தையனுபவிக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் மனிதம் கொண்ட எவரது உள்ளத்திலும் ''அடடா இது என்ன அநியாயம்'' என்று நெஞ்சிரக்கம் கொள்ளும். இரக்கத்தின் மேலிட்டால் மனது கஷ்டத்திற்குள்ளாவதும் இயல்பு. -

(//3. ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!//)

- ஆனால், ஜுவைரியாவுக்காக தருமியின் மனசுக் கஷ்டப்படுகிறது என்பதில் நியாயமிருக்கிறதா? என்பதை பார்ப்போம்.

பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்கு பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு - அதாவது நபி (ஸல்) அவர்களின் 59வது வயதில் - நபி (ஸல்) அவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்களத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது 'முஸாபிஃ பின் ஸஃப்வான்' என்பவரின் மனைவியும், அந்தக் கூட்டத்தின் தலைவர் ஹாரித் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். அன்றைய போர் வழக்கப்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டு கொடுக்கப்பட்டனர். ஜுவைரியா அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்..

(அபூ தாவூதில் இடம்பெற்ற நபிவழிச் செய்தியின் சுருக்கமிது)

ஜுவைரியா நபி (ஸல்) அவர்களை அணுகி: ''யா ரஸூலல்லாஹ் - ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் ஹாரிதின் மகள் ஜுவைரியா... என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள்'' என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர்: ''நல்லதை நீ கேட்பாயா?'' என்றார்கள்.

ஜுவைரியா: ''சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்.''

அல்லாஹ்வின் தூதர்: ''உன்னை விடுவித்து நான் திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்கள்

ஜுவைரியா: ''சம்மதிக்கிறேன்'' என்றார்.

இந்த சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் - அக்காலப் போர் முறைப்படி, போரில் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் சிறைப் பிடித்தவர்களுக்கு அடிமைகள் என்பதை ஆணும், பெண்ணும் அறிந்து வைத்திருந்தனர். பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தின் தலைவரின் மகளாகிய ஜுவைரியா அந்த சூழ்நிலையிலிருந்து, தற்போது தானொரு அடிமை என்பதை விளங்கிக் கொள்கிறார். அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெறவே நபி (ஸல்) அவர்களின் உதவியை நாடுகின்றார்.

''ஓ அல்லாஹ்வின் தூதரே'' என்ற ஜுவைரியாவின் அழைப்பிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ''இறைத்தூதர்" என்ற அந்த மாபெரும் பதவியை அவர் ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்துகிறார். ''சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்'' என இறைத்தூதரின் கட்டளைக்கு செவி சாய்க்கிறார். ''சம்மதிக்கிறேன்'' என்று இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை திருமணம் செய்து கொள்ள ஒப்புதலளிக்கிறார். இங்கே ஜுவைரியா மீது சிறிதும் வன்முறையோ - பலவந்தமோ நடத்தப்படவில்லை (அப்படி நடத்தப்பட்டதாக வரலாற்று தகவல்களில் அறிந்திருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்)

ஜுவைரியா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை, அவருக்கு அநீதியும் இழைக்கப்படவில்லை ஜுவைரியாவின் சம்மதத்தின் பின்பே நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவை மணமுடித்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

//ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// என்ற தருமியின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. ஜுவைரியாவுக்கு துளியும் அநியாயம் இழைக்கப்படாத நிலையில் ஜுவைரியாவுக்காக தருமியின் மனம் கஷ்டப்படுகிறதென்றால் - மன்னிக்கவும், ''பிறர் நன்றாக வாழ்வதை பொறுக்காத சில மனங்களும் கஷ்டப்படத்தான் செய்யும்'' என்பதை எண்ணிப் பார்ப்பதிலிருந்து என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கேள்வி..

//53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?//

ஜுவைரியாவுக்கும் பொருந்தும்

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?

--------------

//2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.// இந்த செய்தியின் மூலம் தருமி என்ன சொல்ல வருகிறார்?

''ஸைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர் நாம் அவளை உமக்கு திருமணம் செய்வித்தோம். ஏனென்றால் மூஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள். தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாத என்பதற்காக இது நடை பெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

இது பற்றி ஏற்கெனவே முன்பு விளக்கப்பட்டிருக்கிறது.
----------------
இனி தருமியின் மற்ற விமர்சனங்களைத் தொடந்து அவரது ஐயங்களையும் பார்ப்போம்.

ஐயம்: 1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?

தெளிவு: ஆதாமின் - ஆதமின் மனைவியாகிய முதல் பெண்மணியின் பெயர், ''ஹவ்வா'' என்று இஸ்லாம் பெயரிட்டு அழைக்கிறது. (பார்க்க: தமிழ் புகாரி ஹதீஸ் எண், 3330)

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Monday, December 12, 2005

மதமாற்றம் ஏன்? -1

இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் சிந்தனைகள் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றது. பால்ய விவாகம், பலதாரமணம், மற்றும் போர்கள் பற்றியக் குற்றச்சாட்டுகள் என எல்லா விமர்சனங்களும் ஒரே சாயலே. வலைப் பூவில் கடந்த 2004 டிசம்பர் மாதம் தொடங்கிய இஸ்லாத்தைப் பற்றிய விமர்சன வாசிப்பில் இப்போது தருமி என்பவரும் இணைந்துள்ளார்.

''நான் ஏன் மதிய உணவு சாப்பிட்டேன்?'' என்ற தலைப்பில் எவராவது பதிவிட்டால் ''இது என்ன பிரமாதம் அவருக்கு பசித்திருக்கும் அதனால் மதிய உணவு சாப்பிட்டார்'' என்பதை யூகித்துக்கொள்வது பெரிய விஷயமல்ல. அதுபோல் ''நான் ஏன் மதம் மாறினேன்?'' என்ற தருமியின் தலைப்பைப் பார்த்ததும் தாய் மதமோ, தழுவிய மதமோ அவருக்கு பிடித்திருக்காது என்றுதான் சொல்லத் தோன்றும். அதுதான் ஏதார்த்தமான உண்மையும் கூட.

ஆனால் பாருங்கள், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பால்ய விவாகம் செய்து கொண்டதால், என் தாய் மதமாகிய கிறிஸ்த்துவ மதத்திலிருந்து மாறினேன் என்று தருமி சொல்வது - இஸ்லாத்தில் குறைபாடுகள் இருப்பதாக விமர்சித்து, அதனால் கிறிஸ்துவத்திலிருந்து மதம் மாறினேன் என்பது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. (எதற்கு மாறினார் என்பது தனி விஷயம்)

பிற மதவாதிகள், தங்களின் மதம் சார்ந்த விமர்சனங்களை சாதாரணமாக எற்றுக்கொள்வது போல், இஸ்லாத்தை விமர்சித்தால் முஸ்லிம்கள் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது? என்று தருமியே சொல்லிவிட்டு, அவருடைய இஸ்லாத்தின் விமர்சனங்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு - மறந்தும் விட்டது. இப்போது என் கேள்விக்கு பதிலே இல்லை என்று முஸ்லிம்களை சீண்டுகிறார். இங்கே அவர் ஏன் மதம் மாறினார் என்பதன் நோக்கம் மிகத் தெளிவாகவேப் புரிகிறது. மக்காவை - நோக்கித் தொழும் என்னையும் - உலக முஸ்லிம்கள் அனைவரையும் அவமானப்படுத்தி, சபையொழுக்கம் தெரியாத வின்ஸ்டன் என்பவரின் அநாகரிகப் பின்னூட்டத்தை தருமி அனுமதித்து ஆதரித்திருப்பது அவரது உள் நோக்கம் என்ன? என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தருமி அவர்களே மிக்க நன்றி!

ஆயிஷா (ரலி) அவர்களின் பால்ய விவாகத்தையே முதலில் தருமி தொட்டிருப்பதால் அதிலிருந்தே தொடங்குவோம். இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்துபவர்கள், 1420 ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டும்தான் பால்ய விவாகம் செய்து கொண்டார் என்கிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு, அதே கற்பனையிலேயே தங்களின் விமர்சனத்தையும் துவக்குகிறார்கள். பால்ய விவாகம் குற்றமான செயலாகயிருந்திருந்தால் அது அன்றைய சமூகத்தார்களால் எதிர்க்கப்பட்டிருக்கும். (அப்படி எதிர்க்கப்பட்டதாக தகவலிருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்) இந்தியாவில் கடந்த நூற்றாண்டு ஆரம்பம் வரையிலும் பால்ய விவாகம் அங்கீகரிக்கப்பட்டதாகவே இருந்தது.

பால்ய விவாகம்.
குஜ்ஜார் எனும் உயர் ஜாதியைச் சேர்ந்த ராம்கரன் தனது ஒரு வயது மகளை திருமணம் செய்யத் திட்டமிட்ட போது இருகுழந்தைகளுக்கெதிரான கொடுமை என்று குடும்பத்தாரோடு வாதிட்டாள் பன்வாரிதேவி. குடும்பத்தார் கேட்க மறுத்ததும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறாள். காவல் துறை வருவதற்கு முன் கல்யாணம் முடிந்து ஒரு வயது குழந்தை புதுப் பெண்ணாகிறது.

தன் உயர் சமூகம் சார்ந்த உரிமை(?)க்கெதிராக பன்வாரிதேவி புகார் செய்ததால் ஐந்து வெறியர்களால் குதறியெடுக்கப்படுகிறாள் அவள். அந்தக் காமுகர்களுக்கு நீதி மன்றம் விடுதலையளிக்கிறது. பெண் விடுதலைப் பற்றி விவாதித்து சாதனை புரியும் இந்தியாவில் எழுச்சி நூற்றாண்டின் இறுதியில் சில வருடங்களுக்கு முன் நடந்த கொடுமை இது.

கல்வியாளர்களாக மதிக்கப்படும் பிரிட்டிஷார் ஆட்சியின் போது 1828ல் குற்ற நீதி சட்டம் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் அமுல்படுத்தப்பட்டது. அதில் 8வயதுக்கு குறைவான பெண்ணை கற்பழிப்பது தண்டனைக்குரியக் குற்றமென அறிவிக்கப்பட்டது.

8வயதுக்கு மேற்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய வழிவகுத்த அதே வேளையில் 1828ற்கு முன் சட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதையும் இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.

திருத்தப்பட்ட 1844ம் ஆண்டு தண்டணை சட்டத்தில் 8வயதிற்கு குறைவான மனைவியோடு உடலுறவு கொள்வது கற்பழிப்புக் குற்றம் எனக் கூறப்பட்டது. 8வயதைத் தொட்டவுடன் அவளை மனைவியாக்கி சிதைக்கலாம் என்பதுதான் இச்சட்டத்தின் அர்த்தம்.

இந்திய தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி திருமண வயது 10ஆக உயர்த்தப்பட்டது 1860ல் தான். ரக்மாபாய் என்ற சிறுவயது பெண்குழந்தையை எலும்புருக்கு நோயால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்யப்பட்டது. ஓரளவு கல்வி பெற்றிருந்த இந்த குழந்தை மணப்பெண் தன் கணவனோடு உடலுறவிற்கு சம்மதிக்க முடியாது என மறுத்தாள். ஆயிரக்கணக்கான மதவாதிகள் ரக்மாபாய்க்கு எதிராக களமிறங்கினர். அவள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

''மனைவியோடு உடலுறவு கொள்ளும் உரிமை கணவருக்கு உண்டு, இதை மறுக்கும் மனைவி தண்டிக்கப்படுவாள்'' என்று 1877ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வுகளின் பலனாகத்தான் 1891ல் திருமண வயது 12ஆக உயர்த்தப்பட்டது இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், 1928ல் தான் திருமண வயது 16 என்ற நிலையை எட்டியது. (தினமணிக்கதிர் ஆய்வு கட்டுரை 9-97)

இந் நாட்டின் பெண்களுக்கெதிரான கொடுமைகளை முடிவுகட்ட எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் அவை அனைத்தும் நீதிப் புத்தகங்களிலும், வீட்டுக்கு வெளியிலும்தான் காத்துக்கிடக்கின்றன. கசங்கி புதையும் குழந்தைகள் என்னவோ புதைந்து கொண்டுதானிருக்கிறார்கள். பிரபலமான பூலான் தேவிகூட வயதுக்கு வருமுன் 10வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர் என்பதை மறுக்க முடியுமா? கவிபாரதி 7வயது கண்ணம்மாவை கைப் பிடித்ததை மறைக்க முடியுமா?

இந்த நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமையெனில் 1420 வருடங்களுக்கு முன்னால் நிலமை எப்படியிருந்திருக்கும் என்பதை ஆய்வாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆயிஷா(ரலி)யின் திருமணம்.
இருண்டு கிடந்த பிரதேசத்தில் இஸ்லாம் தம் ஒளிக்கதிர்களை வீசத் துவங்கிய கொஞ்ச காலத்தில் வியக்கத்தக்க சீர் திருத்தங்கள் உருவாகத் துவங்கின. கொடுமைகள் வேரறுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பால்ய விவாகம். இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது 53வது வயதில் தம் நெருங்கிய தோழரான அபூபக்கர் சித்தீக் அவர்களின் மகள் ஆயிஷாவைத் திருமணம் செய்கிறார்கள் அப்போது ஆயிஷாவிற்கு வயது ஆறு.

அன்றைய அரபுலகில் பால்ய விவாகம் நடைமுறையிலிருந்த வழக்கமாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் 21வயதில் பாட்டியாகி விடுவார்கள் (புகாரி) என்கிறது வரலாறு. 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகப்பேறு, அந்த மகளுக்கு 9வயதில் திருமணம் 10 அல்லது 11வயதில் மகளுக்கு மகப்பேறு இப்படி அந்தக்காலத்துப் பெண்கள் மகள் வழி பாட்டி என்ற உறவு அந்தஸ்தை 21வயதிலேயே பெற்றுவிடுவார்கள்.

அன்றைய நடைமுறை வழக்கில்தான் முஹம்மது (ஸல்) ஆயிஷா (ரலி) திருமணம் நடக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் செய்த பால்ய விவாகமாகட்டும் அல்லது நான்குக்கு மேற்பட்ட திருமணமாகட்டும் இது அவருக்கு மட்டுமே உள்ள தனி சலுகையாகும். திருக்குர்ஆன், 33வது அத்தியாயத்தின் 50வது வசனத்தில்..

''இது மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்கின்றி உமக்கு மட்டும் உரியது'' என்று இறைவன் கூறுகிறான்.''

இஸ்லாத்தில் பால்ய விவாகம் உண்டு, இது கொடுமை என்று மீடியாக்களும், அறிவு ஜீவிகளும் கூறுவது போல், ஆம் உண்டுதான். இது இறைத்தூதருக்கு மட்டும் இறைவன் அனுமதித்த சட்டம். இஸ்லாத்தில் மற்றெவருக்கும் பால்ய விவாகம் அனுமதி இல்லை.

நபியை மணந்த ஆயிஷா (ரலி)யின் வாழ்க்கையில் சிறு கீறல்கூட இல்லாமல் மிக்க மகிழ்ச்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லியே வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. ஆனாலும் தருமி போன்றவர்கள் புகுந்து இது கொடுமையென்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பதுதான் மிகக் கொடுமை. 53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த பால்ய விவாகத்திற்கும் தருமி மதமாறியதற்கும் என்ன சம்பந்தம்?

(மற்றவை அடுத்த பகுதியில் வளரும் இன்ஷா அல்லாஹ்)

Saturday, December 03, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-4

இந்தியாவிற்கு தலைவலி அளித்த சமஸ்தானங்கள்.
ஜுனேகாத், ஹைதராபாத், காஷ்மீர்


ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பகுதிகள் இருந்தன. இப்பகுதிகளில் மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவை சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இந்த சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத சுயாட்சிப் பெற்ற பகுதிகளாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் பேரரசின் உத்தரவுகளுக்கு அவ்வப்போது கீழ்படியும் நிலையில்தான் அவை இருந்தன.

இதுபோன்ற ஒரு சமஸ்தானமாகத்தான் ஜம்மு - காஷ்மீர் விளங்கியது. ஹரிசிங் (முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங்கின் தந்தை) ஜம்மு - காஷ்மீரின் மகாராஜாவாக இருந்தார்.
1947ல் இந்தியாவிற்கு விடுதலையளிக்க முன் வந்தபோது இந்தியா துணைக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையுடன் வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து பாகிஸ்தான் உருவாக்கப்படும் என்றும். முஸ்லிமல்லாதார் மிகுதியாக வாழும் பகுதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவாக உருவாக்கப்படும் என்பதே ஆங்கிலேயர்களின் திட்டமாகும். சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் தங்களது பகுதிகளை இந்தியாவுடனோ, அல்லது பாகிஸ்தானுடனோ அவர்கள் ஆளும் பகுதியின் பூகோள, மக்களின் மத நம்பிக்கை மற்றும் விருப்பப்படி இணைப்பதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள்.

இதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனே இணைந்தன. ஆனால் மூன்று மாகாணங்களின் மகாராஜாக்கள் மட்டும் தங்கள் பகுதியை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைப்பதைத் தவிர்த்து காலம் கடத்தி வந்தார்கள். இவர்களில் ஒருவர் ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தின் மகாராஜா ஹரிசிங், மற்றவர் ஜுனேகாத் சமஸ்தானத்தின் (இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) மகாராஜா, இன்னொருவர் ஹைதராபாத் நிஜாம் ஆவார். இவர்கள் மூவரும் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் சமஸ்தானங்களை இணைப்பதை தள்ளிப் போட்டு வந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜா ஹரிசிங் இந்துவாக இருந்தார். ஆனால் அவரது சமஸ்தானத்தில் வாழ்ந்த மக்களின் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருந்தனர். ஜுனேகாத் ஆட்சியாளரான நவாப் முஸ்லிமாக இருந்தார் அவரது அட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ஹிந்துக்களாக இருந்தனர். இந்த இரண்டு சமஸ்தானங்களும் பூகோள ரீதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு நடுவே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்று சமஸ்தானங்களுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து நிர்ப்பந்தங்கள் வந்தன. இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்தங்களும் சமஸ்தானங்களின் அரசர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஜுனேகாத் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்கள் ஆவர். ஆட்சியாளர் முஸ்லிமாவார். இந்தியாவுடன் இணைவதற்கான இணைப்பு ஒப்பந்த ஆவணத்தை இந்திய அரசின் மாநிலங்கள் துறை ஜுனேகாத் நவாபிற்கு அனுப்பி வைத்தது. நவாபிடமிருந்த எவ்வித பதிலும் வராததால், ஆகஸ்ட்,12. 1947ல் உடனடியாக இணைப்பு ஆவணம் குறித்து பதில் தருமாறு மத்திய அரசு கோரியது. இந்த ஆவணம் பரிசீலனையிலுள்ளது என்று ஜுனேகாத்தின் திவான் ஷா நவாஸ் பூட்டோ பதிலளித்தார். ஆகஸ்ட்,13ல் ஜுனேகாத்தில் குடிமக்கள் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு இரண்டு நாள் கழித்து ஆகஸ்ட் 15 அன்று ஜுனேகாத்தின் ஆட்சியாளர் பாகிஸ்தானுடன் இணைவதாக அறிவித்தார்.

ஜுனேகாத் ஆட்சியாளரின் இம்முடிவு இந்தியாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பூகோள ரீதியில் ஜுனேகாத் இந்தியாவுடன் நெருங்கி இருந்த போதிலும், அதன் மக்கள் தொகையில் 80 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாக இருந்தும், ஜுனேகாத் மக்களில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைப்பை விரும்பிய போதினும் ஜுனேகாத் பாகிஸ்தானுடன் இணைந்தது சமஸ்தான இணைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாணது என்று பாகிஸ்தானிடம் இந்தியா புகார் கூறியது. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஜுனேகாத்திற்கு அனுப்பப்பட்டது. பிறகு அங்கு வாழும் மக்கள் இணைய விரும்புவது இந்தியாவுடனா? அல்லது பாகிஸ்தானுடனா? என்பதையறிய மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜுனேகாத் மக்கள் இந்தியாவுடன் சேர பெருமளவில் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து ஜினேகாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்தியா விடுதலையடைந்த போது இந்தியாவுடன் இணைய மறுத்த இன்னொரு சமஸ்தானம் ஹைதராபாத்தாகும். ஹைதராபாத் சமஸ்தானம் நிஜாமின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவரது குடிமக்களில் 88 சதவிகிதத்தினர் ஹிந்துக்களாவர். சுதந்திரம் பெற்ற தனிநாடாக வேண்டுமென்பது தான் நிஜாமின் விருப்பமாகும் மக்கள் விருப்பத்தை அறிய பிரிட்டிஷ் அதிகாரிகள் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலையாகும். இதற்கு இத்திஹாதுல் முஸ்லிமின் என்ற முஸ்லிம்களின் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் இணைவதற்கு நிஜாமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்தியா தங்கள் சுயாட்சியில் தலையிடுவதாக ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நிஜாம் புகார் செய்தார்.

செப்டம்பர் 1947ன் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டது. செப்டம்பர் 9ல் போலீஸ் நடவடிக்கை என்ற பெயரில் இந்திய படைகள் ஹைதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. செப்டம்பர் 13ம் தேதி ஹைதராபாத் கலகத்தை இந்திய ராணுவம் அடக்கியது. நிஜாமின் அமைச்சரவை ராஜினாமா செய்தது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது. இதன் பிறகு காஷ்மீர் மட்டுமே தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருந்தது.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்

Friday, November 25, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-3

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காஷ்மீர் மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் அளித்த வாக்குறுதி:

இந்திய பாராளுமன்றத்தில் பிப்ரவரி 12.1951ல் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:

''காஷ்மீர் மக்களுக்கும் இதோடு கூடவே ஐக்கிய நாடுகள் சபைக்கும் நாம் வாக்குறுதி அளித்துள்ளோம். நாம் முன்பும் அதில் உறுதியாக இருந்தோம். இன்றும் உறுதியாக இருக்கின்றோம். காஷ்மீர் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

செப்டம்பர் 11.1951ல் இந்திய பிரதமர் நேரு ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதம்:

காஷ்மீர் இந்தியாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா? என்ற கேள்விக்கு பதில் - ஐ.நா. சபையின் கண்காணிப்பில் ஜனநாயக முறையிலான - சுதந்திரமான - சார்பற்ற வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படுவதன் மூலமே முடிவு செய்ய முடியும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை இந்திய அரசாங்கம் மீண்டும் உறுதி செய்கிறது. ஆனால் அத்தகைய ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான சூழ்நிலைகள் கூடிய விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு ஆவலுடன் உள்ளது''

ஜூன் 16.1952ல் இந்திய பாராளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவின் அறிக்கை:

முறையான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு ''நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை'' என காஷ்மீர் மக்கள் கூறுவார்களானால், எங்களுக்கு அது வருத்தமாக இருப்பினும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே உள்ளோம். நாங்கள் அவர்களுக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப்போவதில்லை''

பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய பிரதமர் நேரு அனுப்பிய தந்தியில் பின்வருமாறு கூறுகிறார்:

''இத்தகைய அவசரக் காலக்கட்டத்தில் காஷ்மீருக்கு நாங்கள் உதவுவது, அப்பிரதேசம் இந்தியாவுடன் இணைவதற்காக செய்யப்படும் நெருக்குதல் அல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாங்கள் தொடர்ந்து வெளிப்டையாக தெரிவித்து வருகின்ற கருத்து என்னவென்றால், ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமோ அல்லது மாநிலமோ இணைய வேண்டுமானால் அம்மக்களின் விருப்பத்தின் பேரில் தான் அது நடக்க நடைபெற முடியும் என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்'' (தந்தி எண் 402, அக்டோபர், 27,1947)

பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இன்னொரு தந்தியில் நேரு கூறினார்:

''மஹாராஜா அரசின் வேண்டுகோளின்படியும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலத்தின் செல்வாக்கு மிக்க கட்சியின் கோரிக்கையின்படியும் தான் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதுவும் கூட சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டவுடன் காஷ்மீர் மக்கள் தான் இணைப்பைப் பற்றி முடிவு செய்வார்கள் என்ற நிபந்தனையுடன் தான் சம்மதிக்கப்பட்டது. எந்த நாட்டுடன் (இந்தியா அல்லது பாகிஸ்தான்) இணைந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு திறந்தே உள்ளது'' (தந்தி எண், 255, அக்டோபர் 31.1947ல் நேரு)

அனைத்திந்திய வானொலி மூலமாக நவம்பர் 2, 1947ல் நேரு நாட்டு மக்களுக்கு கூறிய செய்தி:

பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே காஷ்மீர் மக்களுக்கு முழு வாய்ப்பினை அளித்திடாமல் எதையும் இறுதி செய்யக்கூடாது என்ற நிலையில் நாம் உள்ளோம். அவர்கள் தான் இறுதியாக முடிவு செய்ய வேண்டும். ஒரு பிரதேசம் எந்த நாட்டுடன் இணைவது என்ற சர்ச்சை எழும் பொழுது, எதில் இணைவது என்பதைப் பற்றிய முடிவை அப்பிரதேச மக்கள் தான் மேற்கொள்ள வேண்டும் - இது தான் நமது கொள்கை இக்கொள்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரை இணைத்து ஒப்பந்தத்தில் ஒரு விலக்குப் பிரிவையும் சேர்த்துள்ளோம்.''

நவம்பர் 3, 1947ல் நாட்டு மக்களுக்கு ஒலிபரப்பிய இன்னொரு செய்தியில் நேரு கூறினார்:

''காஷ்மீரின் தலைவிதியை அம்மக்கள் தான் இறுதியாக முடிவு செய்யவேண்டும் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இவ்வுறுதி மொழியை காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகிற்கே நாம் அளித்துள்ளோம். இதிலிருந்து பின் வாங்க மாட்டோம், பின் வாங்கவும் முடியாது''.

பாகிஸ்தான் பிரதமருக்கு நவம்பர் 21,1947 தேதியிட்ட கடிதத்தில் நேரு எழுதியதாவது:

அமைதியும் ஒழுங்கும் ஏற்பட்ட பிறகு ஐ.நா. சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கருத்துக் கணிப்பின் மூலமாகவோ அல்லது வாக்கெடுப்பின் மூலமாகவோ காஷ்மீரின் இணைப்பு முடிவு செய்யப்பட வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்''.

ஆகஸ்ட் 7, 1952ல் இந்திய பாராளுமன்றத்தில் நேரு கூறியதாவது:

''மக்களின் விருப்பம் மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் தான் காஷ்மீரின் எதிர்காலம் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை நாம் ஏற்கின்றோம் என்பதை நான் தெளிவாக கூறிக் கொள்கிறேன்.

இப்பாராளுமன்றத்தின் விருப்பமும் நன்னம்பிக்கையும் இப்பிரச்சனையில் முக்கியத்துவம் இல்லாதது. இதற்குக் காரணம் காஷ்மீர் பற்றிய பிரச்சனையை முடிவு செய்யும் பலம் இப்பாராளுமன்றத்திற்கு இல்லை என்பதனால் அல்ல, அத்தகைய ஒரு திணிப்பை இப்பாராளுமன்றம் கொண்டுள்ள கொள்கைக்கு எதிரானது''.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்

Tuesday, November 22, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-2

 
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை - ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது?

''இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்'' என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட்பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.

ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது?

ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா?

''எந்த நாட்டுடனும் இணையமாட்டேன். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும்''

''அது சரிதான்.. ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு'' என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.

மறுபுறம் ஜம்மு-காஷ்மீரை தமது நாட்டுடன் இணைப்பதற்கு ராஜாவை சம்மதிக்கச் செய்ய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தானின் ஜெனரல் ஜின்னாவும் படு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் இப்படி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது ரகசியமாக.

பாகிஸ்தான் பதான் வகுப்பைச் சேர்ந்த போர் குணமுள்ள பழங்குடியினருக்கு ஆயுதம் அளித்து காஷ்மீரைக் கைப்பற்ற ஏவி விட்டது. பாகிஸ்தான் அரசு அவர்களை வழி நடத்திச் செல்ல ராணுவ வீரர்களும் அவர்களுடன் அனுப்பப்பட்டனர். தலை நகரான சிரீநகரை நோக்கி அனைவரும் விரைந்தனர்.

இந்த ஆக்கிரமிப்பான அணிவகுப்புப் புறப்பட்டு 48 மணி நேரம் கழித்த பிறகுதான் இந்திய அரசுக்கு இது பற்றியத் தகவல் கிடைத்தது. பிரதமர் நேரு துரிதமாக முடிவெடுத்தார் இந்திய அதிகாரி வி.பி.மேனன் டெல்லியிலிருந்து விமானத்தில் பறந்து சிரீநகரை அடைந்தார்... ராஜா ஹரிசிங்கைச் சந்தித்தார்.

''பாகிஸ்தானின் படை வந்து கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறீர்கள்?''

''நீங்கள் சொல்வதைச் செய்கிறேன், என்னைக் காப்பாற்றுங்கள்''

''ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு நீங்கள் சம்மதித்தால், உங்களை இந்திய அரசு காப்பாற்றும்''

''சம்மதிக்கிறேன்''

''சரி ஜம்மு நகரில் உள்ள உங்களது குளிர்கால அரண்மனைக்கு நீங்கள் உடனே சென்று விடுங்கள். நான் டெல்லிக்கு சென்றுவிட்டு, ஜம்மு நகருக்கு நாளை வருகிறேன்'' வி.பி. மேனன் டெல்லிக்குப் பறந்தார்.

ராஜா ஹரிசிங் ஜம்மு நகருக்கு விரைந்தார் - நூற்றுக் கணக்கான வண்டிகள் புடைசூழ. அந்த வண்டிகளில் தங்கமும், வைரமும் வைடுரியமும் நிரம்பி வழிய ஆயுதமேந்திய மெய்க் காவலர்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க! டெல்லிக்குச் சென்று வி.பி.மேனன் நேருவை சந்தித்து விட்டு, உடனே ஜம்மு நகருக்கு மீண்டும் பறந்து வந்தார். ராஜா ஹரிசிங்கிடம் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினார். ராஜா ஹரிசிங் கையெழுத்திடடார்.

''ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தை ஆளும் சிரீமான் இந்திர மஹேந்திர ராஜ ராஜேஸ்வர மஹா ராஜாதி ராஜ சிரீ ஹரிசிங் ஆகிய நான், எனது ராஜ்யத்தை இந்தியாவுடன் இணைக்கிறேன். ராணுவம், வெளிநாட்டு உறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்திய அரசின் முழு அதிகாரத்தை ஏற்கிறேன் என்பதை இதன் மூலம் அறிவித்து ஒப்பந்தம் செய்கிறேன்.

ஹரிசிங்
மஹா ராஜாதி ராஜா

ஜம்மு - காஷ்மீர் ராஜ்யம் ஒப்பந்தப் பத்திரம் டெல்லிக்குச் சென்றது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கையெழுத்திட்டார்.

''இந்த ஒப்பந்தத்தை நான் ஏற்கிறேன்..''

மவுண்ட்பேட்டன்
கவர்னர் ஜெனரல்
இந்தியா
நாள்: 1947 அக்டோபர் 27

அன்றே இந்தியப் படைகள் சிரீநகர் சென்றன, சண்டை நடந்தது. போர் பிரகடனம் செய்யாமலேயே பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்துடன் போரிட்டது. போர் நடந்து கொண்டிருந்தபோதே 1948ம் ஆண்டு ஜனவரி 1ல் இந்திய அரசு ஐ.நா. சபையில் முறையிட்டு மனு அளித்தது.

பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜம்மூ காஷ்மீரின் மிகப் பெரிய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ்வும் வேண்டுகோள் விடுத்தார். எனவே ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் இந்தியா அரசு முடிவு செய்தது.
எனினும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய உடனே, இணைப்புத் தொடர்பாக சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.

இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு - காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு - காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும்.. அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும்.. அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. வடக்கில் உள்ள பகுதி 'பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர்' (P O K -pakistan Occupied kashmir) என்று குறிப்பிப்படுகிறது.

அந்தப்பகுதியை 'சுதந்திரக் காஷ்மீர்' என்று பாகிஸ்தான் குறிப்பிட்டு அங்கு ஒரு பொம்மை அரசையும் பாகிஸ்தானே அமைத்து நடத்தி வருகிறது.

இந்தியப் பகுதியில் உள்ள ஜம்மு - காஷ்மீரில் 1947ம் ஆண்டில் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதாக ராஜா ஹரிசிங் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 1953ம் ஆண்டுவரை ஜம்மு - காஷ்மீர் பிரதமராக ஷேக் அப்துல்லாஹ் நீடித்தார். அநேகமாக இந்தியாவிலேயே முதன் முறையாக நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து உபரி நிலங்களை நஷ்டஈடு இன்றிக் கைப்பற்றி ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.
எனினும், அவ்வப்போது காஷ்மீரின் 'சுதந்திரம்" பற்றிப் பேசியது இந்திய அரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.

திடீரென்று ஒருநாள், 1953 ஆகஸ்ட் 7 இரவு ஷேக் அப்துல்லாஹ் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார்! ஜம்மு காஷ்மீரின் துணைப் பிரதமர் பக்ஷிகுலாம் முகம்மது பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

ஓரிரு முறை விடுதலையானலும் மீண்டும் மீண்டும் ஷேக் அப்துல்லாஹ் சிறையிலிடப்பட்டார்.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விடுதலை செய்து, காஷ்மீரின் முதலமைச்சராக்கினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. ஷேக் அப்தல்லாஹ்வின் மரணத்துக்குப் பின் அவரது மகன் ஃபருக் அப்துல்லாஹ் முதலமைச்சரானார். அவரது மைத்துனர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே ஃபருக் அப்துல்லாஹ்வைக் கவிழ்த்து குலாம் முகம்மது ஷாவை முதலமைச்சராக்கினார் இந்திரா காந்தி!

இது போன்ற அலங்கோலங்கள் ராஜீவ் காந்தி ஆட்சியிலும் தொடர்ந்தன.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஜம்மு - காஷ்மீரில் தொடங்கிய கவர்னர் ஆட்சி இப்போது ஜனாதிபதி ஆட்சியாகத் தொடர்ந்து நீடிக்கிறது இதனால் ஜம்மு - காஷ்மீரின் மக்கள் வெறுப்படைந்து வந்தார்கள். மக்களின் ஆதரவைப் பெறாத ஆட்சியாளர்கள் சகிக்க முடியாத ஊழல் முடை நாற்றம், விவசாயம், தொழில் நசிவு, வறுமை, வேலையின்மை அதிகரிப்பு, போராட்டங்கள் மீது அடக்குமுறை-

-தீவிரவாதம் வளர்ந்தது, வலுப்பெற்றது!

தீவிரவாதத்தை ஒடுக்க அரசுக்குத் தெரிந்த ஒரே வழி ராணுவ அடக்குமுறை!
விளைவு! ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டால் பத்து தீவிரவாதிகள் உருவாகிறார்கள்.

அடக்கு முறையையும், சித்ரவதையையும் அனுபவிக்கும் மக்கள் நாளுக்கு நாள் தீவிரவாதிகளின் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், அடக்கு முறையும் அதிகரித்து வருகிறது.

இதற்குத் தீர்வுதான் என்ன?

ராணுவ நடவடிக்கை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயலும் போக்கை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். தீவிரவாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் அரசு உடனடியாகப் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். இது மட்டுமே தீர்வுக்கான உண்மையான தொடக்கமாக அமையும்.

இரா.ஜவஹர்
நன்றி: ஜுனியர் போஸ்ட் 30.10.1992

Thursday, November 17, 2005

காஷ்மீர் ஓர் பார்வை-1

காஷ்மீர் - இந்தியாவின் மேற்கே உச்சத்தில் அமைந்துள்ள ஒரு சொர்க்க பூமி. காஷ்மீரைப் பற்றி நினைக்கும் எவரது உள்ளத்திலும் பனித் தென்றல் வீசும். அதன் வரலாற்றை படிக்கும் போது அந்த பனித் தென்றலுடன் இரத்த வாடையும் சோகமும் சுமையும் மனதை கவ்விக் கொள்ளும். வெகுளித்தனமும் வெள்ளை மனதும் கொண்ட காஷ்மீரத்து மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கள் வெகுளித்தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான். சொந்த பூமி கண்முன்னே சூறையாடப்படுவதையும் - தம் மக்கள் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்படுவதையும் பார்த்துப் பார்த்து உறைந்து போன மக்கள் சுய போராட்டம் ஒன்றே தீர்வு என்றெண்ணி ஆயுதமேந்தத் தயாராகி விட்டார்கள். விளைவு இந்தியா - பாகிஸ்தான் - உள்நாட்டுப் போராளிகள் என்று முத்தரப்பு பிரச்சனைகளில் அந்த மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

காஷ்மீர் அதன் வரலாறு என்ன? அங்கு என்ன நடந்தது. ஆரம்பத்தில் தனிநாடாக சுய அதிகாரத்துடன் விளங்கிய நாடு இன்றைக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதேன். போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் முகமாக இங்கு கட்டுரைகள் தொகுக்கப்படுகிறது.

வரலாற்றுத் துணுக்குகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரைகள் காஷ்மீரின் சொந்த - சோகக்கதையை எடுத்துக் காட்டும் முயற்சியின் சிறுதுளியாகும். நான் படித்ததை இங்கு பதிந்து வைக்கிறேன்.

அன்புடன்
அபூ முஹை


காஷ்மீரின் வரலாற்றை நான்கு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதலாவது காலக்கட்டத்தில் உள்ளூர் அரசர்கள் காஷ்மீரை ஆட்சி செய்து வந்தார்கள். இந்த காலக்கட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் இந்தியாவிலிருந்து வந்த ஆட்சியாளர்கள் காஷ்மீரை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார்கள் வேறு சந்தர்ப்பங்களில் காஷ்மீர் ஆட்சியாளர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இந்தியா மற்றும் மத்திய ஆசியா வரை தங்கள் ஆளுகையை நீடித்துக் கொண்டார்கள்.

இந்த காலக்கட்டத்தில் தான் அசோகரின் ஆட்சியும் காஷ்மீரில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் நிலைநாட்டப்பட்டது. இந்த ஆட்சியின் போதுதான் காஷ்மீரில் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி முதலாம் நூற்றாண்டில் கனிஷ்கரின் ஆட்சியின் போது பெளத்தம் காஷ்மீரில் மேலும் வலுவடைந்தது. ஆனால் அதற்கு பிறகு காஷ்மீரில் உள்ளூர் ஆட்சியாளர்களின் கரம் மேலோங்கி பெளத்தம் அழிக்கப்பட்டு பிராமணியத்திற்கு புத்துயிர் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் காலக்கட்டம் தொடங்கிய ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 'ஹன்' இனத்தவர் காஷ்மீரைக் கைப்பற்றினர். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் உள்ளூர் ஆட்சியாளர் வசமே காஷ்மீர் மீண்டது.

ஆனால் மிக விரைவிலேயே உஜ்ஜைன் சாம்ராஜ்யத்தின் மேலாண்மையை காஷ்மீர் ஏற்றுக்கொண்டது. உஜ்ஜைனில் உள்ள விக்கிரமாதித்தவர்களின் ஆட்சி பலவீனம் அடைந்தபோது காஷ்மீர் உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆளுகைக்கு வந்தது.

ஏழாம் நூற்றாண்டில் துர்லபாவிர்தனா என்ற ஆட்சியாளர் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். கி.பி. 855ல் உட்பாலா சாம்ராஜ்யம் கர்கோட்ட சாம்ராஜ்யத்தை அகற்றிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு தந்த்ரின், யாஷ்காரா, பார்வா குப்தா பரம்பரையினர் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தனர். குப்தா மன்னர் ஒருவரின் விதவையான தித்தா எனபவர் கி.பி. 1003 வரை ஆட்சி செய்தார். இதன் பிறகு லோஹாரா பரம்பரை ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் மூன்றாம் காலக்கட்டம் தொடங்கியது.

14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஷ்மீர் மீது தார்த்தாரியர்கள் தாக்குதல் தொடுத்தார்கள். இந்த தாக்குதலை சமாளிப்பதற்காக காஷ்மீர் அரசரின் தளபதி இரண்டு நபர்களின் உதவியைக் கோரினார். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மேற்கில் இருந்த ஸ்வாத் பகுதியைச் சேர்ந்த ஷமீர். மற்றொருவர் காஷ்மீரின் கிழக்கே இருந்த திபெத்தைச் சேர்ந்த ரைன்ஷன் ஷா.

தார்த்தாரியர்களின் படையெடுப்பை இவர்கள் வெற்றிகரமாக முறியடித்தார்கள். காஷ்மீர் தளபதியின் மகள் குத்தாராணியை ரைன்ஷன் ஷா மணமுடித்துக் கொண்டார். அதன் பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை சத்ருத்தீன் என்று மாற்றிக்கொண்டார். இவரது மதமாற்றம் குறித்து வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடும்போது -

- காஷ்மீரில் இருந்த ஏதாவது ஒரு மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தை ரைன்ஷன் ஷா உணர்ந்தார். இந்து மதத்தின் எந்தவொரு சாதி பிரிவும் தன்னை ஏற்றுக்கொள்ளாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவரால் இந்து மதத்தை தேர்ந்தெடுக்க இயலவில்லை. ஒருநாள் புல்புல்ஷா அதிகாலையில் தொழுவதை கண்டார். அந்த வழிபாட்டு முறை அவரைக் கவர்ந்ததால் ரைன்ஷன் ஷா இஸ்லாத்தைத் தழுவினார்''

(ஆதாரம்: valley of Kashmir, Lawrence, pege 190 as quoted in Sisit Gupta's Kashmir, A Study of India - Pakistan Relations)

கி.பி 1346ல் சத்ருத்தீனின் மரணத்திற்கு பிறகு ஸ்வாத்தைச் சேர்ந்த ஷாமீர் ஷம்சுத்தீன் என்ற பெயரில் காஷ்மீரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். 1586ல் அக்பரின் ஆட்சியின்போது முகலாயப் பேரரசின் கீழ் காஷ்மீர் வரும்வரை ஷம்சுத்தீனின் பரம்பரையினரே காஷ்மீரின் கீழ் ஆட்சியாளராக வந்தனர்.

சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட்சி காஷ்மீருக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது என்றும் முகலாய நிர்வாக முறை கிராமங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. என்றும் வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடுகிறார்.

கி.பி 1757ல் காஷ்மீர் ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது அஹ்மது ஷா துரானி காஷ்மீர் ஆட்சியாளர் ஆனார். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லாகூரை தலைமையகமாகக் கொண்டு சீக்கியர்களின் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. கி.பி 1819ல் ரஞ்சித் சிங் என்று சீக்கிய ஆட்சியாளர் காஷ்மீரை ஆக்கிரமித்தார். இதன் பிறகு காஷ்மீர் வரலாற்றின் நான்காம் காலக்கட்டம் தொடங்கியது.

சுபராவின் யுத்தத்தில் ஆங்கிலேயர்களிடம் சீக்கியப்படைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பஞ்சாப், காஷ்மீர் உட்பட சீக்கியர்களின் ஆளுகையின்படி இருந்த அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் சிங்கின் அமைச்சரவையில் இடம் பெற்று பின்பு ஜம்முவின் ஆளுனராகவும் இருந்த குலாப் சிங்கிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே அமிர்தரஸில், 15.03.1846ல் ஒரு உடன்பாடு கையொப்பமானது. இதன்படி குலாப்சிங்கிடம் ரூபாய், 75 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு காஷ்மீரை அவருக்கு ஆங்கிலேயர் விற்றனர்.

இதன் விளைவாக காஷ்மீரின் சுயேட்சையான மகாராஜாவாக குலாப்சிங் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டார். குலாப்சிங் 1857ல் மரணமடைந்தார். இதன் பிறகு இவரது மகன் ரன்பீர்சிங் (1857 - 1885) ஆட்சிக் கட்டில் ஏறினார். 1885ல் இவரது மகன் பிரதாப்சிங் வசம் ஆட்சி சென்றது. 1925ல் பிரதாப்சிங்கின் மரணத்திற்கு பிறகு அவரது உறவினர் ஹரிசிங் மகாராஜாவாகப் பொறுப்பேற்றார். இந்தியா விடுதலை அடைந்த பிறகும் இவர் காஷ்மீரின் மன்னராக 1948 வரை நீடித்தார். குலாப்சிங் முதல் ஹரிசிங் வரை காஷ்மீரை ஆண்ட குடும்பத்தினரின் ஆட்சி டோக்ரா பரம்பரை ஆட்சி என்று அழைக்கப்படுகிறது.

குலாப்சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த டோக்ரா ஆட்சியாளர்களும் காஷ்மீரை சர்வாதிகார முறையில் கொடுங்கோன்மையாக ஆட்சி செய்து வந்தனர். காஷ்மீரில் நிலவிய இந்த மன்னர் ஆட்சியின் கீழ் வாழ்ந்த மக்களில் 80 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் ஹரிசிங்கின் கொடுங்கோன்மையான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிகள் செய்து வந்தனர். 1931ல் நடைபெற்ற பெரும் மக்கள் கிளர்ச்சியை ஹரிசிங் இரும்புக்கரம் கொண்டு நசுக்கினார். 1932ல் முதன் முதலாக காஷ்மீரில் ஒரு அரசியல் கட்சி ஷேக் அப்துல்லாஹ்வால் உருவாக்கப்பட்டது. இந்த கட்சிக்கு அப்போது ''அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி'' என்று பெயரிடப்பட்டது. பிறகு 1939ல் ''தேசிய மாநாடு கட்சி'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மக்கள் கிளர்ச்சி பெருகிடவே ஹரிசிங் 1934ல் சட்டப்பேரவை அமைக்க ஒப்புக் கொண்டார். ஆனால் முழுமையான ஜனநாயக நெறிமுறைப்படி இந்த சட்டப்பேரவை அமைக்கப்படவில்லை. 75 பேர் கொண்ட இந்த சட்டப்பேரவையில் 35 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். மக்களில் 6 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கும், சொத்துரிமையுள்ளவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இவ்வாறு அமைக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு ஆலோசனைகள் கூறும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டது.

1939ல் மேலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அமைச்சரவை ஏற்படுத்தவும், நீதித்துறை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டது. ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தின் பெரும்பகுதி மகாராஜா வசமே இருந்தது. இருப்பினும், காஷ்மீரில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மகாராஜா ஹரிசிங் மீது அதிருப்தியுடன் தான் வாழ்ந்து வந்தனர். இச்சூழலில் தான் இந்தியாவிற்கு விடுதலையளிக்கவும், விடுதலைப் பெற்ற இந்தியாவை இரண்டு நாடுகளாகப் பிரிக்கவும் ஆங்கிலேய அரசு முடிவு செய்தது.

நன்றி: ஒற்றுமை ஆகஸ்ட் 01-15,2001 இதழ்

Monday, October 31, 2005

ரமளான், தீபாவளி வாழ்த்துக்கள்!

ரமளானை வாழ்த்தி வழியனுப்புவோம்.


நோன்பு, ஹஜ் இரு பெருநாட்கள்.


நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், புரைதா (ரலி) நூல்கள்- திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்- அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

இன்றைய தினம் நாம் முதலில் தொழுகையை துவங்குவோம் பின்னர் அறுத்துப்பலியிடுவோம் இவ்வாறு செய்பவர் நபிவழியில் இருப்பவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், பரா (ரலி) நூல்- புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிக்கும் நபித்தோழர், ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி.

நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்- அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்- முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், உமர் (ரலி) நூல்- திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஜாபிர் (ரலி) நூல்- முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்த சிருமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாட்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிக்கும் அன்னை, ஆய்ஷா (ரலி) நூல்- புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிக்கும் அன்னை, ஆய்ஷா (ரலி) நூல்- புகாரி.

அனைத்து சகோதரர்களுக்கும் என் மனம் நிறைந்த நோன்புப் பெருநாள், மற்றும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, October 19, 2005

பெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத்.

பெருநாள் தர்மமும் அதன் நோக்கமும்.

பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.

பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாக இருப்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி ''இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்களாக்குங்கள்'' என்றும் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தர்மம் எப்போது வழங்க வேண்டும்..?

பித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படுமுன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்-புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.

நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.

பெருநாள் தர்மத்தின் அளவு எவ்வளவு..?

முஸ்லிமான ஆண்கள் பெண்கள், பெரியவர் சிறியவர், அடிமை சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு 'ஸாவு' என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தனர். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீத் (ரலி) நூல்- புகாரி.

அனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்டவர் நீங்கள் அபூ ஹனீஃபா எனும் பெரியாருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே, என்று கேட்டார் இதைக்கேட்ட அனஸ் (ரலி) அவர்கள் கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த 'ஸாவு' என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி 'இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்' என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய 'ஸாவு' என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. நூல்கள்- தாரகுத்னீ, பைஹகீ.

(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்)

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.

இன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.

அலட்சியமின்றி அனைவரும் பெருநாள் தர்மத்ததை செய்பவர்களாக ஆக வேண்டும்.

Tuesday, October 11, 2005

இஸ்லாம் வழங்கும் இறைத்தூது -1

(இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்வதாகும். இஸ்லாம் அல்லாத இதர மதங்களில் இறைவன் புறத்திலிருந்து செய்திகளை கொண்டு வரும் இறைத்தூதர்கள் பற்றிய உண்மை நிலைகள் கண்டறியப்படவே இல்லை. ஆனால் இஸ்லாம் தனது கொள்கையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக இறைத்தூதர்களையும் அவர்களை அறிந்து கொள்வதின் அறிவு நிலையையும் ஆக்கியுள்ளது. அந்த தூதுத்துவத்தின் நிலைப்பாடு என்ன? அது உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? அதை ஏற்காமல் போனால் ஏற்படும் விளைவுகள் என்ன? இறுதித் தூதராக வந்த முஹம்மத் அவர்களின் பணியின் எல்லைகள் என்ன? இது போன்ற வினாக்களுக்கு அறிவார்ந்த - தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறது இந்தக் கட்டுரை. மறைந்த நல்லறிஞர் அபுல் அஃலா அவர்களின் இக்கட்டுரையின் வழியாக உங்கள் அறிவுக்கு தூது விடுவதில் மகிழ்கிறோம்.)

அனைவரும் அறிவுறுத்திய ஒரே நெறி.

(1) துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமெனக் கருதுகிறேன். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்) அவர்களால் வழங்கப் பட்ட வாழ்க்கை நெறி (தீன்) இஸ்லாம் என்பதும் இக்கருத்தின் அடிப்படையில் அவர்கள்தாம் இஸ்லாத்தை நிர்மானித்தார் என்று கூறுவதும் சரியான கருத்தாகாது.

இறைவனுக்கு மனிதன் முழுமையாக அடிபணிதல் எனும் ஒரே நெறியினைத்தான் தொடக்க காலத்திலிருந்து மனித இனத்துக்கு இறைவன் தொடர்ந்து முறையாக வழங்கினான் என்ற உண்மையை இறைமறை தெளிவாகவும் விரிவாகவும் வலியுறுத்திக் கூறுகிறது இந்நெறியினையே அரபி மொழியில் இஸ்லாம் எனக்கூறப்படுகிறது நூஹ் (அலை) இப்றாஹீம் (அலை) மூஸா (அலை) ஈஸா (அலை) ஆகியோரும் இன்னும் பல இறைத்தூதர்களும் பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப் பட்டார்கள்!

அவர்கள் எல்லோரும் எடுத்துரைத்தது அந்த ஒரே நெறியினைத்தான் அதை விடுத்து வேறு எந்த நெறியினையும் அவர்களில் எவரும் சுயமாக வழங்கியதில்லை. எனவே அத்தூதர்கள்தாம் அந்நெறியினை வழங்கியவர்கள் எனக் கருதுவதும் அக்கொள்கைக்கு கிறிஸ்தவம் மோஸஸ்த்துவம் எனப்பெயரிடுவதும் சரியானதல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு முன் வந்த இறைத்தூதர்கள் வழங்கிய நெறியினை தம்முடைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தெளிவுபடுத்திப் போதிக்க வந்தவர்கள்தாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பம்சங்கள்.

(2) அவ்வாறிருந்தும் ஏனைய நபிமார்களை விட முஹம்மது(ஸல்)அவர்களின் பணியில் பல சிறப்பம்சங்களை காணலாம் அவை பின்வருமாறு:

(அ) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் ஆவார்கள்.

(ஆ) எல்லா இறைத்தூதர்களும் அறிவுறுத்திய அதே நெறியைத்தான் பெருமானார்(ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் மீண்டும் புதுப்பித்தான்.

(இ) பல்வேறு காலங்களிலும் வாழ்ந்த மக்கள் இடைச்செருகல் செய்தும் சுயக்கருத்துக்களைப் புகுத்தியும் மூலக்கொள்கையில் கறைபடுத்தி விட்டனர் இதனால் அது பல்வேறு மதங்களாக உருவெடுத்தது. மூல நெறியான இஸ்லாத்தைக் கறைபடுத்திய இந்த பிற்சேர்க்கைகள் யாவற்றையும் களைந்து அதனைத் தூய்மையான மூலவடிவில் மனித குலத்துக்கு வழங்க இறைவன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பினான்.

(ஈ) முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்பு எந்த நபியும் அனுப்பப் படமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வழங்கப் பட்ட இறைவேதம் எல்லாக் காலத்திற்கும் நின்று வழிகாட்டும் வண்ணம் வார்த்தைக்கு வார்த்தை அதன் மூலமொழியில் பாதுகாக்கப் பட்டுள்ளது. எக்காலத்திலும் மனிதன் அதன் மூலம் அறிவுறை பெறலாம். முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அளித்த அல்குர்ஆன் அன்று முதல் இன்று வரை எவ்வித்ததிலும் ஓர் எழுத்துக்கூட மாற்றமின்றி அப்படியே இருக்கின்றது எனும் உண்மையில் சந்தேகத்துக்கு அறவே இடமில்லை.

குர்ஆன் வசனங்கள்(வஹியாக) அறிவிக்கப் பட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அதை எழுத வைத்து விடுவார்கள். இப்பணி அவர்களுடைய இறுதிமூச்சுவரை நீடித்தது. இவ்வாறு நபி(ஸல்) அவர்களின் வாழ் நாளிலேயே தோழர்களில் சிலர் குர்ஆன் முழுவதையுமோ அதன் பகுதியையோ எழுதி வைத்திருந்தார்கள். பிறகு முதல் கலீஃபாவான அபூபக்கர்(ரலி) அவர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த அச்சுவடிகளை சேகரித்து குர்ஆனை மனனம் செய்திருந்த ஹாபிஸ்களின் உதவியுடன் அவற்றை சரிபார்த்து ஆதாரப்பூர்வமான முழுக் குர்ஆனையும் தொகுக்கச் செய்தார்கள்; பிறகு மூன்றாம் கேந்திரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அன்று முதல் இன்றுவரையுள்ள பதிப்புகளை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் அச்சடிக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளை ஆராய்ந்தால் அவற்றின் எந்தவொரு பிரதியிலும் எவ்வித மாற்றமும் இல்லாதிருப்பதைக் காணலாம்.

இதைத் தவிர பெருமானார்(ஸல்) அவர்கள், தொழுகைக் கடமையாக்கப்பட்ட நாளன்றே தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதவேண்டும் எனும் உத்தரவைப் பிறப்பித்து விட்டிருந்தார்கள். ஆகவே நபித்தோழர் பலர் முழுக் குர்ஆனையோ அதன் சில பகுதிகளையோ நபி(ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே மனனம் செய்திருந்தனர்;. எனவே அக்காலம் முதல் இன்று வரை ரமளான் மாத இரவுத்தொழுகையில் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து ஓதும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.

அகவே வார்த்தைக்கு வார்த்தை குர்ஆன் முழுமையையும் மனனம் செய்திருந்தோர் (ஹபிஸ்கள்) ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு காலத்திலும் இருந்து வருகின்றனர். இவ்வாறு வேறு எந்த வேதமும் ஏடுகளில் பொறிக்கப்பட்டும். உள்ளங்களில் பதிக்கப்பட்டும். இருக்கவில்லை எனவே குர்ஆன் சிறிதளவும் மாற்றப்படாமல் அதன் அசல் வடிவத்தில் இன்றளவும் பாதுகாக்கப்படடிருக்கிது. என்பதில் இம்மியளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

(உ) மேலும் நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவர்களுடைய தோழர்களாலும் அவர்களுக்குப் பின்னால் வரலாற்று ஆசிரியர்களாலும் நிகரற்ற முறையில் பதியப்பட்டு பாதுகாக்கப்பட்டன இவ்வளவு நுணுக்கமாக வேறு எந்த ஒரு நபியின் சரிதமோ ஒரு சரித்திர நாயகரின் வரலாறோ யாராலும் பதிக்கப் படவில்லை;. நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப்பின் இது நபி(ஸல்) அவர்களின் சொல் அல்லது செயல் அல்லது அங்கீகாரம் என்று ஒருவர் கூறினால் அதனை அவர் எவரிடமிருந்து கேட்டறிந்தார் என்ற விபரத்தைக் கட்டாயமாக சொல்ல வேண்டியிருந்தது.

இவ்வாறே எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் இவ்விபரத் தொடர்ச்சி நபி(ஸல்) அவர்களிடம் நேரில் கண்டவர் அல்லது நேரில் கேட்டவர் வரை சென்று முடியும். பின்னர் அதனைக் கூறிய ஒவ்வொருவரின் உண்மை நிலை விரிவாக ஆராயப்படும். அவர் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்தானா என்று தீர்மானிக்கப்படும். இத்தீர்மானத்தின் அடிப்படையில்தான் அது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் என்றே ஏற்றுக்கொள்ளப்படும். இம்முறையில் தான் நபி(ஸல்) அவர்களின் அறிவுறைகள் (ஹதீஸ்கள்) தொகுக்கப்பட்டன. அவற்றை அறிவித்தவர்களின் வரலாறும் எழுதப்பட்டன. இத்தகைய உன்னத முறையில் தயாரிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களின் வரலாறுதான் நம்மிடையே உள்ளது. இத்தகைய ஆதாரப்பூர்வமான தொகுப்புகளிலிருந்து அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் எப்படியிருந்தன என்பதனையும் அவர்கள் அளித்த அறிவுறைகள் எவையெவை என்பதனையும் நாம் இன்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

(ஊ) இவ்வாறு பாதுகாக்கப்பட்ட குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமும் ஒருங்கிணைந்த இணையாக்கம்தான் இறைவன் மனிதனுக்கு வகுத்துத் தந்த அசல் நெறியான இஸ்லாம் என்பது எது, அது நமக்கு எத்தகைய வழிகாட்டுதலை வழங்குகிறது, அது நம்மீது சுமத்துகின்ற கடமைகள் யாவை என்பனவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு நம்பத்தக்க அறிவின் ஊற்றாய் அமைந்துள்ளது.

முஹம்மது நபி(ஸல்) அவர்களே வழிகாட்டி.

(3) முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் சென்று போன நபிமார்கள், அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டவர்களாகயிருந்தாலும், குறிப்பிடப்படாதவர்களாகயிருந்தாலும் சரியே அவர்கள் அனைவரின் மீதும் நம்பிக்கை கொண்டேயாக வேண்டும். இது நமது நம்பிக்கையோடு (ஈமானோடு) பின்னிப் பிணைந்த ஓர் அம்சமாகும். இதனைக் கைவிட நேர்ந்தால் நாம் முஸ்லிம்கள் என்னும் தகுதியை இழந்தவர்களாவோம் ஆனால் வழி காட்டுதல் பெறுவதற்கு முஹம்மது(ஸல்) அவர்களை மட்டும் ஏன் பின்பற்றவேண்டும் என்பதற்குப் பின்வரும் காரணங்களே அடிப்படையாகும்:

(அ) அவர்கள் இறைவன் அனுப்பிய இறைத்தூதர்களுள் இறுதியாக வந்தமையால் இறைவனின் இறுதியான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்தார்கள்.

(ஆ) முஹம்மது(ஸல்) அவர்களின் மூலமாக நமக்கு எட்டிய இறைமொழி தூய்மையானதாகும் மனிதர்களால் கறைப்படுத்தப்படாமல் அதன் மூலவடிவில் அப்படியே பாதுகாக்கப்பட்டதுமாகும். மேலும் அது உயிருள்ள வாழும் மொழியாகும். கோடிக்கணக்கான மக்கள் பேசி, எழுதி புரிந்து கொள்ளும் மொழியாகும். அதன் இலக்கணமும் சொல் வளமும் மரபமைப்பும் உச்சரிப்பும் எழுத்துவடிவமும் அது வெளிப்பட்ட நாளிலிருந்து இதுநாள்வரை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை.

(இ) நான் முன்பே குறிப்பிட்டபடி முஹம்மது(ஸல்) அவர்களின் குணம் நடத்தை வாக்கு செயல் ஆகிய வாழ்வின் அனைத்து அம்சங்களும் முழுமையான வரலாறாக பதிவு செய்யப்பட்டு அதிகக் கவனுத்துடனும் சிறப்பான முறையிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேற்சொன்ன அம்சங்களை ஏனைய நபிமார்களின் வரலாற்றில் காண முடியாது எனவேதான் நாம் அவர்களின் மீது நம்பிக்கை வைக்கிறோம் ஆனால் செயல் ரீதியாக பின்பற்ற முடிவதில்லை.

(வளரும்)

Friday, October 07, 2005

நோன்பின் நோக்கமும், சிறப்பும்.

நோன்பின் நோக்கம்.

பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

''பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.

தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்.

நோன்பின் சிறப்பு!

நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம் திர்மிதி.

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழு நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. ''நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும் நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

சுவர்க்கத்தில் ரய்யான் என்றொரு வாசல் உள்ளது, அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டுமே) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் பின் ஸாஃது (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்: திர்மிதி.

இரத்தம் குத்தி எடுத்தல்.

ஆரம்பத்தில் ஜாஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதற்கு அனுமதியளித்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ''பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்.'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர், ஸாபித் அல் புன்னாணி நூல்: புகாரி.

(மருத்துவ சோதனைக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்)

கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

ஷவ்வால் மாதத்தில் நோன்பு.

யார் ரமளான் மாதத்தில் நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

மாதத்தில் மூன்று நோன்புகள் நோற்கும் மற்றொரு நபிவழி.

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிவிக்கும் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத்தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாட்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

தொடர் நோன்பு கூடாது.

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

மேலும் அடுத்த பகுதியில்..

Thursday, October 06, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-14

இரும்பைப் பொழியும் வானம்! -14


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மானிட சமுதாயம் முதலாவதாகப் பயன்படுத்திய உலோகம் எது என்ற வினாவிற்கு 'தங்கம்' என்ற வியப்பிற்குரிய பதிலைத்தான் நாம் பெறுகிறோம். ஏனைய உலோகங்களைப் போன்று தங்கம் பிற உலோக தாதுக்களுடன் (Minerals) இணைந்து விடாமல் சுத்த நிலையில் கிடைப்பதால் அதைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது எளிது. எனவே முதலாவதாக மானிடப் பயன்பாட்டிற்குள் தங்கம் குடியேறிவிட்டது.

இதற்கடுத்தபடியாக செம்பும், அதன் கூட்டுப் பொருளாகிய (Alloy) வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவை மானிடப் பயன்பாட்டிற்கு வருகின்றன. இதற்கு அடுத்த படியாகத்தான் இரும்பை பயன்படுத்த மனிதன் கற்றுக் கொள்கிறான்.

திருமறை இறங்கிய கால கட்டத்தில் இரும்பின் பயன்பாடு மிகக் குறுகிய எல்லைக்குள் அடங்கியிருந்தது. வெட்டு வாட்கள், ஈட்டிகள், அம்புமுனைகள், போன்ற பண்டைக்கால மக்களின் படைக் கருவிகளும், வெட்டுக் கத்திகள், ஏர்முனைகள் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய விவசாயக் கருவிகள் போன்றவற்றுக்குமே இரும்பைப் பயன்படுத்த மனிதன் அறிந்திருந்தான்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உலகம் அடையப்போகும் இரும்பின் பயன்பாட்டைப் பற்றி வியக்கத்தக்கதோர் முன்னறிவிப்புடன் இறங்கி வருகிறது வான்மறை குர்ஆன். குர்ஆன் கூறுகிறது:

'இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் மனிதர்களுக்கு பெரும் பயன்பாடுகளும் மிக்க வலிமையும் உண்டு' (அல்-குர்ஆனின் 57வது அத்தியாயம் ஸூரத்துல் ஹதீத் 25வது வசனத்தின் ஒரு பகுதி).

ஒரு கட்டை வண்டியாவது இருந்திருந்தால் அதற்குச் சக்கரப் பட்டைகளும், இருசுகளும் செய்வதற்காவது இரும்பு பயன்பட்டிருக்கும். ஆனால் அன்றைய அரேபிய மக்களின் பொருட்களைச் சுமந்தது கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளின் முதுகெலும்பாகும். கேவலம் ஒரு கட்டை வண்டிகூடக் காணக் கிடைக்காத கால கட்டத்தில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதரால் இன்றைய உலகம் அடைந்திருக்கும் இரும்பு எனும் உலோகத்தின் மாபெரும் பயன்பாட்டையும், அதனால் நாம் பெற்றிருக்கும் வியத்தகு பேராற்றலையும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?.

அன்றைய உலகமும், இன்றைய உலகமும் அடைந்திருக்கும் இரும்பின் பயன்பாட்டையும், வலிமையையும் ஒப்பிட்டுக்காட்ட மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எனக் கூறப்படும் அலகெல்லாம் நமக்குப் போதவில்லை. இரண்டு கால கட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதனினும் பெரிது!. அப்படியென்ன பெரிய பயன்பாடும் வலிமையும் இந்த அற்ப உலோகத்தால் நாம் அடைந்து விட்டோம் என்று எந்த நபராலும் வினா எழுப்ப இயலாத அளவிற்கு இந்த அற்ப உலோகம் அனைத்துப் பயன்பாடுகளிலும், வலிமைகளிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதாரப்பட்டு நிற்கிறது.

சான்றாக இக்கட்டுரையை டைப் செய்து கொண்டிருக்கும் கம்யூட்டரின் கீ போர்டு, அதனை பதிந்து கொண்டிருக்கும் ஹார்டு டிஸ்க், அது பதிவதற்கு துணையாக இருக்கும் கம்யூட்டர், அமர்ந்திருக்கும் ஆசனம் போன்ற எந்த ஒன்றுமே இரும்பின் உதவியின்றி தயாரிக்கப்படவில்லை. இக்கட்டுரையை டைப் செய்த பின் - அது 'அல்ஜன்னத்துக்குப் போய்ச் சேரும்வரை இதனோடு தொடர்புடைய அனைத்திலும் இரும்பு. இதைப் படிப்பதற்காக அமர்ந்திருக்கும் உங்களைச் சுற்றி நோட்டமிடுங்கள். அவைகளின் எந்த ஒன்றின் தயாரிப்பிலாவது இரும்பு நேரடி மூலப்பொருட்களாகவோ (Raw Mayerials) அல்லது அவைகளைத் தயாரிக்கும் கருவிகளாகவோ (Tools and Equipments or its Plants) பயன்படாமல் பெறப்பட்டுள்ளனவா?.

சமையல் கட்டுகளில் கூட மண்பாத்திரங்கள், மரப் பாத்திரங்கள், தோல் துருத்திகள் போன்றவை பயன்பட்டு வந்த காலத்தில் இறங்கிய அருளாளனின் வார்த்தைகளை நிரூபிக்கும் பொருட்டு இன்றைய நாட்களில் நமது சமையற்கட்டுகளை அலங்கரிக்கும் பொருட்கள்தாம் எத்தனை?. அடுப்பிலிருந்து குளிர்சாதனப் பெட்டிவரை அனைத்திலுமே இரும்பு குடியேறிவிடவில்லையா?.

கிணறு என்ற பெயரில் குழி தோண்டிக் கொண்டிருந்த (Wells with very shallow depth) கடப்பாரைகள் துளையிடும் இயந்திரங்களாக (Rigs) மாறியவுடன் பாறை துளைத்து, பாதாளம் கண்டு, எண்ணெய் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடும், வலிமையும்தான் எத்தனை? எத்தனை?.

ஏர்முனைக்கு பயன்பட்ட இரும்பு, டிராக்டர்களாகி, மண்வெட்டிகள் புல்டோஸர்களாகி, அணைக்கட்டுகளாகி, மின்சாரம் பெற்று நாம் அடைந்திருக்கும் பயன்பாடுகளும், வலிமைகளும் எவ்வளவு பிரம்மாண்டமானவை?.

ஒரு மிதிவண்டியைக் கூட பெற்றிருக்காத மனிதர்களைக் காட்டிலும், சூப்பர்சானிக் விமானங்களில் பறக்கும் நாம் வலிமை பெற்றவர்கள் அல்லவா?. ஒரு அச்சு இயந்திரத்தைக் கூட கற்பனை செய்யாதவர்களைக் காட்டிலும், கம்யூட்டர்களை கைப்பைகளில் கொண்டு செல்லும் நாம் எவ்வளவு பெரிய வலிமையைப் பெற்று விட்டோம்!. புறாவிடு தூதுகளை நடத்திக் கொண்டிருந்தவர்களைக் காட்டிலும், செயற்கைத் துணைக் கோள்களின் துணையுடன் இணையங்களையும் (Internet) இணையங்களின் துணையால் வலைமனைகளையும் (Web Sites) மின்னஞ்சல்களையும் (e-mail) பெற்றிருக்கும் நாம் அடைந்துவிட்ட பயன்பாடுகளையும் வலிமைகளையும் எண்ணித் தொலையக் கூடுமா?.

இப்பட்டியலை இத்துடன் நிறுத்தாவிட்டால் வார்த்தைப் பஞ்சமும், காகிதப் பஞ்சமும் ஏற்படும் அளவிற்கு இரும்பின் பயன்பாடும், அதனால் நாம் பெற்றிருக்கும் வலிமையும் பற்றிய செய்திகளை எழுத வேண்டியிருக்கும். எனவே பட்டியலிடும் வேலையை வாசகர்களிடம் விட்டு விடுவோம். சுருங்கக் கூறினால் தெருவோர சோதிடனின் கிளிக் கூண்டுகளிலிருந்து, பிரதமர்களின், அதிபர்களின் ரப்பர் ஸ்டாம்புகள் வரை பயன்பட்டிருப்பது இரும்பு. பட்டாக்கடை செருப்புத் தொழிலாளியின் எந்திரத்திலிருந்து, டாட்டாக்களின் தொழிற்சாலைகள் வரை அனைத்தும் இரும்பினால் வலிமை பெற்றவைகளே!.

படைக்களத்திலும், வயல்வெளிகளிலும் மட்டுமே பயன்படக் கூடிய வெறும் கைக்கருவியாக இரும்பு பயன்பட்டு வந்த காலத்தில் கற்பனைக் கண்களால் கூட கற்பிதம் செய்ய முடியாத அளவு இரும்பின் பயன்பாடுகளையும், வலிமைகளையும், முன்னறிவித்த தூய குர்ஆனுடைய வசனத்தை நிரூபிக்க வரலாற்றுப் பேருண்மைகள் அரங்கேறிக் கொண்டிருக்கையில் இதையெல்லாம் விழுங்கிவிடும் வகையில் இதனோடு போட்டியிட வருகின்றன அறிவியல் நிரூபணங்கள். அறிவியல் அன்பர்களே! அந்த அற்புத சாட்சியத்தின்பால் தங்களது கவனத்தை ஒரு கணம் திருப்புங்கள்!.

நாம் ஆய்விற்கெடுத்துக் கொண்ட அதியற்புத வசனத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாகக் கவனியுங்கள்! அது 'இரும்பையும் நாமே இறக்கினோம்' என்று கூறுகிறது.

வியப்புக்கு மேல் வியப்பை ஆழ்த்தும் வசனம் இது! மழையைப் பற்றிக் கூறப்படுகின்ற இடங்களில் எல்லாம் மழையை இறைவன் இறக்குவதாகக் கூறுகிறான். மழை மெய்யாகவே பூமிக்கு இறங்கி வரக் கூடிய ஒன்று என்பது அறிவியல் ஆய்வு தேவைப்படாத வகையில் அனைவராலும் பார்த்து அறியப்படுகிறது! ஆனால் இரும்பையும் அவனே இறக்கியதாக இந்த வசனத்தில் கூறுகிறான்! அப்படியானால் இரும்பையும் ஆகாயம் பொழிகிறதா?. அதென்ன இரும்பைப் பொழியும் வானமா?.

எங்கள் அதியற்புத இரட்சகனே! இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன்தூய வசனத்தை நிரூபிக்கும் வகையில் நீ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்?. இன்னும் என்னென்ன அற்புதங்களையெல்லாம் உன் திருவசனங்களில் நீ கொட்டி விதைத்திருக்கிறாய்?. எங்கள் செவிகளிலும், கண்களிலும், இதயக்கமலங்களிலும் மேலும் மேலும் உன் பேரொளியால் நிரப்புவாயாக!.

நவீன வானியல் வல்லுனர்களே! புவி இரசாயணவியலாளர்களே! எங்கிருக்கிறீர்கள் நீங்கள்?. இரும்பும் இறக்கப்பட்டதாக இப்பேரண்டத்தின் ஏகாதிபதியான அல்லாஹ்(ஜல்) கூறிய பிறகும் பல நூற்றாண்டுகளாக எந்த விஞ்ஞானியாலும் கூட இந்த அற்பப் பேருண்மையை கண்டுபிடிக்க முடியவில்லையே! நீங்கள்தாம் நவீன உலகின் விங்ஞானிகளாயிற்றே! உள்ளதை உள்ளபடி காட்டும் உங்கள் சோதனைக் கூடங்களில் குடுவைகளில் இத்தூய வசனத்தை நிரூபிப்பதற்குரிய சாட்சியாக நீங்கள் எதைக் கண்டீர்களோ அதனைப் பாரறியப் பறைசாற்றுங்கள்!.

இரும்பும் இறக்கப்பட்டதாகக் கூறிய இத்தூய வசனம் பொய்க்கலப்பற்ற அறிவியல் பேருண்மையே எனப் பறைசாற்றுகிறது நவீன விஞ்ஞான உலகின் புவி இரசாயணத்துறை (Geo Chemistry)! எப்படி என்ற வினாவிற்கு விளக்கமளிக்க சாட்சி கூண்டை நோக்கிப் பேருவகையோடு ஓடோடி வருகிறார் நமது பழைய நண்பர் 'விண்கல்' (Meteorite) அவர்கள்!.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகளைத் சோதனைச் சாலைகளில் பகுப்பாய்வு செய்து பார்த்த விஞ்ஞானிகள் ஒரு வியக்கத்தகு விஷயத்தைக் கண்ணுற்றார்கள். அதாவது அவர்கள் பயன்படுத்திய கருவிகளில் இரும்புடன் (Iron) நிக்கலும் (Nickel) கோபால்டும் (Gobalt) கலந்திருப்பதைக் கண்டார்கள். ஆனால் பூமியில் இயல்பாகக் கிடைக்கும் தாதுப் பொருட்களில் இரும்புடன் மேற்கண்ட உலோகங்கள் கலந்திருப்பதில்லை. பூமியில் கிடைக்காத இப்பொருள் நமது பண்டைக்கால மக்களுக்கு எப்படிக் கிடைத்தது? வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று கொள்முதல் செய்து வந்திருப்பார்களோ? அப்படியெல்லாம் இல்லை. அதற்குரிய விடை எனக்குள் இருக்கிறது எனக் கூறுகிறது நவீன விஞ்ஞான உலகின் விண்கல் அறிவியல் (Meteoric Astronomy).

விண்கற்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆகாயத்திலுள்ள பருப்பொருட்கள் உருவாவதற்கு முன் ஆகாயமெங்கும் ஒரே தூசுப் படலத்தால் நிரம்பிய புகை மண்டலமாக இருந்தது. இப்புகை மண்டலத்தின் மிக மிகச் சிறிய துகள்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து சிறுகச் சிறுகப் பெரிதாகி விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் ஈறாக அனைத்துப் பருப் பொருட்களையும் உருவாக்கின. இந்த நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வரும்பொழுது சிறுகச், சிறுகப் பெரிதாகி கோலி (Pebble) அளவோடு நின்றுவிட்ட பொருட்களும் உண்டு. வேறு சில பொருட்கள் கையளவு பொருட்களாக, மேலும் சில பெரும் பெரும் பாறாங்கல், குன்றுகள், மலைகள் அளவிற்குப் பெரிதாகி விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களும் உண்டு. இவைகளே விண்கற்கள் என்பது விஞ்ஞானிகளிடம் உள்ள கருதுகோள்.

ஒழுங்கான பாதையில் சுழன்று வரும் பெரும் பெரும் கோள்கள் வெடிப்பதாலும், மிகவும் சிக்கலான பாதைகளில் (Very Complicated Orbit) சுழன்றுவரும் குறுங்கோள்களின் மோதல்களிலிருந்தும் விண்கற்கள் உருவாகின்றன என்பது மற்றொரு கருதுகோள். வால் நட்சத்திரங்களின் சிதைவுகளிலிருந்து இவை உருவாகின்றன என்பது மேலும் ஒரு கருதுகோள். இம்மூன்று கருதுகோள்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதால் இம்மூன்று வழிமுறைகளிலும் அவை உருவாகி வருவதாக மற்றும் ஒரு கருதுகோள்.

இங்கு கூறப்பட்ட நான்கு கருதுகோள்களில் எது உண்மையாயினும் சரி, அல்லது இவையல்லாத ஐந்தாவது ஒன்றே கண்டு பிடிக்கப்பட்டாலும் சரி, விண்கற்களின் அனைத்து வகைகளையும் பூமி பெறுகிறது என்பது மட்டும் நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒழுங்கான பாதையின்றி விண்ணில் சிதறி ஓடும் சிற்றுருவம் கொண்ட விண்கற்கள் 'பல்சேஷன் தியரிக்குக்' (Pulsation Theory) கட்டுப்படாமல் சூரியனை நோக்கிச் செல்வதால் அவை பூமிக்கு வருவதில்லை என முன்னர் கண்டோம். ஆனால் இம்மாதிரிச் சிற்றுருவம் கொண்ட பொருட்களும் பூகோளம் பெற வேண்டும் என்பதற்காக இதன் வடிவமைப்பில் வேறு ஒரு நிகழ்ச்சிப் போக்கு நடைபெற்று வருகிறது.

அதாவது கொட்டிய மூட்டையிலிருந்து சிதறி ஓடும் நெல்லிக்காய்களைப்போல விண்கற்களின் அருவிப் பிரவாகங்கள் மிக நீண்ட முட்டை வடிவ (Ellips) பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளின் பெயர்ப் பட்டியலும், அவைகள் பூமியைத் தாக்கும் தேதிகளும் இத்துடன் இணைத்துள்ளோம்.

1. லயரிட்ஸ் Lyrids ஏப்ரல் 21
2. அக்வாரிட்ஸ் Aqarids மே 06
3. ட்ராகோனிட்ஸ் Draconids ஜூன் 06, அக்டோபர் 10.
4. பெர்ஸிட்ஸ் Perseids அக்டோபர் 10
5. ஒரியோனிட்ஸ் Orionids அக்டோபர் 18
6. டாரிட்ஸ் Taurids நவம்பர் 11
7. ஆன்ட்ரமெடிட்ஸ் Andromedits நவம்பர் 14


இவற்றில் மணற்துளியிலிருந்து, கோலி வரையிலான சிற்றுருவங்கள் அடங்கியுள்ளன. இந்த அருவிப் பிரவாகம் பல்லாயிரம் கி.மீ.பருமன் கொண்டவை. இவைகள் தங்களது பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி வருவதில்லை. ஆனால் இந்த பூமி தானும் சூரியனைச் சுற்றி வரக்கூடிய கோளாக இருப்பதால் பூகோளத்தின் சூரிய வலம் இந்த விண்கற்களின் பாதையில் குறுக்கிடுகிறது. உடனே இந்த பூகோளம் ஒரு மாபெரும் கல்மாரியைப் பெறுகிறது. எனவே இக்கல்மாரியின் வாயிலாகச் சிற்றுருவம் கொண்ட விண் கற்களையும் பூகோளம் பெற்று விடுகிறது.

பேருருவம் கொண்ட விண் கற்கள் இப்போது பெருவாரியாக பூமியின் மீது விழும் நிலை இல்லையென்றாலும் சில மில்லியன் வருடங்களுக்கு முன்னால்வரை தொடர்ந்து பூமியில் விழுந்து கொண்டிருந்தன. எனவே விண்கற்கள் வாயிலாக இதுவரை எண்ணற்ற இரும்பு மழைகளை பூமி பெற்றுள்ளது.

இதற்கு சமீபத்திய உதாரணமாக 1947ஆம் வருடம் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று ரஷ்யாவின் சிக்கோத்தே அலின்ஸ்கில் (Sikote - Alinsk) விழுந்த கல்லை எடுத்துக் கொள்ளலாம். இக்கல்லும் இரும்பு வகையைச் சார்ந்த விண்கல்லேயாகும். (விண்கற்களில் மற்றொரு வகையும் உண்டு. அது இரும்புக்குப் பதில் சிலிக்கனை (Silicon) கொண்ட விண்கற்களாகும்.)

இக்கல் பூமியில் விழும்பொழுது ஏனைய விண்கற்களைப் போன்று காற்று மண்டலத்தில் மோதியவுடன் துண்டு துண்டாகச் சிதறி விடுகிறது. சிதறிய துண்டுகள் மீண்டும் காற்று மண்டலத்தில் ஊடுருவி வரும்பொழுது ஒரே ஒரு துண்டைத் தவிர ஏனைய யாவும் முற்றாக எரிந்து விடுகிறது. எஞ்சிய ஒரு துண்டு மட்டும் பூமியை நெருங்கி அதன் மிக வலிமைமிக்க மாறா வெப்ப நிலை மண்டலத்தில் (06வது கட்டுரையை பார்க்கவும்) மோதியதும் அத்துண்டு சிதறுண்டு பல துண்டுகளாக பூமியைத் தாக்கியது. இதனால் பூமியின் மீது 75 அடி விட்டம் கொண்ட 120 பள்ளங்களைத் (Craters) தோற்றுவித்தது.

இப்பள்ளங்களில் கவனமாகத் தேடியெடுத்ததில் கிடைத்த பொருட்களில் 4 சதவீதம் நிக்கலும், சிறிதளவு ஏனைய உலோகங்களும் எஞ்சிய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்தன. எனவே விண் கற்கள் வாயிலாக பூமிக்கு ஏராளமான இரும்பு இறக்கப்பட்டது. இப்போதும் இறக்கப்பட்டு வருகின்றது என்று கூறி நவீன வானவியல் மற்றும் புவி இரசாயணத் துறையைச் சார்ந்த அறிவியல் பேருண்மைகள் தூய குர்ஆன் மிக மிக நிச்சயமாக மானிட சக்திக்கு அப்பாற்பட்ட வேதமே என நிரூபித்து நிற்கின்றன.

நவீன விஞ்ஞான உலகின் அறிவியல் அன்பர்களே! கட்புலனுக்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் நம்ப வேண்டுமாயின் அதற்கு அறிவியல் ஆதாரம் உண்டா எனப் பகுத்தறியும் பண்புடைய அறிவுசால் ஆன்றோர்களே! நாம் சிந்திக்க வேண்டாமா? நவீன விஞ்ஞான யுகத்தின் ஆய்வகச் சோதனைக் குடுவைகளில் மட்டுமே கருவுற்ற புவி இரசாயணத்தின் இரகசியங்களெல்லாம் தொன்மை மிக்க 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த படிப்பறிவில்லா பாலைவன வாசிகளின் வாயிலிருந்து ஜனனமெடுத்திருக்க முடியுமா?.

கருவுறும் முன்னே பிறப்பது சாத்தியமா?

சாத்தியம் எனக் கூறக் கூடிய எந்த நபரும் கீழ்ப்பாக்கத்தில் குடியிருக்க வேண்டியவர்களல்லவா?.

கருவுறும் முன்பே பிறக்கவில்லை என்றிருந்தும் கூட நவீன புவி இரசாயணம் கருவுறும் முன்னே அதன் இரகசியங்கள் திருமறைக் குர்ஆனில் பிறப்பெடுத்தது எப்படி?. இதற்கு மேலும் இத்தூய மறையை மானிட சக்திக்குட்பட்டது எனக் கூறுவது அறிவியலையும், அறிவியலாளர்களையும் இழித்துரைக்கும் செயலாகும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?. சிந்திக்க வேண்டாமா நண்பர்களே! நீங்கள்?.

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

சுழற்றும் பூமி -12

ஈர்ககும் பூமி -13

Saturday, October 01, 2005

ரமளான் சிந்தனைகள்!

ரமளானை வரவேற்போம்!

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதத்தை சந்திக்கும் முஸ்லிம்களுக்கு, அந்த ஒவ்வொரு ரமளான் மாதத்தையும் புதிதாக எதிர்கொள்வது போலவே உவகையுடன் - களிப்புடனும் வரவேற்பார்கள். வருடத்தில் பதினோரு மாதங்கள் பகல் பொழுதில் உண்ணுவதையும், பருகுவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தவர்கள், இதற்கு நேர் எதிர்மறையாக பகல் பொழுது முழுவதும் - உண்ணுவதையும், பருகுவதையும் கைவிட்டு - ஏக இறைவனின் திருப்திக்காக மட்டுமே உண்ணா நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்.

வணக்க வழிபாடுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குரியது. அனைத்து வழிபாடுகளிலும் ''நோன்பு'' என்ற வணக்கத்திற்குத் தனிச் சிறப்பு உண்டு. ஒருவர் மற்ற வணக்கங்களை தாம் தனித்தே செய்தாலும் அதைப் பிறர் காணும் வாய்ப்புகள் இருக்கிறது, ஆனால் உண்ணா நோன்பிருக்கும் வணக்கத்தில் அவர் உண்ணவில்லை, பருகவில்லை என்பதை மற்றெவரும் காண வாய்ப்பில்லை. தனிமையில், எவரும் அறியாமல் உண்ணவும், பருகவும் செய்துவிட்டு நான் உண்ணா நோன்பிருக்கிறேன் என்று பிறரிடம் சொல்லிக்கொள்ள முடியும்.

தனிமையில் இருந்தாலும் உண்ணாமல், பருகாமல் இருப்பது இறைவனுக்காக மட்டுமே என்பதால், அடியான் நோன்பென்ற வணக்கத்தைத் தனக்காகவேச் செய்கிறான் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகிறான். ரமளான் மாதத்ததை வரவேற்று உண்ணா நோன்பை எதிர்கொள்ளவிருக்கும் முஸ்லிம்களுக்கு ரமளான் மாதத்திற்கான சில சட்டங்கள் இங்கே..

புனித மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு

அல்லாஹ் கூறுகிறான்..

விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (நோன்பு) விதிக்கப்பட்டுள்ளது, (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும், எனினும் (கடுமையான நோய் முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக் கொடுக்கிறாறோ அது அவருக்கு நல்லது, ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும், (என்பதை உணர்வீர்கள்- அல்குர்ஆன் 2:184)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாடகளின் நோன்பைப்) பின் வரும் நாட்களில் நோற்க வேண்டும், அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை, குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே. (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்- அல்குர்ஆன் 2:185)

நோன்பு கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியுடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது, அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள், நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொணடிருந்ததை அல்லாஹ் நன்கறிவான், அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக்கொள்ளுங்கள், இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள், இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள், இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும், அந்த வரம்புகளை (த் தாண்ட) முற்படாதீர்கள், இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் 2:187)

பிறை பார்த்து நோன்பு..

நீங்கள் பிறை பார்த்தால் நோன்பு வையுங்கள், அடுத்த பிறையைப் பார்த்தால் நோன்பை விட்டு விடுங்கள், மேகம் (பிறையை) உங்களுக்கு மறைத்து விடுமானால் (ரமளானையும் ஷாஃபானையும்) முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா, ஹாகீம்.

தகவலறிந்து நோன்பு..

மக்கள் எல்லாம் பிறை பார்க்க முயன்றார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம் 'நான் பிறையைப் பார்த்தேன்' என்று கூறினேன், நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்றுதுடன் மக்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அபூதாவூத், தாரமி, இப்னுஹிப்பான், ஹாகீம், பைஹகீ, தாரகுத்னீ.

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் முடிவெடுக்கக் குழம்பினார்கள், (பிறை தென்படாததால் நோன்பும் நோற்றனர்) இரண்டு கிராம வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று இரவு நாங்கள் பிறைப் பார்த்தோம் என்று சாட்சி கூறினார்கள், உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விட்டு விடுமாறு கட்டளையிட்டார்கள், பெருநாள் தொழுகைக்காக மறுநாள் தொழுமிடம் வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ரிப்யீ இப்னு கிராஷ் நூல்கள்- அபூதாவூத், அஹ்மத்.

நோன்பு வைக்கும் எண்ணம் வேண்டும்..


ஃபஜ்ருக்கு முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, தாரகுத்னீ, இப்னுஹிப்பான், இப்னுகுஸைமா.

ஸஹ்ர் செய்வதில் பரகத் உண்டு..

நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹ்ரில் பரகத் உண்டு, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா.

வேண்டுமென்றே நோன்பு திறப்பதைத் தாமதித்தல் கூடாது..

என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் (சூரியன் மறைந்தவுடன்) விரைந்து நோன்பு துறப்பவர்களாவர், என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- திர்மிதீ, அஹ்மத்.

இரவு முன்னோக்கி பகல் பின் சென்று சூரியன் மறைந்தால் நோன்பாளி நோன்பு துறப்பார், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு உமர் (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையைச் செய்தவர்களாகிறார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸஹ்ல் இப்னு ஸஹ்து (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பிரயாணத்தில், மற்றும் கர்ப்பிணி, தாய்மார்களின் நோன்பு..

அல்லாஹ்வின் தூதரே! பிரயாணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது, அப்போது நோன்பு நோற்பது குற்றமாகுமா? என்று நான் கேட்ட போது ''இது அல்லாஹ் வழங்கிய சலுகை இதை யார் பயன் படுத்திக் கொள்கிறாரோ அது நல்லது, யார் நோற்க விரும்புகிறாரோ, அவர் மீது குற்றமில்லை'' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஹம்ஸா இப்னு அம்ரு அல் அஸ்லமீ (ரலி) நூல்கள்- முஸ்லிம், நஸயீ.

(நான்கு ரக்ஆத் தொழுகைகளில்) பாதியைக் குறைத்துக் கொள்ளவும், நோன்பை தள்ளி வைக்கவும் அல்லாஹ் பிரயாணிகளுக்கு சலுகை வழங்கியுள்ளான், கர்ப்பிணி, பால் கொடுக்கும் தாய், ஆகியோரும் நோன்பிலிருந்து விலக்களித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்கள்- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா.

சக்தி பெற்றவருக்கே நோன்பு..

யார் சக்தி பெறுகிறார்களோ அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும், என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடும் போது இந்த வசனம் மாற்றப் படவில்லை, நோன்பு நோற்க சக்தியற்ற முதியவர்கள் விஷயத்தில் இந்தச் சட்டம் இன்னும் உள்ளது, என்றார்கள் அதாவது அவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிப்பார்கள், என்றார்கள். அறிவிப்பாளர், அதாவு, நூல்- புகாரி.

நோன்பாளி மறந்து விட்டால்..

நோன்பாளி மறந்து விட்டு உண்ணவோ, பருகவோ செய்தால் (நினைவு வந்ததும்) தன் நோன்பை தொடரட்டும், அவரை அல்லாஹ்தான் உண்ணவும், பருகவும் செய்திருக்கிறான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

நோன்பாளி என்று கூறி விட வேண்டும்..

உங்களில் ஒருவர் நோன்பு வைத்திருக்கும் போது தீய பேச்சுக்கள் பேசலாகாது, வீண் சண்டைகளில் ஈடுபடலாகாது, எவரேனும் அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு அழைத்தால், நான் நோன்பாளி என்று கூறிவிட வேண்டும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

பொய் சொல்லலாகாது..

(நோன்பு வைத்திருக்கும் போது) பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை, என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.

தண்ணீர் தூய்மைப் படுத்தும்..

உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும் போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும், அது கிடைக்கா விட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும், ஏனெனில் தண்ணீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், ஸல்மான் இப்னு ஆமிர் (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்.

உணவிற்கே முதலிடம்..

இரவு உணவு வைக்கப்பட்டால், மஃக்ரிப் தொழுவதற்கு முன் சாப்பாட்டிற்கு முதலிடம் கொடுங்கள், உணவு உட்கொள்வதைத் தாமதிக்க வேண்டாம், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அனஸ் இப்னு மாலிக் (ரலி) நூல்- புகாரி.

இமாம் தொழுகையைத் துவங்கி குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பதை செவியுற்றாலும் இப்னு உமர் (ரலி) சாப்பாட்டை முடித்து விட்டே தொழுகையில் கலந்து கொள்வார்கள். நூல்- புகாரி.

விடுபட்ட நோன்புகள்..

ரமளானில் சில நோன்புகள் (மாதவிடாய் போன்ற காரணங்களால்) எனக்கு விடுபட்டு (களாவாகி) விடும், (11 மாதங்கள் கழித்து) ஷாஃபானில் தவிர அதை என்னால் நோற்க இயலாது, நபி (ஸல்) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளே இதன் காரணம். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத். திர்மிதீ, இப்னுமாஜா.

நோன்பாளி தன் மனைவியிடத்தில்..

நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுபவர்களாகவும், கட்டி அணைப்பவர்களாகவும் இருந்தனர், எனினும் நபி (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விட தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நோன்பாளி மனைவிகளைக் கட்டி அணைப்பது பற்றிக் கேட்டார், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள், பின்பு மற்றெருவரும் வந்து கேட்ட போது, அவருக்குத் தடை விதித்தார்கள், நபி (ஸல்) அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், தடுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தார். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்- அபூதாவூத்.

(இளைஞர்- இள மனைவி இருவருமே சுலபத்தில் உணர்ச்சி வசப்பட்டு இறை வரம்பை மீறி விடுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப் படுகிறது)

நோன்பாளி தன் மனைவியுடன் கூடிவிட்டால்..?

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நாசமாகி விட்டேன்' என்றார்,

''என்ன நாசமாகி விட்டீர்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'ரமளானில் (பகல் பொழுதில்) என் மனைவியுடன் சேர்ந்து விட்டேன்' என்றார்,

''ஒரு அடிமையை விடுதலை செய்யும் அளவிற்கு உம்மிடம் செல்வம் இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

''தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இல்லை' என்றார்,

அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு இயலுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் 'இயலாது' என்றார்,

பின்பு நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் (அமைதியாக) உடகார்ந்திருந்தார்கள் பதினைந்து ஸாவு கொள்ளவுள்ள பாத்திரத்தில் பேரீத்தம் பழம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது,

(அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அதற்கு அவர் 'என்னை விட ஏழைக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்..? இந்த மதீனா முழுவதும் எங்களை விட ஏழைகள் எவருமில்லை..' என்று அவர் கூறியதும், தனது கடைவாய் பற்கள் தெரியும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள், பின்பு ''இதைக் கொண்டு சென்று உமது குடும்பத்தினருக்கு வழங்குவீராக'' என்று கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகார், முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா.

''அப்படியானால் நீர் முறித்த நோன்பிற்குப் பதிலாக ஒரு நோன்பு நோற்று விடுவீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்று மேலதிக விளக்கமாக இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா..?


நபி (ஸல்) அவர்கள் உடலுறவு கொண்ட பின் அதிகாலையில் குளிப்புக் கடமையானவர்களாக ரமளான் நோன்பை நோற்பார்கள். அறிவிக்கும் முஸ்லிம்களின் அன்னைகள், ஆயிஷா (ரலி) உம்மு ஸல்மா (ரலி) நூல்கள்- புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

மேலும் சில ரமளான் சட்டங்கள் அடுத்தப் பகுதியில்..

Thursday, September 29, 2005

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-13

ஈர்க்கும் பூமி 13


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

பரந்து விரிந்து கிடக்கும் நமது பூமி மானிட உள்ளங்களில் தட்டை வடிவம் கொண்டிருந்தபோது அது எதன் மீது நிலை பெற்றிருக்கிறது என்ற வினாவும் எழத்தான் செய்தது. இதற்கு விடை காண முயன்ற சில கற்பனை காவியங்களும், சில போதைக் கனவுகளும் நமது பூமியை பன்றியின் மூக்கின் மீது நிற்பதாகக் கண்டன. மேலும் நில கற்பனைகள் நமது பூமியை ஒரு மீனின் வாலின் மீது நிற்பதாகவும் கண்டன. ஆனால் அந்த பன்றியும், மீனும் எதன் மீது நிற்கின்றன எனத் தொடர்ந்து வரும் கேள்விகள் அவர்களில் பெரும்போலோருக்கு அப்போது தேவைப்படவில்லை.

வேதனை என்னவென்றால் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட இத்தத்துவங்கள்(?) மானிடர்களாகிய நம்மில் பலரால் வேதங்கள் என்றே போற்றி வழிபடப்பட்டு வருகின்றன என்பதேயாகும்.

எதையும் அறிவியல் நோக்கோடு ஆய்வு செய்யக் கூடியவர்கள் பண்டைக்காலம் தொட்டுக் கிரேக்கத்தில் தோன்றினர். அவர்களில் ஒருவராகிய 'தேலஸ்(Thales கி. மு. 624 - 545) எனும் அறிவியலாளரின் ஆய்வில் நமது பூகோளம் வட்டமான ஒரு வில்லையைப் போன்றது (Just Like a Disk) எனக் கண்டார். அப்போதும் அந்த வில்லை எதன் மீது நிற்கிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அவர் கூறிய பதில் அந்த வில்லை நீரில் மிதக்கிறது என்பதேயாகும். ஆனால் அவருக்குப் பின்னால் வந்த அறிவியலாளர் ஹெக்காடியஸ் - பூமி வில்லை வடிவம் என்பதை ஆதரித்து, ஆனால் அந்த வில்லை வடிவ பூமி தண்ணீரில் மிதக்கவில்லை என்றார். அதே நேரத்தில் நமது பூமி ஆகாயத்தில் எவ்வாறு நிலை பெற்றிருக்கிறது என்பதற்கு அவருக்கு விடையும் தெரியவில்லை. ஆகவே அவரிடம் பூமி எதன்மீது நிற்கிறது எனக் கேட்கப்பட்ட போது அது நான்கு தூண்களின் மீது நிற்கிறது என 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலைதான் அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் அகிலங்களுக்கெல்லாம், பேரொளியாய் வந்த சத்தியத் திருமறையாம் தூய குர்ஆனுக்கு இப்படிப்பட்ட 'ஜோக்' அடிக்க வேண்டிய நிலை எதுவும் அவசியமேயில்லை.

ஆகாயங்களும், பூமியும் படைக்கப்பட்டிருப்பதில் இப்படிப்பட்ட தூண்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்குத் திருமறை குர்ஆன் அளிக்கும் பதிலைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:

'அவன் (அல்லாஹ் - ஜல்) உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களைப் படைத்துள்ளான்.'(அல்-குர்ஆனின் 31வது அத்தியாயம் ஸூரத்துல் லுக்மானின் 10வது வசனம்).

'உங்கள் பார்வையில் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்.' (அல்-குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸூரத்துல் ரஃதுவின் 2வது வசனம்).

இவ்விரண்டு வசனங்களும் ஆகாயங்கள் எதிலும் கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை எனக் கூறுகின்றன. இதிலிருந்து பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை எனத் தெளிவாகிறது. எனவே பூமிக்குரிய வானத்திலும் தூண்கள் இல்லை என்பதால் பூமி தூண்களின் மேல் நிற்கிறது என்ற கூற்று தவறு என்பதே திருமறையின் அறிவிப்பாகும்.

இத்திரு வசனங்களில் காணப்படும் மேலும் ஒரு சிறப்பம்சத்தை கவனியுங்கள். ஆகாயங்கள் படைக்கப்பட்டிருப்பதில் எவ்வித தூண்களும் இல்லை எனவும், எனவே அவை எவ்வித பிடிமானமும் இன்றித் தாமாகவே நிலை நின்று வருகின்றன எனவும் திருமறை கூறவில்லை. மாறாக கண்களுக்குப் புலனாகும் தூண்கள் எதுவும் இல்லை என்றே கூறுகிறது. எனவே இந்த வசனங்கள் ஆகாயங்கள் படைக்கப்பட்டதிலும் அவை உயர்ந்து நிற்பதிலும் கண்களுக்கு புலனகாத ஏதோ பிணைப்பு இருந்து வருகிறது என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. இதையேதான் நவீன விஞ்ஞான உலகமும் அறிவியல் ஆதாரங்களால் நிரூபித்து நிற்கிறது. (அண்டங்கள் யாவும் அவற்றிலுள்ள பொருட்களும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றலால் - Universal Gravitation - தான் நிலை பெற்று வருவதாகத் தொடர் 4 மற்றும் 5ல் கண்டோம்.)

திருமறை குர்ஆனால் மட்டும் இந்த அறிவியலை எவ்வாறு இவ்வளவு துல்லியமாகக் கூற முடிந்தது?. பதினாறாம் நூற்றாண்டு வரை பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருள் என்றும், எனவே அதைத் தாங்கி நிற்கக் கூடிய பருப்பொருள் - அது நீரோ - தூணோ - பன்றியோ - மீனோ - எதுவாயினும் சரி ஒன்று இருக்க வேண்டும் என்றும் உலகம் பரவலாக நம்பி வந்தபோது, ஏழாம் நூற்றாண்டிலேயே இவைகளை மறுத்து - ஆகாயங்கள் யாவும் நிலை நின்று வருவதன் சரியான அறிவியலை திருமறை குர்ஆனால் மட்டும் எவ்வாறு கூற முடிந்தது?. எனவே இவ்வேதம் மெய்யான இறைவனின் வார்த்தைகளேயன்றி மானிடக் கற்பனையில்லை என்பதை இது ஆதாரப்படுத்தவில்லையா?.

இன்னுமா இவ்வேதம் மானிடச் சிந்தனைத் திறனால் உருவாக்கப்பட்டது எனக் கூற முடியும்?. சிந்திக்க வேண்டாமா?.

சிந்தனைத் திறன் பெற்றவர்களே! அறிவியல் அபிமானிகளே! உங்கள் சிந்தனைத் திறனுக்கு மேலும் மேலும் விருந்தோம்பிக் கொண்டிருக்கும் இத்தூய மறையின் மற்றொரு வசனத்தைக் கவனியுங்கள் திருமறை கூறுகிறது:

'அவன்தான் (அல்லாஹ் - ஜல்) உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டிலாக ஆக்கினான்.' (அல்-குர்ஆனின் 43வது அத்தியாயம் ஸூரத்துஜ் ஜூக்ருஃப் - ன் 10வது வசனம்).

சத்தியத் திருமறை தனக்கே உரிய உவமான உத்தியுடன் பூகோளத்தின் இயக்கத்தை எவ்வளவு தெள்ளத் தெளிவாக கூறி நிற்கிறது பார்த்தீர்களா?.
பூகோளத்தின் இயக்கத்தை இம்மியும் பிழையின்றிப் புரிந்து கொண்ட இருபதாம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் நமது பூகோளத்தை ஒரு 'ரங்க ராட்டிணத்துடன்' ஒப்பிட்டு கூறினால் அதில் வியப்பேதும் இல்லை. (பூகோளம் சற்றே ஒரு நீள் வட்டமான பாதையில் இயங்குகிறது. ஆனால் ரங்கராட்டிணம் துல்லியமாக வட்ட வடிவத்தில் இயங்குகிறது. எனவே பூகோளத்தை ரங்கராட்டிணத்துடன் ஒப்பிடுவதில் ஒரு சிறு பிழை ஏற்பட்டாலும், உவமானம் என்ற வகையில் அப்பிழை புறக்கணிக்கத் தக்கதே). அதே நேரத்தில் பூகோளம் அசைவற்று நிற்கும் ஒரு பொருள் என்று கருதப்பட்ட காலத்தில், ரங்கராட்டிணம் போன்ற விளையாட்டுப் பொருட்களை மக்கள் அறிந்திராத நிலையில் பூகோளத்தை ஒரு தொட்டிலுக்கு உவமையாகக் குறிப்பிட்டிருப்பது வியப்பிற்கு மேல் வியப்பைத் தருகிறது.

ஒருவர் தொட்டிலை ஆட்டும்பொழுது, தொட்டில் முன்னும் பின்னும் அசைகிறது. அசையும் தொட்டிலின் முன் பக்க எல்லையிலும், பின் பக்க எலவ்லையிலும் வளைவுகள் ஏற்படும். எனவே ஆட்டப்படும் தொட்டில் முன்னும், பின்னும் வளைவுப் பாதையில் இயங்குவதால் தொட்டிலின் இயக்கம் ஒரு நீள் வட்டப் பாதையைத் தோற்றுவிக்கும்.

பூகோளம் தன்னுடைய நீள் வட்டப் பாதையில் இயங்குவதைக் குறிப்பிட இதைக் காட்டிலும் சிறந்த ஜனரஞ்சகமான ஓர் உவமானம் 7-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? என எண்ணிப் பார்த்தால் மேனி சிலிர்க்கவில்லையா?.

பூகோளத்தின் இயக்கத்தை ஏழாம் நூற்றாண்டிலேயே ஒரு தொட்டிலுக்கு ஒப்பிட்டுக் காட்டிய ஒரு நூலை மானிடப் படைப்பு எனக் கூறத் துணிபவர் யாராக இருந்தாலும், அவரை ஓர் அறிவியல் அபிமானியாக அறிவியல் உலகம் எற்காது.

மேலும் கவனியுங்கள்! தொட்டிலொன்றைத் தொங்கவிட வேன்டுமென்றால் கயிறு தேவை. எனவே தொட்டிலோடு ஒப்பிடப்பட பூமிக்கும் ஓர் கயிறு தேவையே! அப்படிப்பட்ட கயிறு ஏதேனும் உண்டா? என அறிவியலாளர்களைக் கேட்டால் அவர்கள் 'ஆம்! உண்டு!' என்றே கூறுகிறார்கள். சூரியனுடைய ஈர்ப்பாற்றல் எனும் கண்ணுக்கு புலனாகாத கயிறுதான் சூரியனிடமிருந்து பூகோளம் விலகிப் போகமால் தொங்க விடப்பட்டதை போன்று தங்க வைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆகாயங்கள் யாவற்றிலும் காணப்படும் பருப்பொருட்கள் அனைத்திலும் இதைப்போன்ற ஈர்ப்பாற்றல் செயல் பட்டு வருகின்றது என்றும் இதன் காரணமாகவே அவை யாவும் விலகிப் போகாமல் இயங்கி வருகின்றன என்றும் கூறும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழக்கூடும். விண்ணகப் பருப் பொருட்கள் அனைத்திலும் ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது எனில் நமது பூமியிலும் அப்படிப்பட்ட ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது என்பதே அதன் பொருள். ஆனால் பூமியைத் தவிர ஏனைய, பொருட்களில் ஈர்ப்பாற்றல் உண்டா? இல்லையா? என்பதை நாம் நேரடியாக உணர முடியாத போதிலும் நமது பூமியில் அப்படிப்பட்ட சக்தி ஒன்று இருக்குமானால் அதை நம்மால் உணர முடிந்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் வாழ்வதே இந்த பூமியில்தான். நாம் இப்போது உயிரோடு இருக்கிறோம். இறந்து போன சடலம் ஒன்று பூமியில் கிடந்தால் அது கிடந்த இடத்திலேயே கிடக்கும். இறந்த உடல் அசைவதில்லை. எனவே இறந்துபோன உடல்களை பூமி ஈர்ப்பதால்தான் அவை பூமியின் மீது தங்கி நிற்கின்றன என யாரேனும் கூறினால் அது மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம். ஆனால் உயிருள்ள மனிதர்களின் நிலை நிலை என்ன?. சடலங்களை ஈர்க்கும் பூமி உயிருள்ளவைகளை ஈர்க்காதா?. உயிருள்ளவர்களையும் பூமி ஈர்க்கிறது எனில், நம்மால் நடக்கவும் ஒடவும், தாண்டவும், குதிக்கவும் முடிகிறதே! இவை யாவும் எப்படிச் சாத்தியமாகும்?.

உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கிறது எனில் நாம் நடக்க, ஓட, குதிக்க, கால்கைள பூமியிலிருந்து தூக்கும்போது நமது கால்களை எந்த ஈர்ப்பாற்றலும் இழுத்துப் பிடிப்பதாக உணரவில்லையே! இது ஏன்?. எனவே பூமிக்கு ஈர்ப்பாற்றல் உண்டு என்பது மெய்தானா?.

அறிவார்ந்த நண்பர்களே! இந்த வினாவைக் கருத்தில் கொண்டு, இதற்கு விடை தேடி இந்த அற்புதத் திருமறையின் பக்கங்களைப் புரட்டுவோம். அது வழங்கிக் கொண்டிருக்கும் தீர்வும் விளக்கமும் விருப்பு, வெறுப்பின்றி உண்மையை ஏற்கத் துணியும் எந்த ஒரு அறிவியல் பற்றாளரையும் தன்பால் ஈர்த்து விடும்: இதுவே மெய்யான இறைவேதம் எனச் சொல்ல வைக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த ஜீவ வசனங்களை பார்க்கும் முன் இங்கு எழுப்பிய வினாவிற்குரிய அறிவியல் விளக்கத்தை முதலாவதாகக் காண்போம்.

உயிரற்றவைகளை பூமி ஈர்க்கிறதா? இல்லையா?. என்பதைப் புரிற்து கொள்ள முடியாத போதிலும் உயிருள்ள நம்மை பூமி நம்மை ஈர்க்கவில்லை எனக் கருதுவது தவறு. உயிருள்ளவைகளையும் பூமி ஈர்க்கவே செய்கிறது. இருப்பினும் உயிருள்ள நம்மால் இதைப் புரிந்து கொள்ள இயலாததற்கு காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பூமிக்குரியவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நமது இயற்பியல் அமைப்பு (Physical Condition) பூமிக்கேற்ற வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் ஒரு இழுவிசை போன்று நமது சாதாரண வாழ்வியல் அசைவுகளில் உணரப்படாமல் நம்மைப் பொறுத்தவரை பூமியின் ஒரு அரவணைப்பாகவே உணரப்படுகிறது. நாம் அணிந்திருக்கும் நமது ஆடை ஓர் இதமான அணைப்பாக உணரப்படுகிறது. இதே ஆடையை ஒரு சிட்டுக்குருவியின் மேல் வைத்தால் அது அந்த சிட்டுக்குருவிக்கு ஒரு அணைப்பாக இருக்காது. அந்த சிட்டுக்குருவி பூமியோடு அழுத்தப்படும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் வியாழனுக்குச் (Jupiter) சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு பூமியைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல் படுகிறது. இந்த ஆடையின் பளுவை ஒரு சிற்றெறும்பின் மீது ஏற்றினால் நிலைமை மேலும் விபரீதமாகும். அந்த எறும்பு பூமியின் மீது நசுக்கப்படும். இந்த நிலைதான் நம்மில் ஒருவர் சூரியனுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்கு நமது பூமியைப் போன்று 28 மடங்கு அதிகமான ஈர்ப்பாற்றல் செயல்படுகிறது.

நாம் நமது ஆடையை ஒரு யானையின் மீது போர்த்தினால் அந்த யானையைப் பொறுத்தவரை இது ஒரு அணைப்பாக உணரப்படாது. அது ஒரு தொடு உணர்வாகத்தான் யானைக்கு இருக்கும். இதே நிலைதான் நம்மில் ஒருவர் நிலவுக்குச் சென்றாலும் ஏற்படும். ஏனெனில் அங்குள்ள ஈர்ப்பாற்றல் நமது பூமியில் இருப்பதைக் காட்டிலும் 6.25 மடங்கு குறைவு.

எனவே பூமிக்குரியவர்களாக, பூமியை ஒரு வீட்டைப் போன்று பயன்படுத்தக் கூடியவர்களாக (பார்க்க அல்-குர்ஆனின் 40வது அத்தியாயம் ஸூரத்துல் முஃமின் 64வது வசனம், 07வது அத்தியாயம் ஸூரத்துல் அஃராஃப் - ன் 10வது வசனம்) படைக்கப்பட்டிருக்கும் நமக்கு பூமியின் இந்த ஈர்ப்பாற்றல் பூமியின் ஓர் அரவணைப்பாகவே உணரப்படுகிறது.

பூமியின் இந்த அரவணைப்பை நாம் உதாரணங்கள் வாயிலாக விளங்கலாம். தந்தை ஒருவர் தம் மைந்தனின் கரத்தைப் பற்றியவாறு கடைத் தெருவில் நடந்து செல்கிறார். கடைத் தெருவை வேடிக்கை பார்த்தவாறு தந்தையோடு மைந்தன் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்குப் பிரச்னை எதுவுமில்லை. அதே நேரத்தில் வேடிக்கைப் பார்த்தவாறு அவன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் விலகிச் செல்ல முயன்றால் தந்தையின் கரம் உடனே அவனை இழுத்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும். அப்போதுதான் தந்தையின் அரவணைப்பில் சென்று கொண்டிருக்கும் மகன் தன் தந்தையின் இந்த அரவணைப்பை இழுவிசையாக உணர்கிறான்.

ஒரு தாயின் மார்போடு அணைக்கப்பட்டிருக்கும் சேயும் இதற்கோர் உதாரணமாகும். தாயின் மார்பில் கிடந்தவாறு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அக்குழந்தையால் மகிழ்ச்சியோடு பொங்க முடியும். அதே நேரத்தில் மகிழ்ச்சி மிகைத்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் அக்குழந்தை தன் தாயின் மார்பிலிருந்து பொங்கியெழ நினைத்தால் உடனே தாயின் கரம் அக்குழந்தையை மேலும் வலுவாக அணைக்கும். அப்போதுதான் அக்குழந்தை தன் தாயின் அணைப்பை ஒரு அழுத்தும் சக்தியாக உணரும்.

இவ்விரு உதாரணங்களைப் போன்றே பூமியின் மீது நடமாடும் உயிருள்ளவர்களின் நிலையும் அமைந்துள்ளது. பூமியின் மீது நடக்க, ஓட, தாண்ட, குதிக்க முயலும் எந்த நபரையும் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை பூமி அனுமதிக்கும். அப்போது அந்த நபருக்கு பூமி தன்னை இழுப்பதாகவோ அல்லது அந்த இழுவிசை தன்னை பூமியின் மீது அழுத்துவதாகவோ தெரியாது. ஆனால் அதே மனிதன் ஒரு பத்து மீட்டர் உயரத்துக்குக் குதிக்க வேண்டுமென்றோ அல்லது தாண்ட வேண்டுமென்றோ முயன்றால் அந்த பூமி அம்மனிதனை தன்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். இதிலிருந்து பூமியின் அணைப்பு எந்த நேரமும் நம்மீது செயல்பட்டுக் கொண்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தந்தையின் கரத்திலுள்ள மைந்தன் தந்தையுடன் சென்று கொண்டிருப்பதை போல, தாயின் மார்போடு அணைக்கப்பட்ட சேய் தாயோடு சென்று கொண்டிருப்பதைப் போல பூமியோடு அணைக்கப்பட்ட நாம் பூமியோடு சென்று கொண்டிருக்கிறோம்.

இப்போது விவரிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து பூமியின் ஈர்ப்பாற்றல் இறந்தோர், உயிருள்ளோர் என்ற பாகுபாடின்றி எந்த நேரமும் பூமியின் அரவணைப்பாக நம்மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டோம். இத்தெளிவான அடிப்படையில் பரிசுத்தத் திருமறை புவி ஈர்ப்புச் சக்தியின் (Earth's Gravitation) பயன்பாட்டை எவ்வளவு இரத்தினச் சுருக்கமாக பாரறியப் பரை சாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! திருமறை கூறுகிறது:

'உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்ளும் விதத்தில் பூமியை நாம் ஆக்கவில்லையா?. அன்றியும் அதில் உயர்ந்த மலைகளையும், நாம் நாட்டினோம்: இனிமையான நீரையும் புகட்டினோம். (இவ்வாறான ஆதாரங்கள் உங்கள் முன் இருந்தும், இவ்வசனங்கள் நம்முடைய வார்த்தைகள் இல்லை எனக் கூறி இதிலுள்ளவைகளை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்த நாளில் (தீர்ப்பு நாளில்) கேடுதான்!' (அல்-குர்ஆன் அத்தியாயம் 77 ஸூரத்துல் முர்ஸலாத் 25 முதல் 28ஆம் வசனம் வரை).

அற்புதமல்லவா நிகழ்த்தி நிற்கிறது இந்த ஒப்பற்ற வான்மறை! புவி ஈர்ப்புச் சக்தியின் பயன்பாட்டை இதைக் காட்டிலும் தெளிவாகவும், எளிமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் விளங்க வைக்கக்; கூடிய வார்த்தைகளை நம்முன் எடுத்தக் காட்டக் கூடியவன் யார்?.

எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் நண்பர்களே!. நம்மில் சிலர் இதை மானிடக் கற்பனையென, அறிவியலை மதிக்கக் கூடிய ஒருவரால் கூற முடியுமா?. பூகோளத்தின் ஈர்ப்பாற்றலைக் கூறும் வசனத்தைச் தொடர்ந்து மலைகளையும், குடிநீரையும் குறிப்பிடுகிறதே இந்த அற்புதத் திருமறை! அதன் மர்மம்தான் என்ன?. விரிவை அஞ்சி அதை உங்களது அறிவியல் சிந்தனைக்கே விட்டுவிட்டு விஷயத்தைத் தொடர்கிறேன்.

பூமியின் மீது பறக்கும் பறவைகள் பூமியுடன் தடுத்து வைக்கப்படுகின்றன எனக் கூறிய திருமறை வசனத்தை முன் கட்டுரையில் ஆய்வு செய்தோம். வானியல் அறிவியலின் அற்புதமான பேருண்மைகளை ஓங்கிய குரலில் முழங்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தையும் மேற்கோள் காட்டி 'என்னய்யா! உளரல்? எல்லாம் சிறுபிள்ளைத் தனம்!' எனக் கூறியவர்களை நாம் கண்டுள்ளோம். அதைப்போன்று அப்பறவைகளை பூமியுடன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் சக்தியாகிய புவி ஈர்ப்புச் சக்தியை பற்றிக்கூறும் இந்த வசனத்தையும் மேற்கோள்காட்டி 'பூமி நம்மை அரவணைக்கிறதா? இதென்ன உளரல்? எனக் கேட்டு மறைந்து கிடக்கும் அவர்களது அறிவியல் அபிமானத்தையும், மேதாவிலாசத்தையும் மேலும் மேலும் வெளிப்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் உண்டா?.

ஏற்று போற்ற வேண்டியவைகளை எள்ளி நகைத்தவர்களின் நிலை எப்படி முடிவுற்றது என்பதை கூறும் வரலாற்று நிகழ்ச்சிகள் நம்முன் ஏராளமாக இருக்கின்றன. எனவே நேற்றைய வரலாறுகளிலிருந்து இன்று பாடம் பயிலாதவர்கள் நாளைய வரலாற்றின் கழிவுகளாக மாறுவார்கள் என்பது திண்ணம்.

உண்மை எதுவோ அது எங்கிருந்து வந்தபோதிலும் அதை ஏற்றேயாக வேண்டும் எனும் அளவிற்கு உண்மையின்பால் பற்றுள்ளவர்களே! நம்மால் நுனிப்புல் மேய முடியாது. சிந்திப்பதற்கு நம்முன் விஷயங்கள் இருக்கின்றன. எனவே நாம் சிந்தித்தாக வேண்டும்.

சிந்திப்போம் நண்பர்களே! முன் கட்டுரையிலும் இக்கட்டுரையில் கண்ட விஷயங்களை ஒருவர் கூற வேண்டுமானால் குறைந்த பட்சம் அவருக்கு நவீன வான் அறிவியலில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பது தெரிந்திருக்க வேண்டும்?.

முதலாவதாக அவருக்கு பூகோளம் ஆகாயத்தில் அசைவற்றிருக்கும் ஒரு பொருளன்று. மாறாக கணமும் ஓயாமல் ஒரு நீள் வட்டப்பாதையில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனத் தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பூகோளத்தின் இந்தச் சுழலோட்டம் காரணமாக அதன் மீது பறக்கும் பறவைகள் வினோதமான இடப் பெயர்ச்சிகளையும், பூமியிலிருந்து தொலைந்து போவதையும், பூமியின் மீது ஏற்படும் மோதலையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக புவிவாழ் உயிரினங்களுக்கு இவ்வகையான இடையூறுகள் ஏற்படா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் அறபுதமான சக்தி ஒன்று அதில் செயல்படுகிறது என்றும் அச்சக்தி பூமியோடு நம்மை அரவணைத்துச் செல்லக் கூடிய 'புவி ஈர்ப்புச் சக்தியே' என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நான்கவதாக, அகிலம் முழுவதும் ஈர்ப்புச் சக்தி செயல்படுகிறது என்றும், அதே நேரத்தில் அது கண்ணுக்குப் புலனாகாத ஒரு சக்தியே என்றும் அவர் தெரிந்திருக்க வேண்டும்.

எண்ணிப் பாருங்கள்! இத்தூயத் திருமறை இறைவனுடைய வார்த்தைகள் இல்லையென்றால் - இது மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சுய கற்பனையேயென்றால் - நவீன வானியலின் இந்த அறிவியல் பேருண்மைகள் அவருக்கு எப்படித் தெரிந்தன?.

அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த உண்மைகனைத்தும், பிறகு வந்தவர்கள் காப்பி அடித்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா?.

எப்பாடுபட்டாவது இக்குர்ஆனை பொய்ப்பித்தாக வேண்டும் என்ற வெறியில் இப்படிக்கூட யாரேனும் கூறினாலும் வியப்பதற்கில்லை.

குர்ஆன் இறைவேதமில்லை! அது முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பு எனக் கூறுபவர்களில் யார் அறிவியல் சிந்தனை பெற்றவர்களோ அவர்கள் தங்களது கூற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் எப்போதோ வந்து விட்டது. அக்காரியத்தை நீங்கள் செய்யாமல் தொடர்ந்து அதே குரலையே ஒலித்துக் கொண்டிருந்தால், உங்கள் கூற்றில் நீங்கள் நேர்மையானவர்கள் என்று கூறவும் செய்தால், அனைத்திற்கும் முன்னதாக நீங்கள் ஒரு காரியம் செய்யக் கடமை பட்டிடுள்ளீர்கள்.

மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் படைப்பாக நீங்கள் எதைக் கூறுகிறீர்களோ அதில் காணப்படும், வானியல், புவியியல், உயிரியல், பேரண்டவியல் போன்ற என்னென்ன துறைகளை பற்றிய அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றனவோ, அந்த அறிவியல் உண்மைகளில் எவையெவை அவருக்குப் பின்னால் வந்த விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டனவோ அவை யாவும் மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைகளே அன்றி, இன்று உலகம் முழுவதும் நம்பிக் கொண்டிருப்பதைப் போன்று சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பகிரங்கமாகப் பாரறியப் பிரகடனம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.

---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

சுழலும் பூமி(1) -8

சுழலும் பூமி(2) -9

சுழலும் பூமி(3) -10

சுழலும் பூமி(4) -11

சுழற்றும் பூமி -12