Thursday, August 25, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-8

சுழலும் பூமி(1) -8



ஏ.கே.அப்துர் ரஹ்மான்

பரந்து விரிந்து கிடக்கும் இப்பூகோளத்தின் மீது நாளும் தவறாமல் இராப் பகல்கள் மாறி, மாறி வரும் பொருட்டு, பூமி கோள வடிவம் கொண்டுள்ளது எனக் கூறும் அறிவியலைப் பரிசுத்த குர்ஆனிலிருந்து இதற்கு முந்திய தொடரில் கண்டோம். ஆனால் பூகோளத்தின் வடிவம் மட்டுமே இராப்பகலைத் தோற்றுவிக்காது. அது சுழலவும் வேண்டுமென்பதை நாம் அறிவோம்.

இராப் பகலைத் தோற்றுவிப்பதற்காகப் பூகோளம் சுழன்றேதான் ஆக வேண்டும் என்ற சிந்தனைகூட கி.மு. 400 களிலேயே கிரேக்கர்களிடம் தோன்றியது. ஆனால் அக்கால அறிவியலாளர்களில் சிறந்தவராகக் கருதப்பட்ட திரு.டாலமி (Ptolemy) போன்றவர்கள் வன்மையாக எதிர்த்த காரணத்தால் இக்கருத்து முளையிலேயே கிள்ளப்பட்டது. போதாக் குறைக்கு அக்காலத்தில் அறிவியல் உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய அரிஸ்டாட்டில் இக்கருத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கியெடுத்து புவிமையக் கோட்பாட்டை அரியணையேற்றினார். இதன் விளைவாகப் பூகோளத்தின் சுழற்சியைக் கற்பனை செய்தவர்கள் தங்களிள் நிலையை மாற்றிக் கொண்டார்கள். அரிஸ்டாட்டிலுக்குப் பயந்து தான் அவர்கள் தங்களது கருத்திலிருந்து விலகினார்கள் எனவும் கூறப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் அக்கருத்து, தோன்றிய வேகத்திலேயே மறைந்து போயிற்று. ஆகவே அரிஸ்டாட்டிலை ஏற்றதன் காரணமாகவோ நாம் முந்தைய கட்டுரையில் கூறியவாறு பூகோளம் அசையாதிருக்க, சூரியன் சுற்றி வருவதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றன என்ற கோட்பாடே 16 ஆம் நூற்றாண்டு வரை அறிவியலாளர்களின் நிலையாக இருந்தது.

இவ்வாறு குர்ஆன் வழங்கப்படுவதற்கு (கி.பி. 611 - 634) 800 வருடங்களுக்கு முன்பே மறுக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, மக்கள் மனதிற்கு எட்டாமல் 16 ஆம் நூற்றாண்டுவரை மறைந்து கிடந்த இந்த நவீன வானசாஸ்திரத்தைப் பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்னதான் கூறுகிறது என்று பார்ப்போம்.

இராப் பகல் மாற்றத்தை மையக் கருத்தாக கொண்டு சத்தியத் திருமறையாம் பரிசுத்த குர்ஆனில் பற்பல வசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வசனங்கள் இராப்பகல் மாற்றங்களைப் பற்பல கோணங்களில் அணுகுகின்றன. எனவே நமது தலைப்பிற்கேற்ற வகையில் அவைகளை மூன்று பெரும்பகுதிகளாக பிரிக்கலாம். அவையாவன:

1. மானிடப் பார்வையில் சூரியனின் பங்களிப்பு. அவைகளுக்குரிய குர்ஆன் வசனங்களான: 2:258, 6:78, 17:78, 18:17, 18:86, 18:90, 20:130, 50:39.

2. அறிவியல் பார்வையில் பூகோளத்தின் பங்களிப்பு. அதற்குரிய வசனங்களான 7:54, 13:2-3 22:61, 24:44, 31:29, 35:13, 39:5, 57:6, 74:33, 91:1-4, 92:1-2, 93:1-2.

3. பயன்பாட்டுப் பார்வையில் இராப்பகலின் பங்களிப்பு இப்பட்டியலில் காணப்படும் வசனங்கள் இத்தலைப்போடு தொடர்பு கொள்ளவில்லை. ஏனெனில் இரவும், பகலும் ஏற்படுவதால் நாம் அடையும் நன்மைகளை அது சுட்டிக் காட்டுகிறது. எனவே முன்னிரு தலைப்புகளை மாத்திரம் நாம் ஆய்வு செய்வோம்.

பொதுவாக இராப் பகல் நிகழ்ச்சியில் சூரியனுடைய பங்களிப்பு வெறும் ஒளி மூலமாக அமைவதே. மற்றபடி இரவைப் பகலாக்குவதும், பகலை இரவாக்குவதும் பூகோளத்தின் சுழற்சியே. இருப்பினும் தொன்று தொட்டு இன்றுவரை நடந்து வரும் நமது பேச்சு வழக்கில் நாம் இந்த அறிவியலை பயன் படுத்துவதில்லை. நகராத சூரியனை (சூரியன் நகர்கிறது. ஆனால் இராப்பகல் நிகழச்சியில் அந்த நகர்வு தேவையற்றது. எனவே இதைப்போன்ற இடங்களில் சூரியன் நகராதிருப்பதாகக் கற்பனை செய்க) உதித்தது, அஸ்தமித்தது எனக் கூறிப் பூமியை சுற்றிவந்து சூரியன் இராப்பகலை ஏற்படுத்துவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறோம். அதற்காக இந்தப் பேச்சு வழக்கை இனிமேல் மாற்ற முடியுமா?. மாற்றினால் குழப்பமே மிஞ்சும். எனவே திருமறையும் மனதிர்களின் பேச்சு வழக்கிலும் பேச வேண்டியிருந்ததன் அவசியத்தைக் கீழ்கண்ட வசனம் தெரிவிக்கிறது:

'சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரை தொழுகையை நிலை நிறுத்துவீராக!' (அருள் மறை குர்ஆன் அத்தியாயம் 17 ஸுரத்துல் பனீ - இஸ்ராயீல் 78வது வசனம்).

இவ்வசனத்தின் வாயிலாக நம்மிடம் இறைவன் என்ன கட்டளையிட்டானோ அதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்குரிய நேரத்தைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆகவே அக்கட்டளை இறங்கிய காலம் தொட்டு உலகுள்ள காலம் வரை வாழ்ந்த, வாழுகிற, வாழப்போகின்ற அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சூரியன் சாய்ந்ததிலிருந்து எனத் தொன்று தொட்டு மனிதர்கள் பேசி வருகின்ற அவர்களது பேச்சு வழக்கிலேயே திருமறை நேரத்தைக் கூறியது.

ஆனால் இந்த இடத்தில் சூரியன் சாய்தல் என்ற காட்சியின் அறிவியலையே இறைவன் பயன் படுத்தியிருந்தால்?. அதாவது பூமி சுழன்று, அது சூரியனைச் சாய்ந்ததைப் போல் காட்டும் நேரத்திலிருந்து என்று கூறியிருந்தால்..?

இதைக் கேட்ட மாத்திரத்தில் திருமறை வழங்கப்பட்ட நாளிலிருந்து 17ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மக்கள் பலவாறு குழம்பிப்போய், இறுதியாக ஒரு முடிவுக்கு வருவார்கள். என்ன முடிவு?. ஓஹோ.. பூமி சுலழக்கூடிய காலம் கூட ஒரு காலத்தில் ஏற்படும் போல் தெரிகிறது. அந்தக் காலத்தில் செயல்படுத்தப் பட வேண்டிய கட்டளைதான் இது. ஆகவே இப்போது இக்கட்டளையைச் செயல்படுத்தக் கூடாது என்பதே அம்முடிவாக இருக்கும். இம்முடிவு கூட இறைவன் இம்மாதிரியான வார்த்தைகளைத் தன் மறையில் பயன்படுத்திய பிறகும் அதை நம்புவதற்கு யார் தயாராக இருப்பார்களோ அவர்கள் எடுக்கும் முடிவாகவே இருக்கும். பிற மக்களைப் பற்றிக் கூறவே தேவையில்லை!.

இப்போது உங்களிடம் ஒரு வினா எழும். பூகோளம் சுழல்கிறது என்ற விபரம் அப்போது யாருக்கும் தெரியவில்லை என்பதால்தான் இந்தப் பிரச்னை. இதைத் தீர்க்க, தன்னுடைய தூதருக்கே அவ்விஷயத்தை இறைவன் கற்றுத் தந்து மக்களுக்கு விளக்கியிருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும் அல்லவா என்பதே அவ்வினா?.

இந்த வினா மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நன்றாகவே காட்சியளித்தாலும், வரலாற்று பேருண்மைகளைக் கருத்தில் கொள்ளாதன் விளைவே இவ்வினாவாகும். சத்தியத் திருமறை வழங்கப்படுவதற்கு முன்பும் சரி, அது வழங்கப்பட்டதற்கு பின்பும் சரி, பூமி சுழல்கிறது என்று கூறியவர்களின் நிலையும், அக்கருத்தை இதர அறிவியலாளர்கள் ஈறாகப் பொது மக்கள் அணுகிய விதமும் நாம் மிக நன்றாக அறிவோம். ஆகவே பூமி சுழல்கிறது என்ற அறிவியலை இறைத்தூதர் (ஸல்) தம்முடைய அழைப்புப் பணியில் பிரச்சாரம் செய்திருந்தால், அவரை இறைவனுடைய தூதர் என்று ஏற்பதற்கு அன்றைய கால கட்டத்தில் எவ்வளவு பேர் தயாராக இருந்திருப்பார்கள்?.

யாரும் தயாராகவில்லை என்றாலும், கோபர், நிக்கஸ், கெப்ளர் முதலானவர்களைப் போன்று மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களும் தம்முடைய வாழ்வை அறிவியலுக்காக அர்ப்பணித்திருக்கலாமே என்ற கோணத்தில் கூட, போகிற போக்கில் யாருக்கேனும் எண்ணத் தோன்றும். இது அவருடைய வருகையின் நோக்கத்தைக் கூடக் கருத்தில் கொள்ளாத கோளாறே!. சீர் கெட்ட நம்பிக்கைகளால், பழக்க வழக்கங்களால் சிதைந்து கொண்டிருந்த மானிடப் பண்பாடுகளைச் சீரமைக்க இறைவனால் அனுப்பப் பட்ட மாபெரும் சீரமைப்பாளரே அம்மாமனிதர். ஆவர் போதித்த ஏகத்தவ கோட்பாடிலிருந்து தொழுகை ஈறாக அனைத்துப் போதனைகளும் மனிதர்களை, மனிதர்கள் என்ற சொல்லுக்கு எற்ற பண்பாளர்களாக உருவாக்கும் வழி முறைகளே. நிலைமை இவ்வாறிருக்க அவர் அறிவியலுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் சென்று விடுதல் என்பது அவர் அனுப்பப்பட்ட நோக்கத்தைத் தகர்க்கும் செயலாகும்.

இதிலிருந்து மனிதர்கள் செயல்பட வேண்டிய கட்டளைகளை அறிவிக்கும் இடங்களில் எக்காலத்து மக்களாலும் புரிந்து கொள்ளப்படாத, மற்றும் அவர்களின் பேச்சு வழக்கில் நடைமுறைப் படுத்தப்படாத வார்த்தைகளால் கட்டளைகள் அமையக் கூடாது என்பதை ஐயத்திற்கிடமின்றித் தெரிந்து கொள்கிறோம்.

இதை விளக்கும் சான்றுகளில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிகழ்த்திய விவாதமும் காணப்படுகிறது. அவர் காலத்தில் ஆட்சி செய்த அரசன் தன்னையே இறைவன் என்று கூறினான். அவனுடைய தவறை அவனுக்கு உணர்த்தி, சன்மார்க்கத்தின் பால் அழைக்கச் சென்ற நபியவர்கள் இவ்வாறு கேட்கிறார்கள்:

'அப்படியானால் (நீயே இறைவனானால்) இறைவன் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதைச் சற்று மேற்கிலிருந்து உதிக்கச் செய் என கூறினார்.' (அருள்றை குர்ஆன் 2வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 258வது வசனம்).

இந்த காரசாரமான விவாதத்தில் நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் 'உதித்தல்' என்ற சொல்லின் 'அறிவியல் அமைப்பையே' தமது வாதத்தில் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருந்திருக்கும்?. அதாவது இறைவனே பூமியைச் சுற்றிச் சூரியனை கிழக்கில் தோன்றும்படிச் செய்கிறான். நீ அதை சற்று மேற்கில் தோன்றும்படிச் செய் எனக் கேட்டிருந்தால் அது விவாதமாக இருந்திருக்குமா?.

இதைப்போன்ற அறிவியல் அமைப்பில் அவர் தம் வாதத்தை அந்தக் கால கட்டத்தில் எடுத்து வைத்திருந்தால், மன்னன் மட்டுமின்றி மக்கள் அனைவருமே அவருக்கு பைத்திய முத்திரை குத்தியிருப்பார்கள். அதோடு அவர் கூறும் விஷயம் யாவற்றையும் பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் என்ற கோணத்தில் அணுகியிருப்பார்கள். இதற்காக மக்களை குற்றப்படுத்துவதும் முறையாகாது. ஏனெனில் இந்த விஷயம் அவ்வளவு தனித்தன்மை பெற்றது.

ஒரு மனிதனுக்கு அவனுடைய வீடு எவ்வளவு அறிமுகமானதோ, அவ்வளவு அறமுகமானதே நமது பூமி. இந்த பூமி சுழல்கிறது என நேரடி வார்த்தைகளில் அவர்களிடம் கூறப்பட்டால் - பூமி சுழல்கிறதா?. இந்த பூமியில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இது சுழன்று கொண்டிருந்தால் நம்மால் உணர முடியுமே?. ஆனால் இதுவோ அறைந்து வைத்தாற்போல் அசையாமல் இருக்கிறதே!. அப்படி இருக்க இது சுழல்கிறது என்று கூறுகிறாரே! என்னவோ பாவம்! மூளைக்கோளாறு போல் தெரிகிறது என அதைக் கூறியவரைப் பற்றி மக்கள் முடிவு கட்டுவது வியப்புக்குரிய விஷயமன்று. ஆகவே பூமியின் சுழற்சியையோ அல்லது முன் கட்டுரையில் கண்டவாறு பூமியின் நகர்வையோ (21:33) கூற வேண்டிய நிலை ஏற்படும் போது இந்த விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.

எனவே இம்மாதிரியான விஷயங்களைக் கருத்தில் கொண்டே குர்ஆன் தன்னுடைய கட்டளைகளையும் தன் நேர்மையை நிலைநாட்டும் வாதங்களையும் அமைக்கின்றது.

விவாதங்கள் என்பது புரிந்து கொள்ளப்படாத விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்கள்தாம். எனவே புரிந்து கொள்ளப்படாதவைகளைப் புரிய வைப்பதற்காகச் செய்யப்படும் கருத்துப் பறிமாற்றங்களும் புரியா விஷயங்களாக அமைந்தால் அவை எவ்வாறு விவாதங்களாக முடியும்?. எனவே திருமறை தன்னுடைய அணுகு முறையில் அது யாரிடம் பேசுகிறதோ அவர்கள் அனைவரையும் மிகத் துல்லியமாக எடைபோட்டே தன் வார்த்தைகளை முன் வைக்கிறது.

திருமறை கையாளுகின்ற மற்றுமோர் அணுகுமுறையும் அற்புதமானது. சான்றாக துல்கர்னைன் அவர்களின் வரலாற்றில் ஒரு வசனம்

'சூரியன் கறுப்பு நீரில் அஸ்தமிப்பதை அவர் கண்டார்' எனவும்,

மற்றொரு வசனம்:
சூரியன் ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதை அவர் கண்டார்' (அருள்றை குர்ஆன் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஃபுவின் 86 மற்றும் 89வது வசனங்கள்) எனவும் கூறுகிறது.

இந்த வசனமும் இதுபோன்ற ஏனைய வசனங்களும் நாம் செயலாற்ற வேண்டிய கட்டளைகள் எதையும் கூறவில்லை. எனவே சூரியன் அஸ்தமித்தது அல்லது உதித்தது எனத் திருமறை தன்னுடைய அறிவிப்பாகக் கூறாமல், துல்கர்னைன் அவர்களின் பார்வையில் அவை எவ்வாறு உணரப்பட்டனவோ அதை மட்டும் கூறவதோடு நிறுத்திக் கொண்டது. ஆகவே எங்கெல்லாம் உதித்தது அல்லது அஸ்தமித்தது எனத் தானாகக் கூறாமல், விஷயங்களை முன்வைக்க வாய்ப்புகள் உண்டோ அங்கெல்லாம் திருமறை அந்த வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்கிறது என்பது கண்கூடாகத் தெரியும் உண்மையாகும்.

இதுவரை கூறப்பட்ட விஷயங்களைக் கவனமானப் பரிசீலனை செய்பவர்களிடம் இப்போது ஓர் வினா எழும். அதாவது மானிடப் பார்வையில் அமைந்த விஷயங்களைப் கூறும் போது வசனங்கள் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்பது உண்மையே. ஆனால் இராப் பகல் மாற்றத்தின் அறிவியல் அமைப்பை கற்றறிந்த மக்களும் குர்ஆனைப் பார்க்கிறார்கள். ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் அப்படிப்பட்ட மக்களைக் கருத்தில் கொண்டு இது இறைவேதமே என அவர்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு அறிவியல் சான்றைக் கூட குர்ஆன் தரவில்லையா? என்பதே அவ்வினாவாக இருக்கும்.

ஆனால் ஒன்றோ இரண்டோ அல்ல. ஏராளமான சான்றுகளை இந்த அற்புதத் திருமறை தாங்கி நிற்கிறது. இராப் பகல் நிகழ்ச்சியை ஏற்படுத்த, பூகோளம் சுழல்கிறது என்ற அறிவியலைப் பூகோளத்தின் பெயரை நேராடியாகப் பயன்படுத்தாமல் எந்த அளவிற்குக் கூறலாமோ, அந்த அளவிற்கு கூறகிறது. இராப் பகலை ஏற்படுத்த, சூரியன் பூகோளத்தைச் சுற்றி வரவில்லை என்ற அறிவியலைக் கூற சூரியன் பெயரை நேராடியாகப் பயன்படுத்தாமல் எந்த அளவிற்குக் கூறலாமோ, அந்த அளவிற்கு கூறகிறது. அது எப்படி?...

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

---------------------------

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1

வாழத் தகுந்த கோள்-2

ஓசோன் -3

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

விண்ணடுக்குகள் -6

உருண்ட பூமி -7

Monday, August 22, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-7

உருண்ட பூமி -7


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மூடிய இருட்டுக்குள் அயர்ந்துறங்கும் பூமியின் மீது தன் செங்கதிர்களை வாரியிறைத்து கிழக்கில் தோன்றுகிறான் ஆதவன். பிறகு மெல்ல ஊர்ந்து வந்து உச்சியில் காய்ந்து அந்திப் பொழுதில் மேற்கில் மறைகிறான். அதன் பிறகும் நிற்பதில்லை இந்த விண்ணுலா. அடுத்த விடியலைத் தோற்றுவிக்க கிழக்கில் முளைக்கிறான்.

என்ன விந்தை! மண்ணக மாந்தரெல்லாம் விண்கண்ட நாள் முதலாய் இன்றளவும் ஓயவில்லை இந்த நிகழ்ச்சிப் போக்கு! அற்புதம்தானே! நாளும் ஓய்வின்றி எந்நாளும் இப்பூமியில் இரவும், பகலும் மாறி வருவதின் மர்மமென்ன? சிந்தனைத் திறன் கொண்டோரின் உள்ளங்கள் எல்லாம் வியந்து கொண்டிருந்த இந்த வினாவுக்கு விடை காணப் புகுந்தனர் அறிவியலாளர்கள்.
பரந்து விரிந்த இப்பேரண்டத்தின் நட்ட நடுவில் நட்டு வைத்தாற்போல் பூமி ஆடாமல், அசையாமல் இந்த பூமி நிலை பெற்றிருக்கிறது. இந்தப் பூமியைச் சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் யாவும் சுற்றி வருகின்றன. ஆகவே சூரிய குடும்பத்தின் அச்சாக (AXIS) அவைகளின் மையத்தில் பூமி இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்கள் ஆரம்பகால அறிவியலாளர்கள். இவர்களின் இந்தக் கோட்பாடு 'புவி மையக் கோட்பாடு' (Earth Centre Theory) என அழைக்கப்பட்டது.

எவ்வளவு பாதுகாப்பான கோட்பாடு பார்த்தீர்களா? காலங்காலமாகச் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதைக் கண்டு வந்த மக்கள் மெய்யாகவே சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற எண்ணத்தில் இருந்தமையால் இக்கோட்பாட்டை எவ்வித விமர்சனத்திற்கும் இடம் தராமல் அப்படியே ஏற்றனர்.

அறிவியலின் அனைத்துத் துறைகளையும் தொட்டுப் பார்த்தவரும், முற்கால அறிவியல் உலகில் முடிசூடா மன்னனாக போற்றப்பட்டவருமான திருவாளர் அரிஸ்டாட்டில் (Aristotle. B.C.370 -286) தாம் இந்தப் புவிமையக் கோட்பாட்டை அறிவியலாக ஏற்கச் செய்தவர். அவருடைய காலத்திலிருந்து நவீன அறிவியலின் நுழைவாயிலாகிய 16 ஆம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் அரிஸ்டாட்டிலின் கூற்று எதுவோ, அதுவே வேத வாக்காக ஏற்கப்பட்டு வந்தது. ஆனால்!.. இப்பேரண்டத்திற்கோர் பேரருளாய் ஏக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட மாமனிதர் முஹம்மது (ஸல்) (571 - 634) அறிவிக்கும் தூதுச் செய்தி அவருக்கு முன்னால் நிலை நாட்டப்பட்ட இப்புவி மையக் கோட்பாட்டை இதோ மிக வன்மையாக மறுத்துரைக்கிறது.

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) யாவும் (அவைகளுக்குரிய) மண்டலத்தில் செல்கின்றன.'(அல் - குர்ஆன் அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

இந்த வசனத்தின் வாயிலாக சூரியன், சந்திரன் மட்டுமல்ல. யாவுமே அவைகளுக்கே உரிய மண்டலங்களில் செல்கின்றன எனக் கூறி, பூமி நகராமல் ஒரே இடத்தில் நிலை பெற்றுள்ளது எனக் கூறும் புவி மையக் கோட்பாட்டை இவ்வசனம் மறுக்கிறது.

பூமி நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. இந்தபூமியைச் சுற்றித்தான் ஏனைய யாவும் நகர்கின்றன என்பதே புவி மையக் கோட்பாட்டின் கருப்பொருள். ஆனால் பூமியும் நகர்கிறது என்று கூறுவதால் புவிமையக் கோட்பாட்டை பொய் எனக் கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன்.

இந்த இடத்தில் நகரும் பொருட்களின் பெயர்ப் பட்டியல் சூரியனையும், சந்திரனையும்தானே குர்ஆன் குறிப்பிடுகிறது. பூமியின் பெயரைக் குறிப்பிடவில்லையே என யாருக்கேனும் ஐயம் எழக் கூடும். பூமியின் பெயர் இங்கு நேரடியாகக் குறிப்பிடாமல் இருந்ததே சாலச் சிறந்த காரியம் என்பதை நாம் வேறு தலைப்பில் காண்போம் இன்ஷா அல்லாஹ். ஆனால் யாவும் என்ற சொல்லுக்குள் பூமியும் அடங்குகிறது என்பதில் நிறைவடையாத உள்ளங்கள் ஏதேனும் இருந்தால், அவைகளும் நிறைவடையும் பொருட்டு, இப்பரிசுத்த வசனத்திடம் மேலும் சற்று நெருங்குவோம்.

நகரக் கூடியவைகளின் பெயர்ப் பட்டியலில் முதலாவதாக பரிசுத்த குர்ஆன் குறிப்பிடுவதே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதாவது தமக்குரிய மண்டலங்களில் நகரக் கூடியவைகளில் இரவும் உண்டாம்: பகலும் உண்டாம். இரவும், பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் நகர்கிறது என்றால் என்ன பொருள்?. இரவு என்றால் என்ன?. இரவு என்பது ஒளியானது மூடி மறைக்கப்படும் பகுதி எனக் கொள்கிறோம். பகல் என்றால் என்ன?. ஒளியைப் பிரதி பலிக்கும் பகுதி எனக் கொள்கிறோம். (இந்த விளக்கமே சரியான விளக்கம் என்பதில் உள்ள அறிவியலை வேறு தலைப்பில் காண்போம் இன்ஷா அல்லாஹ்) இப்போது இரவும், பகலும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கிறது என்றால் அதன் பொருள் என்ன?.

ஒளியை மூடி மறைக்கும் பகுதியும், ஒளியை பிரதிபலிக்கும் பகுதியும் அவைகளுக்குரிய மண்டலங்களில் செல்கின்றன என்பது அதன் பொருள். ஒளியைப் பிரதிபலிக்கும் பகுதி, ஒளியை மூடி மறைக்கும் பகுதி என்பதில் பூமி அடங்கி விடுகிறதா இல்லையா?. பூமியின் எந்த ஒரு பகுதியும் ஒன்று இரவாக அல்லது பகலகாத்தான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். ஆகவே இரவும், பகலும் அவைகளுடைய மண்டலங்களில் செல்கின்றன என்கிற குர்ஆனுடைய கூற்று, சர்வ நிச்சயமாகப் பூமி, எங்கும் ஓய்திருக்கவில்லை; அது நகர்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறிப் புவிமையக் கோட்பாட்டைத் தகர்த்து நிற்கிறது.

இவ்வாறு ஆறாம் நூற்றாண்டில் பிறந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவித்த இறைவனுடைய தூதுச் செய்தியில் பூமியும் நகர்கிறது எனும் அறிவியல் பேருண்மையைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், அறிந்தோ, அறியாமலோ அறிவியல் உலகம் புவிமையக் கோட்பாட்டின் மாயவலைக்குள் சிக்கி, அதற்கேற்ப வானியலைப் புரிந்து கொள்ள முயற்சித்தது. இதன் காரணமாக 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இத்துறையில் எந்த முன்னேற்றமும் காணாமல் இருட்டுக்குள் உழன்றனர்.

இந்த வரலாற்றுப் பின்னனியில் 16-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தோன்றிய அறிவியல் மாமேதைகள் கோபர் நிக்கஸ் (Coper Nicus, 1473 - 1543) மற்றும் கெப்ளர் (Kepler, 1571 - 1630) ஆகியோர் அறிவியல் வாயிலாக புவிமையக் கோட்பாட்டை மறுத்து, பரிசுத்த குர்ஆனின் கூற்றுக்கிசைய, பூமி நகர்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினர். வந்தது வினை!. அன்று வாழ்ந்து கொண்டிருந்த மதகுருமார்கள், பூமி நகர்கிறது என்ற கருத்து, தங்கள் வேத நூலுக்கு முரணான கருத்து எனக் கூறி அந்த அறிவியலாளர்களை சர்ச் விலக்கு, ஊர் விலக்கு, மத விலக்கு என படிப்படியான தொல்லைகளைத் தந்து அவர்களின் குரலை அடக்கி விட்டனர்.

ஆனால் அறியாமைக் காரிருளில் தங்கள் அறிவைத் தொலைத்துவிட்ட மதகுருக்களால் அந்த அறிவியலாளர்களின் குரலைத்தான் ஒடுக்க முடிந்ததேயன்றி அவர்கள் கூறிய பூகோள நகர்வைத் தடுக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களின் அந்தக் கூற்று இந்தப் பூமியைப் படைத்து இதனை நகர்த்திக் கொண்டிருப்பவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளாகிய பரிசுத்த குர்ஆனால் நற்சான்று பெற்றிருந்தது. ஆகவே பூகோளம் நின்று விடவில்லை. அது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. அது மேலும் பலமுறை சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது திடீரென ஒலித்தது மற்றொரு குரல்.

சுற்றவில்லை சூரியன் பூமியை! சுற்றுகிறது பூமி சூரியனை என்றது அக்குரல். தொலைநோக்கியைச் சீரமைத்து பல அரிய கண்டு பிடிப்புகளை வழங்கிய அறிவியல் மாமேதை கலிலியோ (Galileo, 1564 - 1642) வின் குரல்தான் அது. இந்த முறை மக்கள் கொஞ்சம் சிந்திக்கத் துவங்கிய காரணத்தால், அந்த மதகுருமார்களால் இவரது குரலை ஒடுக்கி விட இயலவில்லை. இருப்பினும் இவருடைய 'சூரிய குடும்பத்தைப் பற்றிய (Solar System) கண்டு பிடிப்புக்கள் தங்களது வேத நூலுக்கு விரோதமானது என்று கூறிக் கிறிஸ்துவ குருமார்கள் இவரை ரோம் நகரத்தின் விசாரணைக் கூடத்துக்கு அழைத்தனர். அப்போது 69 வயதை நிரம்பிவிட்ட (1633 ல்) இம்முதியவர் பலவாறு மிரட்டப்பட்டு, இறுதியாக மக்கள் மத்தியில் இவருக்கு இருந்த பெரும் செல்வாக்கைப் புறக்கணிக்க முடியாத நிலையில் அந்த விசாரணை மன்றம் இவர் செய்த பாபத்திற்கு(?) ஒரு தண்டனையை அறிவித்தது.

பைபிளின் சங்கீத நூலிலிருந்து குறிப்பிட்ட சில பாடல்களை (Penitential Psalm) வாரத்திற்கு ஏழுமுறை வீதம் மூன்று வருடத்திற்கு எழுத வேண்டும் என உத்தரவிட்டது.

குர்ஆன் என்ன கூறுகிறதோ, அதையே இந்த அறிவியல் மேதை, தன்னுடைய அறிவியல் ஆய்வில் கண்டுவிட்டார் என்ற குற்றத்தைத்(?) தவிர, அன்று அந்த மதகுரு கூட்டம் இவர் மீது எந்தத் தவறையும் காணவில்லை.

இறுதியாக இந்த அறிவியல் மேதையின் கண்டு பிடிப்புகளுக்குப் பிறகு, பூமி நகர்கிறது என்று கூறும் பரிசுத்த குர்ஆனின் கூற்றைச் சிறுகச், சிறுக உலகம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.

இந்த வேதத்தின் ஆசிரியன் மிகத் தூயவன். அவன் தன்னுடைய கூற்றை நிராகரிப்போர் மறுத்த போதிலும், நிரூபித்தே தீருகிறான்.

மாறி மாறி வரும் இரவுக்கும் பகலுக்கும் என்ன காரணம் என்பதற்குரிய அறிவியல் விளக்கத்தை நாம் பெற்று விட்டோம். இரவையும், பகலையும் தோற்றுவிப்பதில் பூமியின் வடிவமும், அதன் சுய சுழற்சியுமே காரணம் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த இரு விஷயங்களைப் பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்ன கூறுகிறது எனத் தேடினால், மெய்யாகவே இந்த அற்புத வேதம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

முதலாவதாக பூமியின் வடிவம் என்ன? என்ற கேள்விக்குரிய பதிலைப் பார்ப்போம்.

பூமியின் வடிவம் உருண்டையானதே என்று குர்ஆனுக்கு முற்பட்ட காலத்திலேயே (கி.மு.450-ல்) கிரேக்கர்கள் கருத்துக் கொண்டிருந்தார்கள். அக்கருத்து முற்கால அறிவியலின் முடிசூடா மன்னன் அரிஸ்டாட்டிலினாலும் அறிவியல் ரீதியாக அங்கீகரிக்கப் பட்டது. பூமியின் வடிவம் உருண்டையானதே என்பதைக் காட்ட கடலில் செல்லும் கப்பலை ஆய்வு செய்து சான்று பெற்றார்கள்.

கப்பல் ஒன்று கடலில் செல்லும் போது முதலாவதாக அதன் அடித்தளம் மறையும். பிறகு படிப்படியாக உடல் மறைந்து கடைசியாக பாய்மரம் மறையும். இதைக் கூர்ந்து கவனித்தால் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல் அது செல்லச் செல்லச் பூமியின் மீது கீழ் நோக்கிய ஒரு வளைவுக்குள் இறங்குவது போன்று தோன்றும். அதைப்போல நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் கப்பலின் பாய் மரத்தின் நுனி முதலாவதாகக் கடற்பரப்பின் தூரத்தில் எட்டிப் பார்க்கும். பிறகு படிப்படியாகப் பாய் மரம் முழுமையாகத் தெரிந்து அதன் பின் அடித்தளம் தெரியவரும். இது எதைக் காட்டுகிறது எனில், வந்து கொண்டிருக்கும் கப்பல் பூமியின் மீதுள்ள கீழ் நோக்கிய வளைவு ஒன்றிலிருந்து ஏறி வருவதைப்போல் தோற்றமனித்துப் பூமியின் எத்திசையில் திரும்பினாலும் பூமியானது கீழ் நோக்கி வளைந்திருக்கிறது எனக் காட்டுகிறது.

எத்திசையில் திரும்பினாலும் கீழ் நோக்கி வளைந்திருக்கும் ஒரு பொருளின் வடிவம் உருண்டையாகவே இருக்கும் என்பது தெளிவு. ஆகவே பூமி உருண்டை வடிவம் கொண்டது என்ற அறிவியலை அரிஸ்டாட்டில் ஏற்றுக் கொண்டிருந்தார்.

பூமியின் வடிவம் உருண்டை எனினும், பூமி அசையாது ஒரே இடத்தில் நிலை பெற்றிருக்க, சூரியன் அதனை சுற்றி வருகிறது என்பதே அரிஸ்டாட்டில் உட்பட அனைத்து அறிவியலாளர்களின் கருத்தாகப் பதினாறாம் நூற்றாண்டு வரை நிலை பெற்று வந்தது. இக்கருத்தை ஏழாம் நூற்றாண்டில் நுழைவாயிலிலேயே மறுத்துரைத்த பரிசுத்த குர்ஆன், பூமியின் வடிவம் பற்றிய இவர்களின் ஆய்வை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா எனப் பார்ப்போம்,

குர்ஆன் கூறுகிறது:
'வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும் இரவும், பகலும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி வருவதிலும், மக்களுக்கு பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பலிலும் - சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 2 வது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 164 வது வசனம்.)

இந்த வசனத்திலிருந்து விளங்கப்படும் பற்பல அறிவியல்களில் ஒன்று நமது வினாவிற்கும் பதிலளிக்கிறது. இரவும், பகலும் மாறி, மாறி வருவதற்கு ஏற்ற வகையில் ஆகாயமும், பூமியும் ஒழுங்குற அமைக்கப் பட்டிருப்பதோடு, கடலில் செல்லும் கப்பல் பற்றியும் சிந்தித்தால் அவைகளுக்குரிய சான்றுகள் கிடைக்கும் எனக் கூறுகிறது இவ்வசனம். ஆகவே கடலில் செல்லும் கப்பலால் முன் வைக்கப்படும் சான்று எதை விளக்குகிறதோ அதை நாம் ஏற்க வேண்டும் எனக் கூறுகிறது பரிசுத்த குர்ஆன்.

குர்ஆனுக்கு நிகர் குர்ஆனேயன்றி வேறு ஏது?. அற்புதம்தான் நிகழ்த்துகிறது இந்த ஒப்பற்ற திருமறை!

பூமி நகரவில்லை எனக் கூறிய அரிஸ்டாட்டிலின் கூற்றை ஏற்பதா மறுப்பதா எனக் கேட்டபோது அவருடைய கூற்று தவறாக இருப்பதால் அதை வன்மையாக மறுத்து, பூமி நகர்கிறது எனக் கூறிற்று. அதே சமயம் பூமியின் வடிவம் உருண்டையே என்ற உண்மையை விளக்கும் அவர்களது ஆய்வை ஏற்றுக் கொள்ளலாமா என்று கேட்டால் 'சிந்திக்கும் மனிதர்களே! உங்களுக்கு அவைகளில் சான்றுகள் உண்டு' என அதை ஏற்கச் சொல்கிறது!.

இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் இன்று உலகில் வேதங்கள் என்ற பெயரில் அறியப்படும் வேறு எந்த நூலில் காண இயலும்?.

எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே! இந்த பரிசுத்த குர்ஆனைத் தவிர, வேதங்கள் என்று உங்கள் முன் ஓதப்படும் எந்த நூல்களாவது அறிவியல் கண்டு பிடிப்பகளுக்கே வழிகாட்டியாகத் திகழ்வதைப் பார்த்திருக்கிறீர்களா?.

வழிகாட்டுவது ஒரு பக்கம் இருக்கட்டும்!. குறைந்த பட்சம் அறிவியலோடு மோதாமலாவது இருக்க வேண்டாமா என்ற வினாதான் உங்களை இறை மறுப்பில் இறுகச் செய்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அறிவியலை தனக்குச் சாட்சியாக நிறுத்தியிருப்பதோடு, அதில் ஏற்படும் மெய்யும், பொய்யும் பிரித்தறிவிக்கும் அதனுடைய வழிகாகட்டியாகவேத் திகழும் பரிசுத்த குர்ஆனை ஆய்வு செய்யுங்கள். நீங்கள் உண்மையையே கண்டறிவீர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இப்போது உங்களிடத்தில் ஒரு வினா எழக்கூடும். பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஒருவர் கடலில் செல்லும் கப்பலை ஆய்வு செய்தால் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்ற அறிவியல் சான்றை அவர் கண்டறிவார் என்பது உண்மையே. ஆனால் கடலில் செல்லும் கப்பல் பற்றிய ஆய்வு முறை குர்ஆன் வழங்கப்படுவதற்கு முன்னால், கிரேக்கர்களிடம் அறியப்பட்ட ஆய்வு முறைதானே? குர்ஆனை ஆய்வுக் கண்ணோடு பார்வையிடும் ஒருவர் இந்த வசனத்தைப் பார்த்தவுடன் பூமியின் வடிவம் பற்றி கிரேக்கத் தத்தவத்தை ஏற்கலாம் என்று கூறுவதாகவே விளங்கிக் கொள்ள முடியும். அப்படிப் பார்த்தால் கிரேக்கர்கள் அந்தத் தத்தவத்தைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்திருந்தால், அதைப்பற்றி கூறுகின்ற அவசியம் குர்ஆனுக்கும் ஏற்பட்டிருக்காது. ஆகவே அந்த நிலையில் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என்ற அறிவியலைக் குர்ஆனிலிருந்து விளங்க வாய்ப்பிருந்திக்காதல்லவா என்ற வினாவே அந்த வினாவாக இருக்கும்.

கிரேக்கர்கள் ஆய்வு என்பது வெறும் ஒரு 2500 வருடத்திற்குட்பட்ட விஷயம். ஆனால் இந்த பரிசுத்த குர்ஆன் இப்பேரண்டத்தை படைப்பதற்கு முன்கூட்டியே பாதுகாக்கப்பட்ட இடத்தில் பதியப்பட்டிருந்தது என்பதே உண்மை. ஆனால் அந்த விஷயத்திற்குள் தற்போது நுழையாமல் வாதத்திற்காக உங்கள் ஐயத்தில் காணப்படும் வினாவை ஏற்று அதற்குரிய விடையைக் காண்போம்.

நண்பர்களே! கடலில் செல்லும் கப்பல் பற்றிய எடுத்துக்காட்டு பூமியின் வடிவம் என்ன என்பதைக் கண்டறிவதற்குரிய ஆய்வு முறையைக் கூறும் கருவியே!. ஆனால் ஆய்வுக் கண்களால் இந்த அற்புத வேதத்தைப் பார்த்தீர்களானால் இந்த பூமி கோள வடிவத்தைக் கொண்டதே என்ற அறிவியல் தீர்ப்பையே தரும் அற்புதமான வசனங்களைக் கண்டு மலைத்துப் போவீர்கள். ஆகவே உங்கள் வினாவிற்கேற்ப கிரேக்கத் தத்துவம் எழுந்திராவிடினும் பூமி உருண்டை வடிவம் கொண்டதே என அறிவிக்கும் வேறு வசனங்களை குர்ஆன் விரித்தோதுகிறது.

அரிஸ்டாட்டிலுக்கும் (கி.மு. 370-286) பற்பல நூற்றாண்டுகளுக்கு முந்திய கால கட்டத்தில் இறைவனுடைய நல்லடியார்களில் சிறப்பான மனிதர் ஒருவர் இருந்தார். உலகின்; மீது ஆட்சி செலுத்தும் பேரரசராகவும் இருந்தார். 'துல்-கர்னைன்' என்ற பெயருடைய இவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த பண்டைக்கால அரபு வாழ் மக்கள் இறைத்தூதராம் மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் துல்கர்னைன் அவர்களைப் பற்றி விபரம் கேட்கிறார்கள். தன்னுடைய தூதரிடம் கேட்கப்பட்ட இவ்வினாவிற்கு இறைவன் பதிலளிக்கிறான்;

'மேலும் (நபியே!) இவர்கள் உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறும் நான் அவரைப் பற்றிச் சில விபரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும் அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம். அவர்(தாம்) ஆற்ற வேண்டிய சில காரியங்களுக்காக ஒரு பயணம் புறப்பட்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 83, 84, 85 ஆம் வசனங்கள்.)

இந்த வசனத்தின் வாயிலாக, துல்கர்னைன் எனும் தன்னுடைய நல்லடியாருக்கு இறைவன் அரசாட்சியை உலகில் வழங்கி, உலகில் அவர் ஆற்ற வேண்டிய சில முக்கியமான பணிகளையும் அவருக்குக் கட்டளையிட்டு அவர் ஒரு நெடிய பயணத்தைத் துவக்கும்படி செய்திருக்கிறான் எனத் தெரிய வருகிறது. இப்பயணத்தின் நடுவே அவர் சென்றடையும் இடத்தைப் பற்றி தொடர்ந்து கூறுகிறது குர்ஆன்:

'சூரியன் அஸ்தமிக்கும் எல்லையை அவர் அடைந்த போது, அது கருப்பு நீரில் அஸ்தமிப்பதை (அவர்) கண்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 86 ஆம் வசனம்)

இந்த வசனத்தின் வாயிலாக, துல்கர்னைன் அவர்களுடைய பயணத்தைப் பற்றிச் சில முக்கியமான தகவலைத் தருகிறது குர்ஆன்.

முதலாவதாக அவர் தம்முடைய பயணத்தின் நடுவே ஒரு கட்டத்தில் எல்லைக் கோட்டை அடைந்து விட்டார் எனத் தெரிவிக்கிறது. அடுத்தபடியாக அந்த எல்லைக்கோடு ஒரு நீர்நிலையாக இருந்தது என்றும் அதிலும் சூரியன் நீர் நிலைக்குள் அஸ்தமிப்பதைப் போன்று காட்சியளிக்க வேண்டுமென்றால் அந்த நீர்நிலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வியாபித்திருக்க வேண்டுமென்றும் தெரிகிறது. எனவே இந்த நீர் நிலை ஒரு கடலாக இருக்கலாம் எனவும் இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

அடுத்தபடியாக நீர்நிலை எல்லையாக இருக்க வேண்டுமாயின் அதற்கு முன்னால் செய்யப்பட்ட பயணம் வரை தரைப் பயணமாகவே இருக்க முடியும் எனத் தெரிகிறது. ஏனெனில் நீர்வழிப் பயணத்திற்கு நீர் நிலையே எல்லையாக முடியாது. மேலும் ஆகாய மார்க்கமாக இருந்திருந்தால் அதற்கு திசைகள் எல்லையாக இருக்க முடியாது. இவருடைய பயணத்தின் எல்லையாகக் குர்ஆன் குறிப்பிடுவது 'சூரியன் அஸ்தமிக்கும் எல்லை' என்பதே. அதாவது இவருடைய பயணத்திற்கு மேற்குத் திசையில் அமைந்த எல்லை என்று. ஆகவே இவர் மேற்குத் திசையிலுள்ள கடற்கரையை (அது எதுவாக இருந்தாலும் அதன் நீர் கறுப்பு நீராக இருக்க வேண்டும் என்பது நமது தலைப்போடு சம்பந்தப் படவில்லை) நெருங்கும் வரை, தரை வழிப்பயணமே மேற்கொண்டிருந்தார் என்பது தெளிவு.

மேலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தையும் இந்த வசனம் தெரிவிக்கிறது. அதாவது இவர் தம்முடைய நெடிய பயணத்தை மேற்குத் திசையில் மேற்கொண்டிருக்கிறார் என்பது.

மேற்கு நோக்கிய இவருடைய பயணத்தில் நீர் நிலை எல்லையாக அமைய, அதற்கு மேலும் இவர் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் ஒன்று இவர் நீர் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவோதான் பயணம் செய்தாக வேண்டும். இதற்குரிய சாதனங்களும் வாய்ப்புகளும் அந்த தொன்மையான காலத்தில் இருந்தனவா? என்று கேட்டால் அதற்குரிய பதிலையும் குர்ஆன் அந்த வசனங்களிலேயே கூறுகிறது. அதாவது:

'மேலும் அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும், வாய்பபுகளையும் வழங்கியிருந்தோம்' என்று. எனவே இறைவன் நாடியபடி பயணத்திற்குரிய சாதனங்களும், வாய்ப்புகளும் இவர் பெற்றிருந்தார் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.

துல்கர்னைன் அவர்கள் சென்றடைந்த அந்த இடத்தில் இறைவனின் உத்தரவுப்படி செயலாற்ற வேண்டிய காரியங்களைச் செய்த பிறகு, அவர் தம்முடையை பயணத்தை மீண்டும் தொடர்கிறார். அதைப் பற்றித் தொடர்ந்து கூறும் குர்ஆன் வசனங்களைக் கவனியுங்கள்:

'மீண்டும் அவர் புறப்பட்டார். சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்து விட்டார்.' (அல்-குர்ஆனின் 18வது அத்தியாயம் ஸுரத்துல் கஹ்ஃபுவின் 89, 90ஆம் வசனங்கள்.)

என்ன விந்தை! இந்தப் பயணத்தில் அவருடைய எல்லையாக அமைந்தது எதுவோ அது சூரியன் உதயமாகும் எல்லையா?. எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே! இங்கு ஓதப்பட்ட பரிசுத்த குர்ஆனின் வசனத்தின் பால் செவி நீட்டிக் கேட்டீர்களா இல்லையா?.

சூரியன் மறையும் எல்லையிலிருந்து மேற்கு நோக்கி இந்தப் பூமியின் மீது நெடிய பயணம் செய்து வந்த ஒருவர் சூரியன் உதிக்கும் எல்லையை அடைவதா?.

அதாவது மேற்கு நோக்கி, மேற்கெல்லையில் இருந்து தரை வழியாகவும், நீர் வழியாகவும் (துல்கர்னைன் அவர்களுடைய இரண்டாவது பயணமும் எல்லைக்கு உட்பட்டது எனக் குர்ஆன் கூறுவதால் இப்பயணம் நீர் வழிப் பயணமே என்பது தெளிவு) ஒருவர் பயணம் செய்து வந்தால் அவர் கிழக்குத் திசையை அடைய முடியுமா?.

முடியுமா என்ற கேள்விக்கே இடமில்லை!. ஒருவர் அவ்வாறு மேற்கிலிருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து கிழக்கை அடைந்தே விட்டார் எனக் குர்ஆன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. குர்ஆன் கூறுவதைப்போல் மேற்கு நோக்கிப் பயணம் செய்த ஒருவர் கிழக்கை அடைய வேண்டுமாயின் இந்தப் பூமியின் வடிவம் தட்டையாக, மேடை போன்றிருக்குமா?. அல்லது உருண்டையாக கோள வடிவத்தில் இருக்க வேண்டுமா?.

பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

ஆகவே இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்கள் வாயிலாகப் பூமி உருண்டையான கோள வடிவம் கொண்டதே என்று பரிசுத்த குர்ஆன் தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டது.

பண்டைக் கால கிரேக்கர்கள் பூமி உருண்டை வடிவம் கொண்டதேயென்ற அறிவியலைக் கூறாதிருப்பினும், பூமி உருண்டை வடிவம் கொண்டதேயென்ற அறவியலைப் பரிசுத்த குர்ஆன் கூறத்தான் செய்திருக்கும் என்பதில் இதற்கு மேலும் உங்களில் யாருக்கும் ஐயம் ஏற்பட வாய்ப்பில்லையல்லவா?.

பூமி உருண்டையான கோள வடிவம் கொண்டதே என்ற அறிவியலைக் குர்ஆனிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்ட படியால், பூமியின் சுய சுழற்சி (தன்னைத் தானே சுற்றுதல்) பற்றிப் பரிசுத்த குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை அடுத்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்..!

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5
விண்ணடுக்குகள் -6

Thursday, August 18, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-6

விண்ணடுக்குகள் -6


ஏ.கே.அப்துர் ரஹ்மான்

''ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15)

இந்த பரிசுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றபடி நீங்கள் ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாய் படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறீர்களா? உங்கள் ஐயத்தைத் தீர்க்க இது நாள் வரையிலும் நீங்கள் ஆகாயத்தின் பக்கம் பார்க்காதவர்களாயினும் சரி, ஆகாயம் இப்போதும் இருக்கவே செய்கிறது. உங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து கொஞ்ச நேரம் (அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும்) அதை உற்றுப் பார்த்து விட்டு அதில் அடுக்குகள் தெரிகின்றனவா என்பதைக் கூறுங்கள்.

நண்பர்களே! நான் கேலி செய்யவில்லை. இந்தப் பரிசுத்த வசனத்தின் ஆழத்தை, இவ்வசனத்தையும் இதைப் போன்ற இன்னும் ஏராளமான வசனங்களையும் உள்ளடக்கிய திருக்குர்ஆன் மெய்யாகவே மனித சக்திக்கு அப்பாற்பட்ட. மெய்யான இறைவனின் வார்த்தைகளே என்பதற்குரிய அறிவியல் ஆதாரங்களின் பரிணாமத்தை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமென்பதற்காகவே உங்களை உசுப்புகிறேன்.

எண்ணிப் பாருங்கள் நண்பர்களே! காலங்காலமாகப் பற்பல நோக்கங்களுக்காகப் பல கோடிக் கண்கள் அனுதினமும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போன இந்த ஆகாயப் பெருவெளியில் எந்த ஒரு மனிதராவது எந்த ஒரு அடுக்கையாவது கண்டிருக்கிறாரா? ஆனால் மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவிக்கும் தூதுச் செய்தியில் ஆகாயங்கள் யாவுமே அடுக்குகளின் தொகுப்பே எனும் கருத்துத் தொனிக்கிறதே! இதன் மர்மமென்ன?

மெய்யாகவே இந்த மனிதர் கூறியவாறு ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாகத் தான் அமைந்துள்ளன எனில் இந்தப் பேரண்ட இரகசியம், ஆறாம் நூற்றாண்டின் அறியாமைக் காரிருளில் மூழ்கிக் கிடந்த ஆகாயத்தின் இயற்பியலியல் (Astrophysics) காணப்படும் அரிய அறிவியல் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது? ஆகவே இவர் கூறியவாறு மெய்யாகவே நமது பேரண்டம் அடுக்கடுக்காகத்தான் அமைந்துள்ளது எனில் இவர் போதித்த குர்ஆன் வசனங்கள் இவருடைய வார்த்தைகளல்ல என்பது தெளிவு நண்பர்களே!

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் மானிடக் கணகளுக்குப் புலப்படாத இரண்டு விஷயங்களைத் தெரிவிக்கின்றது. முதலாவது விஷயம் ஆகாயங்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. இதை மானிடக் கண்களும் பார்த்ததில்லை. அறிவியல் கண்களும் இதுவரை இதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே இது குர்ஆனுக்கு சாட்சி கூறுவதற்காகக் காத்திருக்கும் எதிர்கால விஞ்ஞானத்தைச் சார்ந்தது.

உலகின் மிகச் சக்தி வாய்ந்த தொலை நோக்கி பூமிக்கு வெளியே 1250 கோடி ஒளி வருடங்கள் வரை பரவியிருக்கும் நெடிதுயர்ந்த இப்பேரண்டத்தின் விளிம்பைக் காட்டி அதற்கப்பால் எதுவும் இருப்பதற்கான அறிகுறிகளைத் தெரிவிக்கவில்லை. ஆகவே மீதமுள்ள எல்லையற்ற பெருவெளி வெறும் சூன்யம் என முடிவு செய்யத் தூண்டுகிறது இன்றைய விஞ்ஞானம். ஒரு கால் எதிர் காலக் கண்டு பிடிப்புகள் இதற்கப்பாலும் பேரண்டங்கள் இருப்பதை நிரூபித்தால் அதன் வாயிலாக ஏழு ஆகாயங்கள் யாவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அல்லது இன்றைய கண்டு பிடிப்பே முழுமையானது என்பதை எதிர்காலக் கண்டு பிடிப்புகள் நிறுவினால் அப்போது இந்தப் பேரண்டமே மிக முக்கியமான சில பண்புகளின் அடிப்படையில் ஏழு முதன்மைத் தொகுதிகளாக - ஏழு ஆகாயங்களாக - அவைப் பெற்றிருப்பதை நாம் அறிவியல் வாயிலாகக் கண்டு தெளிவோம் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் எழுப்பப் பட்டிருக்கும் வினாவே அதற்குச் சான்று!

அந்த வசனத்தில் இறைவன் ''நீங்கள் பார்க்கவில்லையா?'' என்ற வினாவை மானிட சமுதாயத்தைப் பார்த்து எழுப்புகிறான். ஆகவே மானிட சமுதாயம் அதைப் பார்க்கக் கூடிய நேரம் வந்தே தீரும் என்பதிலும் ஐயத்திற்கிடமில்லை.

இந்த வசனத்தில் கூறப்படும் மற்றொரு விஷயம் ஆகாயங்களை (ஏழு ஆகாயங்களும்) அதைப் படைத்தவன் யாரோ அவன் அடுக்குகளாகவே படைத்திருக்கிறான் என்பது. இந்த விஷயத்தையே நாம் இங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மானிடக் கண்களுக்கு நேரடியாகப் புலப்படாத இந்த விஷயத்தை மெய்யா பொய்யா என நாம் எப்படித் தெரிந்து கொள்வது? எந்தக் கோணத்தில் அணுகி இதன் யாதார்த்த நிலையை நாம் விளங்கிக் கொளவது? இதற்குரிய விடையைத் தேடினால் அந்த அற்புதக் குர்ஆன் மெலும் வினவுகிறது.

''ஆகாயம் எப்படி உயர்த்தப் பட்டுள்ளது என்பதை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) (88:18) என்று, நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஆகாயப் பெருவெளி எவ்வாறு அடுக்குகளால் அமைந்துள்ளது எனத் தேடினால் அந்தப் பணியை நிறைவேற்றும்படி பரிசுத்த குர்ஆன் நம்மையே ஏவுகிறது.

தற்போது மேற்கோள் காட்டப்பட்ட இந்த பரிசுத்த வசனத்தில் கூறப்படும் அறிவியலில் மேலும் புதிய செய்தி ஒன்றை அதன் ஆசிரியனாகிய இறைவன் பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா?

அதாவது ''ஆகாயம் எப்படி உயர்த்தப்பட்டுள்ளது'' எனக் கூறும் வசனத்தின் வாயிலாக ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவே என்ற அறிவியலை அவன் அறிவிக்கிறான் ஆகவே ஆகாயம் என்பது மெய்யாகவே உயர்த்தப்பட்ட ஒரு வஸ்து தானா என்பதற்கு முதலாவதாக நாம் விடை காண்போம். அதன் பிறகு அதில் அடுக்குகளைத் தேடுவோம்.

இந்த வசனத்தை ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் மானிட சமுதாயத்திற்கு இறைவன் இறக்கி வைத்தான். மிகத் தொன்மையான அந்தக் காலக் கட்டத்தில் இந்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியலைக் கற்பனையில் கூட எந்த மனிதனும் கண்டிருக்க முடியாது. அவ்வளவு ஏன்? இந்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியலை இன்றைய நாட்களில் அறிவியலோடு தொடர்புடைய மக்கள் பரவலாகப் பேசி வருகிறார்கள். அப்படியிருந்தும் ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவா என்பதை அவர்களிடம் கேட்டால் எவ்வளவு பேர் சரியாகப் பதில் சொல்வார்கள்?

''ஆகாயமா? உயர்த்தப்பட்டதா? இதென்ன பந்தலென்றா நினைத்தீர்கள் உயர்த்திக் கட்டுவதற்கு? அது உயர்ந்தே தான் இருக்கிறது யாரும் உயர்த்த வேண்டியது இல்லை'' எனக் கூறித் தங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுகின்ற மாமேதைகள்(?) கூட இன்றைய நாட்களிலும் அறிவாளிகளாக மதிக்கப்படுகிறார்கள் எனில் 1400 வருடங்களுக்கு முந்திய நிலை மிக மோசமாக இருந்திருக்கும் என விளக்கத் தேவையில்லையல்லவா?

அறிவார்ந்த நண்பர்களே! இந்தப் பின்னணியில் மேற்கண்ட வசனத்தை அணுகினால் ஒரு காலத்தில் ஆகாயம் உயர்த்தப்படாமலே இருந்துள்ளது எனக் கருத்தறிவிக்கும் அறிவியலை 1400 வருடங்களுக்கு முன் ஒருவரால் கூற முடியும் எனில் அவர் குறைந்த பட்சம் அறியாமைக்கு அப்பாற்பட்ட பேரறிவாளன் ஒருவனுடன் தொடர்பு கொண்டவர் என்பதையாவது நாம் ஏற்றாக வேண்டும்.

ஆகாயம் உயர்த்தப்பட்டது எனக் கூறும் குர்ஆன் வசனத்திற்கு, ஆகாயம் என்பது உயர்த்தப்பட்ட ஒரு வஸ்து அது உயர்த்தப்படுவற்கு முன்னால் அது உயர்ந்திருக்கவில்லை. மாறாகத் தாழ்ந்தோ அமிழ்ந்தோ (அல்லது அதைப் போன்று வேறு ஏதேனும் ஓர் நிலையிலோ) இருந்தது என்பது பொருள்.

நண்பர்களே! அறிவியல் கண்களுக்கு எட்டிய வரை இந்தப் பிரமாண்டமான பேரண்டம் 1250 கோடி ஒளி ஆண்டு வரை பரவி கம்பீரமாக நெடிதுயர்ந்து நிற்கிறது. இது இன்றைய நிலை, இவ்வாறே தான் இது அன்றும் இன்றும் (என்றும்) இருக்கிறதா? நாம் கொஞ்ச நாட்கள்(!) அதாவது 1800 கோடி வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம். அப்போது இந்தப் பேரண்டத்தின் நிலை என்ன? என்பதை முதல் கட்டுரையில் படித்திருப்பீர்கள் (பார்க்க முதல் கட்டுரை)

அதாவது 1800 கோடி வருடங்களுக்கு முன் இப்பேரண்டம் மிக மிகச் சிறிய பொருளுக்குள் மிக மிக அடர்த்தியாக இருந்தது என்றும் அதன் பிறகு ஏதோ ஒரு வானியல் காரணத்தால் திடீரென அப்பொருள் வெடித்துச் சிதறி இன்றைய நிலையை அடைந்தது என்றும் முதல் கட்டுரையில் கண்டிருப்பீர்கள். இப்போது கூறுங்கள், ஆகாயம் உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறும் இப் பரிசுத்த வசனத்தில் அடங்கியுள்ள அறிவியல் மெய்யா? அல்லது பொய்யா?

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று ஆகாயம் என்பது உயர்த்தப்பட்டிருக்கும் ஒரு வஸ்துவே. அடுத்தபடியாக ஆகாயம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

இந்தக் கட்டளையை எப்படி நிறைவேற்றலாம்? மானிடப் பார்வைகளின் சக்திக்கப்பால் உள்ள விஷயங்களைத் தெரிந்து கொள்ள அதற்கேற்ற கருவிகள் நமக்கு வேண்டுமே! அந்தக் கருவிகள் எங்கே?

ஓ..அறிவியலாளர்களே! பரிசுத்த குர்ஆன் எதைச் செய்யத் தூண்டுகிறதோ அதை அறிந்தோ அறியாமலோ செயல் படுத்திக் கொண்டிருப்பவர்களே! உள்ளங்களில் இறைவனின் உள்ளமையையும், ஆற்றலையும், ஏகத்துவத்தையும் வெளிச்சம் போட அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ ஈடுபட்டிருக்கும் மகத்தான காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களே! உங்களுடைய தொலை நோக்கிகளும் (Telescope) நிறமாலை நோக்கிகளும் (Spectroscopies) கூறும் செய்தியென்ன? இப்பேரண்டம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? நீங்கள் கண்டறிந்த விஷயங்களில் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்கக் கூடியு அறிவியல் ஆதாரங்கள் ஏதேனும் உண்டா?

உண்டு, நிச்சமாக உண்டு இப்பேரண்டம் உயர்த்தப்பட்டிருப்பதே அடுக்குகளாகத்தான் எனக் கூறுகிறது நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள்.

ஆகாயம் உயர்த்தப்பட்ட ஒரு வஸ்துவே எனக் கூறிய பரிசுத்த குர்ஆனின் மற்றொரு வசனத்தைச் சாட்சி கூறி மெய்ப்பித்து நிற்கும் அறிவியலைப் பார்த்து இந்த ஆகாயம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது எனக் கேட்டபோது ஆகாயம் அடுக்கடுக்காகவே உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகிறது அறிவியல். அடுக்கடுக்காக என்றால் எவ்வாறு? இந்த வினாவிற்குரிய பதிலை இப்போது காண்போம்.

ஆகாயத்தில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை கொஞ்சமா? நஞ்சமா? ஒன்றா? ஓராயிரமா? அல்ல நண்பர்களே அல்ல! அதிகம்பீரமான இப்பேரண்டத்தில் ஏறத்தாழ 100 கோடி அடுக்குகள் (Galaxies) அமையப் பெற்றுள்ளன எனக் கூறி நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆன் வசனத்தை மிக மிக உறுதியாக மெய்ப்பித்து நிற்கிறது நவீன அறிவியல்.

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே! இப்பரிசுத்த குர்ஆனின் அமானுஷிகத் தன்மை, இதன் பொய்க் கலப்பற்ற தூய நிலை நம்மை மெய்சிலிர்க்க வைக்கவில்லையா? இந்த அற்புத வேதத்தை விட்டு நம்மால் முகம் திருப்ப முடியுமா?

நண்பர்களே! முதலாவதாக பேரண்டத்தின் இயற்பியலைப் (Astrophysics) பற்றிய ஆய்வில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ''வில்லியம் ஹெர்ஷல்'' என்ற அறிவியல் மேதை தான் ஆகாயத்தில் அடுக்குகளைக் கண்டவர். இவருடைய கண்டு பிடிப்புகள் ஒரு புறத்தில் பரிசுத்த குர்ஆனை ஒப்புக் கொண்ட போதிலும் மறுபுறத்தில் குர்ஆனை மறுத்தன.

அதாவது இவருடைய ஆய்வு ஆகாயத்தை 688 அடுக்குகளாக வகைப் படுத்திய போதிலும் அதில் ஒரே ஒரு அடுக்கு மட்டுமே (பால்வழி மண்டலம் மட்டுமே) நட்சத்திரங்களைக் கொண்டதாகவும் அதிலும் அந்த அடுக்கின் மையத்தில் சூரியன் இருப்பதாகவும் காட்டி ஏனைய அடுக்குகள் எதிலும் நட்சத்திரங்கள் இல்லை எனக் கூறிற்று. இதன் வாயிலாக, நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும்

''ஏழு ஆகாயங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய்ப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (71:15) எனும் வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் அடுக்குகளை இவரது ஆய்வு ஒப்புக் கொண்டு, அதே சமயம் பரிசுத்த குர்ஆனின் மற்றொரு பரிசுத்த வசனத்தை மறுப்பதாக அமைந்தது.

பொய்யின் நிழலைக் கூட அண்ட விடாத அதி பரிசுத்த பேரொளியாம் ஒப்பற்ற திருக்குர்ஆன் ஆறாம் நூற்றாண்டிலேயே வரப்போகும் நூற்றாண்டுகள் அனைத்தையும் பார்த்துக் கூறிற்று, ''இன்னும் அவற்றில் (ஏழு வானங்களில்) சந்திரனைப் பிரகாசமாகவும் சூரியனை விளக்காகவும் ஆக்கியிருக்கிறான்'' (71:16) என்று!

அருமை நண்பர்களே! நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனம் இது. இந்த வசனத்தின் வாயிலாகக் குர்ஆன் கூறும் அறிவியல் பேருண்மையென்ன?

அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் வில்லியம் ஹெர்ஷல் எனும் அறிவியலாளர் பால்வழி மண்டலம் ஏனும் அடுக்கில் மட்டுமே நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறப் போகும் தகவல் தவறு. மாறாகத் தன்னுடைய ஆசிரியனாகிய, மிக்க மேலான அல்லாஹ் (ஜல்) ஆகாயங்கள் யாவிலும் (ஏழு ஆகாயங்களிலும்) சூரியனையும் (நட்சத்திரம்) - சூரியன் மட்டுமென்ன - சந்திரனையும் (துணைக் கோளையும்) படைத்திருக்கிறான் எனக் கூறிக் காலத்தையும் வென்ற ஒப்பற்ற அறிவுக் களஞ்சியமாய் உலக மக்கள் அனைவருக்கும் பாடம் நடத்துகிறது.

அற்புதமல்லவா இது! எதிர்காலத் தவறுகளையே தீர்க்க தரிசனமாய்க் கண்டு தடுத்து, எதிலும் மெய்களின் பால் நம்மை வழி நடத்தப் பேரொளியாய் வந்திருக்கும் இப்பரிசுத்த வேதத்தையா புறக்கணிக்க முடியும்? சிந்திக்க வேண்டாமா?

பால்வழி மண்டலத்தில் மட்டுமல்லாது ஆகாயமெங்கும் நட்சத்திரங்கள் உண்டு எனக் குர்ஆன் மட்டும் தானே கூறுகிறது அதற்குரிய அறிவியல் சாட்சியம் எங்கே எனக் கேட்கிறீர்களா?

பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியல் மேதை வில்லியம் ஹெர்ஷலுக்கு ஏற்பட்ட தவறு அமெரிக்க அறிவியல் மேதை ''ஷெப்லி'' அவர்களால் முதல் திருத்தம் செய்யப்பட்டது. சூரியக் குடும்பம் பால்வழி மண்டலத்தின் மையத்தில் இல்லை. அது இம்மண்டலத்தின் ஒரு ஓரத்தில் இருக்கிறது என 1918-ல் ஆரம்பித்த இவரது கண்டுபிடிப்புக்குப் பிறகு இத்துறையில் படிப்படியான முன்னேற்றங்களைக் கண்டு இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற அறிவியல் மேதையாம் திரு, ஜன்ஸ்டீன் வரையிலான அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் அவையாவும் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்துக் கொணடிருக்கும் அற்புதத்தைக் கண்டு அறிவியலை மதிக்கும் எந்த நபராலும் வியக்காமல் இருக்க முடியாது.

நெடிதுயர்ந்த கம்பீரமாகக் காட்சியளிக்கும் இப்பேரண்டத்திற்குள் அமைந்திருக்கும் அடுக்குகள் அவைகளுக்கே உரிய பரப்பளவு எல்லை வரம்பு மற்றும் வடிவம் போன்ற சிறப்பம்சங்களால் ஒவ்வொன்றும் ஒரு மண்டலமாகக் (Galaxy) காட்சியளிக்கிறது. இப்படிப்பட்ட மண்டலங்கள் இப்பேரண்டத்தில் ஏறத்தாழ 100 கோடி. இவை ஒவ்வொன்றும் நட்சத்திரங்கள் (Star) குவாசர்கள் (Quasars) கருக்குழிகள் (Black Holes) போன்ற விண்ணகப் பருப்பொருட்களால் (Celestrial Bodies) நிரம்பப் பெற்றிருக்கின்றன.

(குவாசர்கள், கருங்குழிகள் போன்ற பொருட்கள் மிகத் தொலைவில் இருப்பதால் இவற்றின் இயற்பியல் பண்புகள் இன்னமும் சரியாக அறியப்படவில்லை. இருப்பினும் குவாசர்கள் என்பது நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிக ஒளியுடையவை எனவும் கருங்குழிகள் ஒளியற்றவை எனவும் முன்னவை சிற்றுருவங்கள் எனவும் பின்னவை நட்சத்திரங்களை விடப் பேருருவும் கொண்டவை எனவும் கருத்தில் கொள்க)

இவ்வாறு மண்டலம் மண்டலமாக அமையப் பெற்றிருக்கம் ஒவ்வொரு அடுக்கிலும் கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கின்றன. இதில் நமது பூகோளம் அமையப் பெற்றிருக்கும் அடுக்காகிய பால்வழி மண்டலத்திற்குள் இருக்கும் விண்மீன்களின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரம் கோடி. இந்த பத்தாயிரம் கோடி நட்சத்திரங்களுக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே நமது சூரியன். இந்தச் சூரியனுக்குக் கோள்களும் துணைக் கோள்களும் இருப்பதைப் போல சூரியனை ஒத்த ஏனைய நட்சத்திரங்களுக்கும் கோள்களும் துணைக் கோள்களும் இருக்க வேண்டும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

சூரியக் குடும்பத்தைத் தவிர உள்ள நட்சத்திரங்களில் கோள்களையும் துணைக் கோள்களையும் பற்றிய அறிவியல் வெறும் கணிப்புடன் நிற்பதற்குக் காரணம் அவைகள் நட்சத்திரங்களைப் போல் சுயமாக ஒளி விடாததேயாகும். இவை சுயமாக ஒளி விடாத காரணத்தால் தொலை நோக்கிகளுக்கோ அல்லது நிறமாலை நோக்கிகளுக்கோ இவை அகப்படுவதில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆகாயத்திலும் துணைக் கோளும் உண்டு எனக் கூறும் குர்ஆன் வசனத்தை அறிவியலாளர்களின் கணிப்பு ஆதரிக்கவே செய்கிறது.

பால்வழி மண்டலத்திற்கு மிக அருகில் உள்ள அடுக்கு 'ஆண்ட்ரமீடா' என அழைக்கப்படுகிறது இது பால் வழி மண்டலத்தைக் காட்டிலும் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. பால்வழி மண்டலம் தட்டையான சக்கர வடிவம் கொண்டது. இதன் பருமன் 10,000 ஒளியாண்டுகள், குறுக்களவு ஒரு லட்சம் ஒளியாண்டுகள்.

பேரண்டத்தில் பரவியிருக்கும் அடுக்குகள் ஏராளம் ஏராளாமாக இருப்பதால் அவைகளுக்குப் பெயரிட எண்களையும் எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். சான்றாக நமக்கருகில் உள்ள அடுக்குகள் 'M' அடுக்கு 'M-33' அடுக்கு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! ஆகாயங்கள் அடுக்குகளாகத் தான் அமைந்திருக்கின்றன என்ற பேரண்டத்தின் இயற்பியல் பற்றிய பரிசுத்த குர்ஆனின் அறிவியல் பிரகடனம் மெய்யா? பொய்யா?

இப்பேரண்டம் அடுக்குகளால் அமைந்ததே என்ற அறிவியலை நாம் பார்த்தே தீருவோம் எனக் கருத்துணரப்பட்ட குர்ஆனுடைய தீர்க்க தரிசனம் மெய்ப்பிக்கப்பட்டதா இல்லையா?

ஒவ்வொரு ஆகாயத்திலும் சூரியன் (நட்சத்திரம்) உண்டு எனக் கூறிய ஆறாம் நூற்றாண்டின் பரிசுத்த குர்ஆனைப் பதினெட்டாம் நூற்றாண்டு மறுத்த போது அந்த மறுப்பையே இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் தகர்த்தெறிந்து பரிசுத்த குர்ஆன் உண்மை, உண்மை, உண்மையென ஓங்கி ஒலித்துத் தன்னை அசைக்க முடியாத சாட்சியாக அந்த அற்புத வேதத்திற்கு அர்ப்பணித்து நிற்கிறதா இல்லையா?

மானிடர்களாகிய நம்மில் சிலர் எங்கு செல்கிறார்கள் நண்பர்களே? பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவியலால் கூட கண்டு பிடிக்க இயலாத விஷயத்தையா ஆறாம் நூற்றாண்டின் தனி மனிதரால் கண்டு பிடிக்க முடிந்தது? இது மனித சக்திக்கு அப்பாற்ப்பட்ட வார்த்தைகளே (வேதமே) என்பதை இன்னும் இவர்கள் உணர மாட்டார்களா?

இந்த அற்புத வேதம் மெய்யாகவே இறைவனின் வார்ததைகள் தாமா? அல்லவா எனக் கண்டறிய அறிவியலைக் காட்டிலும் உயர்ந்த ஆதாரம் ஒன்று இருந்து அதைத் தேடித்தான் அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்களா?

இவர்கள் தாம் அறிவியலை ஏற்கும் பண்புடையவர்களா? இவர்கள் சிந்திக்க மாட்டார்களா நண்பர்களே?

அருமை நண்பர்களே! ஆகாயங்கள் யாவும் அடுக்குகளாகத்தான் அமைந்திருக்கின்றன எனக் கூறும் பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க சாட்சிக் கூண்டை நோக்கி ஓடோடி வரும் மற்றொரு அறிவியல் பேருண்மையைப் பாருங்கள்.

பூகோளத்தைச் சூழ்ந்து நிற்கும் வளிமண்டலக் கூரை, 'இந்த வசனத்திற்குச் சாட்சி கூறும் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், நானும் ஆகாயம் என்ற சொல்லுக்கு உட்பட்டவனே, ஆகவே என்னுடைய இறைவனைத் துதிக்கும் பட்டியலில் நானும் உள்ளேன்' எனக் கூறி ஓடோடி வந்து அதிலுள்ள அடுக்குகளை அடையாளம் காட்டுகிறது.

வளிமண்டலத்தைப் பற்றிய அறிவியல் ஆய்வு 1643-ல் இத்தாலிய விஞ்ஞானிகளால் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் தம்முடைய ஆய்வுக் கருவிகளுடன் 1730-ல் மலை மீதேறிய டாக்டர் 'ஹாலி' அவர்களே இம்மண்டலத்தில் அடுக்குகளைக் கண்ட முதலாவது அறிவியலாளராவார். அதன் பிறகு பலூன்களைப் பயன் படுத்த அறிவியலாளர்கள் கற்றுக் கொண்ட பின் 1745, 1784, 1910 எனப் படிப்படியாகப் பல வளர்ச்சிக் கட்டங்களைத் தாண்டி அண்மைக் கால ஆங்கிலேய அறிவியல் மேதை எட்வார்ட் அப்பில்டன் வரையிலான அறிவியலாளர்களின் கண்டு பிடிப்புக்கள் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆன் கூறிய அறிவியலை மெய்ப்பித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

வளி மண்டலத்தின் முதல் அடுக்கு பூமியின் மேல் பரப்பிலிருந்து கிட்டதட்ட 16 கி.மீ வரை பரவியுள்ளது. இந்த அடுக்கில் உயரே செல்லச் செல்ல ஒவ்வொரு இருநூறு மீட்டருக்கும் ஒரு டிகிரி (1 'C/200 Mts) வெப்பம் குறைந்து கொண்டே செல்லும் எனவே இந்த அடுக்கு ''மாறும் வெப்ப நிலை மண்டலம்'' (Troposhere) என அழைக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் மொத்தமுள்ள காற்றில் 75% முதல் 79% வரை இந்த அடுக்கில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக உள்ளது ''மாறா வெப்பநிலை இடைவெளி'' (Tropopause) என்பதாகும் இதில் முந்திய அடுக்கை விட வெப்பம் திடீரென அதிகரித்து இதன் முந்திய மற்றும் பிந்திய அடுக்குகளைப் பிரித்துக் காட்டும் தனி அடுக்காக அமைந்தள்ளது.

அடுத்தபடியாக உள்ளது ''மாறா வெப்பநிலை மண்டலம்'' (stratospere). இதில் உயரத்திற்கேற்ப வெப்பத்தில் எந்த மாறுதலும் இல்லை. இம்மண்டலம் ஏறத்தாழ 50 கி.மீ வரை பரவியுள்ளது.

இதற்கடுத்த அடுக்கு உயிர்ப் பிராணிகளுக்கு கவசம் போல் (இது பற்றிய முந்திய பதிவில் சொல்லப்பட்டுள்ளது) அமைந்திருக்கும் ஓசோன் எனும் மிக மெல்லிய அடுக்கு (Ozone Layer) இதைத் தாண்டியதும் அயனி மண்டலம் (Inosphere) ஆரம்பமாகிறது.

ஆரம்ப காலத்தில் அயனி மண்டலம் என்பது ஒரே ஒரு அடுக்குகள் என விஞ்ஞானிகள் எண்ணினார்கள். ஆனால் அயனி மண்டலத்தைப் பற்றிய ஆய்வுகளில் நவீன விஞ்ஞான யுகம் செயற்கைத் துணைக் கோள்களைப் (Artificial Satelites) பயன்படுத்தத் துவங்கியதும் இந்த அயனி மண்டலம் ஒரே அடுக்கல்ல, அதற்குள்ளும் வெவ்வேறு அடுக்குகள் இருக்கின்றன என ஆய்வுகள் காட்டின.

இம்மண்டலத்தில் 90 கி.மீ வரை பரவியுள்ள பகுதி 'D' அடுக்கு எனவும் 180 கி.மீ வரை பரவியிருப்பதை 'E' அடுக்கு எனவும் அதற்கு மேல் 300 கி.மீ வரை பரவியிருப்பதை 'F1' அடுக்கு மற்றும் 'F2' அடுக்கு என இரு அடுக்குகளாகவும் பிரிப்பதை ஆய்வுகள் காட்டின.

300 கி.மீ வெளியே 'புறவெளி மண்டலம்' (Exosphere) எனும் அடுக்கு ஆரம்பித்து வளி மண்டலத்தின் எல்லையாகிய 500 கி.மீ வரை பரவி நிற்கிறது!

பார்த்தீர்களா! ஆகாயங்கள் யாவையும் அடுக்கடுக்காக எவ்வாறு படைத்திருக்கிறான் என்ற பரிசுத்த குர்ஆனின் வியக்கத்தகு வினாவிற்கு, இவ்வாறு தான் படைக்கப்பட்டுள்ளன எனக் கூறி வளி மண்டலத்தின் சிற்றடுக்குகளையும் நட்சத்திர மண்டலங்களின் பேரடுக்குகளையும் பற்றிய நவீன அறிவியல் பேருண்மைகள் சாட்சி கூறி நிற்பதை!

அறிவியல் அபிமானிகளே! இதற்கு மேலுமா இப்பரிசுத்த வேதத்தை நம்மால் புறக்கணிக்க முடியும்?

பேரண்டம் முழுவதும் பரவியிருக்கும் 100 கோடி அடுக்குகளில் நவீன அறிவியல் மேலும் ஒரு உயர் தொகுதியைக் கண்டிருக்கிறது. இத்தொகுதிகள் ஒவ்வொன்றும் சில நட்சத்திர மண்டலங்களை உள்ளடக்கிய ''உட்குழுவாக'' (Local Groups) அமைந்துள்ளன. இதில் நமது பால் வழி மண்டலம் அமைந்திருக்கும் உட்குழுவில் இருபத்தி நான்கு நட்சத்திர மண்டலங்கள் (Galaxies) உள்ளடங்கியுள்ளன.

நவீன அறிவியல் கண்டு பிடிப்புக்கள் இந்தக் கோணத்தில் முன்னேறிச் சென்றால் இதற்கு மேலும் உயர் பிரிவுகளைக் கண்டறிந்து முடிவாக இந்தப் பேரண்டத்திற்குள்ளாகவே எண்ணிறைந்த நட்சத்திர மண்டலங்கள் பரிசுத்த குர்ஆன் கூறியவாறு ஏழு முதன்மைத் தொகுதிகளாக - ஆம்! ஏழு ஆகாயங்களாக - அமைந்திருப்பதைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை என எண்ணத் தோன்றுகிறது.

இவ்வளவு அழுத்தம் திருத்தமாக இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் பேருண்மைகளாயினும் சரி, தற்போது கண்டு பிடிக்கப்பட்டு வரும் அறிவியல் பேருண்மைகளாயினும் சரி! ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முந்திய தொன்மையான காலக் கட்டத்தில் அருளப் பெற்ற ஒரு வேதத்தை நூற்றுக்கு நூறு என்ற விதத்தில் அறிவியல் வாயிலாக நிரூபித்து நிற்கிறது எனில் அந்த வேதம் மனித சக்தியால் இயற்றப்பட்டதாக இருக்க முடியுமா? என்பதை சிந்திக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆகவே பரிசுத்த குர்ஆன் மனித சக்திக்கு அப்பாற்பட்டதே எனச் சாட்சி கூறி நிற்கும் நவீன அறிவியலின் அறைகூவலை ஏற்று அறிவியலோடு அறிவாளிகளாக நாமும் அந்த அறைகூவலில் பங்கு பெறத் துணிவுடன் திரள்வோம். இதுவே அறிவியலை ஏற்கும் துணிவு பெற்றவர்களின் பண்பாக இருக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமேது?

ஆகவே அறிவியலை ஏற்கும் பண்புடையவர்களே! அறிவியலே வழிகாட்டி அழைத்துச் செல்லும் இப்பரிசுத்த குர்ஆனின் பால் நாம் அனைவரும் ஒன்று திரள்வோம், துணிவுடன் வாருங்கள்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.
பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4
பேரண்டத்தின் ஈர்ப்பு விசை -5

Saturday, August 13, 2005

அடிமைகள்.

காவி பக்தர் ஆரோக்கியம் என்பவர் //*அறிவியல் என்ற பதிவுகளுக்கு முஸ்லீம் முல்லாக்கள் தாவியதும் இந்த காரணத்தினால்தான்*// என்று தமது பதிவில் எழுதியிருக்கிறார். நாமும் சில மாதங்களுக்கு முன்பு ஒரிரு கேள்விகளை வைத்தபோது பதில் சொல்ல வக்கற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு திசை திருப்பி இறுதியில் மனோ தத்துவ டாக்டர்களின்(?) பின்னால் மறைந்து கொண்டார்களே இது எதற்காகவாம்? சொல்வாரா காவி பக்தர்.

பனூ முஸ்தலிக் போரில் கைது செய்யப்பட்டப் பெண்களை முஸ்லிம்கள் பலத்காரம் செய்தார்கள் என்றும், இஸ்லாம்தான் அடிமைகளை உருவாக்கியது போலவும் எப்படியும் இட்டுக்கட்டியாவது ஆவணப்படுத்திவிட வேண்டும் என்பதில் காவி பக்தர் ஆரோக்கியம் பெரும் முனைப்போடு எழுதி வருகிறார். இதற்காக நாம் எழுதாத கருத்தையும், எழுதியதாக அதாவது பனூ முஸ்தலிக் குலத்தைச் சேர்ந்த பெண்களை சிறைபிடித்து முஸ்லிம்கள் பலத்காரமாக - வன் - புணர்ந்தார்கள். அது சரிதான் என்று நாம் சரிகண்டு எழுதியதாக ஒரு கீழ்த்தரமான அவதூறையும் எழுதியிருக்கிறார்.

காவி பக்தர் தமது பின்னூட்டத்தில் என்னைக் குறிப்பிட்டு எழுதியது: //*அபு முஹை இப்போது போர் தளபதியாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் போரில் ஒரு ஊரில் உள்ள ஆண்களை கொன்று தள்ளிவிட்டார். தங்கள் கணவன்மார்கள், மகன்கள் தந்தையர்கள் இப்போதுதான் போரில் இறந்திருக்கிறார்கள். அதனைப் பார்த்து அந்த ஊர் பெண்களுக்கு என்ன உணர்ச்சி இருக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அந்த பெண்களை அபு முஹையின் படை போர்க்கைதிகளாகப் பிடித்திருக்கிறது.

அபு முஹையின் போர்வீரர்கள் இந்த பெண்களை பலாத்காரம் செய்கிறார்கள். அதில் ஒரு சிலர் அபு முஹையிடம் வந்து" புணர்ச்சி இடைமறிப்பு செய்யலாமா?" என்று கேட்கிறார்கள். அதற்கு புணர்ச்சி இடைமறிப்பு செய்யாதே. ஏனெனில் யார் யாரெல்லாம் இந்த பூமியில் பிறக்கப்போகிறார்கள் என்று ஏற்கெனவே எழுதி வைத்திவிட்டான்" என்று அபு முஹை கூறுவாரா? கூறமாட்டார்.

அபு முஹை என்ன சொல்வார் என்பதைப் பற்றி எனக்கு ஒரு கருத்து இருக்கிறது.

"அடப்பாவிகளா? அந்தப் பெண்கள் இப்போதுதான் தங்கள் கணவன்களை தந்தையரை பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். அவர்களை பலாத்காரம் செய்கிறீர்களே இது அடுக்குமா? சீச்சீ. நீங்களெல்லாம் மனுஷர்களா? இந்த லட்சணத்தில் வந்து என்னிடம் நீங்கள் புணர்ச்சி இடைமறிப்பு செய்யலாமா என்று கேட்கிறீர்களே? வெட்கமாக இல்லை. உன் மனைவி தவிர மற்ற பெண்களை நீங்கள் தாயைப்போல அல்லவா மதிக்க வேண்டும்?" என்றுதான் அறிவுரை சொல்லியிருப்பார்.*//

இவ்வாறு எழுதியிதற்குப்பதிலாகவே நானும் எனது பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன்:

//*உதாரணமாக: அபூ முஹை என்பவர் ராணுவத் தளபதி என்பது போல், எதிரணியில் ராணுவத் தளபதியாக ஆரோக்கியம் என்பவர் இருக்கிறார். என்று வைத்துக் கொள்வோம் இரு அணியினருக்கும் பொதுவான போர் நிபந்தனைகளில் - போரில் தோல்வியடைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வெற்றியடைந்தவர்களுக்கு அடிமையாக வேண்டும், பெண்கள் போரில் உதவி செய்யும் வழக்கமிருந்ததால் - பெண் போர் கைதிகளும் அடிமையாக்கப்பட்டார்கள். பெண் அடிமைகளை அவர்களின் எஜமானர்கள் அனுபவித்துக் கொள்ளலாம் - அதாவது போரில் நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி நிராகரிப்பாளர்கள் அனுபவித்தார்கள் - போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் நிராகரிப்பாளர்களின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அனுபவித்தார்கள்.

போரில் ஆரோக்கியம் என்பவரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த அபூ முஹை என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை, அடிமைகளாக்கி ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அனுபவித்துக் கொள்வார்கள் - போரில் அபூ முஹை என்பரின் அணி ஜெயித்தால், தோல்வியடைந்த ஆரோக்கியம் என்பவரின் அணியின் பெண் போர் கைதிகளை அடிமைகளாக்கி அபூ முஹை என்பவரின் அணியினர் அனுபவித்தக் கொள்வார்கள். இரு போர் அணியினர்களுக்கும், ஒருவரையொருவர் வெற்றி கொண்டால் கைது செய்யப்பட்ட பெண்களை அடிமைகளாக்கி அனுபவிப்பதில் சம உரிமை இருந்தது.

ஆரோக்கியம் என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவித்துக் கொண்டே, அபூ முஹை என்பவரின் அணியினர் அடிமைப் பெண்களை அனுபவிப்பதை தீண்டத்தகாத மாதிரி விமர்சித்தால் ஆரோக்கியம் என்பவரின் சிந்தனையை என்னவென்பது?

போரில் கைது செய்யப்பட்டவர்கள் அடிமைகளாக இருக்கவும், எஜமானர்கள் அடிமைப் பெண்களை அனுபவிப்பதும் பண்டைய மக்கள் அவர்களாகவே ஒப்புக்கொண்ட சமாச்சாரம். இஸ்லாம் அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழியைக் காட்டியதேயன்றி, இஸ்லாம் அடிமைகளை உருவாக்கவில்லை என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம்.*//

இதில் எங்காவது ''அடிமைப் பெண்களை பலவந்தமாக - வன் - புணர்ந்தார்கள்'' என்று சொல்லி அதை ஆதரித்து எழுதியிருக்கிறேனா..? (இது N.ராகவன் அவர்களின் மிக முக்கியக் கவனத்திற்கு)

//*டோ ண்டு & அபு முஹைக்கு ஒரு கேள்வி

பானு முஸ்டாலிக் ஜாதியினரை முகம்மதுவும் முகம்மதின் படையும் அவர்கள் அறியாவண்ணம் தாக்கி ஆண்கள் அனைவரையும் கொன்று, பெண்களை சிறைபிடித்து பெண்களை பலாத்காரம் செய்ததை எழுதியிருந்தேன்*//

பனூ முஸ்தலிக் குலத்தினரின் பெண்களை, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் படைகள் பலாத்காரம் செய்தார்கள் என்பதைக் காட்ட முடியுமா..? (இது காவி பக்தர் ஆரோக்கியம் அவர்களின் கவனத்திற்கு)

குறிப்பு: ஆண், பெண் அடிமைகளை இஸ்லாம் உருவாக்கவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மக்காவில் அடிமைகள் இருந்தார்கள் என்பதை அவகாசமாக - நேரம் கிடைக்கும்போது இதே பதிவின் பின்னூட்டத்தில் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.

Thursday, August 11, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-5

பேரண்டத்தின் ஈர்ப்பு விசை! -5


ஏ.கே. அப்துர் ரஹ்மான்

எல்லைகளக் கொண்ட ஆகாயப் பெருவெளியில் கணமும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கும் பூகோளம் அதன் எல்லையைத் தாண்ட விடாமல் தடுக்கப்படுகிறது என 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது பரிசுத்த குர்ஆன். இப்பரிசுத்த வசனத்தை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகளில் ஒன்றை முந்தைய கட்டுரையில் நாம் கண்டோம்.

இப்போது மற்றொரு சான்றையும் கவனியுங்கள்.

மெய்யாகவே இந்த பூகோளம் ஆகாயத்திலிருந்து விலகிச் செல்வதாக வைத்துக் கொண்டால், அனைத்துக்கும் முதலாவதாக இது பூகோளத்திற்கு மேல் போர்த்தப்பட்டுள்ள காற்று மண்டலத்திலிருந்து விலகும். அதன் பிறகு படிப்படியாகப் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும். ஆனால் நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் (35:41) வசனமோ ஆகாயமும், பூமியும் விலகாமல் தடுக்கப்படுவதாகக் கூறுகிறது. இந்த வசனத்தின்படி பூமி காற்று மண்டலத்திலிருந்து விலகுவதும் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஏனெனில் ஆகாயம் என்ற சொல்லில் காற்று மண்டலமும் உள்ளடங்குகிறது என்பதை நாம் இதற்கு முன்பு செய்த ஆய்வுகளில் கண்டிருக்கிறோம்.

ஆகவே, இந்த வசனம் மெய்யல்ல என்றால் இந்தக் கட்டுரையோ, கட்டுரையாளனோ அல்லது படிக்கும் நீங்களோ இல்லை.

ஆம். நண்பர்களே! நாம் வசிக்கும் இந்த பூகோளம் தன் பாட்டுக்கு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் விண்ணுலா சென்றால், வெறும் 500 கி.மீ. மட்டுமே பருமன் கொண்ட நமது காற்று மண்டலத்திலிருந்து ஒரு சில நொடிகளிலேயே விலகிச் சென்று விடுமே. அதன் பிறகு நமது கதி என்ன?.

இந்தப் பூகோளம் காற்று மண்டலத்திற்குள் வெறும் 16 கி. மீ. தூரம் நகர்ந்தாலே அங்குள்ள காற்று, அதியற்புதப் படைப்பாளானால் நமது உடலுக்குள் படைத்து வைக்கப்பட்டுள்ள நுறையீரலின் சிற்றறைக்குள் (Pulmonary Alveoli) நுழையாது. நமது உடலின் இரத்த நாளங்களில் பிராண வாயுவைப் புகுத்தும் இந்தச் சிற்றறைகளில் காற்று நுழையாவிடில் நமக்கு பிராணவாயு இல்லை. சென்ற நூற்றாண்டில் 10 கி.மீ. தூரம் பலூன்களில் பறந்து கொண்டிருந்த நமது காற்று மண்டல ஆய்வாளர்கள் அங்கு பிராண வாயுவின் (Oxygen) பற்றாக் குறையினால் மயிரிழையில் உயிர் தப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆகவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பரிசுத்த குர்ஆனின் வசனத்தில் கூறப்பட்டவாறு விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படும் நிகழ்ச்சி உண்மை அல்லவென்றால் நாம் இல்லை. ஆகவே பரிசுத்த குர்ஆன் கூறும் இந்த அறிவியல் பேருண்மையை நீங்கள் மறுக்க முடியாது.

நாம் மறுக்கவில்லை: ஏற்கவே செய்கிறோம். ஆனால் நமது வீடாகிய இந்த பூமி ஆகாயத்தில் நகராமல் நிற்கிறதா?. இல்லை. நகரவே செய்கிறது. நமது காற்று மண்டலமாவது அண்டங்கள் யாவும் பரவி நிற்கிறதா?. அதுவும் இல்லை. வெறும் 500 கி.மீ.க்குள் அடங்கிவிடுகிறது. நிலைமை இதுவென்றால் மெய்யாகவே அறிவியலை ஏற்கும் துணிவு பெற்றவர்களே! நீங்கள் கூறுங்கள்! மெய்யாகவே விண்ணும், மண்ணும் விலகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி ஒன்று அதில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆன் மெய்யா?. பொய்யா?.

மெய்யாயகவே விண்ணும், மண்ணும் விலகும் வாய்ப்பிருந்தும் அது தடுக்கப்பட்டுள்ளது என ஒருவர் கூற வேண்டுமாயின், அவர் அதனோடு தொடர்பு கொண்ட எத்தனை, எத்தனை அறிவியல் பேருண்மைகளைத் தெரிந்திருக்க வேண்டும்?.

அவை அனைத்தையும் நவீன அறிவியலின் அரிச்சுவடியைக் கூடக் கற்பனையிலும் பார்க்க முடியாத 1400 வருடங்களுக்கு முந்தைய அறியாமைக் காலத்தில் தோன்றிய ஒரு மனிதரால் கூறியிருக்க இயலுமா?.

அறிவியலோடு மோதி, மோதி மாய்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கற்பனைப் புதினங்களைப் போன்றதா இந்த அற்புதக் குர்ஆன்?. இருபதாம் நூற்றாண்டின் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம், அதற்கும் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தன்னை மெய்ப்பிக்கும் அரிய சாட்சிகளாய் வரிசையில் நிற்க வைத்த மெய்யான இறைவனின் மெய்யான வசனங்களல்லவா?. கூறுங்கள் நண்பர்களே! கூறுங்கள்.

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வசனம் எப்படித் துவங்குகிறது?.

'நிச்சயமாக வானங்களும், பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு..'

அதாவது பூமி மட்டுமே விலகும் வாய்ப்பைக் கொண்டதில்லை: வானங்களும் விலகும் வாய்ப்பைக் கொண்டனவே. ஆனால் அதையும் அல்லாஹ் தடுத்துக் கொண்டிருக்கிறான் எனக் கூறுகிறது அந்த வசனம்.

நாம் அந்த இரட்சகனை என்னவென்று புகழ்வோம்?.

கோள்களும், ஏனைய பருப்பொருட்களும் விண்ணில் ஓடுகின்றன. ஆகவே அவை ஆகாயத்திலிருந்து விலகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதைக் கண்டோம். ஆனால் ஆகாயங்களும் விலகாமல் தடுக்கப்படுகின்றன என்றால் ஆகாயங்களும் ஓடுகின்றனவா?.

ஆம்! ஓடுகின்றன. கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும், ஏனைய பருப்பொருட்களையும் உள்ளடக்கிய பேரண்டத்தின் ஒவ்வொரு பகுதிகளும் (Galaxies) பேரண்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகிறது நவீன அறிவியல் யுகத்தின் நிறமாலை நோக்கிகள். நாம் வசிக்கும் பூமியையும், அது வசிக்கும் சூரியக் குடும்பத்தையும் உள்ளடக்கிய நமது ஆகாயத்தின் ஒரு பகுதியாகிய பால்வழி மண்டலம் (Milky Way Galaxy) மணிக்குச் சுமார் 25,20,000 கி.மீ. வேகத்தில் 'விர்கோ மிகைக் கொத்து மண்டலம்'(Virgo Super Cluster) எனும் விண்மீன் திரளை இலக்கு வைத்துப் பாய்கிறது எனவும் கூறுகிறது நவீன அறிவியல். பரிசுத்த குர்ஆனை மெய்யான இறைவேதம் என ஏற்க வேண்டிய கட்டாயத்தை நம்மீது - பகுத்தறிவுள்ள மக்கள் அனைவர் மீதும் - ஏற்படுத்துகின்றன நவீன அறிவியலின் மேற்படி கண்டுபிடிப்புகள்.

பால்வழி மண்டலத்தைப் போன்று ஏராளமான மண்டலங்கள் பேரண்டத்தில் இருக்கின்றன. அவை யாவும் ஓரிடத்தில் நிலைத்திருக்காமல் ஒவ்வொன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான வருடங்கள் இந்த நிலையில் பேரண்டம் நிலை பெற்று வந்தும், அவை தனித்தனியாக சிதறி விடவில்லையெனில் அதைச் தடுக்கும் சக்தியொன்று அதற்குள் செயல்படுகிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?.

மறுக்க முடியாத அந்த சக்தி எது? அது வேறொன்றுமில்லை: கணமும் ஓய்வின்றி பேரண்டத்தை விரித்துக் கொண்டிருக்கும் சக்தியே எனக் கூறுகிறது நவீன அறிவியல்.

முதல் தொடரில் பேரண்டம் படைக்கப்படுவதற்கு முன் அதிபயங்கரமான ஒரு பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக அறிவியல் கூறுவதைக் கண்டோமே: அந்த கணத்திலிருந்து அந்த வெடிப்பாற்றல் பேரண்டத்தை விரிவடையச் செய்து வருவதால், ஆகாய மண்டலங்களின் (Galaxies) ஓட்டம் பேரண்டத்திற்குள்ளாகவே தடுக்கப்பட்டு, எல்லையைத் தாண்டி விலகிப் போவது தவிர்க்கப் பட்டுள்ளது எனக் கூறுகிறது இருபதாம் நூற்றாண்டு அறிவியல்.

இதிலிருந்து, அண்டங்கள் ஓடிக் கொண்டிருந்தாலும் அவைகளை உள்ளடக்கி நிற்கும் பேரண்டம் விரிவடைந்து இடம் தருவதற்கு அவை பேரண்டத்திலிருந்து விலகிப்போகும் வாய்ப்புத் தடுக்கப்படுகிறது என அறிகிறோம். இதைப்போல அண்டங்களில் ஓடிக் கொண்டிருக்கும் கோள்கள் மற்றும் ஏனையப் பருப் பொருட்களும் அண்டங்களிலிருந்து விலகிச் செல்லாமல் தடுக்கும் சக்தி எது?.

அதுவே இப்பேரண்டத்தின் ஈர்ப்பு விசை (Universal Gravitation) எனக் கூறுகிறது அறிவியல். கோள்களாயினும், நட்சத்திரங்களாயினும், ஏனைய பருப் பொருட்களாயினும் அவை ஒவ்வொன்றும் பெற்றிருக்கும் ஈர்ப்புவிசையின் உதவியால் ஒன்றை மற்றொன்று ஈர்த்து, யாவும் ஒரு குழுவாகச் செயல்படச் செய்கிறது.

மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் பூகோளம் ஓடிக் கொண்டிருந்தாலும், அதன்மீது சூரியன் கொண்டுள்ள ஈர்ப்பாற்றல் அதைத் தன்னிடமிருந்து விலகி விடாமல் தடுக்கிறது. இதனால் பூகோளத்தினுடைய விண்ணோட்டம் அதனை ஈர்த்துப் பிடிக்கும் சூரியனையே சுற்றிச் சுற்றி வரும்படி அவைகளுக்கிடையில் உள்ள ஈர்ப்புவிசையால் செயல் படுத்தப் பட்டுள்ளன.

பார்த்தீர்களா! விண்ணும், மண்ணும் விலகாமல் இறைவன் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறியதைப் பேரண்டத்தின் விரிவாற்றல் மற்றும் பேரண்டத்தின் ஈர்ப்பாற்றல் எனப் பெயரிட்டு 20-ஆம் நூற்றாண்டு அறிவியல் கண்டு பிடிப்புகளே சாட்சி கூறி நிற்பதை!

அறிவியல் சாட்சி நிற்கும் ஒன்றையா நீங்கள் புறக்கணிக்க முடியும்?. அல்லது அறிவியலின் அபிமானிகளே! அறிவியலைக் காட்டிலும் உயர்ந்த சாட்சியம் ஒன்றிருந்து அதைத்தான் நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?..

(வளரும் இன்ஷா அல்லாஹ்)
---------------------------
வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் முந்தைய பகுதிகள்.

பேரண்டப் படைப்பின் துவக்கம் -1
வாழத் தகுந்த கோள்-2
ஓசோன் -3
விண்ணகத்தின் பரப்பெல்லை -4

Sunday, August 07, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-4

விண்ணகத்தின் பரப்பெல்லை -4

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான,


'வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாகவும் அமைத்தோம்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 அல் அன்பியா - வசனம் 32)

'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),

'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)

'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)

மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.

ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.

அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.

மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சிந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.

நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் (Clestrial Bodies) சலனங்களை, வானசாஸ்திரத்தைப் (Astronomy) பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:

'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).

இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.

இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.

விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.

முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.

'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).

இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவில்லை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.

இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.

'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்?' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).

இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆகாயத்தின் கீழெல்லையைக் கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.

'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)

'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).

மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.

(குறிப்பு: இவ்வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் எண்ணிக்கை ஏழு என்பதை மட்டுமே அறிவியல் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஏனைய விஷயங்கள் யாவற்றையும் அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அவைகளை நாம் இனிவரும் அதற்குரிய தலைப்புகளில் விவாதிப்போம்.)

மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.

'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்போது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:

'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)

மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியின் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.

விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.

பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.' (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

அற்புதம்தான்! நவீன வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.

என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.

அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை (Earth Centre Theory) தகர்த்தெறியவில்லையா?. (இது புவி மையக் கோட்பாட்டை Earth Centre Theory என்றால் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் விளக்குவோம்) எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் (Celestial Bodies) சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை (Orbit) மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.

பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.

சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.

சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் (Spectroscops) துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (Orbital Velocity) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது (Milky Way Galaxy) என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.

ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ (இதுபற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம்) நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் (Telescope) பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

(இந்த இடத்தில் சகோதரர்கள் யாரும் அவசரப் பட வேண்டாம். இவை யாவும் ஒரு குறிப்பிட்ட தவணை (35:45) வரைதான் என்பதை வேறு தலைப்பில் நாம் விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்)

விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்போம்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Wednesday, August 03, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும்-3

ஓசோன் -3

ஏ.கே.அப்துர் ரஹ்மான்

மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..
மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.

'..சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான்'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)

'..அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான்;'. (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் - ன் 16வது வசனம்)

'..மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)

மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது.

தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?

நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.

ஒருகால்..'அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது'. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.

அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.

அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?

சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்:

'வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம். எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.' (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா - 32வது வசனம்) எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் 'அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்' என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.

சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.

இதோ..! ஓசோன் (OZONE) என்பதே இக்கூரைக்கு அறிவியலாளர்கள் சூட்டியிருக்கும் பெயர். உயிரினங்களின் ஜீவகவசமாகிய இப்பொருள் நமது கூரையின் மொத்த உருவமாகிய காற்று மண்டலத்தின் ஒரு மெல்லிய கீற்று (அடுக்கு) ஆகும். இப்பொருள் நமக்கு மிகவும் அறிமுகமான பிராண வாயுவின் (Oxygen) வேறொரு வடிவமாகும். இதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.

எந்த ஒரு பொருளையும் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில்; அதை வெட்ட முடியாத நிலையை அடையும். கட்புலணாகாத இப்பொருளை மூலக்கூறு (Molecule) எனக் கூறலாம். மிக நுண்மையான இப்பொருளைத் தேவையான ஆற்றல் செலுத்தி மேலும் தனித் தனிப் பொருட்களாக பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் அந்த மிக, மிக நுண்ணிய பொருட்கள் அணு (Atom) எனப்படும். (அதை மேலும் பிரிக்க ஏராளமான ஆற்றல் தேவை) ஒரு பொருளைத் தனித்தனி அணுக்களாகப் பிரித்து அவைகளைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவைத் தொடர்ந்து அணுக்களாகவே இருந்து விடாது. அவை உடனே மூலக் கூறுகளாக இணைந்து விடும். இப்படிப்பட்ட மூலக் கூறுகளின் தொகுப்புகளே பொருட்களாகும்.

நமது பிராணவாயு என்பதும் மூலக்கூறுகளின் தொகுப்பேயாகும். மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களின் தொகுதிகளாகும். பிராணவாயுவைப் பொருத்தவரை அதனுடைய மூலக் கூறில் இரண்டு அணுக்கள் இருக்கும். சில காரணங்களால் பிராணவாயு அதன் மூலக் கூறில் மூன்று அணுக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு பிராண வாயுவின் மூன்று அணுக்கள் அதன் மூலக் கூறில் இடம்பெற்றால் அதன் பிறகு அது பிராண வாயுவின் குணத்திலிருந்து மாறுபட்ட பொருளாக மாறும். இதுவே ஓசோனாகும். ஓசோன் என்னும் இந்த வாயுப் பொருள்தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழ விடாமல் உட்கிரகித்துப் பூமிக்கு கூரையாக செயல்பட்டு வருகிறது எனக் கூறி 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தூய குர்ஆன் மெய்யான இறைவேதம் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.

இவ்வாறு பூமிக்குக் கவசமிட்டு நிற்கும் கூரையைப் பற்றித்தான் சத்தியத் திருமறை அது ஒரு பாதுகாக்கப்பட்ட பொருள் எனக் கூறுகிறது. எனவே நமது கூரையாக செயல்படும் ஓசோன் படலத்துக்கும், ஏதோ பிரச்னை என்றும், அப்பிரச்னையிலிருந்து அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த வசனத்திலிருந்து முன்போல் (முந்தைய கட்டுரையில் கண்டதுபோல்) இப்போதும் விளங்குகிறது. அப்படியானால் ஓசோனுக்கும் பிரச்னையுண்டா?.

ஓசோனுக்கும் பிரச்னையுண்டு எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். ஓசோன் என்பது பிராணவாயுவின் இரண்டு அணுக்களுக்குப் பதிலாக (O2) அதன் மூன்று அணுக்களால் (O3) ஆன மூலக்கூறு எனக் கண்டோம். அதே நேரத்தில் மூலக்கூறு (O2) ஓசோனாக (O3) மாற்றம் அடையும் போது பிராண வாயுவைப் போன்று (O2) நீடித்து நிற்கும் (Stability) தன்மையை இழந்து விரைவில் சிதைந்து தனித் தனி அணுக்களாக மாற்றமடைந்து மீண்டும் பிராணவாயுவாக (O2) ஓசோன் (O3) மாறிவிடுகிறது.

ஓசோனுடைய இந்த குறுகிய ஆயுள் காரணமாக இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே ஓசோன் படலத்தில் காணப்படும் பிரச்னை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.

பிரச்னை என்றால் இஃதன்றோ பெரும் பிரச்னை! எங்கள் இறைவா! என்னென்ன பிரச்னைகள் எங்களைச் சூழந்து நிற்கின்றன! கோடிக்கணக்கான வருடங்களாய் உயிரினங்கள் வாழ்ந்து வரும் இப்பூவுலகுக்குக் கூரையாய் அமைந்து நிற்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? ஒரு கணமும் ஓய்வின்றி நீ எங்கள் கூரையைப் புதுப்பித்துக் கொண்டிராவிடில் நாங்கள் இங்கு உயிர் வாழ்வது எங்ஙனம்? ஆகவே நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே கூரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என நீ கூறியதற்கு நிறைவான ஆதாரமாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட சுக சுந்தரமாக நீ எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உன்னை மறுத்துரைக்க எப்படித்தான் அறிவு இடம் கொடுக்குமோ?

சூரியனுடைய புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்தவாறு ஓயாமல் சிதைந்து கொண்டிருக்கும் ஓசோன் படலம் பாதுகாக்கப்பட்டு வரும் மர்மம்தான் என்ன?

அன்பார்ந்த நண்பர்களே! இதற்குரிய விடையான அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்ட ஒருவர் இத்தூய குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவரை வியப்படையச் செய்யும் வசனம் ஒன்றை அவர் கண்ணுறுவார். குர்ஆன் கூறுகிறது:

'மேலும் அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலை காட்டுவதும் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 30வது அத்தியாயம் ஸூரத்துர் ரூம் - 24வது வசனம்)

இந்த வசனத்திலிருந்து இறந்து கிடக்கும் பூமியை உயிர்ப்பிப்பதில் மழை, மின்னல் என இரு நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாக நம்மால் காண முடிகிறது. நீரின்றி உயிரினம் இல்லை என்பதால், இதில் மழையின் செயற்பாடு என்ன என்பதை நாம் எளிதில் விளங்குகிறோம். ஆனால் இந்த வசனத்தில் உயிர்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலும் இடம்பெறுவதாக காண முடிகிறதே? மின்னலுக்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு?

மின்னல் என்பது பிரதானமான ஒளி (மின் ஒளி), ஒலி (இடியோசை), மின்சாரம் என மூன்று கூறுகளை உள்ளடக்கியது. (இம்மூன்று வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக 'இடிப்புயல்' எனும் வார்த்தையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.) இப்படிப்பட்ட இந்த மின்னல் நாம் அச்சப்படவும், ஆசைப்படவும் ஏற்றது எனவும் இந்த வசனம் கூறுகிறது. மின்னலைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடுவதும், காதுக்குள் விரலூன்றுவதும் மின்னலால் நமக்கு அச்சம் எற்படுவதால்தான். எனவே மின்னல் அச்சப்படத்தக்கது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நாம் ஆசைபடத்தக்க விஷயம் என்ன இருக்கின்றது?.

ஆனால் மின்னல், மழை, உயிர்ப்பித்தல் என இம்மூன்று விஷயங்களையும் சிந்தித்துணரும் சமூகத்தவருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன என உத்திரவாதம் தருகிறது ஒப்பற்ற இறைவேதமாம் மாமறை குர்ஆன்! எனவே நாம் இப்போது இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் சமூகத்தைத்தான் அணுக வேண்டியுள்ளது.

சத்தியத்திருமறையின் சட்டங்களை அறிந்தோ, அறியாமலோ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனையாளர்களே! உங்களுக்குத்தான் எவ்வளவு கண்ணியத்தை இந்தச் சத்தியத் திருமறை வழங்கிக் கொண்டிருக்கிறது! உங்கள் ஆய்வுகளிலிருந்து நீங்கள் சிந்தித்துணர்ந்த விஷயங்களில் மின்னலுக்கும், உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்புண்டா?

ஏதேனும் தொடர்பா? ஏராளமான தொடர்பு உண்டு! உயிரினங்களை வாழ வைக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில்கூட மின்னல் பங்கேற்கிறது எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் விஞ்ஞானிகள்!

பிராண வாயுவின் அணுக்கள் பிளக்கப்பட்டு அவை மும்மூன்று அணுக்களாக இணைந்தால்தான் ஓசோன் உற்பத்தியாக முடியும் என முன்னர் கண்டோம். இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் பெறப்பட வேண்டும். ஓசோனால் உட்கிரகிக்கப்படும் சூரியனுடைய புற ஊதாக் கதிர்களுக்கே அந்த ஆற்றல் உண்டு. எனவே ஓசோனை உற்பத்தி செய்வது சூரியனுடைய செயல்பாடுதான் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் தரவில்லை. ஓசோன் படலத்தினுடைய செறிவு, இரவு (சூரிய ஒளி பெறப்படாத நேரம்), பகல் (சூரிய ஒளி பெறப்படும் நேரம்) என்ற வித்தியாசமின்றி பாதிக்கபட்டு வந்ததை அவர்களுடைய ஆய்வுகளில் கண்டனர். எனவே சூரியச் செயல்பாட்டுக்கும். ஓசோனுடைய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகளுக்கு ஓசோனுடைய உற்பத்தி ஒரு புதிராகவே காணப்பட்டது. ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டதன் விளைவாக அண்மையில் இப்புதிருக்கு விடை கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் நமது பூகோளத்தின் மீது ஒட்டு மொத்தமாக 1 கோடியே 60 லட்சம் இடிப்புயல்கள் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் பரவுகின்றன. ஒவ்வொரு வினாடியிலும் இப்புவி பரப்பின் மேல் குறைந்த பட்சம் 100 முறை மின்னல் மின்னும். உடனே அவ்வளவு முறை இடியோசை ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு நேரத்திலும் இப்புவியின் மொத்த பரப்பின் மேல் 1800 இடிப்புயல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி இடைவிடாது எற்பட்டுக் கொண்டிருக்கும் இடிப்புயல்களிலிருந்து உருவாகும் அளவிடற்கரிய ஆற்றல்தான் நமது ஓசோன் படலத்தை ஓயாது புதுப்பித்துப் பாதுகாத்து வருகின்றன எனக் கூறுகின்றன அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகள்.

இடி, மின்னலுடன் கூடிய மழைக்குப் பின் நமது சுவாச இயக்கம் எளிதாகி விடுவதை உணர்கிறோமே அதற்குக் காரணம்கூட ஓசோன் உற்பத்தியால் வளி மண்டலம் தூய்மையடைவதே எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

அச்சம் தரத்தக்க மின்னலில் ஆசைப்படத் தக்க காரியங்களும் இருக்கின்றன எனக் கூறிய திருமறையின் வசனத்தை மெய்ப்பித்து நிற்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா? ஓசோனை உற்பத்தி செய்யும் இடிப்புயலின் வெளியீடாகிய மின்னலில் நாம் ஆசைப்படத்தக்க காரியம் உண்டா இல்லையா?.

ஓசோன் இல்லையேல் பூமியல் உயிரினம் இல்லை எனக் கூறும் விஞ்ஞானிகள், வளி மண்டலத்தில் ஓசோன் உற்பத்தியான பிறகே உயிரினம் தோன்றியது என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். உயிரினத் தோற்றுவாயில் ஓசோனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டெனில் அந்த ஓசோனையே உருவாக்கும் மின்னல் உயிரினத் தோற்றுவாயின் மிக முக்கிய பங்காளியல்லவா? உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் நீருடன் மின்னலையும் இணைத்துக் கூறப்பட்ட திருமறை வசனத்தை மெய்யான இறைவேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா?

உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளும், இத்தூய திருமறையை மானிட சக்திக்கு அப்பாற்பட்ட இறைவேதம் என நிரூபிக்கும் பொருட்டு அரங்கேறியிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவை வேறு தலைப்புகளில்.

அன்பார்ந்த நண்பர்களே! பூலோக வாசிகளாகிய நமக்கு ஆகாயம் ஒரு கூரையாகவும், அந்தக் கூரை பாதுகாக்கப்பட்ட பொருளாகவும் இருக்கிறது எனக் கருத்துணர்ந்த திருமறை வசனத்திற்குரிய அறிவியல் ஆதாரங்களாக நாம் இதுவரை பரிமாறிக்கொண்ட விஷயங்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நவீன வானியல் விஞ்ஞானத்தில் கரை கண்ட ஒருவராலன்றி, ஆகாயம் பாதுகாக்கப்பட்ட கூரையாக இருக்கிறது எனக் கூறியிருக்க முடியுமா? நிச்சயமாக- மிக- மிக நிச்சயமாக- முடியவே முடியாது என்பதுதான் நேர்மைத் திறனுடன் பதில் தரும் ஒருவரது கூற்றாக இருக்க முடியும். அப்படியானால் இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட ஓர் அதிசய மனிதர்(?) இப்பூமியில் எங்கேனும் தோன்றியிருக்க இயலும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

குறைந்த பட்சம் செயற்கைத் துணைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இதைக் கூற வேண்டுமானால் அவர் இறக்கைகளுடன் பிறந்தவராக இருக்க வேண்டும். கிட்டப் பார்வைகளையும், தூரப்பார்வைகளையும் சரி, தூரப்பார்வைகளாக மாற்றும் கண் கண்ணாடிகளைக் கூடக் கண்டறியாத காலத்தில் இதை ஒருவர் கூற வேண்டுமானால் அவருடைய கண்களில் போலே மீட்டர்கள் (Bolometers) பிரிலியோ மீட்டர்கள் (Pyrheliometers) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) ரேடியோ தொலை நோக்கிகள் (Radio Telescopes) போன்ற நவீன கருவிகளெல்லாம் முளைத்திருக்க வேண்டும். இப்படிக் கூடவா ஒரு மனிதர் இருந்திருக்க வேண்டும்?

நிச்சயமாக அப்படியெல்லாம் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது நமது பதிலாக இருக்கும்போது குறைந்தபட்சம் இப்படிப்பட்ட ஒரு மனிதரால் மட்டுமே 1400 வருடங்களுக்கு முன்னால் கூற முடியக் கூடிய நவீன உலகின் அறிவியல் கண்டு பிடிப்புகளெல்லாம் - சத்தியத் திருமறையாம் அல்-குர்ஆனில் எப்படி இடம் பெற்றன?

நாம் சிந்திக்க வேண்டாமா?

காரண காரியங்களோடு நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் நமது சிந்தனை களஞ்சியங்களில் இப்பேரண்டம் ஒரு குருட்டாம்போக்கு செயல் இல்லை: மாறாக இது ஒரு பரிபூரணமான திட்டமிட்ட பணியின் (An absolute frame work) உருவம் என்பதை ஐயத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திட்டமிட்ட பணியின் திட்டங்களை வகுத்தளித்தவன் ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய திட்டமே பணிகளை நடத்துகிறது: அப்படிப்பட்டவன் யாரோ அவனிடமிருந்தே இச்சத்தியத் திருமறை வழங்கப்பட்டுள்ளதால் அது காலங்கடந்த காரியங்களையும் தன்னுள் கொண்டிலங்குகிறது என நம்மால் மிக மிக எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!

எனவே இத்தூய மறைக்குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் முற்றுப் புள்ளிகளை காற்புள்ளிகளாக மாற்றி மேலும் உங்களுடைய சிந்தனையைத் தொடருங்கள்! உண்மை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்கும் பண்புடையவர்களல்லவா நீங்கள்!.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -2

வாழத் தகுந்த கோள்-2



ஏ.கே.அப்துர் ரஹ்மான்.

மனித குலத்தின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உள்ளத்தில் சுண்டைக்காய் அளவாக இருந்த நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களின் அளவும் வளரத் துவங்கியது. இந்த வளர்ச்சி மேதகு விஞ்ஞானி ஐசக் நியூட்டன் (கி.பி. 1624 முதல் 1727 வரை) காலத்தில் விசுவரூபம் கொண்டு நாம் வாழும் நிலப் பரப்பைக் காட்டிலும், பெரிய நிலப் பரப்புக்கள் கொண்ட கோள்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன என அறியத் துவங்கினான். இந்த அறிவு மனித உள்ளத்தில் ஓர் ஆசையைத் தூண்டியது. அதாவது பூமியில் இட நெருக்கடி ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இதர நிலப் பரப்புகளுக்கு குடி பெயர்ந்து செல்லலாமா? என்பதே அந்த ஆசை. இந்த ஆசை நமக்கு நிறைவேறுமா?. பொருட்செலவு ஏராளமாகுமா? அல்லது அங்கு நாம் எதிரிகளை சந்திக்க நேருமா? என்கிற ஐயங்களெல்லாம் அந்த ஆசையின் உடன்பிறப்பாக அப்போதே பிறந்து விட்டன.

இவ்வய்யங்களைத் தீர்க்க பரிசுத்த குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா?. ஏனில்லை?. கூறத்தான் செய்கிறது.

'அவன்தான் பூமியை உங்களுக்கு வாழத்தகுந்த இடமாக்கியவன்..'(அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்க் - 15வது வசனம்).

என்ன இது? பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால் வாழத் தகாத இடமாகக் கூட ஆக்க முடியுமா?. இருக்கட்டும்! வாழத் தகாத இடமாகக் கூட இருக்கலாம். இருப்பினும் பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால், ஏனைய நிலப்பரப்புகள் எல்லாம் வாழத் தகாத இடங்களா?. ஏனைய நிலப் பரப்புகளையும் வாழத் தகுந்த இடமாக ஆக்கியிருந்தால் எல்லாப் பூமிகளையும் (கோள்களையும்) வாழத் தகுந்த இடமாக்கினேன் என்றல்லவா கூறியிருப்பான். ஆகவே இவ்வசனம், 'அனைத்துக் கோள்களிலும் மனிதன் வாழத் தகுந்த சூழ்நிலை உண்டு என்பது தவறு: ஆனால் பூமியில்தான் அந்தச் சூழ்நிலை உண்டு' எனப் பொருள் தருகிறது.

இது மெய்தானா?. சமீப நாட்களில் (1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம்) சந்திரனுக்கே சென்று வந்தார்களே! எனவே இது பற்றிய ஆய்வில் விஞ்ஞானம் கண்ட உண்மை நிலை என்ன?.

ஆனால் நிலவைப் பற்றிய ஆய்வு மனிதனின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவதாகவே அமைந்தது. நிலவில் மனிதன் மட்டும் இல்லை: தாவரங்கள் கூட வாழ இயலாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது. உயிரினங்களின் தேவையாகிய கார்பனும், நீரும் அங்கு சிறிதளவு கூட இல்லை என்பதோடு, தயாரிப்புகள் எதுவுமின்றி உயிரோடு ஒரு மனிதன் அங்கு செல்ல நேர்ந்தால், உடனே இறந்து விடுவான். ஏனெனில் நிலவில் சுவாசிப்பதற்குக் காற்று இல்லை. மேலும் அங்கு பகல் நேர வெப்பம் மனித இரத்தத்தை கொதிக்கச் செய்யும் அளவிற்கு 120 டிகிரி சென்டி கிரேடும், இரவு நேர வெப்பம் இரத்தத்தை உறையச் செய்யும் அளவிற்கு -160 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கின்றன.

நிலவுதான் இப்படியென்றால், அறியப்பட்ட இதர கோள்களின் நிலையும் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. பொருண்மை, விட்டம் ஆகியவற்றில் பூமிக்கு ஒப்பாக உள்ள கோள் வெள்ளி (VENUS). இதன் பகல் நேர வெப்ப நிலை 475 டிகிரி சென்டி கிரேடு ஆகவும், இரவில் 474 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கிறது. பூமியொத்த மற்ற கோள் செவ்வாய். இது பூமியின் காற்று மண்டலத்தில் நூறில் ஒரு பங்கு மட்டுமே கொண்டது. அதிலும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும், 78 சதவீதம் நைட்ரஜனும் இருக்க வேண்டிய இடத்தில், தலா ஒரு சதவீதம் மற்றும் இரண்டரை சதவீதத்தை அளித்துவிட்டு, ஏறத்தாள 96 சதவீதம் கரியமில வாயுவே (Carnbon-di-Oxide) ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

ஏனைய கோள்களில் மெர்க்குரி (Mercury) சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அளவுக்கு மீறிய வெப்பத்துடனும், வியாழன் (Jupitor), சனி (Saturn), யுரேனஸ் (Uranus) நெப்டியூன் (Neptune) ப்ளுட்டோ (Pluto) போன்றவை சூரியனிலிருந்து மிகுந்த தொலைவில் இருப்பதால் மிகுந்த குளிர்ச்சியாகவும் இருக்கின்றன. எனவே சூரியக் குடும்பத்தில் அறியப்பட்ட எந்தக் கோளிலும் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதிலிருந்து சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மேலும் பல கோள்கள் இருந்தும் அவை எதிலுமே மனிதன் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தாமல் பூமியில் மட்டும் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி வைத்துள்ளான் என்ற கருத்து உணரப்படும். குர்ஆனிய வசனங்கள் நூற்றுக்கு நூறு மெய்யென்பதற்கு நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே சான்று பகர்கின்றன.

இவ்வளவு ஆழமாக நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளைத் தீர்க்க தரிசனத்துடன் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே படம் பிடித்துக் காட்டிய இந்த பொய்க் கலப்பற்ற ஒப்பற்ற குர்ஆனை மெய்யான இறைவேதம் என ஏற்கத் தயங்குவோரே, அது கூறுகின்ற அற்புதமான விஞ்ஞான நிரூபண உண்மையை மேலும் கவனியுங்கள்:

'அல்லாஹ்தான் இப்பூமியை உங்களுக்கொரு வீடாகவும் - ஆகாயத்தை ஒரு கூரையாகவும் ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமீன் 64வது வசனம்)

இங்கே பூமியை இறைவன் ஒரு வீட்டுக்கு ஒப்பிடுகிறான். இது மனிதன் வாழ்வதற்கேற்ற இடமென்பதால் வீடு என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆகாயத்தை கூரையென்று கூறுகின்றானே? இதன் பொருளென்ன?

நாம் ஒரு வீட்டைக் கட்டுவதாக இருந்தால் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு அதற்கோர் கூரையமைக்கிறோம். ஆனால் பூமிக்குமா ஒரு கூரை தேவை?. அப்படியே கூரையொன்று இப் பூமிக்கு இருக்குமாயின் வெயிலும், மழையும் இப்பூமியில் விழுகிறதே! இதெப்படி இயலும்?.

மேலே கூறிய வசனத்தைக் கண்டவுடன் சிலர் இப்படியும் சிந்திக்க தலைப்படலாம். ஆனால் இச் சிந்தனையில் உள்ள குறைபாடு நகைப்புக்குரியதே! பூமி வாழத் தகுந்த ஒரு வீடாக இருக்க வேண்டும் என்றாலே இங்கு வெயிலும், மழையும் விழுந்தே ஆக வேண்டும். அவ்வாறு விழாவிடில் இது வீடாக இருக்க முடியாது. இடுகாடாகத்தான் இருக்க முடியுமென்பதை விளக்கத் தேவையில்லை. ஆகவே கூரை என்பது பூமியின் மீது ஏதோ பாதிப்பு ஏற்பட, அதனைத் தடுக்கும் விதத்தில் ஆகாயம் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது கூரையாக இருக்க முடியும்! அப்படிப்பட்ட கூரை இப்பூமியின் மீது எங்கே இருக்கிறது?.

நாம் பார்த்த வரை இப்பூமி பந்தின் மீது வெளிர் நீலப் பட்டொன்று குடை விரித்தாற்போல் - மேகங்களற்ற நிர்மல வானம் காட்சியளிக்கிறது. இதுதான் ஆகாயமா?. இதுதான் அந்தக் கூரையா?. விஞ்ஞானம் என்ன கூறுகிறது?.

கடல் நீரின் மீது படும் சூரியக் கிரணங்களின் பிரதிபலிப்பைக் காற்று மண்டலம் பூமியை நோக்கி எதிரொளிப்பது தான் அந்த நீல வண்ணக் குடையேயன்றி அங்கு வேறெதுவும் இல்லை எனக் கூறுகிறது. அப்படியாயின் ஆகாயம் என்ற சொல்லே அர்த்தமற்றதா?. அப்படியொன்று மெய்யாகவே இல்லையா?. பரிசுத்த குர்ஆன் என்ன சொல்கிறது:

'நிச்சயமாக நாமே ஆகாயத்தை வல்லமை கொண்டு படைத்தோம்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 51 ஸுரத்துத் தாரியாத் - 47வது வசனம்)

ஆகாயம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் அவன் அதைத் தன் வல்லமையைக் கொண்டு நிச்சயமாகவே படைத்திருக்கிறான் எனக் கூறுகிறான்!. அப்படியாயின் நம்முடைய பூமிக்குக் கூரை அமைத்த கீற்றுகள் யாவை?. எங்கே நமது கூரை?.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)