Tuesday, December 18, 2007

தியாகப் பெருநாள் செய்தி!

அனைவருக்கும் தியாகப் பெருநாள் வாழ்த்துகள்!


செவ்வாய், 18 டிசம்பர் 2007

அன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தாம் ஏற்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கை நெறி எத்துணை உன்னதமானது என்பதை அறியாமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் கோடானு கோடி என்ற உண்மை ஒருபுறம்; இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டுத் தடுமாறும் கூட்டம் மறுபுறம்; இஸ்லாத்தில் இல்லாதவைகளைக் கூடுதலாக விளங்கிக் கொண்டு அவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூச முயலும் கும்பல் இன்னொரு புறம்.

இவையன்றி, பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையை உரத்து முழங்கும் இஸ்லாத்தின் மீள்எழுச்சியைத் தடுப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கி விடப் பட்டிருக்கும் 'எழுத்துத் தீவிரவாத'க் கூலிக் கும்பல் இஸ்லாத்துக்கு எதிராக எல்லாவித உத்திகளோடும் புற்றீசல்கள் போலப் புறப்பட்டிருக்கும் இவ்வேளை, இஸ்லாத்துக்கு எதிரானத் திட்டமிட்டத் திரித்தல்களையும் திருகுதாளங்களையும் எதிர் கொண்டு முறியடிக்கவும் சரியான தகவல்களைச் சான்றுகளோடு எடுத்து வைக்கவும் எழுத்துப் போராளிகள் நம் சமுதாயத்துக்கு ஏராளமாகத் தேவைப்படுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் போராளிகள் எதிர் கொள்ள வேண்டியவர்களாக சல்மான், தஸ்லீம் போன்ற அபகீர்த்தியால் அறியப் பட்ட முஸ்லிம் பெயரைத் தாங்கிய இஸ்லாத்தின் எதிரிகளும் அதிகமாக அறியப் படாதவர்களாகத் தமிழுலகில் சிலரும் உளர்.

எழுத்துலகில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் கட்டாயம் இதனோடு முற்றுப் பெற்று விடவில்லை. எழுத்துலகம் எழுச்சியடைந்த 1950 களிலிருந்து 1990 வரையிலான காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கெதிரான மறைத்தல்கள், திரித்தல்கள் அனைத்தும் இக்காலகட்டங்களில் சக்தி வாய்ந்த ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு, அவற்றால் மக்கள் மனதில் இஸ்லாத்தைக் குறித்தத் தவறான எண்ணங்கள் உறுதியாகப் பதியும் விதத்தில் எழுத்துலகைக் கொண்டு எதிரிகள் சாதித்து விட்டதை அறிந்துக் கொள்ள முடியும்.

ஒரு பின்லாடனின் பெயரைக் கூறி ஆப்கான் அரசையும் இல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைக் கூறி ஈராக் அரசையும் வீழ்த்தி, இன்று லட்சகணக்கான முஸ்லிம்களின் உயிரையும் உடைமையையும் சீரழித்து, நாட்டையே சின்னாபின்னமாக்கி, அடுத்து எந்த முஸ்லிம் நாட்டின் மீது அட்டூழியத்தை அவிழ்த்து விடலாம் என ஆய்ந்து கொண்டிருக்கும் வல்லரசுகளுக்கு, அவைகள் செய்யும் அட்டூழியத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரண்டு நிறுத்தாததன் காரணம் ஊடகங்களால் விதைக்கப் பட்ட இஸ்லாத்தைக் குறித்த எதிர்மறைத் திரிபுச் சிந்தனைகளே.

"ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்" எனக் கூறுவதன் அர்த்தம் நடைமுறையில் எதிர்மறையாகச் சாதிக்கப்பட்டு இன்று உலக அரங்கில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமுதாயம்.

இந்நிலையிலிருந்துச் சமுதாயத்தை மீட்டு எடுப்பதும் அதே பேனா முனையால் மட்டுமே சாத்தியமாகும் என்பதைச் சமுதாயச் சிந்தனையுள்ள அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

"அக்கிரமக்காரன் முன்பு அநியாயத்தை உரக்க, உறுதியாக எடுத்துச் சொல்வதையே போராட்டத்தில் உயர்ந்தப் போராட்டமாகக்" காணும் இஸ்லாத்தில், நிலையான மறுமை வெற்றியைக் கொய்தெடுக்க அக்கிரமக்காரன் ஃபிர்அவ்னுக்கு எதிராகக் குரலெழுப்பி, போராட்டத்தின் மறுவடிவமாகத் திகழ்ந்த மூஸா(அலை) அவர்களின் போராட்ட வழி முறையை, அல்குர்-ஆன் போதிக்கும் அறவழியை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் தற்காலக் கட்டாயத் தேவையாகும்.

உண்மைகளை மறைத்து, திட்டமிட்டக் கட்டுக் கதைகளைச் செய்திகளாக உலகுக்குத் தரும் பெரும்பாலான ஊடகங்களுக்கு மத்தியில் மறைக்கப் பட்ட உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மிகச் சில ஊடகங்களும் இல்லாமலில்லை. அவை வெளிக் கொண்டு வந்து வெளிச்சம் போடும் உண்மைகளால் ஏற்படும் நல்ல விளைவுகளையும் அதன் சக்தியையும் கண்கூடாகக் காணும்போது சற்றே மனதுக்கு மகிழ்வேற்படுகிறது!. உதாரணத்திற்கு கத்தரில் இருந்து செயல்படும் 'அல் ஜஸீரா' தொலைகாட்சி, ஆப்கான் மற்றும் ஈராக் அநியாயமாக அழிக்கப்பட்ட வேளைகளில் நடந்த அக்கிரமங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. அக்கிரமக்காரர்களுக்கு இதுவரை அது சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறது.

அதே போன்று தனது பக்க நியாயத்தை உலகில் எவருமே நடுநிலையாக வெளிப்படுத்தத் தயாரில்லாமல் தனக்கு எதிராக அமெரிக்கா போர் தந்திரங்களைக் கையாண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் 'ப்ரஸ்' என்ற பெயரில் ஒளிபரப்பைத் தொடங்கிய ஒரு (ஈரானியத்) தொலைக் காட்சி, தனது பக்க நியாயங்களையும் அமெரிக்காவின் போர் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு காண்பித்தது. இன்று அதன் பக்கத்திலுள்ள நியாயங்களைப் பேசுவதற்கும் "அமெரிக்காவின் செயல் தவறானதுதான்" எனக் குரல் எழுப்பும் வகையில் மற்ற முக்கிய நாடுகளைத் தூண்டுவதற்கும் அணி திரளவும் ஒரு தூண்டுகோலாகாத் திகழ்கிறது.

அவ்வளவு தூரம் போவானேன். இந்தியாவில் சங் பரிவாரத்தின் தோற்றம், நோக்கம், செயல்பாடுகளை அறியாதவர்கள் மிகச் சொற்பம். சங் பரிவாரத்தின் அரசியல் பிரிவு பாஜக ஆட்சியில் இராணுவத்திற்குச் சவப்பெட்டி வாங்கியதில் செய்த ஊழலிலிருந்து பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கிய லஞ்சம் வரை, இன்று காவி அரக்கன் நரேந்திரமோடி முஸ்லிம்களைக் குஜராத்தில், மக்களைக் காக்க வேண்டிய அரசு இயந்திரங்களை மக்களுக்கு எதிராக உபயோகித்து, சொந்த மாநில மக்களையே வெறித்தனமாகக் கொன்று குவித்ததையும் தெளிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி அனைத்து மக்கள் முன்னிலையிலும் கயவர்களின் முகமூடியைத் 'தெஹல்கா' தெளிவாக விலக்கிக் காண்பித்தது.

2000க்கு முன்னர்வரை மேற்குலக ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் பட்டிருந்த மத்திய கிழக்கு நாடுகள், தற்பொழுது தம்மைத் தாமே சுயபரிசோதனை செய்து கொள்ளத் துவங்கியுள்ளன. அதற்கு உதவியது அல்ஜஸீரா மற்றும் ப்ரஸ் தொலைகாட்சியின் பேனா கரங்களே. அவ்வாறே, இந்திய முஸ்லிம்களின் இரத்தத்தையும் சதையையும் உண்டு வாழும் காவிக் கூட்டமும் மக்கள் பணத்தை உண்டு வாழும் அரசியல்வாதிக் கூட்டமும் கவலையுடன் தங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியதில் தெஹல்கா என்ற பேனா முனைகளுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை மறுக்க இயலாது.

இதே போன்ற பேனா புரட்சி சமுதாயத்தில் நடைபெற வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வின் போராட்டமாகப் பேனா முனையை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

சமுதாய அங்கங்களுக்கு இப்புனிதத் தியாகப் பெருநாள் தினத்தின் செய்தியாகச் சத்தியமார்க்கம்.காம் ஒன்றைக் கூறிக் கொள்கிறது:

"எதிர்காலச் சமுதாயத்தின் நன்மைக்காக, உலக மக்களின் அமைதியான சுபிட்ச வாழ்விற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைத் தியாகம் செய்துக் கொள்ளத் தயாராகிக் கொள்ளட்டும். அந்தத் தியாகம் பேனா முனையினைக் கொண்டு ஆரம்பமாகட்டும். எடுங்கள் பேனாக்களை; எழுதுங்கள் நியாயங்களை - அக்கிரமக்காரர்களும் பயங்கரவாதிகளும் அடங்கும் வரை அல்லது அழியும் வரை!".

இதயத்திற்கு ஓய்வில்லை மூச்சுக் காற்றுச் சுழலும் வரை;
எழுதுகோல் ஏந்தும் கைகளுக்கு ஓய்வில்லை நீதி நிலைநாட்டப்படும் வரை!

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Saturday, December 08, 2007

குர்பானியின் சட்டங்கள்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.

'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.



நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
(அல்குர்ஆன், 037:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்து பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்து பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம், ஒரு மாடு இவற்றை குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி , முஸ்லிம்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில்
'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும், திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்று கூறியதிலிருந்து வீட்டில் வைத்து அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10லிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்