Friday, March 28, 2008

ஜனநாயகக் கேலிக் கூத்து!

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களாகிய நாம், நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பெரும்பாடுப் பட்டோம். பல உயிர்களைப் பலிக் கொடுத்தோம்; கொடிய துன்பங்களை அனுபவித்தோம். எண்ணற்றக் கொடுமைகளுக்கு ஆளானோம். இப்படிப் பல தியாகங்கள் செய்து 1947-ல் சுதந்திரம் பெற்றோம். ஆனால் இன்றைய இந்திய மக்களின் நிலை அன்றைய நிலையை விட மிகப் பரிதாபமாக இருக்கிறது. அன்று இந்திய மக்கள் வெள்ளையர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடந்தனர். ஆனால் அவர்களை விடக் கொடிய கொள்ளையர்களுக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறோம்.

இன்று நமது நிலையைப் பார்க்கும் போது 1947-ல் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவரும், இரண்டாவது உலக மகாயுத்தத்தைச் சாதுரியமாகச் சமாளித்தவர் என்ற புகழுக்குரியவருமான வின்ஸ்ட்டன் சர்ச்சில் அன்றே நம் நாட்டு அரசியல் வாதிகளைப் பற்றி முன்கூட்டியே சொன்னது இன்று அப்படியே நடந்து வருகிறது. அவரது இந்த எச்சரிக்கையை முன்னர் ஒரு சமயம் ஒரு இதழில் பார்த்து அதை எமது 1984 தினசரி கையேட்டில் குறித்து வைத்திருந்தது. இப்போது எமதுப் பார்வையில் பட்டது. அதை அப்படியே எடுத்து எழுதியிருக்கிறோம்.


இந்திய மக்கள் பொறுப்பற்றவர்கள்; தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட அறிந்துக் கொள்ள முடியாத அளவிற்கு அறிவற்றவர்கள். அவர்களுடைய தலைவர்கள் அரைவேக்காட்டு பேர்வழிகள், விசாலமான பார்வையும், பொது நோக்கும் அற்றவர்கள், கடைந்தெடுத்த சுயநலவாதிகள் அதிகாரத்திற்காகவும் பதவிகளுக்காகவும் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கும் அவர்களிடம் சுதந்திரமும் ஜனநாயகமும் சந்தைக்கு வருகின்ற விற்பனை சரக்காக மாறிவிடும். சுதந்திரம் கிடைத்து ஐம்பது(50) ஆண்டுகளுக்குள் அவர்களது அரசு நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்.''


வின்ஸ்ட்டன் சர்ச்சில்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர்


இன்று நமது நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சிகள் அவரது முன் அறிவிப்பை அப்படியே உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உண்மையில் இப்போது நாட்டில் உண்மையான ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. குண்டர்களின் ஆட்சியே நடைபெறுவதாகத்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் ராணுவம், பலவிதப் பட்டாளங்கள், காவல்துறை இன்னும் பல அதிகாரங்களை வைத்திருந்தாலும் குண்டர்களுக்குப் பயந்தே ஆட்சி நடத்துகிறார்கள். குஜராத் போன்ற மாநிலங்களில் குண்டர்களே ஆட்சியைப் பிடித்து மக்களை வதைக்கிறார்கள்.

பழம் பெருமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பட்டபோது, மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்திலிருந்த பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்ட விதம், மும்பைக் கலவரத்தில் பால்தாக்ரே கட்சிக் குண்டர்கள் நடத்திய அடாவடித்தனத்தில், மத்திய மாநில ஆட்சிகள் நடந்து கொண்ட விதம், கோத்ரா ரயில் எரிப்பு நாடகத்தின் மூலம் குஜராத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டி அடாவடித்தனங்களில் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்ட விதம், மிகச் சமீபத்தில் மும்பையில் வட மாநிலங்களிலிருந்து வந்து மும்பையில் தொழில் செய்வோரை எதிர்த்து ராஜ்தாக்ரே கட்சியினர் நடத்திய அட்டூழியங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் நடந்து கொண்ட விதம், இது போல் பெறும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் குண்டர்கள், வன்முறையாளர்கள் திட்டமிட்டுச் செய்யும் அக்கிரமச் செயல்களில் மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளும் விதம், எடுக்கும் நடவடிக்கைகள் இவை அனைத்தையும் ஆழ்ந்து நோக்குகிறவர்கள் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் வின்ஸ்ட்டன் சர்ச்சில் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு அப்படியே நிறைவேறி வருகிறது என்றே உறுதியாகக் கூறுவார்கள்.

தாதாக்கள், தேசவிரோதிகள் மதவெறி, இனவெறி, பிரதேச வெறி, மொழி வெறி என மக்களைத் தூண்டி ஒரு பெருங்கொண்ட கும்பலை வன்முறையாளர்களாக தயார் செய்து விட்டால், ஆட்சியாளர்கள் அவர்களுக்கு அடிப்பணிந்து, அவர்களின் மூடத்தனமான அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பார்கள். அந்த வன்முறையாளர்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் பாதுகாப்புக் கொடுப்பார்கள். அவர்களது விருப்பங்களையே நிறைவேற்றித் தருவார்கள் என்ற கசக்கும் உண்மையே அம்பலப்பட்டு வருகிறது.

இரண்டு காரணங்களுக்காக ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட வன்முறையாளர்களுக்கும், கொடுமையாளர்களுக்கும் அவர்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சி விலை போகிறார்கள். ஒன்று அவர்களின் காட்டுமிராண்டித்தனமான அசுரபலம். இரண்டாவது அப்படிப்பட்டவர்களிடம் இருக்கும் ஓட்டு வங்கி, இதற்கு சுமார் 60 விழுக்காடு வரை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிவுற்று இடையில் மத்திய அரசால் நிறுத்தப்பட்டிருக்கும் தமிழக மக்களின் நீண்ட நெடுநாள் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நல்ல உதாரணமாகும்.

இதிலிருந்தே நமது நாட்டைப் பொறுத்தமட்டிலும் ஜனநாயகம் என்பது ஒரு போலித்தோற்றம், மக்களை ஏமாற்றி அரசியல்வாதிகள் குறுக்கு வழிகளில் பணம் பண்ணவும், அந்தப் பணத்தைக் கொண்டே மக்களை ஏமாற்றம், பெரும்பான்மை மக்கள் அறியாமையிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கி இருந்தால் அதற்கு ஏற்றவாறு மத்திய மாநில அரசுகள் ஆட்டம் போடவும் வழிவகுக்கும் போலி ஜனநாயகம் என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது.

இப்படி நாட்டின் எண்ணற்ற நலந்தரும் திட்டங்கள் இப்படிப்பட்ட மூட நம்பிக்கையாளர்கள் பெருங்கொண்ட எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களின் வன்முறை அட்டூழியச் செயல்களுக்கு பயந்தும், அவர்களிடமுள்ள ஓட்டு வங்கியைக் கணக்கில் கொண்டும் பாழ்ப்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தான் வின்ஸ்ட்டன் சர்ச்சில்" அரைவேக்காட்டுப் பேர்வழிகள், விசாலமானப் பார்வையற்றவர்கள், பொதுநோக்கு அற்றவர்கள், கடைந்தெடுத்த சுயநலவாதிகள், அதிகாரத்திற்காகவும், பதவிகளுக்காகவும் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயராக இருக்கும் அவர்களிடம் சுதந்திரமும், ஜனநாயகமும் சந்தைக்கு வருகின்ற விற்பனை சரக்காக மாறிவிடும். சுதந்திரம் கிடைத்து ஐம்பது ஆண்டுகளுக்குள் அவர்களது அரசு நிர்வாகம் கேலிக் கூத்தாகிவிடும்" என்று அன்று சொன்னது இன்று எந்த அளவு உண்மையாகிவிட்டது என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சிந்தித்துத் தங்களின் இந்த அறீவீனமானப் போக்கை மாற்றிட முன்வரவேண்டும்.

நன்றி: அந்நஜாத் மார்ச் 2008

Wednesday, March 26, 2008

ஒட்டகச் சிறுநீர்!

இஸ்லாம் மார்க்கத்தின் மீது வழக்கமான புனைதலில் ஒன்று, ஒட்டகச் சிறுநீர் அருந்தினால் உடல் ஆரோக்கியம் பெறும் என்று இஸ்லாம் கூறுவதாக பொய்யுரைப்பது. இஸ்லாம் இவ்வாறு கூறவுமில்லை! ஒட்டகச் சிறுநீர் அருந்தினால் உடலுக்கு ஆரோக்கியம் என முஸ்லிம்களும் நம்பவில்லை!

இது தொடர்பான நபிமொழிகள்:

'உக்ல்' அல்லது 'உரைனா' கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் சீதோசனம்) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகங்களிடத்தில் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர். இச்செய்தி மறு நாள் காலை நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 'ஹர்ரா' என்ற (கரும்பாறை நிறைந்த) இடத்தில் அவர்கள் எறியப்பட்டார்கள். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை" என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார் (புகாரி தமிழாக்கம் பாகம் 1, அத்தியாயம் 4, எண் 233)

"இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தாhர்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போருக்குத் தயாராம்விட்டார்கள்" என்று அபூ கிலாபா கூறினார்.

*****
உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள், அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படி விட்டுவிட்டார்கள். என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி தமிழாக்கம் பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1501)

*****
'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை" என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை. என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி, தமிழாக்கம் பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3018)

மேற்கண்ட செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ள பெரிய மெஞ்ஞான அறிவோ, விஞ்ஞான விளக்கமோ தேவையில்லை. மதீனாவுக்கு வந்த எட்டுப் பேர் கொண்ட ஒரு குழுவுக்கு மதீனாவின் சிதோசன நிலை ஒத்துக்கொள்ளாமல் நோயுற்றனர். நோயிலிருந்து குணமடைய ஸகாத் எனும் பொது அரசு தர்மச் சொத்துகளாகிய ஒட்டக மந்தையை அணுகி ஒட்டகப் பாலையும், சிறுநீரையும் அருந்த ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் - கட்டளையிட்டார்கள்.

இந்த நபிமொழியைப் பின்பற்றி உலக முஸ்லிம்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் மூன்று வேளை ஒட்டகச் சிறுநீரை அருந்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக அன்று எட்டுப் பேருக்கு மட்டும் நோய் குணமடைய ஒட்டகச் சிறுநீரை அருந்த அனுமதி வழங்கிய, மதீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை தகவல் என்ற அடிப்படையில் செய்தியாக இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

எனவே,

இந்தச் செய்தியை விமரிக்க முன் வந்தவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக விமர்சித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தனக்குத் தோன்றியதை எழுதுவது அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமற்றது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு, மதீனாவின் பருவ நிலை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் நோயுற்ற எண்மர் ஒட்டகப் பால், மற்றும் ஒட்டகச் சிறுநீரை அருந்தி நோயிலிருந்து குணமடைந்து, பருமனடைந்தார்கள் என்று செய்தி தெரிவிக்கிறது. இது உண்மை இல்லை என்று மறுப்பவர்கள் அறிவாளிகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அந்த எட்டுப் பேரையும் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, இவர்கள் ஒட்டகப் பாலையும், ஒட்டகச் சிறுநீரையும் அருந்தியதால் நோயிலிருந்து குணமடையவில்லை என்று விஞ்ஞான மருத்துவ ஆதாரத்தோடு எழுதியிருந்தால் அது உண்மை விமர்சனமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்திருக்கும்.

வருடந்தோறும் உலக நாடுகளிலிருந்து இன்றும் மதீனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மதீனாவின் சூழல் ஒத்துக்கொள்ளாமல் இவர்களில் எவரும் ஒட்டகச் சிறுநீரை அருந்துவதில்லை. (அப்படிச் செய்தி இருந்தால் அதை எழுதி நிரூபிக்கலாம்) மதீனாவில் மட்டுமில்லை, பருவ நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்று எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் ஒட்டகச் சிறுநீரை அருந்துவதில்லை. இதிலிருந்து இது பின்பற்றத்தக்க செய்தியல்ல அந்த எட்டுப் பேருக்கு மட்டும் சொன்ன ஒரு சம்பவமாகும் என்று முஸ்லிம்கள் விளங்கியே வைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையறியார் எவரும் உடல் ஆரோக்கியத்தை உள்ளத்தில் நினைத்து ஒட்டகச் சிறுநீரை அருந்திட வேண்டாம்! அப்படி அருந்தினால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Thursday, March 20, 2008

நபியவர்களின் மரணம்.

இஸ்லாம் சந்தித்து வரும் இடுக்கண்கள், இஸ்லாம் எதிர் கொண்ட சவால்கள், அதற்கான தீர்வுகள் இத்யாதிகள் அனைத்தும் உலகம் அறிந்ததுதான். இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த சம்பவம், வரலாற்றுக் குறிப்பேடுகளில் மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இயற்கையாக மரணமடைந்தார்கள் என்பதில் இரண்டு கருத்துகள் இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் விஷம் வைத்த உணவை உண்டதால் மரணமடைந்தார்கள் என வரலாற்றில் இல்லாத - சம்பந்தமே இல்லாத செய்தி பரப்பப்படுகிறது. எனவே நபி (ஸல்) அவர்களின் இயற்கை மரணம் பற்றி இங்கு காண்போம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நபிமார்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக மனித சமுதாயத்துக்கு இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தின் போதனைகைளை வழங்கினான் இறைவன். நபிமார்கள் போதித்த நல்லுபதேசங்கள் புறக்கணிக்கப்பட்டதோடு, சில நபிமார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள். (பார்க்க: திருக்குர்ஆன் வசனங்கள், 002:061,091. 003:021,112,181. 004:155. 005:070)

நபிமார்களின் அறவுரைகளைப் புறக்கணித்ததும், போதித்த நபிமார்களைக் கொலை செய்ததும் ஏன்? என்றால் மனித மனம் விரும்பாததை போதித்தாலேயே நபிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள்! என்று திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது. மனம் விரும்பியதையெல்லாம் செய்பவருக்கு, அவரின் செயலால் பிறருக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பிறருக்குத் தீங்கிழைக்கப்படுகின்றன என்பதை உணர்த்தினால் அது பிடிப்பதில்லை. அவர் அறிவு அதை விரும்புவதுமில்லை. காரணம்: தன்னலம் மட்டுமே பிரதானமாகக் கருதுவது, பிறர் நலத்தில் அக்கறை கொள்ளாமல் இருப்பது.

இவ்வாறு மன இச்சைப்படி வாழ்க்கையை அமைக்க வேண்டாம் என்றே நபிமார்கள் வழியாக இறைவன் போதனைகளை வழங்கினான். ஆனால், மன இச்சையைப் பிரியர்கள், நல்லறங்களைப் பிரச்சாரம் செய்த நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்தும் தொடர்ந்து மன இச்சையிலேயே நீடித்தார்கள்.

சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னடியார்களான மனிதர்களுக்கு நேர்வழியையும், ஆதாரங்களையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெள்ளத் தெளிவென தக்க அத்தாட்சிகளுடன் இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து மார்க்கப் பிரச்சாரப் பணிகளை அவர்கள் வழியாக நிறைவேற்றினான். இந்த வரிசையில் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தூதுப் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முந்திய நபிமார்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது போல், முஹம்மது (ஸல்) அவர்களையும் கொலை செய்வதற்கான திட்டங்கள் எதிரிகளால் வகுக்கப்பட்டது.

(நபியே) உம்மைச் சிறைப்படுத்தவோ, உம்மைக் கொலை செய்யவோ, (ஊரை விட்டு) உம்மை வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் சிறந்தவன். (திருக்குர்ஆன், 008:030)

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் மக்காவில் பிரச்சாரம் செய்தபோது, மக்கா நகரின் பெரும் தலைவர்களெல்லாம் இஸ்லாத்தை எதிர்த்து தமது விஷமத்தனைத்தை வெளிப்படுத்தினார்கள். நபியவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிப் குரைஷிகளின் செல்வாக்கு மிக்கத் தலைவராக விளங்கியதால் நபி (ஸல்) அவர்களை எளிதாக நெருங்க முடியவில்லை

அபூதாலிபின் மரணத்திற்குப் பின் மக்காவில் இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் தொல்லைகள் அதிகரித்தது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மதீனாவிலிருந்து அன்சாரித் தோழர்களின் ஆதரவு கிடைத்தது. நபி (ஸல்) அவர்களை எப்படியும் கொலை செய்திட - வேண்டும் என குரைஷித் தலைவர்களும், தலைவரின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட மக்களும் - கொலை வெறியுடன் அலைந்தார்கள். இன்று இரவு முஹம்மதை கொன்று விட வேண்டும் என்ற எதிரிகளின் திட்டம் அவர்கள் எதிர்பாரா அளவுக்கு முறியடிக்கப்பட்டது.

மக்காவைத் துறந்து மதீனாவுக்கு புறப்பட்ட தருணத்திலும் நபியவர்கள் பேராபத்துகளைச் சந்தித்தார்கள். வரலாற்றில் இச்சம்பவம் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது தப்பித்து விட்டார் என்ற செய்தி பரவியவுடன் குரைஷித் தலைவர்கள் மிகுந்த ஆத்திரமடைந்து முஹம்மத், அபூபக்ர் இருவரில் ஒவ்வொருவரின் தலைக்கும் நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என பறைசாற்றினார்கள். அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ யார் மக்காவுக்கு கொண்டு வருகிறார்களோ அவருக்கு இந்தப் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டது. (புகாரி)

இதனால்,கால்நடை வீரர்கள், குதிரை வீரர்கள், காலடித் தட நிபுணர்கள் என நபி (ஸல் அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் மலைகள், பாலைவனங்கள் காடுகள் பள்ளத்தாக்குகள் என சல்லடை போட்டுத் தேட ஆரம்பித்தனர்.

எதிரிகளின் தேடல் நேரத்தில் நபியவர்களும், அபூபக்ரும் ஃதவ்ர் குகையில் இருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ''நான் நபி (ஸல்) அவர்களுடன் குகையில் தங்கியிருந்தபோது எனது தலையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது எதிரிகளின் பாதங்கள் தெரிந்தன, நான் அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது தங்களது பார்வையைத் தாழ்த்தினால் நம்மை பார்த்து விடுவார்களே'' என்று கூறினேன். ''அபூபக்ரே! கவலைப்படாதீர்! நம் இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''நிராகரிப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றி போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், ''நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று அவர் தம் தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான். அமைதியை அவர் மீது இறக்கியிருக்கிறான். நீங்கள் பார்க்காத படைகளை கொண்டு அவரைப் பலப்படுத்தினான்'' (திருக்குர்ஆன், 009:040)

இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்த முந்திய நபிமார்களை கொலை செய்தது போல் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை எவராலும் கொலை செய்ய முடியவில்லை! காரணம்: ஏனைய நபிமார்களை விட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பல சிறப்பம்சங்களில் மனிதர்களால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்திட முடியாது என்று நபியவர்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்கியிருந்தான் இறைவன்.

''தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச் செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்'' (திருக்குர்ஆன், 005:067)

மக்களோடு மக்களாக சாதாரணமாக வாழ்ந்த மாபெரும் தலைவாரக நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். நபியவர்கள் பாதுகாப்பு அரண் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை. அப்படியிருந்தும் எதிரிகளின் சூழ்ச்சிகளால் நபியவர்களை கொல்ல முடியவில்லை.

விஷம் வைத்த சம்பவம்.

கைபர் போர் முடிவில் யூதர்கள் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். விஷம் கலந்த இறைச்சியை உண்ட நபித்தோழர் பிஷ்ர் பின் பாரா (ரலி) இறந்து விடுகிறார். நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. விஷத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால், மனிதர்களிடமிருந்து நபியை காப்பாற்றுவான் என்று இறைவன் வாக்களித்திருக்கிறான். அதனால் எந்த கொம்பனாலும் நபியவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திட முடியாது. விஷத்தாலும் நபியவர்களை கொல்ல முடியாது!

ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு கைபர் போர் நடந்தது. இந்தப் போர் சம்பவத்தையொட்டியே யூதப் பெண்ணால் விஷம் வைத்த விருந்தும் வைக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்பது உண்மையானால் அவர்கள் விருந்து சாப்பிட்ட இடத்திலேயே மரணமடைந்திருக்க வேண்டும். விஷ விருந்தை சாப்பிட்ட நபித்தோழர் சம்பவ இடத்திலேயே மரணித்திருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டு கழிந்து, ஹிஜ்ரி 11ம் ஆண்டு ஸஃபர் மாதத்தில் மரணமடைந்தார்கள்.

இதற்கிடையில்...

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக: (வானவர்) ''ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாவே அதை நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி) இது ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான் மாதம் நடந்த சம்பவம்.

ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ்ஜின் போது,

''நீங்கள் உங்களது ஹஜ் கடமைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) மாட்டேனா என்பதை அறிய மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)

மதீனா பள்ளியில் மிம்பரில் ஏறி, ''நான் உங்களுக்கு முன் செல்கிறேன். உங்களுக்கு சாட்சியாளனாக இருப்பேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் இதுபோல் நபியவர்களின் பல இறுதி உபதேசங்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை பிரியும் வேளை நெருங்கி, அவர்களது மரணச் செய்தி நபியவர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது.

''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' (திருக்குர்ஆன், 005:003)

இஸ்லாம் நிறைவடைந்து, தூதுப் பணியும் பூரணமாக நிறைவுப் பெற்று இனி, இறைத்தூதரின் பிரச்சாரப் பணிக்கு அவசியமில்லை என்ற நிலையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உயிரை இறைவன் கைப்பற்றினான்.

நபி (ஸல்) அவர்கள் விஷம் சாப்பிட்டதால் மரணமடைந்தார்கள் என்று பிற மத நண்பர்கள் கூறுவது வெறும் கட்டுக் கதை!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை