Friday, May 30, 2008

இறைவன் ஒரு வசனத்தை மாற்றினால்!

''நாம் ஒரு வசனத்தை மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்கு நிகரானதையோ கொண்டு வருவோம். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?'' (திருக்குர்ஆன், 002:106)

திருக்குர்ஆனில் சில வசனத்தை மாற்றினால் அதற்குப் பகரமாக சிறந்த வேறு வசனத்தையோ அல்லது அதற்கு நிகரான வசனத்தையோ நாம் கொண்டு வருவோம் என இறைவன் கூறுகின்றான். முன்னர் அறிவித்த சட்டத்தை பின்னாளில் இறைவன் மாற்றியிருக்கின்றான் என்பதே இதன் கருத்து. அதாவது, இறைவன் அருளிய ஒரு சட்டத்தை முதல் நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு அவசியம் கருதி இறைவனே மாற்றியமைக்கின்றான்.

முன்பு அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யவும், தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கவும் இவ்வாறுச் சட்டங்களை மாற்றும் வசனத்தையே ''நாம் ஒரு வசனத்தை மாற்றினால்'' என்று குறிப்பிடப்படுகிறது. இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்றால் ஏன் இப்படி அடிக்கடி சட்டங்களை மாற்ற வேண்டும்? இது இறைவனின் தன்மைக்கு பங்கம் விளைவிக்காதா? என்றக் கேள்வி இங்கு நியாயமாகத் தோன்றினாலும், ஒரு சட்டம் இயற்றும் போது இச்சட்டம் பின்னாளில் மாற்றப்படும் என்பதையும் இறைவன் அறிந்திருப்பான். சூழ்நிலைக்குத் தக்கவாறு சட்டங்களை இயற்றுவதும் - மாற்றுவதும் இறைவனின் ஞானத்தில் எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்திவிடாது.

முதல் மனிதரும், முதல் நபியுமான ஆதம், ஹவ்வா தம்பதியரின் பிள்ளைகளுக்கு, உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணமுடிக்க இறைவன் அனுமதித்தான். இங்கு சகோதரன் சகோதரியை மணக்க அனுமதிக்கவில்லையெனில் மனித இனம் அத்தோடு முடிந்திருக்கும். அதனால் அனுமதித்து, பின்னர் மனித இனம் பெருகியதும் உடன் பிறந்த சகோதரன், சகோதரியை மணந்து கொள்வதைத் தடை செய்து விட்டான். இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு சட்டத்தை அனுமதிப்பதும், தடை செய்வதும் இறைவனின் தனித்தன்மைக்கு எதிரானதல்ல.

தகவல் சம்பந்தப்பட்ட கடந்த கால வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறும் வசனங்களில் முன்னர் அறிவித்ததற்கு மாற்றமாக பின்னர் அறிவித்தால் அது முரண்பாடுடையதாக இருக்கும். கடந்த கால நிகழ்ச்சிகளை மாற்றுவதாக 002:106வது வசனத்தின் பொருள் இல்லை. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை மாற்றுவதாகவும் பொருள் இல்லை. நீ இதைச் செய்தால் பரிசு தருவேன், இதைச் செய்தால் தண்டிப்பேன் என்ற வாக்குறுதியிலும் மாற்றம் செய்வதாகவும், விஞ்ஞான ரீதியான வசனங்களில் முதலில் ஒன்றைக் கூறிய பின் அதை மாற்றுவதாகவும் இவ்வசனத்தின் கருத்து இல்லை.

நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பற்றியே இவ்வசனம் பேசுகிறது. ஆரம்பத்தில் தொழுகையின் முன்னோக்கும் திசையாக பைத்துல் முகத்தஸ் இருந்தது. பின்னர் காபாவை நோக்கித் தொழும்படி சட்டம் மாற்றப்பட்டது.

அறப்போரில் சகிப்புத்தன்மையுடைய இருபது பேருக்கு இருநூறு பேரென எதிரிகளைச் சந்திக்க வேண்டும் (008:065) என்ற சட்டம் இருந்து, பின்னர் சகிப்புத்தன்மையுடைய நூறு பேர்களிலிருந்தால் எதிரிகளில் இருநூறு பேர்களை வெல்ல முடியும் (008:065) என மாற்றப்பட்டது.

சட்டம் இயற்றுவதும், இயற்றிய சட்டத்தை மாற்றுவதும் இறைவனின் தனியதிகாரத்துக்குட்பட்டது. ''அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?'' என்று அறிவிக்கின்றான் மேலும்,

''ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் என்று என்று கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அதிகமானோர் அறியமாட்டார்கள்'' (திருக்குர்ஆன், 016:101)

*****
திருக்குர்ஆன் 002:106வது வசனத்திற்கு மேற்கூறப்பட்டவை பொதுவான விளக்கமாகும். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களின் விமர்சனம் வேறு கோணத்தில் இருக்கிறது.

அல்ஜப்பார்!? என்பவரின் கேள்விக்கு பிற மத நண்பர்களின் விளக்கம்,

Quote:
1) குர்-ஆன் 2:256ம் வசனம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா? என்று கேட்டீர்கள்.

2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

உங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.

1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா?

இந்த வசனம்(2:256) குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.

எப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.

இவ்வசனம் இரத்துசெய்யப்பட்டதா? இதோ சில விவரங்கள்:

1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்‍ஆன் வசனம்:

Quote:
குர்-ஆன் 2:106
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

அல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]

2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:

சில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.

Quote:
(9:73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............

(9:123) நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............

(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும்,...........
[2]

Source: http://www.answering-islam.org/Hahn/mappe.html


பிற மத நண்பர்கள், இங்கு எழுதியக் கருத்துகளை தாம் சொல்வது போலவும், முஸ்லிம் அறிஞர்கள் சொல்வது போலவும் ஓர் இரண்டாங்கெட்டான் தோரணையில் எழுதியுள்ளனர். பின்னர் எதிர் கருத்தைச் சந்திக்க முடியவில்லையெனில் ''நாங்கள் சொல்லவில்லை முஸ்லிம் அறிஞர்கள் சொன்னார்கள்'' என்று நழுவுவதற்கான சந்தர்ப்பத்தையும் திறமையாக ஏற்படுத்தியுள்ளனர்.

தமதுக் கருத்துக்கு வலுச்சேர்க்க எந்த இணையத்திலிருந்து ஆதாரங்களைத் திரட்டுகிறார்களோ, அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் விவாதிக்கும் போது அடுத்தவர்களின் கருத்தும் இவர்களின் கருத்தாகக்கொள்ளப்படும் என்பது பொதுவான விதி! இந்த விதியை பிற மத நண்பர்கள் அறிந்திருந்திருப்பார்கள் என்றே நம்புவோம்.

''இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. வழிகேட்டை நிராகரித்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்'' (திருக்குர்ஆன், 002:256)

இந்த வசனம் ''இஸ்லாத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை - கட்டாயம் இல்லை'' என்ற ஒரு கருத்தை மட்டும் சொல்லவில்லை. ''இது வழிகேடு'' என்றும் ''இது நேர்வழி'' என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிகேட்டிலிருப்பதும், நேர்வழிக்குத் திரும்புவதும் அவரவர் விருப்பத்திற்குட்பட்டது. இதில் எதை வேண்டுமானாலும் ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இஸ்லாம் அவரை நிர்ப்பந்திக்காது - கட்டாயப்படுத்தாது - வற்புறுத்தாது.

வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் ஒருவரை வற்புறுத்தி இஸ்லாத்திற்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை.

வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகியபின் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவரையும் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தையும் உள்ளடக்கியுள்ளது.

இது உண்மையாக இருந்தும் உம்முடைய சமுதாயத்தார் இதை ஏற்க மறுக்கின்றனர். ''நான் உங்களுக்குப் பொறுப்பாளன் அல்ல'' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன், 006:066)

''இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே விரும்பியவர் நம்பட்டும். விரும்பியவர் மறுக்கட்டும்'' (திருக்குர்ஆன், 018:029)

(இஸ்லாத்தை நம்பிக்கை கொண்ட பின்னும் மறுப்பவர் என்ற கருத்திலுள்ள மேலும் சில வசனங்கள் மதம் மாறினால் மரண தண்டனை பகுதியில் இடம்பெறும்)

இறைச் செய்திகளை அறிவிப்பது மட்டும் தான் இறைத்தூதரின் கடமை. அதைச் செவியுற்று கீழ்படிவதும், மறுப்பதும் அவரவரின் சுதந்திரம். இறைவனிடமிருந்து அருளப்பட்டதை விரும்பியவர் நம்பலாம், விரும்பியவர் மறுக்கலாம் எனவும் மத சுதந்திரம் வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்ற 002:256வது வசனம் இரத்தாகி விட்டது என்று சொல்பவர்கள். ''வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக்கப்படவில்லை'' எனக் கூற வருகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

002:256 வசனம் அருளப்பட்ட வரலாறு

(அறியாமை காலத்தில்) ஒரு பெண்ணுக்குப் பல குழந்தை பிறந்து இறந்து விடின், அவள் அடுத்த குழந்தை உயிரோடு வாழ்ந்தால் அதை யூத மதத்தில் சேர்த்து விடுவேன் என்று தன் மீது கடமையாக்கிக் கொள்வாள். (அதன்படி பலர் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் யூதர்களிடம் இருந்து வந்தனர்) பனூ நளீர் எனும் யூதக் கூட்டத்தார் வெளியேற்றப்பட்ட போது அவர்களில் அன்சாரிகளுடைய பிள்ளைகளும் இருந்தனர். அவர்களுடைய பெற்றோர்கள் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை (யூத மதத்தில்) விடமாட்டோம் என்று கூறினார்கள். அப்போது இவ்வசனம் அருளப்பட்டது. (அபூதாவூத்)

மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பதை ''இஸ்லாத்திற்கு வர யாரையும் நிர்ப்பந்திக்கக்கூடாது'' என்று விளங்க வேண்டும் என மேற்கண்ட நபிமொழியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்பது எங்கெல்லாம் நிர்ப்பந்திக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நிர்ப்பந்தம் கூடாது என்று பொருள் கொள்வதே திருக்குர்ஆனை விளங்கியதாகும். இன்னும் மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்ற வசனம் இரத்து செய்யப்பட்டது எனக் கூறி அதற்குச் சான்றாக போர் சம்பந்தப்பட்ட வசனங்களை எடுத்து வைக்கிறார்கள்.

அதாவது இணைவைப்பவர்களுடன் போர் செய்து, அவர்களை ''இஸ்லாத்தில் இணைய நிர்ப்பந்தப்படுத்துங்கள்'' என்று சொல்வது போல், போர் செய்யுமாறு அருளப்பட்ட வசனங்கள் ''இஸ்லாத்தில் கட்டாயமில்லை'' என்ற வசனத்தை மாற்றி விட்டது என்று சொல்கிறார்கள்.

திருக்குர்ஆனில் ஒரு வசனம் மாற்றப்பட்டது அல்லது இரத்து செய்யப்பட்டது என்று இருக்குமானால் அது இறைவனோ, இறைத்தூதரோ சொல்லியிருக்க வேண்டும். என்பதை பிற மத நண்பர்கள் புரிந்து கொள்ளட்டும்.

2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:


பிற மத நண்பர்கள் ஆதாரமாக வைக்கும், போர் சம்பந்தமாக இறக்கப்பட்ட மேற்கண்ட வசனங்களைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Sunday, May 25, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-3 A

ஜப்பார் என்பது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். இதற்கு ''ஆதிக்கம் செலுத்துபவன்'' என்று பொருள். (பார்க்க: திருக்குர்ஆன், 059:023) அல் ஜப்பார் என்று முஸ்லிம்கள் பெயர் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி பெயர் சூட்டியிருந்தால் அது அறியாமையாகும். அறியாமல் அல் ஜப்பார் என்று முஸ்லிம் யாரேனும் தனக்கு பெயர் வைத்திருந்தால் அப்பெயரை அப்துல் ஜப்பார் என்று மாற்றிக்கொள்ளவும்.

அல்ஜப்பார்!? என்பவரின் கேள்வி:

Quote:
Dear
Good Morning!

Do you know in Quran - Chapter al-bakara 2:256 saying that, there is 'NO' compulsion in Islam that everyone must adopt Islam as our religion. Yes. It is your right to accept about if you will! Please let me know where in Quran or Hadith stating if a muslim left from Islam, he/she must kill? I waiting for your reply. My ID : aljabbarஅட்gmail.com

குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.



ஆதாரம் 1,

''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992. புகாரி மூலமொழி 2794,

6411

திர்மிதீ தமிழ் 1483. மூலமொழி 1378 )

ஆதாரம் 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.

2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.

3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன்.

(புகாரி தமிழ் 6878. மூலமொழி 6370. முஸ்லிம் தமிழ் 3463, 3464. மூலமொழி 3175,

3176 )

ஆதாரம் 3.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸயீ மூலமொழி 3980)

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களே!

மதம் மாறினால் மரண தண்டனை என்று இஸ்லாம் கூறும் ஆதாரங்கள் இதுதான். இவற்றை உள்வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள். திருக்குர்ஆன், 002:106வது வசனம் அருளப்பட்டு 002:256வது வசனம் இரத்து செய்யப்பட்டது என்ற கருத்து சரியா? என்பதையும், இதற்கு வலு சேர்க்க எழுதியுள்ள மற்ற வசனங்களையும் பார்த்துவிட்டு மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழிகளின் விளக்கத்தையும் பார்க்கலாம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Friday, May 23, 2008

முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்மை வணங்கும்படிக் கட்டளையிட்டிருந்தால் முஸ்லிம்கள் முஹம்மத் நபியை வணங்கியிருப்பார்கள். மறாக, இறைவன் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன் என்று ஓரிறைவனையே நபியும் வணங்கி முஸ்லிம்களும் வணங்க வேண்டும் என்று பிராச்சாரம் செய்தார்கள்.

''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை''

''நான் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவேன்''

இப்படித்தான் வணங்குபவனையும், அடியார்களையும் நபியவர்கள் அடையாளம் காட்டினார்கள்.

''நான் உங்களைப் போன்ற மனிதனே, எனக்கு இறைச்செய்தி வருகிறது'' (திருக்குர்ஆன், 018:110. 046:006) என்பதற்கு மேல் நபியவர்கள் தம்மை இறையாக, வணங்கத் தகுதியுள்ளவராக அறிமுகம் செய்ததில்லை.

நான் ஹியாரா எனும் ஊருக்குச் சென்றேன் மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். ''நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று நபியவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியக்கூடாது'' என்று என்று கூறினார்கள். நபிமொழியின் சுருக்கம், நூல்: அபூதாவூத்.

தமக்குச் சிரம் பணியத் தயாராக ஒரு கூட்டம் இருந்தும் மனிதனுக்கு மனிதன் அவ்வாறு செய்யக் கூடாது. எனக்கும் எவரும் சிரம் பணியக்கூடாது என்று நபியவர்கள் சுய மரியாதையைக் கற்றுக்கொடுத்தார்கள். இன்று பார்க்கிறோம், மனிதனின் காலில் மனிதன் விழுந்து வணங்குகிறான். அதுவும் ஆன்மீகத் தலைவர்கள் என்றால் காலில் விழுவது இன்னும் அதிகம். முஸ்லிம்கள் காலில் விழத் தகுதியான ஒரே ஆன்மீகத் தலைவர் நபியவர்கள் மட்டும் தான். நபியும் என் காலில் விழக்கூடாது, யார் காலிலும் யாரும் விழக்கூடாது என்றும் தடை செய்தார்கள்.

''எனது மண்ணறையைக் கடந்து சென்றால் அதற்குச் சிரம் பணியாதீர்கள்'' (நூல்: அபூதாவூத்)

''எனது மண்ணறையை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே'' என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்'' (நூல்: அஹ்மத்)

''யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சிரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள். (நூல்: புகாரி)

நபியவர்கள் இருக்கும் போதும் தன்னை வணங்கக் கூடாது என்றார்கள். தன் மறைவுக்குப் பின்னும் தன்னை வணங்கக் கூடாது என்றும் எச்சிரித்துச் சென்றார்கள்.

வணங்குவதும், நேசித்தலும்

முஸ்லிம்கள் நபியை நேசிக்கிறார்கள் என்றால் அது அவரை வணங்கியதாகுமா? என்றால் நிச்சயமாக இல்லை! நபியை நேசித்தல் என்பது ஆன்மீகத்தில் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும்.

''நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்'' (திருக்குர்ஆன், 003:031)

நீங்கள் இறைவனை நேசிக்கிறீர்களா? அப்படியானால் இறைத்தூதரைப் பின்பற்றுங்கள். இறைவன் உங்களை நேசிப்பான். என்று பின்பற்றத்தக்க ஒரே தலைவர் நபியவர்கள் என்பதை எளிமையாகக் கூறுகிறது திருமறை வசனம்.

அல்லாஹ்வை இறைவனாகவும்,

முஹம்மதை இறையடியாராகவும், இறைத்தூதராகவும்,

இஸ்லாத்தை மார்க்கமாக - வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர் தனது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நபியவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

உதாரணமாக:

வைகறை வணக்கமானத் தொழுகையை நிறைவேற்ற உறக்கத்திலிருந்து விழிப்பவர் அது நபியவர்களின் வழிகாட்டல் என நபியவர்களைப் பின்பற்றுவதற்காகவே அதிகாலையில் விழித்தெழுகிறார். அன்றைய தினம் பொருளீட்டுவதும், தாம் திரட்டும் பொருள் நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் நபியவர்களைப் பின்பற்றுகிறார். இவ்வாறு உண்ணுவதிலிருந்து அன்றாட அலுவலில் எதைச் செய்தாலும் அதில் நபியைப் பின்பற்றி தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கிறார். உறங்கு முன்னும், மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன்னரும் நபியவர்கள் கற்றுத் தந்த பிராத்தனைகளைக் கூறி இங்கும் ஒரு முஸ்லிம் நபியவர்களைப் பின்பற்றுகிறார்.

எனவே, இங்கு இறைச் செய்தியைப் போதிக்கும், இறைத்தூதுவர் என்ற பதவிதான் பின்பற்றப்படுகின்றன. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த இறைத்தூதரே இறைச் செய்தியைப் பின்பற்றும் முதல் முஸ்லிமாக இருந்தார்.

''முஸ்லிம்களில் நான் முதலாமானவன்'' என்று கூறுவீராக! (திருக்குர்ஆன், 006:163)

இறைச் செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு இறைத்தூதர் செயல்படாமல் இருக்கவில்லை. அவரும் தொழ வேண்டும், உண்ணா நோன்பிருக்க வேண்டும், இறைச் செய்தி என்னென்ன கட்டளையிடுகின்றதோ அவைகளையெல்லாம் இறைத்தூதர் முதல் முஸ்லிமாக செயல்படுத்தி, பிற முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் முதல் முஸ்லிமாக இருந்து, முஹம்மத் நபி (ஸல்) அவர்களை வணங்கினார்கள் என்று எந்தக் கொம்பராலும் சான்றுகளைக் காட்ட இயலாது. முஹம்மத், முஹம்மதை வணங்கியிருந்தால் அதுவே முஸ்லிகள் பின்பற்றும் வழிகாட்டியாக இருந்திருக்கும் இஸ்லாத்தில் அப்படி இல்லை. முஹம்மத் எவனை வணங்கி, வணங்கச் சொல்லியும் வழிகாட்டினாரோ, அந்த ஏக இறைவனையே முஸ்லிம்கள் வணங்குகின்றனர். இறைத்தூதர் முஹம்மதை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது.

ஆனாலும், திண்ணையில் மலர் மன்னன் இவ்வாறு எழுதியுள்ளார்...

//...தங்கள் இறைத் தூதரை அவர்கள் வணங்குவதில்லை என்று சொல்வது ஒரு சம்பிரதாயமே ஆகும். வேண்டுமானால் ஒன்று கேட்டுப் பார்ப்போம். "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல' என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் "ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?//


கடந்த சனிக்கிழமை, 17,05.2008 அன்று திண்ணையில் வெளியாகிய, பெயரின் முக்கியத்தவம் பற்றி என்ற கட்டுரை.

எவ்வித ஆதார அடிப்படையில்லாத, நம்பிக்கையற்ற போகிற போக்கில் கேட்டுப் பார்ப்போமே என்று சொல்வார்களே அதுபோல் உள்ளது மலர் மன்னனின் திரு வாசகம். அவருக்குச் சொல்லிக்கொள்ளவே இந்த ஆக்கம் என்று கொள்க!

நான் பின்பற்றும் இஸ்லாத்தின் இறைத்தூதராகிய முஹம்மத் நபியை நான் வணங்கவில்லை! வணங்கவும் மாட்டேன்! என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.

நான் மட்டுமல்ல, எந்த முஸ்லிமும் இறைத்தூதர் முஹம்மத் நபியை வணங்கவில்லை, வணங்க மாட்டார்கள், வணங்கவும் கூடாது. என்றும் உரக்கச் சொல்லிக்கொள்கிறேன்.

''ஹிட் லிஸ்டில்'' பதிவு செய்ய மலர் மன்னன் சிபாரிசு செய்யலாம்.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

நன்றி: திண்ணை.காம்

Monday, May 12, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-3

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.


தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது. இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள். அந்த ஆட்சியில் இராணுவம் இருந்தது. முஸ்லிம், காஃபிர், என இரு எதிரி இராணுவத்திலும் உளவு பார்க்கும் ஒற்றர்கள் இருந்தார்கள். முஸ்லிம் ஒற்றர் காஃபிர்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார். காஃபிர் ஒற்றர் முஸ்லிம்களிடம் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 8ம் ஆண்டு மக்காவைக் கைப்பற்றுவதற்காக இராணுவப் படையுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்கான ஏற்பாடுகளை இரகசிமாக மேற்கொண்டு வந்தார்கள். இந்தப் படையெடுப்பு மக்கத்துக் குரைஷியற்கு தெரிந்து விடக்கூடாது என்பது நபியவர்களின் எண்ணமாக இருந்தது.
ஆனால், நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் இந்தப் படையெடுப்பு இரகசியத்தை குரைஷியற்குத் தெரிவிப்பதற்காக கடிதம் எழுதி ஒரு பெண்மணி மூலமாக மக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். இறைவன் வஹீ மூலமாக இச்சம்பவங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான். உடனடி நடவடிக்கையாக கடிதம் கொண்டு செல்லும் பெண்மணி வழியில் மடக்கப்பட்டுக் கடிதம் கைப்பற்றப்படுகிறது.

கடிதத்தில் உள்ள விபரங்கள் அறிந்து ''ஹாத்திபே என்ன இது'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு ''அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குரைஷியரில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன். (இணைவைப்பவர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்) நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்'' என்றார்.

(நபிமொழியின் சுருக்கம். முழு விபரங்கள் அறிய பார்க்க தமிழ் புகாரி, ஹதீஸ் எண்கள்: 3007, 3081, 3983, 4274)

நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்து கொண்டவராவார். இஸ்லாமிய ஆட்சியின் போர் நடவடிக்கையை எதிரி நாட்டுக்கு தெரிவித்தது பெரும் குற்றம் என்றாலும் அவருடைய உள்ளத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. மக்காவிலிருக்கும் தனது உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதால், மதீனாவிலிருந்து புறப்படவிருக்கும் முஸ்லிம்களின் போர்ப்படையைப் பற்றியத் தகவலை மக்காவிலிருக்கும் முஸ்லிம்களின் எதிரிகளுக்குத் தெரியப்படுத்துகிறார்.

ஹாத்திப் (ரலி) அவர்கள் சொன்னது உண்மை - ''இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' - என்று நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கிறார்கள்.

''எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன், 060:001)

மேற்கண்ட இறைவசனம் ஹாத்திப் (ரலி) அவர்களின் தொடர்பாக அருளப்பட்டது. (பார்க்க: புகாரி ஹதீஸ் எண் 4890) இஸ்லாமிய ஆட்சி மேற்கொள்ளும் போர் நடவடிக்கைப் பற்றிய இராணுவ இரகசியங்களைச் சொல்லுமளவுக்கு எதிரிகளை உற்ற நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் என இறைவசனம் கட்டளையிடுகிறது.

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

''நான் என் மார்க்கத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று ஹாத்திப் (ரலி) கூறினார்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

மதம் மாறினால் மரண தண்டனை-1

மதம் மாறினால் மரண தண்டனை-2

Sunday, May 04, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-2

இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று, இஸ்லாத்தில் இணைந்து கொள்ள விரும்பும் பிற மதத்தினர் எவரும் - ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்''  என்ற - உறுதி மொழியைக்கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக்கொள்கிறார்.

இஸ்லாத்தைத் தழுவிய அவ்வினாடியிலிருந்து இறைவணக்கம், திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை, கடன் கொடுக்கல், வாங்கல் போன்ற இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படும் முஸ்லிம்களில் ஒருவராகி, முஸ்லிம்களுக்குள்ள கடமைகளும், உரிமைகளும் இவருக்கும் ஏற்பட்டுவிடும். அதனால் இஸ்லாத்துக்கு மதம் மாறுபவர் இஸ்லாத்தின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்ற உறுதி மொழியை வழங்கிய பின்னரே இஸ்லாத்தைத் தழுவுகிறார். இதுவே உறுதியான உடன்படிக்கையாக இருப்பதால், பிற மத நண்பர்கள் விமர்சிப்பது போல் ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பார்க்க: மதம் மாறினால் மரண தண்டனை-1

முனியாண்டியும், ஜான் ஜோசப் மகன் மத்தேயுவும்.

மத்தேயுவும், முனியாண்டியும் தங்கள் தாய் மதத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் இருவர் மனைவியரின் நிலை என்னவோ, அதுவே இருவரும் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் போதும் ஏற்படும் நிலையாகும். அதாவது, முனியாண்டி தனது மனைவியுடன் இஸ்லாத்தை ஏற்றால் இருவரும் முஸ்லிமாகி இல்லற வாழ்க்கையைத் தொடரலாம். மத்தேயு இஸ்லாத்திலும், மத்தேயுவின் மனைவி தாய் மதத்திலும் இருந்தால் இருவரும் இல்லறத்தில் தொடர முடியாது.
ஏனெனில், மதக் கொள்கையால் வேறுபட்டவர்கள் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள், அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன். (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (திருக்குர்ஆன், 002:221)

நம்பிக்கைக் கொண்டவரும், நிராகரித்தவரும் மணமுடித்துக் கொள்ளக்கூடாது என்பதால், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முனியாண்டியின் மனைவி, இஸ்லாத்திலிருந்து வெளியேறாத முஸ்லிமாகவே இருப்பார் - வெளியேறிய முனியாண்டியின் மனைவியாக இருக்க மாட்டார். இஸ்லாத்தை விட்டு வெளியேறிய முனியாண்டி உயிருடன் இருந்தாலும், மரணித்தாலும் இரண்டும் ஒன்றுதான். அதனால் முனியாண்டியின் மனைவியாக இருந்த முஸ்லிம் பெண்மணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இஸ்லாமிய அரசு அவரை நிர்கதியாக விட்டுவிடாது. அவர் மறுமணம் செய்து கொள்ளும் வரை அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

(மரணித்த) ஒருவர் செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிவுகளுக்குரியதாகும். ஒருவர் (திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்சொன்றால் அவர்களைப் பராமறிப்பது (ஆட்சித் தலைவரான) எமது பொறுப்பாகும். (புகாரி, முஸ்லிம்)

மூஃமின்களில் யாரேனும் கடனை விட்டு மரணித்தால் அதை நிறைவேற்றவது என்னைச் சேர்ந்ததாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

ஒரு முஸ்லிம் மரணித்து விட்டால், திக்கற்ற அவரது குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை இஸ்லாமிய அரசு ஏற்றுக்கொள்ளும். ஒரு முஸ்லிம் இஸ்லாத்திலிருந்து வெளியேறியதால் திக்கற்ற அவன் குடும்பத்துக்கும் இஸ்லாமிய அரசு ஆதரவு அளிக்கும். எனவே இஸ்லாத்திருந்து வெளியேறிய முஸ்லிம் தண்டிக்கப்படடால் அவரின் முஸ்லிம் மனைவி மறுமணம் செய்து கொள்ளும்வரை அக்குடும்பத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அரசின் ஆதரவு இருக்கும். என்பதை இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் உணர்ந்து, தேவையெனில் ஸ்டாம்ப் பேப்பர் தயாரித்துக் கொள்ளுங்கள் உங்கள் மதத்தைத் தழுவ வருபவர்களுக்காக!

அடுத்து, காஃபிர்களின் சட்டங்களை முஸ்லிம்கள் உதாராணமாக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எது இஸ்லாத்தின் சட்டம்? எது காஃபிர்களின் சட்டம்? என்பது பற்றி அடுத்த பகுதியில், நன்றி!

அன்புடன்,
அபூ முஹை