Monday, April 28, 2008

போர் ஆயுதங்கள் தயாரித்தல், சேகரித்தல்.

உலக நாடுகளில் வல்லரசு தரத்தில் உள்ள நாடுகள் ஆயுதங்களைத் தயாரித்து வியாபாரம் செய்கின்றன. எல்லா நாடுகளும் எந்நேரத்திலும் எதிரிகளைச் சந்திக்க நேரலாம் என நாட்டின் நலன் கருதி போர் ஆயுதங்களைத் தயாரிக்கின்றன, வேறு நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்குகின்றன.

மாட்டுத் தீவனம் ஊழல், நிலக்கரி ஊழல் என போர் ஆயுதங்கள் வாங்குவதிலும் போபர்ஸ் ஊழல், ஆயுதப்பேர ஊழல் எனவும் நடந்தேறியுள்ளது. சரி,

தனி மனிதக்கும் தன்னுயிர் தற்காப்புக்காக ஆயுதங்கள் தேவைப்படுகிறது. முக்கியப் புள்ளிகளாக இருந்தால் ஆயுதம் தாங்கிய வீரர்களை அவருக்குப் பாதுகாப்பாக வழங்கப்படுகிறது. முக்கியப் புள்ளிகளின் குடும்பத்தினக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். நீதியை நிலைநாட்டும் நீதிபதி, மக்கள் தொண்டாற்றும் அதிகாரி, என நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கும் ராணுவ அதிகாரிக்கும் பாதுகாப்புத் தேவையாக உள்ளது என்றால், எதிரிகளை அச்சமடைய செய்வவும், எதிரிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் எதிர் தாக்குதல் தொடுப்பதற்கும் அல்லாமல், அது வன்முறை - பயங்கரவாத செயலோ அல்ல.

போர்க் கருவிகளில் அபாயம் நிறைந்த நவீனங்கள் வரவில், அணுவை ஆயுதமாக்கும் தொடக்கம் அப்பாவித்தனமாகத் தொடங்கி, அணுகுண்டு தயாரிக்கும் ஆய்வுக்காக 200 கோடி டாலர்கள் செலவு செய்து அதைச் சோதிக்க ஹிரோஷிமாவும், நாகசாகியும் தேவைப்படுகிறதென்றால் ''இதோ பார், என்னிடம் பலம் வாய்ந்த ஆயுதங்கள் உள்ளன'' என்று எல்ரோரையும் அச்சமடைய செய்வதற்கல்லாமல் வேறு எதற்கு!

ஈனோலாகே என்று சொல்லப்பட்ட வல்லரசு விமானம் உலக வரலாற்றில் முதன் முறையாக 1945,ஆகஸ்ட் 6ம் நாளில் ஹிரோஷிமா நகரில் தன் சோதனையை வீசியதில் 1,40000 மக்கள் பலியானார்கள். மீண்டும் 1945, ஆகஸ்ட் 9ம் நாளில் நாகாசாகியில் அணுகுண்டு வீசியதில் 75,000 மக்கள் பலியானார்கள்.

உலக நாடுகள் அதிர்ந்தன, அச்சமடைந்தன. இன்றும் வீராப்புப் பேசினாலும் வல்லரசின் போர் ஆயுதங்களுக்கு அச்சம் விலகிடவில்லை.

விஷயத்துக்கு வருவோம்,

மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,


//டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://


பதினைந்து நிமிடங்கள் காட்சித்தரும் குறும்படம் தாயாரித்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு மேலை நாட்டவர் உணர்த்தி விட்டார். பதினைந்து நிமிடங்கள் காட்சியளிக்கும் ஒரு குறும்படத்தைப்பார்த்து இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்பதை ஒரு கீழை நாட்டவர் உணர்ந்து கொண்டார்.

இஸ்லாம் வன்முறை, பயங்கரவாத மார்க்கம் என்பதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் திருக்குர்ஆன் வசனங்களில் ஒன்று:

அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்) அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்க பூரணமாகவே வழங்கப்படும் (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (திருக்குர்ஆன், 008:060)

இஸ்லாம் - முஸ்லிம்களின் எதிரிகள் மக்காவில் இருந்தனர். மதீனாவில் முஸ்லிம்கள் இருந்தனர். மக்காவுக்கும், மதீனாவுக்கும் இடையே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவு உள்ளன. இன்று ஆகாய மார்க்கமாக ஒரு மணி நேரம். தரை மார்க்கமாக பேரூந்தில் சுமார் ஐந்து மணி நேரம். ஆனால், அன்று மக்காவுக்கும் மதீனாவுக்கு இடையே சுமார் பத்து நாட்கள் பயணமாக இருந்தது.

இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற வெறியோடு படைகளைத் திரட்டிக்கொண்டு மதீனாவை நோக்கிப் புறப்பட்டனர். இதை அறிந்த முஸ்லிம்கள், எதிரிகளை ஊருக்குள் நுழைவதைத் தவிர்க்க, மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்று, மக்கா நோக்கிச் செல்லும் பாதையில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பத்ர் எனுமிடத்தில் எதிரிகளைச் சந்தித்தனர். இஸ்லாத்தின் எதிரிகள் இந்தப் போரில் தோல்வியைத்தழுவினர். முஸ்லிம்கள் வெற்றிப்பெற்றனர். (நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த காலத்தில் நடந்த முதல் போர்)

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறோம் என்றால் முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்களை உண்டு, இல்லை என ஆக்கிவிட வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் எதிரிகள் குறியாக இருந்தனர். ஆள் பலம், ஆயுதபலம், போர் வாகனங்கள், பொருள் பலமும் எதிரிகளிடம் வலுவாக இருந்தன. முஸ்லிம்கள் பலவீனமாக இருந்தார்கள்.

எதிரிகள் அச்சமடையவும், அவர்களை யுத்தத்தில் சந்திப்பதற்காகவும், முஸ்லிம்கள் தங்களைப் பலபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து திருக்குர்ஆன், 008:060ம் வசனம் பேசுகிறது. இது தனி மனிதனுக்கோ அல்லது குழுவிற்கோ சொல்லப்பட்டதல்ல.

இரண்டாவது அகபா உடன்படிக்கை வரலாறு அறிந்தவர்களுக்கு விளங்கும், மதீனாவில் இஸ்லாத்தை ஏற்ற அன்ஸாரிகள், நபி (ஸல்) அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையே அகபா ஒப்பந்தம்.

அகபா உடன்படிக்கையின் மூலம் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு அழைப்பு விடுத்து, அங்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலாம், இதனால் எதிரிகளின் தாக்குதலில் இருந்து எங்கள் உயிரைக் கொடுத்தாவது நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றுவோம். என அன்ஸாரிகள் உடன்படிக்கை செய்து, நபியவர்களை மதீனாவுக்கு அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வழைப்பை ஏற்று மதீனா சென்றார்கள். இதன் பிறகு நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் துவங்கியது.

நபி (ஸல்) அவர்களும், அன்ஸாரிகளும் செய்துகொண்ட இரண்டாவது அகபா உடன்படிக்கையை குறைஷித் தலைவர்கள் அறிந்து ஆத்திரமடைந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு உதவியதன் மூலம் குறைஷியற்கு அன்ஸாரிகள் எதிரியானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த போது, மதீனாவாசிகள் நபியவர்களைத் தலைமையாக ஏற்றுக்கொண்டனர். தனது தலைமை பறிபோனதே என அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்பவன் உறவாடிக் கெடுக்க, வஞ்சனையுடன் இஸ்லாத்திற்குள்ளிருந்தே இஸ்லாத்தின் எதிரியாகச் செயல்பட்டான். இவனுக்கு ஆதரவு அளிக்கவும் வேறு சில எதிரிகள் இருந்தனர். இவ்வாறு பல வழிகளிலும் அறிந்தும், அறியாமலும் எதிரிகள் இருந்தனர். அவர்களை அச்சமடையச் செய்யவும், அவர்கள் போரிட்டால் எதிர்த்துப் போர் செய்யவும் ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் தயார்படுத்திக் கொள்ளுங்கள். என ஆட்சியாளருக்குச் சொல்லப்படுகிறது.

''அல்லாஹ்வின் எதிரிகளையும்.

உங்கள் எதிரிகளையும்.

அவர்கள் அல்லாத மற்றவர்களையும்.

நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ்வே அறிவான்'' என்று இந்த 008:060 வசனம் கூறுகிறது.

மக்காவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது மட்டுமல்லாமல், வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் தீர்த்துக்கட்டும் வெறியுடன் போர்த் திட்டங்களை வகுத்த எதிரிகளின் அபாயத்திலிருந்து, இஸ்லாமிய அரசு நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக போர் ஆயுதங்களைத் தயாரிப்பது - சேமிப்பது வன்முறை - பயங்கரவாதம் என்றால், நாட்டின் பாதுகாப்பிற்காக போர் ஆயுதங்களை வைத்திருக்கும் அத்தனை நாடுகளும், வன்முறை - பயங்கரவாத நாடுகள் என்று முத்திரைக் குத்திவிடலாம்.

போர், வன்முறை இவ்விரண்டுக்கும் வித்தியாசத்தை உணர முடியாத அளவுக்கு இவர்களிடம் இஸ்லாமிய வெறுப்பு மிஞ்சியுள்ளது.

ஃபித்னா என்றால் வன்முறை - பயங்கரவாதம் என்பதற்கு குறும்படத்தில் சொல்லிய இன்னும் மற்ற திருக்குர்ஆன் வசனங்களையும் அடுத்துப் பார்ப்போம் நன்றி!

முந்தைய விளக்கம்: ஃபித்னா என்றால் என்ன?

அன்புடன்,
அபூ முஹை

Wednesday, April 23, 2008

மதம் மாறினால் மரண தண்டனை-1

ஒரு முஸ்லிம் மதம் மாறினால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற கருத்தில் பிறமத நண்பர்கள் சமீபமாக தங்களின் விமர்சனத்தை எழுதி வருகிறார்கள். உலகளவில் 80ஆயிரம் முஸ்லிம்கள் மதம் மாறியுள்ள தகவலையும் முன்பு எழுதியுள்ளனர். எங்கு முஸ்லிம்கள் மதம் மாறினாலும் அதைப்பதிவு செய்ய தாமதப்பதில்லை. அந்த அளவுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மீது பற்றுள்ளவர்கள்.

மதம் மாறிய 80ஆயிரம் முஸ்லிம்களுக்கும் மரண தண்டைனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நாம் கேட்க மாட்டோம். சமீபத்தில் பழனியில் மதம் மாறிய ராசிமுஹம்மது, நாசர்ஹஸன் இரு முஸ்லிம்கள் மதம் மாறியும், அவர்கள் தண்டனை பெறவில்லை என்பதை அனைவரும் அறிவோம்.

கொலைக்குக் கொலை எனவும் விபச்சாரத்துக்கும் இஸ்லாம் மரண தண்டனை விதிக்கிறது. இம்மரண தண்டனை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை. ஆனால், மதம் மாறினால் மரண தண்டனை என்பதை ஆஹா, ஓஹோவென அபாரமாக விமர்சிக்கின்றனர். ஒருவேளை, மதம் மாறினால் மரண தண்டனை விதியைக் குறித்து அறிந்திராத முஸ்லிம்களை எச்சரிக்கும் நல்லெண்ணமாக இருக்கலாம், இருக்கட்டும்.
இதில் இஸ்லாத்தின் கருத்து என்ன? என்பதை தொடர்ந்து எழுதுமுன், தர்க்க ரீதியாக இவர்கள் சொல்லும் கருத்து சரியா? என்பதைப் பார்ப்போம்.

கணினியில் மென் பொருள், கெட்டிப் பொருள் தரவிறக்கம் செய்யுமுன், அதை உருவாக்கியவர்கள் Agree - ஒப்புக்கொள், இணங்கு என நிபந்தனை விதிப்பார்கள். அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே பொருளை பதிவிறக்கம் செய்ய முடியும். பெரும்பான்மையினர் நிபந்தனையை வாசிக்காமலேயே ஒப்புக்கொள்கிறேன் - Agree என்று சொடுக்கிவிடுவர். இதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றாலும் நாளை பிரச்சனை என்று வந்தால் சிக்கலை ஏற்படுத்தும்.

வலைப்பூ திரட்டிகள், மன்றங்கள், இணையங்கள் இவைகளில் சேரும் போது அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை படிக்காமல் சம்மதம் தெரிவித்து, சேர்ந்தபின் நிபந்தனை என்னவென்று தெரியாமலேயே அதை மீற நேர்ந்தால் அங்கு வல்லு வழக்கு ஏற்படுவதை அனுபவமாக தெரிந்து கொள்கிறோம்.

இந்த அனுபவம் கணினித் துறையில் மட்டுமில்லை, எல்லாத் துறைகளிலும் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் Agree - ஒப்புக்கொண்டு சேர்ந்தபின் விதிகளை மீறுவதால் அங்கு பணியாற்றுபவர்கள் தற்காலிக நீக்கம், நிரந்தர நீக்கம் செய்யப்படுகிறார்கள். இது ராணுவம், நீதி, காவல், அரசு, அரசியல், தொழில் மற்றும் தனியார் துறைகளிலும் உள்ள அனுபவம்.

இனி விஷயத்துக்கு வருவோம், ஒரு பிறமத நண்பர் இவ்வாறு எழுதுகிறார்...

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ... நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:

என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.


பிறமத நண்பரின் மேற்கண்ட விமர்சனம் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்க அறிவுரை சொல்வது கவ்வைக்குதவாத வாதம். ஒருவன் எந்த மதத்தைத் தழுவினாலும், மதத்தில் இணையும் போதே அம்மதத்தின் விதிகளை Agree - மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட பின்பே அம்மதத்தைத் தழுவுகிறான்.

முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவும் போது ''வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று சாட்சி கூறுகிறேன்'' என்று உறுதிமொழி எடுத்த பின்பே இஸ்லாத்தில் இணைகின்றனர். இங்கு இஸ்லாத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்படுகிறேன் என Agree - ஒப்புதல் தெரிவித்து, இஸ்லாத்தின் இணைந்தபின் மதம் மாறினால் மரண தண்டனை என்ற விதியையும் ஏற்றுக்கொண்டே இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். பிறகு எதற்கு ஸ்டாம்ப் பேப்பர்?

ஸ்டாம்ப் பேப்பர் பிற மதத்தைத் தழுவும் பிற மத நண்பர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். இஸ்லாத்துக்கு அவசியமில்லை. முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தில் நுழையும்போதே மதம் மாறினால் மரண தண்டனை என்ற பிரமாணத்தையும் ஏற்று மதம் மாறுகின்றனர். என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.

அடுத்து, மதம் மாறி மரண தண்டனை விதிக்கப்பட்டவனின் மனைவியின் நிலை என்ன? என்று மிகவும் அக்கறையோடு ஆலோசனை எழுதியுள்ளனர். முனியாண்டியும், மத்தேயும் இஸ்லாத்தைத் தழுவுமுன்பு இருவர் மனைவியின் நிலை என்ன? என்பதற்கான தீர்வையும் இவர்கள் எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால் சார்பற்றதாக இருந்திருக்கும்.

பரவாயில்லை, அடுத்த பதிவில் அது குறித்து நாம் விளக்குவோம் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Tuesday, April 22, 2008

Fithna - Fiத்னா என்றால் என்ன?

இஸ்லாம் மார்க்க வழிகாட்டி, திருக்குர்ஆனில் ஃபித்னா என்ற வாசகம் அல்ஃபித்னா, வல்ஃபித்னா ஃபித்னா இன்னும் பல உச்சரிப்பில் சுமார் 60 வசனங்களில் இடம்பெற்றுள்ளது. இன்னும் ஹதீஸ் நூற்களில் ஃபித்னா என்ற வாசகம் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஃபித்னா என்றால் என்ன பொருள்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்,..

மேலைநாட்டு குறும்படத் தயாரிப்பளார் கீட் வைல்டெர்ஸ் என்பவர் தயாரித்து வெளியிட்ட பிட்னா எனும் குறும்படத்தை குறித்து ஒரு கீழை நாட்டவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,

//சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details http://en.wikipedia.org/wiki/Fitna_(word)
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது. இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்://


இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்ற ஆதாரமற்றக் கட்டுக் கதைகள் புளித்துவிட்டது. ஆனால் ஃபித்னாவுக்கு கொடுத்த விளக்கம் அறியாமையால் விளைந்த புதுக்கதை. மேலை நாட்டாரானாலும், கீழை நாட்டாரானாலும் விமர்சனம் தெளிவாக, அறிவுப்பூர்வமாக இருந்தால் வரவேற்கத்தக்கது. இந்த இரு நாட்டாரும் ஃபித்னா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்திருப்பதை கவனித்தால், திருக்குர்ஆனிலிருந்து அந்த வாசகத்தையே அறிந்திருக்கவில்லை என்பது தெளிவு.

ஃபித்னா என்றால் என்ன?

ஃபித்னா (குழப்பமும் - கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். (திருக்குர்ஆன், 002:191)

ஃபித்னா (குழப்பம் - கலகம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. (திருக்குர்ஆன், 002:217)

ஃபித்னா என்றால்: கலகம், குழப்பம், சோதனை, துன்புறுத்தல், திசை திருப்பல் என திருக்குர்ஆனில் பல பொருளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

'உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும்..'' (திருக்குர்ஆன், 003:007)

''கலகம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்படும்போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். (திருக்குர்ஆன், 004:91)

(நபியே) உம்மைக் குழப்புவார்கள் (திருக்குர்ஆன், 005:049)

''எந்த சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர்'' (திருக்குர்ஆன், 005:71)

''அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்'' (திருக்குர்ஆன், 006:053)

ஒரு சோதனையை அஞ்சிக்கொள்ளுங்கள் (திருக்குர்ஆன், 008:025)

என் சமுதாயமே இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 020:90)

சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்.. (திருக்குர்ஆன், 016:110)

(நபியே) உம்மைத் திசை திருப்ப முயன்றனர் (திருக்குர்ஆன், 017:073)

நீங்கள் சோதிக்கப்படும் கூட்டமாக உள்ளீர்கள்'' (திருக்குர்ஆன், 027:047)

''உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் சோதனையே'' (திருக்குர்ஆன், 064:015)

(இன்னும் பார்க்க திருக்குர்ஆன் வசனங்கள்: 002:102,193. 008:028,039,073. 010:085. 017:060. 021:035,111. 022:011,053. 024:063. 025:020. 029:010. 037:063. 039:049. 054:027. 060:005. 074:031)

ஹதீகளிலும் ஃபித்னா என்ற வாசகம் சோதனை, குழப்பம் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. அன்றாடம் இறைவணக்கத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள், தொழுகையின் இருப்பில் கேட்கப்படும் பிராத்தனையில்...

''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ அவூதுபிக்க மின் அதாபி கப்ர், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹுத் தஜ்ஜால், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்,'' என்ற துஆவாவை குர்ஆனில் உள்ள சூராவை கற்றுத் தருவது போன்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறேன். கப்ர் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

மேற்கூறப்பட்டவை ஃபித்னா என்பதற்கான விளக்கமாகும். ஃபித்னா என்றால் முஸ்லிம்களல்லாத பிற மக்கள் மீது தொடுக்கும் போர் என அகராதியிலேயே இல்லாத புது அர்த்தத்தை இவர்கள் கற்பிப்பதிலிருந்து காழ்ப்புணர்வு எந்த அளவுக்கு இவர்களின் உச்சந்தலைக்கு ஏறியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதற்கு wikipedia எனும் தளத்தை ஆதாரம் காட்டுவது இன்னும் வேடிக்கை. wikipedia என்பது எவர், எதை வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம் என்ற அளவுக்கு பொதுவான இடம். அதில் 2+2=4 என்றும் எழுதிவைக்கலாம், 2+2=3 என்றும் எழுதிவைக்கலாம். அதாவது தப்பும், தவறுமாக எதை வேண்டுமானாலும் அதில் பதிவு செய்து, அதையே மற்ற இடங்களில் ஆதாரமாக குறிப்பிட முடியும்.

உண்மைக்கும் உளறலுக்கும் வெகுதூரம். எவ்வளவு உளறல்களை எழுதினாலும், படம் எடுத்து காட்டினாலும் அவை ஒரு உண்மைக்கு ஈடாகாது. ஃபித்னா என்றால் பிற மதமக்கள் மீது தொடுக்கும் போர், பயங்கரவாதம் என ஒரு மேலை நாட்டவரின் உளறலை அப்படியே தமிழில் வாசிக்காமல் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை சொந்தமாக பரிசீலனை செய்து சுயமாக விமர்சிக்க வேண்டும். இல்லையேல் சாய்கிற பக்கமே சாயும் செம்மறி ஆடுகளின் நிலையாகும்.

அவர்களைக் கொல்லுங்கள், நிராகரிப்பவர்களின் கழுத்தில் வெட்டுங்கள் என்ற வசனங்களுக்கான விளக்கம் இங்கு படிக்கவும். உணர்ந்து, குறும்படத் தயாரிப்பாளருக்கும் உணர்த்தவும். அறிவற்ற எதையும் அறிந்து கொள்ளாமல் வதந்திகளை பரவச்செய்து, ''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்'' (002:011)

மற்ற வசனங்களுக்கு விளக்கம் வரும் பதிவுகளில்.

அன்புடன்,
அபூ முஹை

Sunday, April 20, 2008

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணம்.

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் மீது யூதர்களுக்கு கடுமையான - அளவு கடந்த வெறுப்பு இருந்தது. பழமையில் ஊறி, மக்கிப் போனவர்களுக்கு சத்தியத்தை எடுத்துக் கூறுபவர்கள் மீது ஏற்படும் ஆத்திரமும், வெறுப்பும் வழக்கமாக ஈஸா நபியின் மீது யூதர்களுக்கு ஏற்பட்டது. ஈஸாவின் அன்னை மரியமின் மீது அவதூறு சுமத்தி, நபி ஈஸா (அலை) அவர்களை வேசியின் மகன் என்று யூதர்கள் இழிவுபடுத்தினார்கள். ஈஸா இறைத்தூதர் அல்ல என்றும் நிராகரித்தனர்.

சத்தியத்தை ஓதும் ஈஸாவின் மீது ஆத்திரம் கொண்ட யூதர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈஸா நபியைக் கொன்றுவிட திட்டம் வகுத்தார்கள். அத்திட்டம் அவர்கள் அறியாமலேயே இறைவனால் முறியடிக்கப்பட்டது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கதைப் பிரச்சாரம் செய்த காலத்தில் - திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் - யூதர்கள் மர்யமின் மகன் ஈஸாவை நாங்கள் தான் கொன்றோம் என்று செல்லிக்கொண்டிருந்தார்கள். மர்யமின் மகன், இறைத்தூதர் ஈஸா கொல்லப்பட்டு விட்டார் என்றே யூதர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இதை மறுத்து இறைவசனம் அருளப்பட்டது

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஹீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம் என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவே இல்லை. (திருக்குர்ஆன், 004:156,157)

இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் கொன்றார்கள் என்ற சம்பவத்தை திட்டவட்டமாக திருக்குர்ஆன் மறுத்துப் பேசுகின்றது. நபி ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் உறுதியாகக் கொல்லவில்லை என்று மறுப்பதுடன் சிலுவையிலும் அவரை அறையவில்லை என்றும் உரைக்கின்றது. யூதர்கள் நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்வது வெறும் ஊகத்தைத் தவிர அதில் உண்மை இல்லை எனவும் இறைவசனம் கூறுகின்றன.

ஏன் மறுக்கின்றது?

நபி ஈஸா (அலை) அவர்களின் மரணத்தை இஸ்லாம் ஏன் மறுக்க வேண்டும்? மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன? இந்தக் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலாது!

''அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்தும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம்'' (திருக்குர்ஆன், 002:061,0091. இன்னும் பார்க்க:. 003:021,112,181. 004:155. 005:070)

நபி ஈஸாவைக் கொன்றதாகச் சொல்லும் யூதர்கள், ஈஸாவுக்கு முன்பும் நபிமார்களைக் கொன்றிருக்கிறார்கள் என இறைவசனம் கூறுகின்றது. எத்தனையோ நபிமார்களை நியாயமின்றி கொலை செய்த யூதர்கள், ஈஸாவையும் கொன்றார்கள் என்று எடுத்துக்கொள்ளாமல், யூதர்கள் ஈஸாவைக் கொன்றார்கள் என்பதை மட்டும் இறைமறை மறுக்கிறதென்றால் ஈஸா (அலை) கொல்லப்படாமல் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று அடுத்த வசனம் விளக்குகின்றது.

''மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்'' (திருக்குர்ஆன், 004:158)

நபி ஈஸாவை உயிருடன், தூல உடலோடு இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்றளவும் அவர் உயிருடன் இருக்கிறார். அதாவது பூமியில் மனிதர்கள் உண்டு, உறங்கி மலஜலம் கழித்து, வாழ்க்கையை சுகித்து வாழ்வது போல் அல்லாமல் ஈஸாவுக்கென இறைவன் அமைத்த தனி உலகில் அவர் உயிருடனிருக்கிறார். அதை இறைவனைத் தவிர எவரும் அறிந்துகொள்ள இயலாது, இறைவன் அறிவித்ததைத் தவிர.

மீள் வருகை

''அவர் (ஈஸா) இறுதி நாளின் அடையாளமாவார்'' (திருக்குர்ஆன், 043:061)

''என் உயிர் எவன் கையில் உள்ளது அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈஸா-அலை) உங்களிடையே இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார். அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்'' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தமிழ் புகாரி, 2222, 2476, 3446. தமிழ் முஸ்லிம், 0242-0246. திர்மிதீ, இப்னுமாஜா)

இன்னும், தன்னை இறைவன் என்று வாதிட்டு, மக்களை வழிகெடுக்கும் மஸுஹு தஜ்ஜால் (Anti Christ) என்ற மகாப் பொய்யன். இவன் உலக அழிவு நாளின் நெருக்கத்திற்கு முன்னர் வெளிப்படுவான். இறுதி நாளின் அத்தாட்சியாக, விண்ணிலிருந்து இறங்கவிருக்கும் நபி ஈஸா (அலை) அவர்கள் இவனைக் கொல்வார்கள் என்றும் நபி முஹம்மது (ஸல்) அவர்களால் பல முன்னறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மதீனாவில் இப்னு ஸய்யாத் என்றச் சிறுவனை தஜ்ஜால் என்று சந்தேகிக்கும் சூழ்நிலையில் நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! இவனைக்கொல்ல எனக்கு அனுமதி வழங்குங்கள்'' என்று கேட்கிறார். அதற்கு, இவன் அவனாக (தஜ்ஜலாக) இருந்தால் இவனைக் கொல்லும் அதிகாரம் உமக்கு வழங்கப்படவில்லை. இவ் அவனாக (தஜ்ஜலாக) இல்லையென்றால் இவனைக் கொல்வதில் உமக்கு எவ்விதப் பயனுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழியின் சுருக்கம். புகாரி, முஸ்லிம். தஜ்ஜாலைத் தீர்த்துக்கட்டும் பணியை ஈஸா நபியிடம் இறைவன் ஒப்படைத்திருக்கிறான் என்ற கருத்தில் அமைந்துள்ள நபிமொழி)

ஈஸா நபி மரணிக்கவில்லை!

ஈஸா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்!

ஈஸா நபி இன்றும் தமது இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்!

எதிர்காலத்தில் மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் விண்ணிலிருந்து இப்புவிக்கு இறங்கிவருவார்!

மக்களிடையே நேர்மையுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதியாகத் திகழ்வார்.

சிலுவையை உடைப்பார், பன்றிகளைக் கொல்வார், ஜிஸ்யா வரியை வாங்க மறுப்பார்.
இத்தருணத்தில் தஜ்ஜால் - (Anti Christ) - வெளிப்படுவான்.

இஸ்ரேலின் தலைநகருக்கு அருகேயுள்ள லுத்து எனும் இடத்தில் வைத்து மர்யமின் மகன் ஈஸா தஜ்ஜாலைக் கொல்வார்.

இவையெல்லாம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்ளைக் குறித்து இஸ்லாத்தின் முன்னறிவிப்புகள். ஈஸா நபி மீண்டும் இப்புவிக்கு இறங்கி வரும்போது அவர் கொல்லப்பட்டார் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல என்றாகிவிடும். எனவே, ஈஸா நபியை யூதர்கள் கொல்லவில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை, இறைவன் அவரை தன்னளவில் உயர்ததிக்கொண்டான் என ஈஸாவின் மரணத்தை ஆணித்தரமாக இஸ்லாம் மறுக்கிறது.

மறுப்பதால் இஸ்லாத்திற்கு என்ன?

நபிமார்களிடையே வேற்றுமை இல்லை. அதே நேரத்தில் இறைவன் நபிமார்களில் சிலரைவிடச் சிலரை மேன்மையாக்கியிருக்கிறான். நபி ஈஸா (அலை) அவர்களின் சிறப்பு, ஆண் மகனின் மரபணு இன்றி இறைவனின் கட்டளைப்படி, கன்னி மர்யமின் மைந்தராகப் பிறந்தார். தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசினார். அவர் இறைத்தூதர் என்பதற்கான பல அற்புதங்களை இறைவனின் அனுமதியோடு நிகழ்த்திக்காட்டினார். இன்றுவரை மரணிக்காமல் உயிருடன் இருக்கிறார். இவையெல்லாம் ஈஸா நபியைக் குறித்து உயர்வாகச் சொல்லப்பட்டவை. மாறாக களங்கப்படுத்தும் நோக்கமல்ல!

இதுவரை மரணிக்காமல் இருக்கும் மனிதரைப் பற்றி அவர் மரணிக்கவில்லை என்று எவ்வாறு அறிந்துகொள்வது? என்ற சந்தேகம் நீங்க அவர் மறுபடியும் இவ்வுலகிற்கு வரவிருக்கும் சம்பவமே நிரூபணமாகும்! எதிர்காலத்தில் ஈஸா நபி இவ்வுலகிற்கு வரும்போது அவர் கொல்லப்படவில்லை என்ற இஸ்லாத்தின் மறுப்பு உண்மையாகும் - அதை உண்மைப்படுத்த எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பலச் செய்திகளை இஸ்லாம் முன்னறிவிப்புச் செய்துள்ளது.

ஆனால், ஈஸா நபி இவ்வுலகிற்கு மீண்டும் வரும்போது, ஈஸா நபி கொல்லப்பட்டார் - நாங்கள்தான் அவரைக் கொன்றோம் என்ற யூதர்களின் கூற்று உண்மையல்ல வெறும் ஊகம்தான் என்றாகிவிடும்.

குறிப்பு: திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற கருத்துடையவர்கள், நபி ஈஸாவின் மரணம் குறித்து இரண்டும் எவ்வளவு எதிரும் புதிருமாகக் கூறுகின்றன என்பதைப் படித்தாவது உணர வேண்டும் எனக் கோருகிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

Friday, April 18, 2008

அன்னிய நாடுகளில் அயல் நாட்டினரின் நிலை!

வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.

இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!

இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?

தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?

(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)

அன்புடன்,
அபூ முஹை


அனுப்புனர்:
சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்திய பணியாளர்கள்.
ரியாத் சவூதி அரேபியா

பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு!
உங்கள் மீது கடவுளின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!!

நாங்கள் சவூதி அரேபியா ரியாத்தில் தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் குறிப்பாக பல நூறு இந்தியர்கள் அதில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள். AL-Wagaiah co, Ltd., AL-Omerini co, and AL-Faiq என்ற மூன்று பெயர்களில் செயல்படும் இந்த நிறுவனம் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரில் மோசடிகளை செய்து விட்டு வெவ்வேறு பெயர்களில் உருவாக்கிக்கொண்டதுதான் இந்த 3 நிறுவனங்களும்.

நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. நிறுவனம் மூடப்படும் மற்றும் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கிகளை கொடுத்து எங்களது தாய் நாடடிற்கு அனுப்பி வையுங்கள் என்று பல முறை கேட்டு வந்தோம் நிர்வாகம் எங்களது எந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பல மாதங்களாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி சொல்லிலடங்கா துயரங்களை சந்தித்து வருகிறோம். இந் நிலையில் பாதிக்கப்பபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவாக கடந்த 24/01/2008 அன்று இந்திய தூதரகத்தில் எங்களது நிலைமையை விளக்கி மனுக் கொடுத்தோம் அதன் கோப்பு எண்: File No: riy/cw/235/6/2007(18)

அதற்கிடையில் நாங்கள் பல முறை நிறுவன நிர்வாகத்திடம் எங்களுக்கு சேரவேண்டிய எங்களது சம்பளத்தை கொடுத்து எங்களை தாயக்திற்கு அனுப்பி வைக்கும்படி கெஞ்சி மன்றாடி வந்தோம் கடந்த வாரம் 27ம் தேதி நிர்வாகத்தின் பதிலை கேட்கச் சென்றோம். எங்கள் குழுவில் நிறுவன நிர்வாகத்திடம் நீதி கேட்டு எங்களை வழி நடத்தி வந்த 5 பேரை சவுதி குடியுரிமை காவலாளிகளை வைத்து கைது செய்து சிறைக் கொட்டடியில் அடைத்து விட்டார்கள்.

மீதி உள்ள எங்களை மிரட்டி உங்களுக்கும் இதே கதி தான் என்று உங்களது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சவுதி குடியுரிமை அமைச்சகத்தில் ஒப்படைத்து விட்டோம் என்று மிரட்டி அனுப்பி விட்டார்கள் வேறு வழியின்றி மீண்டும் நேற்று 30 03 2008 அன்று இந்தியத் தூதரகம் சென்று எங்களுக்கு உதவிட கையேந்தினோம். தூதரகத்தில் எங்களுக்கு 6மாதம் செல்லத்தக்க அனுமதி பேப்பர் மட்டும் வழங்கி இதை வைத்து நீங்கள் நடமாடிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.

எந்தக் குற்றமும் செய்யாத நீதி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறைவாசம் அனுபவித்து வரும் எங்கள் நண்பர்களை விடுவிக்கவும் உண்ண உணவின்றி வேறு வழி தெரியாமல் பரிதவிக்கும் எங்களுக்கு உதவிடவும் மாண்புமிகு முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைத்து தாயகம் திரும்பி வர இந்தியத் தூதரகக்தின் மூலம் துரித ஏற்பாடு செய்ய ஆவண செய்யும் படி உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Company Name & Address
AL-WAGAIAH CO, LTD.,
Sponsor Name: Osman Abdul Aziz Al-Omairini
CR No: - 66210, Post Box 91681, Riyadh 11643
Phone : +966 1 2415202, Fax +966 1 2422201
Sponsor Cell no: Mr. Ali Abdul Aziz 00966 504429661, Mr. Ashraf al jindi 00966 505848277

சிறைச்சாலையில் உள்ள நண்பர்களின் விபரம்.

காதர் மைதீன் பாஸ்போர்ட் நம்பர்: A 7844359
முஹம்மது ரைஸ் பாஸ்போர்ட் நம்பர்: E 5084212
அப்துல் ரஹ்மான் பாஸ்போர்ட் நம்பர்: B 3105343
சதீஸ் மலையில் பாஸ்போர்ட் நம்பர்: B 6853774
இக்பால் அஹ்மத் பாஸ்போர்ட் நம்பர்: F 2044105

எங்களை தொடர்பு கொள்ள:
கந்தசாமி +966 556282148, முகைதீன் +966 508623067, முஹம்மது மீரா 00966 557048978

இப்படிக்கு
உங்கள் உதவியை நாடி நிற்கும் பாதிக்கப்பட்ட இந்தியர்கள்.

Copy to: TMMK Head Quarters and all political parties' offices.
Kalainger Tv, Sun tv, Makkal tv, Wintv, and All Printed and Internet medias.
*Enclosed some of Prof Documents

குறிப்பு: இந்த நகல் பெறும் செய்தி ஊடகங்கள் தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.