Thursday, July 31, 2008

யஹ்யாவும், யோவானும் ஒரே பெயரா?

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருக்குர்ஆனில் முரண்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தும் சில பிற மத நண்பர்கள். திருக்குஆனில் சரித்திரத் தவறைக் கண்டு பிடித்து விட்டதாகக் கூறி சில ஆவணங்களைப் பதிவு செய்துள்ளனர். திருக்குர்ஆனை அருளிய அகிலத்தின் இறைவனை பொய்பித்து விட வேண்டும் என்ற தணியாத தாகத்தில் ஆய்வறிவையும் இழக்கத் தயாராகி விட்டனரோ என்று எண்ணுமளவுக்கு திருக்குர்ஆனில் பிழை தேடும் இவர்களின் ஆய்வு மிகப் பலவீனமாக உள்ளது.

திருக்குர்ஆனில் பிற மத நண்பர்கள் கண்டுபிடித்த சரித்திர தவறு !?

குர்‍ஆனின் சரித்திர தவறு: யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.

குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:

குர்‍ஆன் 19:7

'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று
புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.


(இங்கு பிற மத நண்பர்கள் விமர்சிக்கும் கரு இதுதான். இத்துடன் பிற மத நண்பர்கள் இணைத்துள்ள கி.மு சான்றுகள் சில கீழே இடம்பெறும்)

முக்கியமான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இயேசு தான் ஈஸா என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அறிஞர்களும் கூறி வந்தாலும், இயேசு என்ற பெயர் தான் ஈஸா என்பதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

''மர்யமின் மகன் ஈஸா'' என்றே திருக்குர்ஆனும் நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. மர்யம், ஈஸா இது இடுகுறிப் பெயர்கள். இன்னார் மகன் இன்னார் என ஒருவரை அடையாளப்படுத்துவதற்காக அவர் குழந்தையாக இருக்கும் பொழுது சூட்டப்படும் பெயராகும். இந்த இடுகுறிப் பெயரை எந்த மொழியில் எழுதினாலும் மர்யம், ஈஸா என்றே
எழுத வேண்டும். இல்லையேல் ஆவணங்கள் குழப்பமாகிவிடும்.

''நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்'' (திருக்குர்ஆன், 003:036)

குழந்தை பிறந்ததும் குழந்தையின் தாயாரால் மர்யம் என்று பெயரிடப்படுகிறது.

''அவரது பெயர் மர்யமின் மகன் ஈஸா என்பதாகும்'' (திருக்குர்ஆன், 003: 045)

தாயின் கருவறையில் ஜனிக்கும் முன்னரே இறைவனால் ஈஸா எனப் பெயரிடப்பட்டவர்.

(சற்று வித்தியாசத்துடன், 'அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக' என்று பைபிள் கூறுகிறது)

எல்லாக் குழந்தைகளுக்கும் பெயரிடப்படுவது போல் குழந்தையை அடையாளப்படுத்துவதற்காக மர்யம், ஈஸா என பேரிடப்பட்டார்கள். பெயரின் உச்சரிப்பு மர்யம், ஈஸா என்பதில் திருக்குர்ஆன் பார்வையில் எந்த சந்தேகமும் இல்லை. முந்தைய வேதங்களும் இறைவன் அருளியது என்ற அடிப்படையில் முந்தைய வேதத்தில் மரியம், மரியமின் மகன் ஈஸா என்று பெயரிட்டபடியே திருக்குர்ஆனும் மர்யம், மரியமின் மகன் ஈஸா என்று அழைக்கிறது.

இறைவன் இட்ட ஈஸா என்ற பெயர் பின்னர் இயேசு Jesus என மருவியது. இது ஈஸா என்ற பெயருக்கு மட்டும் ஏற்பட்டதில்லை. (இப்ராஹீம் ஆப்ராஹாம். சுலைமான் சாலமோன் என) பல தீர்க்கத்தரிசிகளின் பெயர்களும் வேறு பெயராக மருவியுள்ளது. (இல்லை என்று மறுப்பவர்கள் தங்கள் வேதத்தின் மூலமொழியிருந்து நிரூபிக்கட்டும்)

ஓர் அசல் பெயர் வேறு பெயராக மருவுவதற்கான உதாரணத்தை பிற மத நண்பர்களின் எழுத்திலிருந்தே எடுத்துச் சொல்ல முடியும்: அல்லாஹ் என்பதை இவர்கள் அல்லா என்றும் முஹம்மது என்பதை முகமது என்றும் குறிப்பிட்டு எழுதுகின்றனர். 'ஹ' வடமொழி எழுத்து என்பதால் அதைத் தவிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. வடமொழி எழுத்தாக இருந்தும் கிறிஸ்து, ஸ்தானம் என்று குறிப்பிட 'ஸ' எழுத்தை இவர்கள் எழுதுகின்றனர். அல்லாஹ், முஹம்மது இந்தப் பெயர்களை எப்படிச் சிதைத்தாலும் ஒப்பிட்டுப் பார்க்க மூலமொழி இருப்பதால் எதிர்காலத்தில் இவர்கள் எழுதுவது போல் அப்படியே மருவி விடாது. ''யஹ்யா'' என்ற பெயரும் இப்படித்தான்
மருவியுள்ளது வேறு வகையில்.

'ஸகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்). (திருக்குர்ஆன், 019:007)

கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே மர்யமின் மகன் ஈஸாவுக்கு பெயரிடப்பட்டது போல் ஸக்கரிய்யாவின் மகனும் கருவறையில் ஜனிப்பதற்கு முன்னரே இறைவனால் ''யஹ்யா'' என்று பெயரிடப்படுகிறார். இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரிட்டவரை நாம் ஏற்படுத்தவில்லை என்றும் மேலதிகத் தகவலை இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்.
யஹ்யா என்ற பெயருடையவரை இதற்கு முன் நாம் ஏற்படுத்தவில்லை என இறைவன் கூறுவது, முழு மனித குலத்திலும் இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயருடையவர் இருந்ததில்லை என்பதைக் குறிக்கின்றதா? அல்லது இதற்கு முன்னர் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரிசி யாரையும் நாம் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிடுகின்றதா? இதற்கு ஆலு இம்ரான் - 003வது அத்தியாயத்தில் விளக்கம் கிடைக்கிறது.

அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகன்) பற்றி நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்'' எனக் கூறினர். (திருக்குர்ஆன், 003:039)

ஸகரிய்யாவின் மைந்தர் கருவறையின் ஜனனத்திற்கு முன்பே யஹ்யா என்று பெயரிடப்பட்டு, நபியாகவும் நியமிக்கப்படுகிறார். என இறைவாக்கு நற்செய்தி கூறுவதிலிருந்து, இதற்கு முந்தைய நபிமார்களில் யஹ்யா என்ற பெயரில் தீர்க்கத்தரியை நாம் ஏற்படுத்தவில்லை என்பதே இறைமொழியின் கருத்தாகும். எனவே ''இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" என்ற திருக்குர்ஆன் வசனம் தவறு என்று எதிர் கொள்பவர்கள், ஸகரிய்யாவுக்கு முந்தைய சரித்திரத்தில் யஹ்யா என்ற பெயரில் நபி இருந்ததை நிரூபித்தாக வேண்டும்.

முற்காலத்தில் ''யஹ்யா'' என்ற பெயரில் உள்ளவர்கள் என்று சரித்திரச் சான்றுகள் சிலவற்றை பிற மத நண்பர்கள் வைத்துள்ளனர்.


சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்

1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia John Hyrcanus- Brittanica John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க: 1 மக்காபீஸ் 2:1 :மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும், பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:
இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)


பிற மத நண்பர்களின் இந்த விமர்சனம், திருக்குர்ஆனில் ''யஹ்யா'' குறித்து இடம் பெற்றுள்ள சிறு வசனத்தையும் இவர்கள் முறையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வசனத்தை விளங்காமலேயே தீர்க்கத்தரிசி அல்லாத மற்றவர்கள் பெயரையும் இங்கு குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத
நண்பர்களின் இந்த அநேக சான்றுகளில் எங்கும் ''யாஹ்யா'' என்ற உச்சரிப்பில் உள்ள இடுகுறிப் பெயர் உள்ளதா? என்பது வாசகர்களின் கவனத்திற்கு.

யஹ்யா, யோவான்

பைபிள் புதிய ஏற்பாடு: தூதன் அவரை நோக்கி சக்கரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலிசபெத்து உமக்கு ஒரு குமாரரைப் பெறுவாள். அவருக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக்கா, 1:13)

யாஹ்யாவை யோவான் என்று பைபிள் குறிப்பிடுவதால் யோவானுக்கு முந்தைய காலத்தில் யோவான் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர் என்பதைப் பட்டியலிடுவது திருக்குர்ஆனை எதிர் கொண்டதாகுமா? சிந்தியுங்கள்.

தமிழில் இயேசு, ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று சொல்லிக்கொண்டால் அது திருக்குர்ஆன் கூறும் ஈஸா என்ற பெயராகிவிடும் என்று வாதிப்பது எப்படித் தவறான வாதமோ அது போன்றே யோவான், ஜான் என்ற பெயர்களை திருக்குர்ஆன் கூறும் யஹ்யா என்ற பெயரோடு ஒப்பிடுவதும் தவறான வாதமாகும்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணகப் பயணம்,

...நான் அங்கு சென்று சேர்ந்தபொழுது அங்கு யஹ்யா (அலை) மற்றும் ஈஸா (அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இது யஹ்யாவும் ஈஸாவும் ஆவர். இருவருக்கும் ஸலாம் சொல்லுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் ஸலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு 'நல்ல சகோதரரே!
நல்ல நபியே! வருக!" என்று கூறி (வாழ்த்தி) னார்கள்.
(புகாரி, 3207, 3430, 3887)

யஹ்யா என்ற பெயர் எக்காலத்திலும் யோவான், ஜான் என்று மருவிடவில்லை - மறுமை நாள்வரை யஹ்யா என்ற பெயரே நிலைத்திருக்கும் என்பதை மேற்கண்ட அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றது. யஹ்யா என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை ஆவணமாக வைக்கும் உங்கள் விமர்சனத்தில் நேர்மையுள்ளதா?

பிற மத நண்பர்களே! இதை நன்கு சிந்தனையில் பதிவு செய்து, இஸ்லாத்தை விளங்கி விமர்சனம் செய்யுங்கள்!

மொழி பெயர்ப்பு,

பிற மத நண்பர்கள் தமது கருத்துக்கு வலு சேர்க்க திருக்குர்ஆன் 019:007 வசனத்தின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வைத்துள்ளனர். மூலமொழி உயிருடன் வழக்கில் இருக்க விமர்சனத்தை மூலமொழியுடன் உரசிப் பார்க்காமல் மொழி பெயர்ப்புகளுடன் ஒப்பிடுவது புத்திசாலித்தனம் இல்லை. யஹ்யா என்ற பெயரை எந்த மொழியில் சொன்னாலும், எழுதினாலும் யஹ்யா என்று தான் சொல்ல வேண்டும், எழுத வேண்டும். யஹ்யாவை ஆங்கிலத்தில் ஜான் என்று மொழி பெயர்ப்பாளர்கள் குறிப்பிட்டால் அதற்கு திருக்குர்ஆன் பொறுப்பேற்க வேண்டும் என்ற அவசியமில்லை.

முக்கியக் கவனத்திற்கு,

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக்கொள்வீர்களா? யஹ்யா என்ற தீர்க்கத்தரிசியின் பெயர் மாறி மருவிப் போனதால் அவருடைய உண்மைப் பெயரைத் திருக்குர்ஆன் தூசித் தட்டி வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆன் பைபிளின் நகலாக இருந்திருந்தால் ஸகரிய்யாவின் குமாரரை யோவான் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

5 comments:

sakthi said...

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் தாய்நாடு, தாய்மொழி, மதம் மற்றும் மதம் சார்ந்த புத்தகங்கள் மீது மிகுந்த பற்றிருக்கும்.ஏன் அது அவர்களது ரத்தத்திலும் கலந்தே இருக்கும். எல்லா நேரங்களிலும் இது வெளிப்படுவதில்லை.ஆனால் மற்றவர்களால் இவை விமர்சிக்கப்படும்போது அது நமது தாயை பற்றி விமர்சிப்பதைப் போன்ற ஒரு உணர்வையும், வலியையும், நீங்காத வேதனையையும் கொடுக்கும். யார்தான் பொறுப்பார் தாயை பற்றி அடுத்தவர் வாதிட்டால். ஆகையால் அன்பான சகோதரர்களே நமக்குள் ஏன் இந்த தேவையற்ற விவாதம். நமது தமிழ்மணத்தில் நல்ல பல கருத்துக்களை பகிர்ந்தும் வாசித்தும் வரும் நமக்கு கனியிருப்ப காய் கவர்தல் தேவை இல்லை என்பது என் கருத்து. சொல்லியதில் தவறிருந்தால் விவாதிக்கும் இருவரும் என்னை மன்னிக்கவும்.

அபூ முஹை said...

சக்தி உங்கள் வருகைக்கும், உங்கள் மேலான கருத்திற்கும் நன்றிகள் பல!

மனிதன் தோன்றிய நாள் முதல் மதமும் மதம் சார்ந்த கருத்து வேறுபாடுகளும் தோன்றி விட்டன. மதவாதம் கண்டிப்பாக வேண்டும் என்று நாம் சொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஆரோக்கியமாக - நாகரீகத்துடன் மதங்கள் பற்றிய வாதங்களில் ஈடுபடுவதில் தவறில்லை என்பது நமது தாழ்மையான கருத்து!

''கனியிருப்ப காய் கவர்தல் தேவையில்லை''

நன்று சொன்னீர்கள்!

எது காய்? எது கனி? இதை யார் தேர்வு செய்வது?

எனக்குக் கனியாகத் தெரிவது உங்களுக்குக் காயாகத் தோன்றலாம். உங்களுக்கு கனியாகத் தோன்றுவது எனக்குக் காயாகத் தெரியலாம் அல்லவா! இனிப்பும் கசப்பும் அவரவர் சுவையில் அடங்கியுள்ளது.

எழுத்து ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். இதைப் புரிந்து கொண்டால் தேவையற்றது என எதுவுமில்லை! எழுதியதில் தவறு இருந்தால் நீங்கள் என்னை மன்னிக்கவும் நன்றி!

sakthi said...

நன்றி

Unknown said...

//திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தவறானப் பிராச்சாரம் செய்பவர்கள், பைபிளிலிருந்து திருக்குர்ஆன் எவ்வாறு தனித்தன்மையில் வேறுபடுகிறது என்பதை விளங்கிக் கொள்வீர்களா?//

திருக்குர்ஆனிலுள்ள சில பெயர்கள் பைபிளிலுள்ள பெயர்களாக இருப்பதால் காப்பியடித்ததாக சொல்ல முடியுமா? அவர்களில் சிலரின் தன்மைகளில் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறதே என்பதை பார்க்கத் தவறுகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இது போன்ற பெயர்கள் பைபிளுக்கும் முன்னர் அருளப்பட்ட யூதர்கள் புத்தகத்தில் இருக்கிறதே. இப்போது பைபிள் யூத வேதப்புத்தகத்தின் காப்பிதான் என அவர்கள் ஒப்புக் கொள்கின்றனரா?

முஸ்லீம்களோ மூன்றுமே ஒரே இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதான் எனச் சொல்கிறார்களே. அதன் உண்மையை உணர மறுக்கிறார்கள். மற்ற வேதங்களில் மனிதக் கரங்களின் மாசு படிந்துள்ளது. குர்ஆனில் அது இல்லை.

நல்ல விளக்கங்களுடன் பதிவு. நன்றி.

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

திருக்குர்ஆன் குறிப்பிடும் பெயர்கள், பைபிளில் குறிப்பிட்டிருக்கும் பெயர்களுக்கு மாற்றமாக உள்ளது.

சரித்திரத் தகவலைக் கூறும் போது தவ்ராத், இன்ஜீல் போன்ற முந்தைய வேதங்களில் கூறியதையே திருக்குர்ஆனும் கூறுகிறது.

சரித்திரம் - வரலாறு எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

உதாரணமாக:

''1947ம் வருடத்தில் காந்தி தூப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்''

இது நடந்து முடிந்த ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இதை 2947ம் வருடத்தில் சொல்ல நேர்ந்தாலும்,

''1947ம் வருடத்தில் காந்தி தூப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்'' என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் பொழுது இது 1947ம் வருடத்தின் சரித்திரத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொல்வது தவறான கருத்தாகும்.

தவ்ராத், இன்ஜீல் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கடந்த கால சரித்திரங்களை நுணுக்கமான மாற்றங்களுடன் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது:

இன்ஜீல் வேதத்தில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பின் அற்புதம் மறைக்கப்பட்டது. அந்த உண்மை வரலாற்றை திருக்குர்ஆன் மீண்டும் உலகிற்கு அடையாளம் காட்டியது.

அதாவது, சரித்திரம் கூறும் திருக்குர்ஆன் வசனங்களும் முக்கிய மாற்றங்களுடன் சரித்திர கருத்துகளை முன் வைக்கின்றன. மாற்றம் இருந்தும் திருக்குர்ஆன் முந்தைய வேதங்களிலிருந்து நகலெடுக்கப்பட்டது என்று சொல்வது அப்பட்டமான அவதூறு!