Wednesday, July 23, 2008

முஹம்மது நபி பொய்யரா?

இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வந்த நபிமார்கள் அனைவரும் ''பொய்யர்'' என்றே முத்திரைக் குத்தப்பட்டார்கள். இதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கல்ல.

பொய்யர்
குறிகாரர்
சூனியக்காரர்
பைத்தியக்காரர்
இட்டு கட்டுபவர்

இவையெல்லாம் வழக்கம் போல் நபி (ஸல்) அவர்களுக்கும் சமகால மக்கள் வழங்கிய பட்டங்கள். முஹம்மது நபி இட்டுக்கட்டுபவராக இருந்திருந்தால் தம்மைப் பற்றிய அறியாமை மக்களின் இந்த அடைமொழிகளை மறைத்திருக்கலாம் என்பது சிற்றறிவுடையோருக்கும் விளங்கும். ஆனால் இறை வேதத்தில் இவை கால காலத்திற்கும் இடம்பெற்றிருப்பது திருக்குர்ஆன் மாற்ற முடியாத, மாற்றத்திற்குள்ளாகாத இறைவேதம் என்பதற்கு சான்றாக
அமைந்துள்ளது.

இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்களின் முனை மழுங்கிய சிந்தனையைப் பார்ப்போம்.

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological
views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.


நபித்துவ வாழ்வுக்கு முன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பண்புகள் பற்றி,

மனிதாபிமானம் உடையவர்
அமானிதம் பேணுபவர்
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர்
எளியோருக்கும், சிரமத்தில் தவிப்போருக்கும் உதவுபவர்
விருந்தினரை உபசரிப்பவர்
உயர் பண்பு, சிறந்த ஒழுக்கமுடைய நற்பண்பாளர்
''நம்பிக்கையாளர்''

இப்படி உயர் பண்புகளைக் கொண்டவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள். இது நபியவர்களை அறிந்த மக்காவில் வாழ்ந்த மக்களின் கருத்தாகும். சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் நம்பி ஒப்படைத்தப் பொருட்களைத் திரும்பப் பெற முடியாத அக்காலத்தில் நபியவர்களிடம் கொடுத்துப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படி மக்கள் தமது பொருட்களை நம்பி ஒப்படைத்துத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

ஒரு சம்பவம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மலைக்குன்றின் மீதேறி, மக்காவின் மக்களையும், மற்றும் மக்கள் தலைவர்களையும் மலையடிவாரத்துக்கு அழைத்தார்கள். அழைத்து, அவர்களிடம் ''இந்த மலைக்கப்பால் உங்களைத் தாக்குவதற்கு ஒரு படை வருகிறது என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். ''ஆம் நம்புவோம்'' என்று அந்த மக்களும் தலைவர்களும் பதிலளித்தனர். (கருத்து) இச்சம்பவத்திலிருந்து மக்களும் தலைவர்களும் - நபித்துவ வாழ்வுக்கு முன் - நபியவர்களை ''உண்மையாளர்'' என்று ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பது தெளிவு.

பொதுவாக, எந்த மனிதரையும் அவரின் இயல்பான நடைமுறை வாழ்க்கையைக் கவனித்து வந்தால் அதைக் கொண்டு அவரின் பண்புகளைக் கணித்து விடலாம். ஒருவரை உண்மையாளர் அல்லது பொய்யர் என்று சொல்வதற்கு அவரின் செயல்பாடுகள் கண் முன்னே நிகழ்கிறது என்பதால் கணிப்பது எளிது.

நபி (ஸல்) அவர்களை ''உண்மையாளர்'' என்று கூறிய அதே மக்கள் பின்னர் ''பொய்யர்'' என்று உரைத்தது நபியவர்களின் ஆன்மீகக் கொள்கையை நோக்கியே தவிர, நடை முறை வாழ்க்கையில் நபியவர்கள் யாரையும் ஏமாற்றிப் பொய்யுரைத்தாகக் கொள்வது தவறு. நபியவர்களை பொய்யர், குறிகாரர், சூனியக்காரர், பைத்தியக்காரர், இட்டுக்கட்டுபவர் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது அந்த மக்களின் அறியாமை என்று அடித்து கூறி
விடலாம். ஏனெனில்,

ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இது போன்ற தங்களுக்கு அறிவில்லாதவற்றையே அம்மக்கள் பொய் என்று கூறினர். நபியவர்களை பொய்யரென்று கூறிய அதே வேளையில் பொய்யர் என்பதை நிரூபிக்க எவ்வித சான்றுகளையும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு கொள்கையை நம்பாதது வேறு, அந்தக் கொள்கையை பொய்யென்று உரைப்பது வேறு.
முந்தையதில் அது பற்றிய அறிவு இல்லாததால் அதை நம்பவில்லை. பிந்தையதில் அது பற்றிய எந்த அறிவுமின்றி அதைப் பொய்யென்று பொய்யுரைப்பது. இந்த அறியாமை அன்றைய விமர்சகர்களிலிருந்து இன்று வரை நீடிக்கிறது நாளையும் இது தொடரும்.

(ஓரிறைக் கொள்கை, மறுமை, சுவனம், நரகம், இறந்த பின் உயிர்ப்பித்து எழுவது இவற்றை முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டு தான் இஸ்லாத்தை நம்பிக்கை கொள்கிறார்களா? என்று இங்கு கேள்வி எழலாம். இவற்றைக் கண் கூடாகக் காண்பதற்கான அவகாசம் இருக்கிறது என்பது தான் இஸ்லாத்தின் பதில்)

தகவல்

நபியவர்கள் கொண்டு வந்த கொள்கையை அறியாமையினால் பொய் என்றும், குறிகாரச் சொல் என்றும், சூனியம் என்றும், பைத்திக்காரத்தனம் என்றும், கட்டுக்கதை என்றும் விமர்சித்த அதே மக்கள் பின்னாளில் நபியவர்களின் முன்னிலையிலேயே அதேக் கொள்கையை உளமாற ஏற்றுக் கொண்டனர் என்பது யாரும் அறியாமல் மறைக்கப்பட்ட வரலாறல்ல.

நபிமார்களைப் பொய்யர் என்று உரைத்தது முஹம்மது நபிக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லாக் காலத்திலும், எல்லா மக்களும், எல்லா நபிமார்களையும் நோக்கி ''இவர் பொய்யர்'' என்று கூறினர் என பிறமத நண்பர்கள் வைத்துள்ள திருக்குர்ஆன் வசனமே கூறுகிறது.

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய நபியாகிய ஈஸா நபி (அலை) அவர்களையும், அவர்கள் காலத்து மக்கள் ''பொய்யர் சூனியக்காரர்'' என்றே கூறினார்கள்.

அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை' என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும். (திருக்குர்ஆன், 005:110)

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: 'இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும் எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் 'இது தெளிவான சூனியமாகும்' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன், 061:006)

இறை வேதமும், இறை வேதத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தும் இறைத்தூதர்களையும் சுலபத்தில் மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. பெண் சுகத்தில் திளைத்தவனிடம் விபச்சாரம் செய்யாதே என்று இறைவனின் கட்டளையைக் கூறினால் அதை அவன் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டான். தனது இன்பங்கள் பறிக்கப்படுகின்றன என்பதால். மக்கள் மனம் விரும்பாத செய்திகளை இறைத்தூதர்கள் கொண்டு வந்ததால் இறைத்தூதர்கள் இம்சிக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய நபிகள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலோடு ஒப்படும் போது பொய்யர்.. இத்யாதி விமர்சனம் மிகச் சாதாரணம்.

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: 'இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன்,028:036)

இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் மக்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட்டார்களோ அதைப் போன்றே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)அவர்களும் மக்களால் விமர்சிக்கப்பட்டார்கள். இதில் முஹம்மது நபியை மக்கள் விமர்சித்ததை மட்டும் பிற மத நண்பர்கள் தூக்கிப் பிடிப்பது மழுங்கிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

விபரீத சிந்தனை

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை.

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.


இங்கு குறிப்பிட்டிருப்பது பிற மத நண்பர்களின் விபரீத சிந்தனைக்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு. திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது நபித்துவம் பெற்ற பின்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயதில் திருக்குர்ஆன் அருளத் துவங்கியது. முஹம்மது நேர்மையாளர், உண்மையாளர், நம்பிக்கையாளர் என மக்கள் சிலாகித்துக் கூறியது நபித்துவம் பெறுவதற்கு முன்னர். அதாவது நபியவர்களின் 40ம் வயது வரை. இதன் பிறகும் நபியவர்களின் நேர்மையில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை.

நபித்துவம் பெற்று திருக்குர்ஆன் அருளத் துவங்கிய பின்னரே மக்கள் நபியவர்களைப் பொய்யர் என்று கூறினர் என்றால் இது நபியவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கொண்டு வந்த ஓரிறைக் கொள்கையை, நபியவர்களின் நபித்துவத்தைப் பொய் என்றுப் புறக்கணித்தனர் என்று பொருள் கொள்வதில் எதுவும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்,

திருக்குர்ஆன் சொல்வதும் உண்மை.

ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் சொல்வதும் உண்மை.

அன்புடன்,
அபூ முஹை

7 comments:

அபூ அப்திர்ரஹ்மான் said...

உங்கள் விளக்கம் மிக நன்று. இன்ஷா அல்லாஹ் நானும் இது குறித்து ஒரு இடுகை இடலாம் என்றிருக்கிறேன். இஸ்லாமின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் எதையெல்லாமோ உளறிவிடுகின்றனர். இவர்களின் கூற்றுப் படி பார்த்தால் இயேசுவையும் அக்கால மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்டதாக இவர்கள் நம்புகின்றனர் (நாம் அவ்வாறு நம்பவில்லை) இயேசுவை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவர் பொய்யர் என்று இவர்கள் கூறுவார்களா (நாம் நிச்சயமாக அவ்வாறு கூறமாட்டோம்).

அபூ முஹை said...

அபூ அப்துர்ரஹ்மான் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

உங்கள் விளக்கங்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதுகை.அப்துல்லா said...

துங்குற மாதிரி நடிக்கிறவங்கள ஒன்னும் செய்ய முடியாது அபுமுஹை.

அபூ அப்திர்ரஹ்மான் said... //

இஸ்லாமின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் எதையெல்லாமோ உளறிவிடுகின்றனர். இவர்களின் கூற்றுப் படி பார்த்தால் இயேசுவையும் அக்கால மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்டதாக இவர்கள் நம்புகின்றனர் (நாம் அவ்வாறு நம்பவில்லை) இயேசுவை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவர் பொய்யர் என்று இவர்கள் கூறுவார்களா (நாம் நிச்சயமாக அவ்வாறு கூறமாட்டோம்).
//

ஆன்மிகம் என்பதன் உண்மை அர்த்தம் புரிந்த உங்களைப் போன்றவர்கள் எந்த மதத்தவரையும் எதன் பொருட்டும் பழிக்கமாட்டார்கள்.அவர்களும் அறிவிற் தெளிய இறைவனை வேண்டுவோம்

Unknown said...

மிக அழகான பதில்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூதுத்துவத்தை கொண்டு வருவதற்கு முன் உண்மையாளர், அல் சாதிக் எனப் போற்றப்பட்டார். அவர்கள் கொண்டு வந்ததை ஏற்காத போது அவ்வாறு புகழ்நதவர்களில் சிலரே அவரைப் பழித்தனர்.

இதிலே என்ன பொய்யை கண்டு விட்டாரோ அவர். பாவம். சம்பளம் கொடுப்பவர்களுக்கு எதையாவது எழுதிக் காட்டினால்தானே அடுத்த முறை சம்பளம் பெற முடியும்.

ஸயீத் said...

அந்தக்காலத்துக் காட்டு அரபிக்களை இந்தக் காலத்து "பிரேமனந்தா" போன்ற கடவுள்களை(?!) வணங்கும் கூட்டம் என்று நினைத்து விட்டார்கள் போல கீற்கண்ட வரிகளை எழுதியவர்கள்.

//ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர். //

ஒரு பேச்சுக்கு அவ்வாறே வைத்துக் கொண்டாலும் அவ்வாறு எண்ணியவர்கள் முகமது (ஸல்) அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள், தாயிF என்ற ஊரில் சிறுவர்களை வைத்து கற்களைக்கொண்டு அடிக்கச் செய்தனர், ஒரே இறைவனை தரையில் தலை வைத்து (ஸுஜுது) வணங்கிக் கொண்டிருக்கையில் ஒட்டகத்தின் குடல்களை அவர்களின் கழுத்தில் போட்டு அவர்களை எழுந்திருக்க விடா வண்ணம் தொழுகையில் தொந்தரவு செய்தனர், ஒரு கட்டத்தில் அவரைக் கொல்ல திட்டம் தீட்டி தப்பி ஓடிய அவர்களை "தவ்ர்" என்ற குகை வரை பகைமையுடன் விரட்டிச் சென்று தோல்வியுடன் திரும்பினர், இவையெல்லாம் மறைக்கப்பட்ட வரலாறல்ல, என்னவோ இவர்கள் இஸ்லாத்தில் மறைந்திருந்த மர்மத்தை புதிதாக கண்டுபிடித்து விட்டதுபோல் "அக்காலத்து மக்கள் ஒரு பொய்யராகக் கண்டனர், அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர், கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்." என்று திருவாய் மலர்ந்துள்ளார்கள். அப்படி நினைத்த அவர்கள் முகமது (ஸல்) விடம் "ஆட்சியின்மேல் ஆசையிருந்தால் ஆட்சியைத்தருகிறோம், செல்வத்தின்மேல் ஆசையிருந்தால் செல்வத்தைத்தருகிறோம், பெண் ஆசையிருந்தால் பேரழகியைத்தருகிறோம்" என்று கேட்கக் காரணம் என்ன?, ஒரு கட்டத்தில் குரானை யாரும் தொழுகையில் சத்தம்போட்டு ஓதக்கூடாது என்று தடை உத்தரவு போடக்காரணம் என்ன?.

ஒருவனை ஏமாற்றுக்காரனகவோ, கட்டுக்கதைகளைக்கூறுபவனாகவோ, பொய்களைக்கூறுபவனாகவோ காணும் கூட்டம் அவன் சொல்லும் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாது என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. அதுவும் அன்று சதாரணமாக நடந்து கொண்டிருந்த (மூடப்) பழக்க வழக்கங்களுக்கு சாவு மணி அடிக்கும் கருத்தை இது போன்ற (மோசமான) பெயர் பெற்ற ஒருவர் கூறினால் அவகாசம் கொடுக்காமல் அன்றய கடின மனத்தைப் பெற்ற மனிதர்கள் அன்றே அடித்து கொன்றிருப்பார்கள்.

அபூ முஹை அவர்கள் கூறியிருப்பதுபோல் அவர்கள் முகமதைக் காணவில்லை அவரின் ஓறிரைக் கொள்கையைத்தான் அவர்கள் அவ்வாறு கண்டனர்.

இதுல ஹைலைட்டான விஷயம் என்னன்னா? அவ்வாரெல்லாம் துரத்திய (அவரை ஒரு பொய்யராகக் கண்ட, ஏமாற்றுக்காரராகக் கண்ட, கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்ட) மக்கள் அவரிடம் சரணடைந்து நாங்கள் எந்த நிபந்தனைக்கும் தாயார் என்று தஞ்சம் புகுந்ததுதான்.

:)))))))))

அபூ முஹை said...

புதுகை.எம்.எம்.அப்துல்லாஹ் உங்கள் வருகைக்கு நன்றி!

//ஆன்மிகம் என்பதன் உண்மை அர்த்தம் புரிந்த உங்களைப் போன்றவர்கள் எந்த மதத்தவரையும் எதன் பொருட்டும் பழிக்கமாட்டார்கள். அவர்களும் அறிவிற் தெளிய இறைவனை வேண்டுவோம்//

லட்சத்தில் ஒரு வார்த்தை

அபூ முஹை said...

சுல்தான் உங்கள் வருகைக்கும், கருருத்திற்கும் நன்றி!

//இதிலே என்ன பொய்யை கண்டு விட்டாரோ அவர். பாவம். சம்பளம் கொடுப்பவர்களுக்கு எதையாவது எழுதிக் காட்டினால்தானே அடுத்த முறை சம்பளம் பெற முடியும்.//

''ஊதியத்திற்காக எழுதுகிறார்கள்''

இதை நம்ப முடியவில்லை!