Monday, March 19, 2007

நபி சொத்து சேர்க்கவில்லை

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இந்தியாவை விட அதிக நிலப்பரப்பை ஆளுகையாகக் கொண்டிருந்தார்கள். பெரும் நிலப்பரப்பின் மன்னராக நபி அவர்கள் திகழ்ந்தாலும் வெறும் எளிய வாழ்க்கையே வாழ்ந்தார்கள். ஆன்மீகம், ஆட்சி எனும் இரு தலைமைக்கு அவர்கள் பொறுப்பேற்றிருந்தாலும் தலைமையைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கவில்லை, சுகமாக வாழவுமில்லை என்பது வரலாறு.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் 63ம் வயதில் மரணிக்கும்போது அவர்களின் சொத்துக்களின் மதிப்பு என்னவென்பதை முன்பு எழுதியது மீள் பதிவு.

மரணிக்கும ்போது நபியின் சொத்துக்கள்

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் - பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் - பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் - ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து - ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.

ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் - பொருள் - பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக - துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். இறுதியாக மக்கா நகர நிராகரிப்பாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டங்களைத் தீட்டி நாளும் குறித்தார்கள்.

நிராகரிப்பாளர்களின் கொலை முயற்சி திட்டங்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இறைவன் அறிவிக்க நாடு துறந்து மதீனா சென்றார்கள். நாடு துறந்து சென்ற நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மக்கத்து நிராகரிப்பாளர்கள் மேலும் வன்செயல்களைப் புரிந்து நபியையும், நபியைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் துன்புறுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் - மதீனாலிருந்த நிராகிப்பாளர்களும் நயவஞ்கச் செயல்களின் மூலம் நபியின் - நபியைப் பின்பற்றிவர்களின் முதுகில் குத்தினார்கள்.

இத்துன்பங்களையும் - சோதனைகளையும் இறைவழியில் சகித்துப் புறக்கணித்து சத்தியமே பெரிதென வாழ்ந்து மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். சிறிது காலத்தில் எவ்வித சண்டையும் இல்லாமல் மக்காவும் நபி(ஸல்) அவர்களின் ஆளுமைக்கு வந்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்கள். பெயரளவிற்குத்தான் மன்னரே தவிர நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின்பற்றியவர்களும் பட்டினிப் பட்டாளங்களாகத்தான் இருந்தார்கள். (முஹம்மது (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பிருந்த வசதிகளையும் - நபித்துவம் பெற்ற பின் இழந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் சொத்து மதிப்பீடு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து - தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இதுதான். அதிலும் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது என்று ஆவணங்கள் கூறுகின்றன. உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக, நபி (ஸல்) அவர்களின் இரும்புக் கவசம், ஒரு யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற தோட்டம் பெரிய மதிப்புடைய சொத்தாக இல்லை. அன்றைய காலத்தில் நிலத்திற்கென்று எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவரவர் நிலத்திலுள்ள மேடு, பள்ளத்தை சமண் படுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நபித்தோழர் அபூ கதாதா (ரலி) அவர்கள் தமது கவசத்தை விற்று ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியதாக அறிவிக்கிறார்கள் (புகாரி) ஒரு இரும்புக் கவசத்தின் மதிப்புத்தான், ஒரு விவசாயத் தோட்டத்திற்கான மதிப்பும். இதிலிருந்த அன்று, நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களுக்குத்தான் மதிப்பீடாக இருந்தது, நிலத்திற்கு மிகக் குறைந்த மதிப்பீடே இருந்திருக்கிறது என்பதை விளங்கலாம்

அன்றைய மதீனாவில் பெரும் செல்வந்தர்கள் குடிமக்களாக இருந்தார்கள். பிரஜைகளை ஆட்சி செய்யும் - ஆட்சித் தலைவர் மிகச் சாதாரணச் செல்வந்தராகக்கூட இருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் நபியின் வீட்டில் அடுப்பெரியும் அளவிற்கும் வசதியைப் பெற்றிராத ஏழையாகவே வாழ்ந்தார் - அதே நிலையில் மரணிக்கவும் செய்தார் என்று இஸ்லாத்தின் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்ல நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது - நபிமார்கள் விட்டுச் சென்று சொத்துக்கள் அனைத்தும் தர்மமேயாகும்.

நபிமார்களின் சொத்துக்கு வாரிசில்லை, என்பதை அடுத்துப் பார்ப்போம்.

No comments: