Sunday, November 26, 2006

.இறையடியார்களுக்கு...

ஓர் மீள்பதிவு!

இறையடியான் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் சகோதரர் ஒருவர் அண்மையில் இராமாயணம் பற்றிப் பதிவொன்று இட்டிருந்தார். இந்துத்துவ வெறியர்களின் பதிவுகளின் எதிர்வினைப் பதிவாக இருந்தாலும் அதில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சில கதை நிகழ்வுகளையும் பொருத்தமற்று எழுதிக் குழப்பியிருந்தார்.

அதற்கு எதிர் வினையாக, ஜெயராமன் எனும் பதிவர் 'இஸ்லாமிய ராமாயணம்' என்ற தலைப்பில் ஒரு மறு கட்டுரை வெளியிட அதில் வழக்கம்போல் இந்துமதத் தீவிரவாதிகள் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் உயிரினும் மேலான, அல்லாஹ்வின் தூதர் மீதும் புழுதியும் சேறும் வாரி வீசியிருந்தனர்.

இந்நிலை யாரால் ஏன் ஏற்பட்டது?

சிந்தித்துப் பார்த்தால் தவறு இறையடியான் என்ற வலைப் பதிவரிடம் என்பது புரியும்.

சினமோ சீற்றமோ கொள்ளாது காய்தல் உவத்தல் இன்றிச் சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றில் உள்ள உண்மை யாவருக்கும் புரியும்.

இராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த காப்பியம். வால்மீகி இராமாயணம், துளஸி இராமாயணம், ஆனந்த இராமாயணம் போன்று கம்பன் எழுதிய இராமாயணம் தமிழ் மொழியின் மிகச்சிறந்த காப்பியம். அதன் மொழியழகும் கவிதைச் சிறப்பும் தமிழர்கள் யாவராலும் போற்றப் படும். இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக எழுதவும் செய்யலாம். அதில் தவறில்லை. அல்லாஹ்வின் அருள் மறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் உரிமை உள்ள இவ்வுலகில் ஓர் இலக்கிய நூலை விமர்சிப்பதில் தவறேயில்லை.

ஆனால் ஒரு நூலை விமர்சிக்கப் புகுமுன், குறைந்த அளவு அதன் உள்ளடக்கம் என்ன? அதன் கதை மாந்தர்கள் யாவர்? அவர்களுக்குள் என்ன உறவு அல்லது தொடர்பு என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? பள்ளிக் கல்வியிலேயே இராமாயணம் தேர்வுக்குரிய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. சாதாரண எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்திருக்கும் ஒரு தகவல் இணையத்தில் வலைப் பதிவு செய்யும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் நம்ப முடியவில்லை.

இறையடியான் எவ்வித ஆய்வும் தெளிவுமின்றிப் பதித்த ஒரு பதிவினால் தமிழ் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வலையில் பதியும் இறையடியார்களே! உங்கள் சிந்தனைக்குச் சில..

இணையத்தில் ஓர் ஆக்கத்தைப் பதிவேற்ற எண்ணினால் அதற்கு முழு வடிவம் கொடுத்தபின் ஒரு முறைக்கு இருமுறை படித்து வேண்டிய திருத்தங்கள் செய்து பதிக்க வேண்டும். அதுவும் மேற்படியார் பதிந்துள்ளபடி விவாதத்துக்குரிய செய்திகளை மிகவும் கவனத்துடன் ஆதாரங்களைத் தேடிப் படித்துப் பின் பதிக்க வேண்டும். நாம் விமர்சிக்கப் புகும் நூலில் இருந்து அகச்சான்றுகள், அதற்கு வலுவேற்றும் புறச்சான்றுகள், பிற ஆய்வு நூலாதாரங்கள், வரலாற்று மற்றும் தொல்லியல், மானுடவியல் ஆதாரங்கள் இருப்பின் அவை என இப்படி எவையெல்லாம் நம் வாதங்களை வலுவேற்றுமோ அவை எல்லாம் தேடப்பட வேண்டும். சான்றாக, பாப்ரி மஸ்ஜித் விஷயமாக எழுதப் புகுந்தால் மேம்போக்காக எழுதாமல் மேற்சொன்ன அனைத்துவகைச் சான்றுகளையும் தரவுகளையும் தொகுத்து எழுதினால் அதன் பொலிவே தனிதான்.

ஆனால் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக இறையடியானது எழுத்திலிருந்து புலப்படவில்லை. எந்த நூலையும் ஆய்வு நோக்கில் படித்து எழுதியதாகவும் தெரியவில்லை. எதோ ஒரு நூலை அவசரமாகப் படித்து அல்லது ஓர் ஒலிநாடாவைக் கேட்டு அல்லது கேட்டவர் சொல்லக் கேட்டு அவசரமாகப் பதித்து 'பேஸ்த்' ஆகி நிற்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இதைத்தான், "தடி கொடுத்து அடி வாங்குவது" என்பர்.

"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்கக் கூடாது." இவரது சறுக்கலை வைத்தே ஜல்லியடித்துள்ள கூட்டம் இதை மெய்ப்பித்துவிட்டது.

பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்டாதீர்கள்; இதன் மூலம் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையில் சொன்னதற்குச் சரியான சான்றாகி விட்டார் இறையடியான்.

ஒரு கருத்தைச் சொன்னால் எதிரி வாயடைக்கும் வண்ணம் சொல்ல வேண்டும்.

மாறாக, அரைகுறைச் செய்திகளுடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியர்களிடம் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டதைப்போல் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

நாம் விமர்சிக்கும் எதிரிகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்ற எண்ணம் இருந்தால்தான் வாதங்களில் தெளிவும் வலுவும் ஏற்படும். மத்ஹபு, தர்கா, தரீக்கா என மேம்போக்காக வாதிடுவதுபோல் எண்ணி, அள்ளித் தெளித்த அவசரக் கோலம் அலங்கோலப் பட்டுவிட்டது.

எழுத்தில் சூடு இருப்பதை விடத் தேவையானது மறுக்கவியலா ஆதாரம். காளையொன்று கன்றீன்றது எனக் கூறக் கேட்டால் கறப்பதற்குச் சொம்புடன் ஓடக்கூடாது.

"நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றபடி, நீங்கள் எழுத விரும்பும் செய்தி பற்றி மேல் விபரங்களை, அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்கலாம்; முழுவடிவம் கொடுக்கும் முன் அத்தகைய அறிஞர்களிடம் காட்டலாம்.

பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட தளம், மன்றம், அரங்கம் பற்றியும் அங்குள்ள விதிகள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம். இல்லையேல், மூக்கறுப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பொதுவில் கொண்டு செல்லும் முன் இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மையா என்பதை முதலில் சிந்தித்துப் பார்த்துவிடுவது நலம்.

இரண்டாவதாக, கொண்டு செல்லும் குறிப்பிட்ட அந்த இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றவையா என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான நேரம் ஒதுக்கும் வாய்ப்பு தமக்கு இருக்கிறதா என்பதை முடிவு செய்த பின்னரே இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது நலம்.

ஏதாவது ஓர் அறிஞரின் கருத்தைத் தம் ஆக்கத்தில் மேற்கோளிட்டுவிட்டு, எதிர்வினை வரும்போது இதற்கு நான் முழுதும் உடன்படவில்லை என்றோ அல்லது அந்த அறிஞரிடம்தான் கேட்க வேண்டும் என்றோ சொல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாமல், தாமே எதிர்வினைகளை எதிர்கொள்வதற்காக, உடன்பாடான, தெரிந்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவதே நல்லது.

இணையதளத்தில் இதன் குறிப்புகளோ அல்லது மூலமோ இருக்குமாயின், அவசியம் சுட்டி கொடுக்கப்பட வேண்டும்.

எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்காகப் பாமர வாசகனுக்கு எளிதில் புரியாத பெரிய பெரிய சொற்களைப் போட்டு மிரட்டக்கூடாது. கூறியது கூறல் கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதற்காகக் குன்றக் கூறவும் கூடாது; மிகைப் படுத்தவும் கூடாது. சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவவும் கூடாது.

சுருங்கக் கூறின், ஓர் ஆக்கம் என்பது, 'மனித குலத்தின் மேன்மைக்கும் அமைதிக்கும் உரிய வழி'யின்அழைப்பாக இருக்க வேண்டும்.

நன்றி: புதுச்சுவடி

அன்புடன்,
அபூ முஹை

9 comments:

வாசகன் said...

அன்பின் அபூ முஹை,

மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு இது.
முஸ்லிமாகவும் தமிழராகவும் இருக்கும் உணர்வின் முனைப்பில் இப்பதிவு வெளிப்பட்டிருக்கிறது. இப்பதிவை எடுத்துவைத்த உங்களுக்கும், ஆக்கிய புதுச்சுவடி என்பாருக்கும் வாழ்த்துகள்.

பொதுவாக, பிறமத புனிதங்கள் மீது முஸ்லிம்கள் காழ்ப்புணர்வால் தாக்குதல் நடத்துவதில்லை. இறைவனே தடுத்துள்ளது முக்கிய, முதன்மைக் காரணம் என்றால் காழ்ப்புணர்வின் அவசியங்கள் முஸ்லிம்களுக்கில்லை என்பதும் பக்கக் காரணம். ஏனென்றால், எத்தனை வாய்கள் கூடி ஊதினாலும் இஸ்லாமிய தீபம் அணைந்துவிடாது.

அபூ முஹை said...

அன்பின் அபூ நஜ்லா உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

சில முஸ்லிம்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து வரம்பு மீறி விடுகின்றனர். இஸ்லாம் தாக்கப்படும்போது, தக்கியவர்களின் மதங்களும் தாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பிற மத தெய்வங்களைத் தாக்கத் தொடங்கி விடுகின்றனர். இது இஸ்லாம் தடுத்த ஒரு செயல் என்பதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

அன்புடன்,
அபூ முஹை

வணங்காமுடி said...

அன்பின் அபூமுஹைபாய்,

நான் புதுச்சுவடிக்கு இட்ட பின்னூட்டம் இது.

உங்கள் பதிவிலும் அனுமதியுங்கள். ஐயா!

//இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம்//

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.

அவன் பெயரால்தானே இந்தியாவில் இரத்த ஆறு ஓட்டப் படுகிறது.

அவன் பெயரால்தானே சிறுபான்மை முஸ்லிகளும் கிருத்தவர்களும் மிரட்டப்படுகின்றனர்.

"ராமனைத் தங்கள் லட்சிய புருஷனாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டால் இந்த நாட்டில் வகுப்புக் கலவங்கள் வராது" என்று 20/06/1971ஆம் நாள் இன் ஆர்கனைஸர் பத்திரிக்கை கூறியது.

ராமன் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்று R.S.S.நம்பும் விஜயதசமி நாளில் 1925 ஆம் ஆண்டு R.S.S. ஆரம்பிக்கப் பட்டது. அவன் பிறந்த நாள் என்று அவர்கள் நம்பும் ராமநவமி நாளில் R.S.S. கொடி ஏற்றப் பட்டது.

இந்தியாவை இந்துராஷ்ட்டிரமாக்க ராமனின் பெயராலேயே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அவன் பெயராலேயே முஸ்லிகளின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளன.

ஐயாவின் தொண்டர்கள் 1971 ல் சேலத்தில் அவன் படத்தைச் செருப்பால் அடித்தது சரியான செயல்தான் என்று இன்று நிரூபனம் ஆகிறது.

podakkudian said...

மிக தெளிவான சிந்தனை பதிவிட்ட புதுசுவடி மற்றும் மீள் பதிவிட்ட அபுமுஹை க்கும் நன்றி

இறையடியான் said...

சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ஆத்திரத்தில் அறிவிழந்து தான் போனேன்.

இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.

நண்றி

ஸயீத் said...

தெளிவாக விளக்கிய புதுச்சுவடிக்கும் மற்றும் அபூமுகை அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

\\பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.\\

திருவாளர் வணங்கா முடி அவர்களே உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், ராமன் என்பவர் ஒரு சில மக்களால் கடவுள் என்றோ அல்லது தெய்வ அவதாரம் என்றோ பூஜிக்கப்படுகிறார். இதுபோன்ற ஒருவரை இவ்வளவு மோசமாக ஒருமையில் அழைத்தால் பதிலுக்கு அவரை வணங்குபவர்களும் பெரியார் போன்ற நல்ல மனிதர்களை மிகவும் தரக்குறைவாக பதிலுக்கு திட்ட ஆரம்பித்து விடுகின்றனர் இதனால் உண்மையான கொள்கைகள் மக்களைச் சென்றடயும் வழிகளில் தடைகள் ஏற்பட்டு விடுகின்றன. உங்களுடைய கருத்துக்களை மிக அழகிய முறையில் கூறலாமே. இப்படி திட்டுவதால் இறந்துவிட்ட அவர்களுக்கு கேட்கப்போவதில்லை அவர்களை பின்பற்றுபவர்களுக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துமல்லவா?. இது உங்கள் சகோதரரின் அறிவுரை. மதங்கள் எல்லாமே மனிதனை மனிதானாக்க வந்தவையே ஆனால் மனிதன் தடம் மாறி மத வெறி என்ற பேயால் ஆட்கொள்ளப்பட்டு தன் இனத்தையே அழிக்கின்றான். இவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரார்த்தனை.

வணங்காமுடி said...

அன்புள்ள ஸயீத் பாய்!

நான் ராமனைக் கம்பன் வழியே அறிந்தேன். பின் அண்ணாவின் புத்தகங்கள், பெரியாரின் கட்டுரைகள் வாயிலாகவும் அறிந்தேன்.

கம்பன் ராமனை அவன் என்றுதான் அறிமுகப் படுத்துகிறான். எட்டு நூற்றாண்டுகளாக ஒருமையில் அறியப்பட்ட ராமன் எட்டு ஆண்டுகளாக ராமர் ஆனது எப்படி?

'சிவன்' 'சிவர்' ஆகவில்லையே ஏன்? பெரியபுராணம் படியுங்கள்.

ருத்ரன் ருத்ரர் ஆகவில்லையே ஏன்?

ப்ரம்மன் ப்ரம்மர் ஆகவில்லை ஏன்? ப்ரம்ம புராணம் படியுங்கள்.

காப்பியத்தில் கதைத்தலைவன் " அவன்" தான்.

காட்டுராஜா வீரப்பனை வீரப்பர் என்றும் அவர் இவர் என்றுமா பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் அழைத்தனர்.

அபூ முஹை said...

//இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.

நண்றி// - இறையடியான்.

இறையடியான் உங்கள் வருகைக்கு நன்றி! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்!

இறைநம்பிக்கையாளன் ஒருவன், ஒரே பொந்தில் இருமுறை கொட்டு வாங்க மாட்டான் என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையை மெய்ப் படுத்துங்கள்.

அன்புடன்,
அபூ முஹை

வாசகன் said...

அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்..

பிற மதத்தவர் வணங்குவதை திட்டவேண்டாம் என்ற இறைமறை கட்டளையை; நபி வழியை எடுத்துவைத்தமைக்கு நன்றிகள். முஸ்லிம்களின் தனிச்சிறப்பு இது. எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய சூழலிலும் ஒரு ஒழுங்குமுறைக்கு மனிதனை உட்படுத்துகிறது.

ஆனால், நேச குமார், ஜயாரமன் போன்றவர்கள் முஸ்லிம்களுடன் ஒரு ஒழுங்குமுறைக்குட்பட்டு விவாதிக்க முன்வராமல் கன்னாபின்னாவென்று அவதூறுகளைப் பெய்தும், கார்ட்டூன் போன்றவற்றை வெளியிட்டும் (அதில் நேச குமாரின் அழுக்கடைந்த மனம் தான் எனக்குத் தெரிந்தது என்பது வேறு விடயம்) முஸ்லிம்களை வலிய வம்புக்கு இழுக்கிறார்களே.... அவர்களை எப்படி அம்பலப்படுத்துவது...?

கருத்தென்றால் கருத்துடன் மோதலாம்! - கறுத்துச் சிறுத்த காழ்ப்புணர்வை....?