Wednesday, November 29, 2006

நரகவாசிகளின் உணவு என்ன?

இஸ்லாம் மார்க்கத்தின் இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

''இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.'' (திருக்குர்ஆன், 004:082)

''இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கவனிடமிருந்து அருளப்பட்டது.'' (திருக்குர்ஆன், 41:42)

ஆனாலும், திருக்குர்ஆனின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது எனக் கேள்விகள் கேட்டு, இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் பார்வையில், சில வசனங்கள் முரண்படுவது போல் தோன்றினாலும், இஸ்லாம் மார்க்கத்தை முழுமையாக விளங்காததால் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக விமர்சிப்பவர்களுக்குத் தெரிகிறது. அவற்றை விளக்கும் நோக்கத்தில் இந்தப்பதிவு.


What will be the food for the people in Hell? The food for the people in Hell will be only "Dhari" [Sura 88:6], or only foul pus from the washing of wounds [S. 69:36], or will they also get to eat from the tree of Zaqqum [S. 37:66]? Together, these verses constitute three contradictions.

கேள்வி:- 4. நரகில் இருப்போரின் உணவு என்ன? நரகிலிருப்போரின் உணவு "தரி" [சூரா 88:6] அல்லது புண்களில் இருந்து வடியும் சீழ் [69:36] அல்லது ஜக்கும் என்ற மரத்தின் கனிகள் [37:66] இந்த மூன்று வசனங்களும் முரண்படுகின்றன.

நரகவாசிகளின் உணவாக திருக்குர்ஆன் கூறும் வசனங்களில் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. என்று சொல்லி, 037:066, 069:036, 088:006 ஆகிய வசனங்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்த வசனங்களைப் பார்ப்பதற்கு முன் பொதுவாக தண்டனைகளின் அடிப்படையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாக் குற்றவாளிகளும் சமமில்லை. குற்றங்களின் அளவைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு குறைந்த அல்லது அதிகபட்சத் தண்டனைகள் விதிக்கப்படுகிறது. சில நாட்கள் கைதியும், சில மாதங்கள் கைதியும், சில வருடங்கள் கைதியும், ஆயுட்கைதியும், மரணதண்டனை கைதியும் இப்படி தண்டனை வழங்கப்பட்ட எல்லாக் கைதியும் சிறையில் இருக்கிறார்கள் என்பதற்காக இவர்கள் அனைவரும் தண்டனை பெறுவதில் சமமாகி விட மாட்டார்கள். ஆனால் இவர்கள் சிறைக் கைதிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! தண்டனை பெறுவதில் வித்தியாசப்படுவார்கள்.

நரகவாசிகளின் உணவாகச் சொல்லப்படும் திருக்குர்ஆன் வசனங்களும், நரக தண்டனைப் பெற்றவர்களின் வேறுபட்ட செயல்களுக்கான தண்டனையாகவே மாறுபட்ட உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. இதை முரண்பாடாகச் சொல்பவர்கள், அந்த வசனங்களின் முன் வசனங்களையும் படித்து சிந்தித்திருந்தால், முரண்படுவதாகச் சொல்வது தவறு என்பதை மிகச் சாதாரணமாகவே விளங்கியிருக்கலாம். வசனங்களைப் பார்ப்போம்...

''இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா.?''

''அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.''

''அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.''

''அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.''

''அவர்கள் அதிலிருந்து சாப்பிடுபவர், அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.''
(037:062-066)

********************************************

''அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.''

''ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.''

''இன்றைய தினம் அவனுக்கு இங்கே உற்ற நண்பன் எவனுமில்லை.''

''சீழைத் தவிர, அவனுக்கு வேறு உணவுமில்லை.''
(069:033-036)

********************************************

''அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.''

''அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.''

''சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.''

''கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.''

''முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.''
(088:002-006)

****************************************

இவ்வுலக வாழ்க்கையில் செயல்பட்ட தீமைகளுக்குத் தக்கவாறு மறுமையில் நரக தண்டனை விதிக்கப்படும். அப்படி தண்டனை பெற்றவர்கள் ஒரே தரத்தில் இருக்க மாட்டார்கள். அவர்களின் உணவும் வெவ்வேறாக இருக்கும் என்பதை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து மேலதிக விளக்கம் இல்லாமலேப் புரிந்து கொள்ள முடியும்.

அதாவது, 037:066வது வசனத்தில் சொல்லப்படும் நரகவாசிகளின் உணவு, 069:036வது வசனத்தில் சொல்லப்படுபவர்களுக்கில்லை. 088:006வது வசனத்தில் சொல்லப்படும் உணவு மற்ற இரு வசனங்களிலும் சொல்லப்படும் நரகவாசிகளுக்கு இல்லை. மொத்தத்தில், தண்டனை பெற்றவர்கள் அனைவரும் நரகவாசிகள் என்றாலும் தண்டனையின் படித்தரத்தில் வித்தியாசம் இருக்கும், அதுபோல் உணவும் மாறுபட்டிருக்கும். எனவே திரக்குர்ஆனின் இந்த வசனங்கள் முரண்படுவதாகச் சொல்வது முறையாக விளங்காத நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகிறது.

அன்புடன்,
அபூ முஹை

1 comment:

அபூ முஹை said...

//கணவன் இல்லாமல் எவரிடமோ குழந்தையை பெற்ற பெண்ணுக்கு முகம்மது அவர்கள் அளித்த தண்டனை சரிதான். ஆனால் அந்த குழந்தைக்கு காரணமாக இருந்த ஆணுக்கு தண்டனை இல்லையா? இதில் என்ன சமநீதி இருக்கிறது. ஒருவர் செய்த தவறு காரணமாகவா குழந்தை பிறந்தது? இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பது இருவர். ஆனால் ஒருவருக்கு மட்டும் தண்டனை. இது எந்த விதத்தில் சரி என்பதை விளக்க முடியுமா? இதுதான் நீதியா?//

suniloliver,
உங்கள் கேள்விக்கான விளக்கம் இங்கே...

அன்புடன்,
அபூ முஹை