Wednesday, August 15, 2007

காபா இடமாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-1

புதன், 15 ஆகஸ்ட் 2007

காபா எனும் இறையில்லம் மனிதர்களுக்காக முதன் முதலாகக் கட்டப்பட்ட ஆலயம் என்று இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையான, திருக்குர்ஆன் கூறுகிறது.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)

மக்காவில் அமைந்த காபா, மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக பூமியில் அமைக்கப்பட்ட முதல் இறையில்லம். காபாவின் வரலாறு மிகத் தொன்மையானது. இது பற்றிய வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டம்:

ஹிஜாஸ் எனத் தற்போது அழைக்கப்படும் பகுதியைக் குறிப்பிடும்போது, ''அது பூர்வீக மக்களால் பெரிதும் கெளரவிக்கப்பட்ட பகுதி என்றும் அங்கு கல்லான ஒரு பலி பீடம் இருந்தது. அது மிகத் தொன்மையானது. சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் அதனை தரிசிக்க எல்லாத் திசைகளிலிருந்தும் வந்தனர்'' என்று டியோடரஸ் ஸிகுலஸ் குறிப்பிடுகிறார். - (சி.எம். ஓல்ட் ஃபாதர் என்பவரின் மொழிபெயர்ப்பு லண்டன் 1935 வால்யூம் 2 பக்கம் 211)

''காபா மிகப் பழமையானது. யாத்திரிகர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்தனர். இப்படி இவர்கள் வருவது எப்போது தொடங்கியது என்பதே தெரிய முடியாத அளவுக்கு வெகு காலத்திற்கு முன்பே காபா இருக்கிறது''. என்று இஸ்லாத்தின் எதிரியான ஸர் வில்லியம் முயீர் கூறுகிறார். அவரே எழுதிய, Life of Mohammed - 1923, பக்கம் 103.

காபாவின் பழமை பற்றி, வராலாற்று ஆய்வுக்கு எட்டாத மிகத் தொன்மையானத் திருத்தலம் என்பதை வரலாற்று ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தப் பழமையான இறை ஆலயம் எத்தனை முறை புதுப்பித்துக் கட்டப்பட்டது என்பதற்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கவில்லை. நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் காபா சிதிலமடைந்து இருந்தது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இப்படி சிதிலமடைந்து கிடந்தது என்பதற்கும் இஸ்லாத்தில் சரியான குறிப்புகள் இல்லை!

எந்த மக்களும் குடியிருக்காத மக்கா எனும் அந்த இடத்தில் காபா சிதிலமடைந்து கிடந்தது. இறைவன் தனது நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கும்படி பணிக்கிறான். இது தொடர்பாக இஸ்லாத்தின் சான்றுகள் இருக்கின்றன. இங்கிருந்தே காபாவின் வரலாறு மீண்டும் துவங்குகிறது. வெறும் அடித்தளம் மட்டுமே இருந்த மிகத் தொன்மையான காபாவை, இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். கட்டி முடித்து, இறைவனிடம் பிரார்த்தனையும் செய்கிறார்கள். (பார்க்க: அல்குர்ஆன், 002:125-130)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக அமைக்கப்பட்ட காபா எனும் இறையில்லம் மிகச் சரியாக, ஏற்கெனவே இருந்த அதே அடித்தளத்தில் மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. (காபாவின் மீள் துவக்க வரலாறு பற்றி இன்னும் விரிவாக திருமறை வசனங்களும், பல நபிமொழிகளும் கூறுகிறது. காபா அதன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அலசுவது மட்டுமே இந்த கட்டுரையின் நோக்கம் என்பதால் மேற்கொண்டு செல்வோம்)

ஒரு வரலாறு:

நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்விற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த ஒரு வரலாற்றுச் சம்பவம்:

நபித்துவ வாழ்விற்கு முந்திய கால கட்டத்தில் ரோமானியப் பேரரசு யமன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், யமன் நாடு அபிசீனியாவின் ஆளுகைக்கு உட்பட்டது. அப்போது யமனில் அபிசீனியாவின் ஆளுநராக இருந்த அப்ரஹா என்பவன், அபிசீனியா மன்னரின் பெயரால் யமனில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை எழுப்பியிருந்தான். புனித மக்காவில் இருந்த காபா ஆலயத்திற்குச் செல்லாதவாறு, அரபியர்களை அந்த தேவாலயத்தின்பால் ஈர்ப்பதற்காக அதில் பல்வேறு வகையான பகட்டான அலங்காரங்களையெல்லாம் செய்திருந்தான்.

அரபு தீபகற்பத்தின் மத்திய பாகத்திலும், அதன் வடபுலங்களிலும் வாழ்ந்திருந்த அரபியர்கள், அப்ராஹாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த யமன் நாட்டு மக்கள் அனைவரும் புனித காபா ஆலயத்தின் பக்கமே தங்களின் கவனத்தைத் திருப்பியவர்களாகவும், அதன்பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருப்பதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தமது இந்த எண்ணத்தை அபிசீனிய மன்னருக்கு எழுதித் தெரிவித்தான்.

அவன் எவ்வளவோ பிரயத்தனங்களை மேற்கொண்டும், அரபிகளை அவர்களின் புனித ஆலயமான காபாவை விட்டுத் திருப்பிவிட முடியவில்லை. அப்போது அப்ரஹா காபா ஆலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு மக்களின் கவனத்தை, தான் எழுப்பிய கிறிஸ்தவ தேவாலயத்தின் பால் திருப்பிவிடும் எண்ணத்தில் பெரும் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டான். அதில் ஏராளமான யானைகளும் இருந்தன. மிகப் பெரும் பட்டத்து யானை அவற்றிற்கெல்லாம் முன்னணியில் சென்றது.
இதற்கிடையே அவன் இந்த நோக்கத்துடன் புறப்பட்டு விட்ட செய்தி அரபு நாடு முழுவதும் பரவியது. தமது புனித ஆலயத்தைத் தமது கண் முன்பே இடித்துத் தகர்த்துவிட அவன் வந்து கொண்டிருக்கும் செய்தி அரபிகளுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.

இதன் காரணமாக அரபுகள் ஒவ்வொரு குலத்தாரும் அணிதிரளும்படி வேண்டியபின் படை திரட்டிக்கொண்டு அப்ரஹாவை மக்காவிற்கு சென்று விடாமல் வழியிலேயே தடுக்க, அவன் படையுடன் போர் செய்தார்கள். எனினும் அவர்கள் தோல்வி கண்டார்கள். அப்ரஹா, தம்முடன் போர் செய்து தோல்வியடைந்தவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, காபா ஆலயத்தை இடித்துத் தகர்க்க தொடர்ந்து இராணுவத்துடன் முன்னேறி வந்தான்.

காபாவை இடிக்க வந்த அப்ரஹாவின் யானைப்படையை இறைவன் என்ன செய்தான் என்பதை திருக்குர்ஆன், அல்ஃபீல் - யானை - 105வது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(அல்குர்ஆன், 105:001-005)

இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பலம் பொருந்திய யானைகளைக் கொண்டு காபாவை உடனடியாக இடித்துத் தகர்த்து விட முடியும். மேலும், நவீன போர் கருவிகள் இல்லாத அக்காலத்தில் இரும்பினால் செய்யப்பட்ட வெறும் ஈட்டி, வாள், கத்தி இவைகளைக் கொண்டு மனிதர்களிடையே போரிட்டுத் தாக்கிக் கொள்ள முடியுமே தவிர, யானைப் படையுடன் போர் செய்ய அந்தக் கருவிகள் உதவாது. யானைப் படையை எதிர்க்க பலமில்லாமல் இருந்த மக்காவின் குறைஷிகள், மற்றுமுள்ள குலத்தார்கள், இது இறைவனின் வீடு அதை அவனே பாதுகாத்துக்கொள்வான் என்று அப்ரஹாவின் யானைப் படையுடன் போர் செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.

அப்ரஹாவின் யானைப்படை மக்காவை நோக்கி வந்தது. முன்னணியில் வந்து கொண்டிருந்த பட்டத்து யானை மக்காவிற்குள் நுழைய மறுத்து மக்காவிற்கு வெளியேலேயே படுத்துவிட்டது. அதைக் கிளப்புவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்தும் முடியவில்லை.

நபித்துவ வாழ்வில், ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட நாளில் மக்காவிற்குள் நுழைய மறுத்து, நபி (ஸல்) அவர்களின் கஸ்வா எனும் ஒட்டகம் மக்காவிற்கு வெளியிலேயே படுத்துக்கொண்டது. நபித்தோழர்கள், ''கஸ்வா இடக்குப் பண்ணுகிறது'' என்றார்கள். ''கஸ்வா இடக்குப் பண்ணவில்லை! அது சண்டித்தனம் செய்யும் இயல்புடையதுமில்லை! ஆயினும் அன்று அப்ரஹாவின் யானையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்தவனே இப்போது இதனையும் தடுத்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அப்ரஹாவின் யானைப்படை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய இறைவன், பறவைக் கூட்டங்களை அனுப்பி, அவர்கள் மீது சுடப்பட்ட கற்களை எறிய வைத்து, மென்று தின்னப்பட்ட வைக்கோல் போல யானைப் படையும், அப்ரஹாவும் அழிக்கப்பட்டார்கள்.

நபித்துவ வாழ்வில், மக்கா வெற்றி கொண்ட நாளில்

''நிச்சயமாக அல்லாஹ்தான் அன்று யானைப் படையை மக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினான். அவனே இன்று அவனது தூதரையும், நம்பிக்கையாளர்களையும் மக்காவின் மீது ஆதிக்கம் பெற வைத்திருக்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

காபாவை இடித்துத் தகர்க்க வந்த அப்ரஹாவும் யானைப் படையையும் மக்காவிற்குள் நுழையக்கூட முடியாமல், அழித்தொழிக்கப்பட்டார்கள். என்பதை திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் கூறுகிறது. காபா எனும் இறை ஆலயத்தைக் காத்துக்கொள்வதற்கு மனிதர்கள் சக்தி பெறவில்லையெனில் காபாவை இறைவன் காப்பாற்றிக் கொள்வான்.

(மீண்டும் அடுத்த பகுதியில்... இறைவன் நாடட்டும்)

அன்புடன்.
அபூ முஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, July 31, 2007

தாலிபானின் செயல் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாம், குற்றங்களுக்கு தண்டனையாகவே தவிர, எந்த சூழ்நிலையிலும் தனியொரு மனிதனைக் கொலை செய்வதை மன்னிப்பதில்லை. தனியொரு மனிதனைக் கொலை செய்தவன் முழு மனித சமுதாயத்தையே கொன்றதற்கு சமம் எனவும் இஸ்லாம் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பு, அரபு மக்களிடையே உருப்படியான அரசியல் நெறிமுறை எதுவுமில்லை. அவர்களிடையே சமூகச் சீர்கெடு மண்டிக்கிடந்தது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதுபாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. வலியவன் எளியவனைத் தாக்கி, எளியவனின் உரிமைகள் பறிக்கப்பட்டது.

இவற்றை எதிர்த்துக் கேட்கவோ. தடுத்து நிறுத்தவோ நாதியில்லாமல் இருந்தது. சின்னஞ்சிறு பிரச்சனை என்றாலும் தகராறு, சண்டை, போர்கள் என இரத்தம் சிந்தப்பட்டது. அநீதி, அக்கிரமங்கள் தலை விரித்தாடியது. அமைதிக்குரிய இடமாக அமைந்த மக்கா போன்ற நகரின் நிலைமையும் மேம்பட்டிருக்கவில்லை. இச்சமயத்தில் பொது வாழ்வில் அக்கறை கொண்டு, நல்லெண்ணம் கொண்ட சிலர், இத்தகைய அவல நிலையை நீக்கிட வேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கான ஆலோசனைக்காக அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் என்பவரின் வீட்டில் ஒன்று கூடினார்கள்.

''என்ன விலை கொடுத்தாவது அநீதியையும், கொடுமையையும் தடுத்திட வேண்டும். மக்காவில் வசிப்பவராக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி எவரும் அநீதிக்குள்ளாகக்கூடாது. அநீதி இழைப்பவனை அடக்கி, அநீதிக்குள்ளானோருக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும். அவரது உரிமையை அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். இல்லாதாருக்கும், தேவையுடையோருக்கும் உதவிட வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்தார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். இந்த ஒப்பந்தம் நபித்துவத்திற்கு முன்பு நடைபெற்றது என்றாலும், நபித்துவத்திற்குப் பிறகும் நபி (ஸல்) அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் புகழ்ந்து கூறினார்கள்.

''நான் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் (முக்கியமான) ஓர் ஒப்பந்தத்தில் கலந்து கொண்டேன். அதற்கு பகரமாக (அரபுகளின் சிறந்த செல்வமாகிய) செந்நிற ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதை நான் விரும்பவில்லை. இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( தபகாத், இப்னு ஹிஷாம்)

நபித்துவம் பெறுவதற்கு முன் நடந்த அநீதிக்கெதிரான இந்த ஒப்பந்தத்தை, ''இஸ்லாம் வந்த பிறகு அதற்கான அழைப்பு எனக்குக் கொடுக்கப்பட்டாலும் அதனை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று கூறி இஸ்லாத்திற்கு இணையான ஓர் ஒப்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் புகந்ழ்துரைத்திருக்கிறார்கள்.

மனிதகுல நன்மைக்காக அநீதியையும், அநியாயங்களையும் எதிர்த்திட எந்த கூட்டமைப்பு உழைக்கிறதோ அதுவே அந்த சமுதாயத்தின் முதலீடாகும். விலைமதிப்பில்லாத இந்த மூலதனத்தைப் பெற்றிராத சமுதாயம் வீழ்ச்சியடைந்துவிடும். இஸ்லாம் இத்தகைய மூலதனத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது.

ஆனால்...

இஸ்லாமிய ஆட்சிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் தாலிபான் என்ற இயக்கம், இஸ்லாத்துக்கு எதிராக - இறைக்கட்டளைக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
தென்கொரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பணிக்காக வந்த இஞ்சினியர்களை, அவர்களின் பணியிடத்திலிருந்து தாலிபான் கடத்திச் சென்று பணயக்கைதிகளாய் வைத்துள்ளது.

ஆப்கான் அரசிடம் உள்ள சில கோரிக்கைகள் (ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தாலிபான் படையினரை விடுதலை செய்யக் கோரியது) பலனின்றி போனதைத் தொடர்ந்து ஒவ்வொரு பிணைக்கைதியாக தாலிபான் கொன்று வருகிறது.

தாலிபானின் இந்த மனிதநேயமற்ற செயலுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித ஒட்டுமில்லை. மாறாக இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் - அநீதிக்கு எதிரான செயல் இது. அப்பாவி மக்களைக் கடத்தி வைத்துக்கொண்டு அரசு தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பதற்காக, சம்பந்தமேயில்லாத பிணைக்கைதியான அப்பாவிகளைக் கொல்வது நேர்மையற்ற செயல். மனித உரிமைக்கும், உயிருக்கும் அநீதி - அநியாயம் இழைத்துக் கொண்டிருக்கும் தாலிபான் இயக்கத்தின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
அபூ முஹை

Monday, July 30, 2007

கலாச்சார கேடுகள்.

மேற்கத்தைய கலாச்சாரம் பல நாடுகளை நாள்தோறும் சுரண்டிக்கொண்டே இருக்கிறது அத்தகைய நாடுகளில் துபாயும் ஒன்றாக மாறி விட்டதோ..? என்ற கவலையானது இங்கு இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. அத்துடன் விஞ்ஞான வளர்ச்சியினை காட்டிலும் கலாச்சார சீரழிவானது மேன் மேலும் வளர்ச்சியினை கண்டு விட்டது இந்நாட்டில், என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் என்று இல்லை மேற்கத்தைய கலாச்சார ஷைத்தான்கள் வார்த்தைகளால் எழுத முடியாத வடிவிலும், சொல்லால் கூற முடியாத வடிவிலும் இங்குள்ள ஒவ்வொருவரையும் மனதால் கெடுத்துக்கொண்டு இருக்கிறான்.

மேலே குறிப்பிட்ட செய்தினை மட்டும் இல்லை, குவைத் நாட்டில் நடைபெற்ற சம்பவத்தினையும் மேற்கொள்காட்டி அதே நாளிதழ் செய்தினை ஒன்றினை தந்து உள்ளது.

குவைத் நாட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மகனை கடத்திக்கொண்டு போய் கற்பழித்தாகவும், அவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதினையும், கற்பழிக்கப்பட்ட நபர் எந்த நாட்டை சார்ந்த என்பதினையும் அந்த நாளிதழ் தன்னுடைய செய்தியில் குறிப்பிடவில்லை. இந்த விசயத்தினை குவைத் நாட்டு அரேபிய நாளிதழான 'அல் ராய்' வெளியிட்டு இருந்தது. 'இவர்களுக்கு தண்டனையாக அந்நாட்டின் கீழ் நீதி மன்றம் 15 ஆண்டுகள் கொடுத்தது. ஆனால் அப்பீல்ஸ் நீதி மன்றம் அதை குறைத்து 7 ஆண்டுகளாக ஆக்கி உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனை துபாயிலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப்பத்திரிகையான 'Khaleej Times' குறிப்பிட்டு இருந்தது தன்னுடைய செய்திக்குறிப்பில். 

வளைகுடாவில், குறிப்பாக துபாயில் பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இங்கு வேலை முடிந்து அறைகளுக்கு வந்த பின் மன ஆறுதலுக்காக தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து தம்தம் மாநில மொழி தொலைக்காட்சி தொடர்களை பார்க்கிறார்கள். ஆனால் இத்தொடர்களை பார்ப்பதால் மன ஆறுதல் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இத்தகைய தொடர்கள் அனைத்து மனத்திற்கு வேதனையும், மன பாரத்தினையும், மன கஷ்டத்தினையும் தருவதாக இங்குள்ளவர்கள் கருத்தினை கூறுகிறார்கள்.

வன்முறை, ஆபாசம், காதல் என்ற கருத்தினை வலியுறுத்துவதாக உள்ள அளவில் தான் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன என்றால் மிகையாகாது. இவற்றினை பார்க்கும் இங்குள்ள இளைய சமுதாயமானது மிக விரைவில் கெடக்கூடிய வாய்ப்பினை நிச்சயமாக தருகின்றன. துபாயில் பல அனாச்சாரங்கள் நடைபெறுவதற்கும் இத்தகைய தொடர்களும் ஒரு காரணியாக உள்ளன. கலாச்சாரம், பண்பாடு என்பதனை தூக்கி ஏறிந்து விட்டு தான் இத்தகைய தொடர்கள் உள்ளன.

சில பேர்கள் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்களும் தம்முடைய மனைவியுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்க முடிய அளவில் ஆபாசங்கள் அதிகமாக இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். மற்றும் இங்குள்ள பல அரேபியர்கள் இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், இந்தி ஆகியவற்றினை கற்றவர்களாகவும், மற்றும் பேசக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களும் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மனத்திலும் இப்படித்தான் இந்தியாவும் இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள்.

அத்துடன் பல தொடர்கள் விளம்பரத்தினை மையமாகக் கொண்டுதான் இருக்கிறதே ஒழிய கதையினை மறந்தும் மறைத்தும் விடுகிறார்கள். 40 மற்றும் 50 பாகங்கள் கொண்ட தொடராக இருந்தாலும் அதில் என்ன கதை உள்ளது என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் ஒன்றும் இல்லை எனலாம். மற்றும் எல்லா தொடர்களும் கூடுமான வரையில் ஒரே கருத்தினை தான் மையமாகக்கொண்டு இருக்கிறது. பார்க்கக்கூடியவர்களை எரிச்சல் உண்டு பண்ணக்கூடிய அளவில் தான் நம்முடைய நாட்டின் தொலைக் காட்சித் தொடர்கள் உள்ளன. எந்த அலை வரிசையை பார்த்தாலும் அத்தகைய எண்ணம் தான் வரும்.

வளைகுடாவில் இருந்துக்கொண்டு இந்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், Message மூலமாகவும் பணத்தினை வீண் விரயம் செய்த எத்தனையோ பேர்களை நாம் கண் கூடாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இவற்றிற்கு தமிழ் சகோதரர்கள் மட்டும் அல்ல, மற்ற மாநில சகோதரர்களும் அடிமையாகி விட்டார்கள் என்ன செய்வது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சில நல்ல விசயங்கள் இருந்தாலும்; மட்டரகமாக வரும் தொலைக்காட்சி தொடரினால் அத்தகைய நல்ல விசயங்களும் அழிந்து போய் விடுகிறது. மேலைநாட்டு ஆதிக்கம் ஊடகத்துறையில் அதாவது முக்கியமாக தொலைக்காட்சியினை அதிகமாக ஆதிக்கம் செய்து விட்டதால் இத்தகைய மனத்தினை கெடுக்கும் நிகழ்ச்சிகளும் சரியே, மற்றும் தொடர்களும் குறைவே குறையாது.

வன்முறை, ஆபாசம் என்பது தொலைக்காட்சியினை மட்டும் விட்டு வைக்காமல் இந்திய திரைப்படத்துறையையும் ஆக்கிரமிப்பு செய்து விட்டது என்பதற்கு அண்மையில் மலேசியாவில் நடந்த சின்ன ஒரு நிகழ்ச்சியே சான்றாகும். வேகமாக சென்று கொண்டிருந்த ரயில் முன்பாக பெண்மணி ஒருவர், தனது நான்கு குழந்தைகளுடன் பாய்ந்ததினை மேற்கொள்காட்டி, மலேசியாவில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் தமிழர்கள், திரைப்படங்களை பார்த்து காப்பியடித்து தற்கொலை செய்வது சமீபகாலமாக மலேசியாவில் அதிகரித்து வருவது குறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்திய திரைப்படங்களில் தற்தொலை காட்சிகள் நீக்கப்பட வேண்டும் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைப்பேராசிரியராக பணிபுரியும் டாக்டர். மணியம் அவர்களும் இத்தகைய சம்பத்தினை பற்றி கண்டித்து, இந்திய திரைப்படத் துறையினை சார்ந்தவர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நல்ல திரைப்படங்களை மக்களுக்கு தரவேண்டுமென்றும் வலுயிறுத்தி உள்ளார்.

இனிவரும் காலத்திலாவது தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளார்ளும், திரைப்பட தயாரிப்பாளர்களும் கவனம் மேற்கொண்டால் நம்முடைய சந்ததியினரை இது போல் உள்ள ஷைத்தானை விட்டு பாதுகாத்துக்கொள்ளலாம்.

நன்றி: இதுதானிஸ்லாம்.காம்

Thursday, June 21, 2007

அமெரிக்க ஜனநாயகத்தின் அறுவடைகள்.

அமெரிக்க ஜனநாயகத்தின் அறுவடைகள் ஈராக்கிய அகதிப் பெண்கள் பாலியல்
தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ள அவலம் கத்தரின் ஸோப்வ் - மே 29 2007. உம்மு ஹிபாவின் 16 வயது மகள் பக்தாதில் இருந்த போது அதிகாலையில் எழுந்து காலைத் தொழுகையை நிறைவேற்றி தனது அன்றைய பாடங்களை ஆர்வத்துடன் மீட்டும் ஒரு துடிப்பான மங்கை. ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லும் அந்தப் பெண்ணின் கல்வி ஆர்வமும் எதிர்காலக் கனவுகளும் இன்று அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் சிதறடிக்கப்பட்டு விட்டன.

மராபா டமஸ்கசின் ஒரு புறநகர்ப் பகுதி. இரவு விடுதிகள், சூதாட்ட கிளப்புகளுக்கு பேர்போன இடம். இன்றைய சிரியாவில் விபச்சாரத்தின் கேந்திர நிலையமாக வேகமாக மாறி வருகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் நெருக்கு வாரங்கள் மென்மேலும் அதிகரித்து உயிர் வாழ்வதே கேள்விக்குறியான போது பக்தாதை விட்டுப் புலம் பெயர்ந்து டமஸ்கசை நோக்கி வந்தவர்கள் தாம் உம்மு ஹிபா குடும்பத்தார். முற்றிய நீரிழிவு நோயாளியான வயதான தந்தை தாயுடன் உடைந்து நொறுங்கிய தனது எதிர்காலக் கனவுகளுடனும் ஹிபா இங்கே தஞ்சமடைந்திருக்கிறாள்.

கையறுநிலையிலிருக்கும் அவர்களுக்கு 'கைகொடுக்க' வந்த ஒருவர் ஹிபாவை மராபா நகரின் விபச்சாரத்துக்கு பேர் போன நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் இரவு விடுதி ஒன்றில் சேர்த்துவிடப் போவதாகக் கூறினார். 'நாங்கள் பெருமை மிக்க பாரம்பரியத்தை உடையவர்களாக இருந்தோம்'. ஹிபாவின் குரல் அந்த கிளப்பின் அதிரும் ஒலிபெருக்கிகளினூடாக பரிதாபமாக ஒலிக்கிறது. மெல்லிய இளஞ்சிவப்பு நிற அரைகுறை ஆடை உடலை இறுகத் தழுவியிருக்க துவண்டு வெளியில் தெரியும் அவளது தோள்கள் மீது மேடை மீதெறியும் வண்ண விளக்குகள் ஒளியைப் பாய்ச்ச அந்த 16 வயதான பருவ மங்கை ஹிபா டசின் கணக்கான அவள் போன்ற பெண்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறாள். கீழிருந்து உம்முஹிபா (தாய்) செய்வதறியாது பார்த்திருக்க, பெருந்திரளான பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து நடுத்தர வயதுடைய ஒருவன் பாய்ந்து மேடையேறி அவர்களுடன் கலந்து ஆடுகிறான். அசிங்கமான களியாட்டம் தொடர்கிறது. 'போர் எல்லாவற்றையும் எங்களிடமிருந்து பறித்தெடுத்துவிட்டது'. 'எங்கள் மானத்தையும் சேர்த்துத் தான்'. அவளது தாய் உம்மு ஹிபாவின் குரல் கம்மியபடி வெளிவருகிறது.

டமஸ்கசில் வசிப்போருக்கு ஈராக்கிய பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுவது இனிமேலும் மறைத்துவைக்க முடியாத ஒரு விடயமாக மாறி வருகிறது. மத்திய டமஸ்கசில் கூட பாதையோர பழரச, சன்விச் கடைகளுக்கருகில் கூடி நிற்கும் கும்பல்களுக்கிடையில் நடமாடும் 'தரகு'முகவர்கள் சமயத்தில் 'தேவையுடையோரை' அணுகி சர்வ சாதாரணமாக 'ஆள் பிடிப்பது' நடக்கிறது. அரபுக்களின் கலாசாரத்தில் நினைத்துப் பார்க்கவும் முடியாத விடயங்கள் இன்று சாதாரணமாக மாறிவிட்டன. கன்னி மரியாளின் அருள் அற்புதங்கள் தெரிந்ததாக நம்பப்படும், கிறிஸ்தவர்களை மட்டுமன்றி முஸ்லிம் யாத்திரிகர்களையும் கவரும் வரலாற்றுப் புகழ் பெற்ற கிறிஸ்தவ மடாலயம் அமைந்துள்ள ஸயித்நயா நோக்கிச் செல்லும் சாலை இந்த மராபா பிரதேசத்தினை ஊடறுத்துச் செல்கிறது.
யாத்திரைக்கான இந்நெடுஞ்சாலை ஈராக் பெண்களின் பாலியல் தொழில் பேட்டையாக வேகமாக மாறிவருவதாக டமஸ்கசைச் சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சொல்கின்றனர்.

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களில் டீன்ஏஜ் வயதினரும் உள்ளனர். அனைவரும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக்கிலிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்து வந்தவர்கள். வேறு தொழில்கள் கிடைக்குமென்ற ஆவலில் வந்து வஞ்சிக்கப்பட்டு இந்த படுகுழியில் விழுந்தோர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலானோரின் வாக்குமூலம் இப்படித்தான் உள்ளது. 'எமது குடும்பங்களை வாழவைக்க வேறு தொழில் மார்க்கங்கள் இங்கு இல்லை'. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக்கை அடுத்துள்ள சிரியா போன்ற நாடுகளில் நிதர்சனமாக வெம்பி வெடித்து நாறும் சமூக அவலங்களின் சாட்சிகளாக இந்தப் பெண்கள் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் தானிகரின் அறிக்கையின்படி சுமார் 1.2 மில்லியன் ஈராக் அகதிகள் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரிய அரசாங்கத் தகவல்களின்படி இத் தொகை 1.2 மில்லியனை விடவும் அதிகமாகும். ஈராக் அகதிகளின் படு மோசமான பொருளாதார நிலை பற்றி மேலும் விளக்கும் ஐ.நா. அறிக்கை 'பெண்களின் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினரின் பொருளியல் கையறு நிலையும் பட்டினியும் அவர்களை இரகசியமாகவோ அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனோ பாலியல் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது' எனத் தெரிவிக்கிறது. பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள 'பாலியல் பண்டத்தின்' தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்துச் செல்கிறது அறிக்கை.

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணியாளர்கள் இடம் பெயர்ந்து வந்துள்ள ஆயிரக் கணக்காக ஈராக்கியப் பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். தொடராகவும் தீவிரமாகவும் ஈராக்கில் அதிகரித்து வந்துள்ள வன்முறைகள் பெண்கள் தலைமையிலான பெருமளவிலான குடும்பங்களையும் மற்றும் ஆண் துணையின்றி கைவிடப்பட்ட ஏராளம் பெண்களையும் சிரியாவில் குவித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. 'சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்கள். தாமே குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள்ள ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர்'. என்று கூறுகிறார் இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த அருட்சகோதரி மேரி க்ளோட்.

மேலும் அவர் கூறுகையில் 'மசாகென் பர்சஹ் என்ற டமஸ்கஸ் புறநகர் பகுதியில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்றுவட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட 119 குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன் முதலாக வெளியே வரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதைத் தவிர வேறு எந்த வேலை வாய்ப்பையும் அவர்களால் பெற முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும். 'ஒன்றாக வாழும் மூன்று மைத்துனிகளை (ஈராக்கில் உயிரிழந்த மூன்று சகோதரர்களின் மனைவியர்)சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் இரவில் 'தொழிலுக்கு' செல்கின்றனர். கிடைப்பதை தமக்கிடையில் பகிர்ந்து கொண்டு தமது குழந்தைகளை வளர்க்கின்றனர். இவ்வாறு அவர்களின் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விபச்சாரம், குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் 'பேசப்பட முடியாத' விடயமாகவே இருக்கின்றது.

போதைப் பொருள் பாவனையைப் போல பாலியல் தொழிலும் பேசுபொருளாக முடியாதவாறு சிரிய அரசின் பொது பண்பு நல சட்டங்கள் கட்டுப்பாடு விதித்திருந்தன. ஊடகங்களும் இவ்வாறான விடயங்களை அடக்கி வாசிக்க வேண்டியிருந்தது. நிலைமை விபரீதமாகப் போய்க்கொண்டு இருப்பதால் இறுதியில் அரசாங்கமும் தனது மௌனத்தைக் கலைக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார் திருமதி டியட்ரன் குன்தார் என்ற யு.என்.எச்.சீ.ஆர் டமஸ்கஸ் அலுவலக அதிகாரி.

பெண்கள் - குறிப்பாக பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் தொடர்பாக நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். பலவந்தமாக அவர்கள் இந்த சகதியில் வீழ்த்தப்படுகின்றனர். சிலர் இதற்காகவே சிரியாவுக்குள் கடத்தி வரப்படுகின்றனர். இப்போது அதிகாரிகள் காட்டும் வெளிப்படையான சிரத்தையை இது விடயத்தில் ஒரு பாரிய முன்னேற்றமாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார் அவர்.

பெண்கள் உரிமைக்காக குரலெழுப்பும் சிரியாவைச் சேர்ந்த மவூனா அஸாத் எனும் வழக்கறிஞர் 'இராக்கிய அகதிகள் விடயத்தில் சிரிய அரசாங்கம் போதிய அக்கறை காட்டுவது போலத் தெரியவில்லை. இருந்தும் முடியுமானதைச் செய்வதற்கு சிரிய அரசு தயாராகவே உள்ளது. அரபு நாடுகளிலிருந்து சிரியாவுக்குள் பிரவேசிக்கும் அரபுக்களுக்கு வீசா தேவையில்லை. இருந்தும் 19 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிரியா சடுதியாக வந்து குவியும் இலட்சக் கணக்கானோரின் விவகாரங்களைக் கையாள்வது என்பது சிரம சாத்தியமான விடயம்தான் என்கிறார்.

'பாலியல் தொழில் மட்டுமல்ல இங்குள்ள பிரச்சினை. எங்கள் பாடசாலைகள் நிரம்பி வழிகின்றன. உணவுப் பொருட்கள், போக்குவரத்து, மற்றும் சேவைகளுக்கு முன்பை விட அதிகம் செலவிட வேண்டியுள்ளது. இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இன்றி நாம் திண்டாடுகிறோம். இப்பெண்களை அனுப்பி வைப்பதற்கான சுகாதார மற்றும் மகளிர் நலன்புரி நிலையங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. ஈராக் மென்மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இருப்பதால் இந்த பெண்களை அங்கு திருப்பி அனுப்புவதை எண்ணிப் பார்க்கவும் முடியாதிருக்கின்றது'.புறநகர்ப் பிரதேசங்களில் பெரும்பாலும் கசினோக்களிலேயே பாலியல் தொழில் நடைபெறுகிறது. சூதாட்டம் பெரிதாக இல்லாதிருப்பதால் கசினோ என்ற 'இடக்கரடக்கலில்' பாலியல் வியாபாரம் களை கட்டுகிறது.

அல்ஹாமியில் இருக்கும் அல்ரவாபி என்ற கிராக்கியான இரவு விடுதியில் ஈராக்கிய பாணியிலான (தீம் ஷோ) காட்சிகள் அரங்கேறுகின்றன. வாடிக்கையாளர்கள் கொறிக்கும் பதார்த்தங்களை பரிமாறுவோர் சுமந்து திரிய, பத்து பேர் கொண்ட இசைக்குழு தனது வாத்தியங்களோடு களத்தில் இறங்க, கிளர்ச்சியைத் தூண்டும் குரலில் அரபியில் ஒருவர் அறிமுகப் படலத்தைத் தொடங்குகிறார். 'எல்லா மேடைகளிலும் பாயும் தேனருவி எல்லா இதயங்களையும் திருடுபவள் - கவர்ச்சித் தாரகை மரியா இதோ உங்கள் முன்னால்'. வாளிப்பான உடலுடைய ஒரு இளம் பெண் மேடையேறி சோக கீதம் இசைக்கிறாள்! 'ஈராக்கை விட எனக்கு வேறு தாயகம் இல்லை. நான் எனது முழங்கால்களால் ஊர்ந்து சென்றாவது ஈராக்கினை அடைவேன்'. மற்றும் நால்வர் தமது கூந்தல்கள் சுழலும் வண்ணம் தலையை சுழல வைத்து ஆடியபடி மேடையை சுற்றி வருகின்றனர். மேடையை நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் உமிழ் ஒளி அவர்களது அலங்காரங்களை பல வர்ணங்களில் காட்டுகிறது.

அல் ரவாபியின் வாடிக்கையாளர்கள் மரியாவை சலனமின்றி நோக்கியபடி கறுப்பு லேபல் விஸ்கியை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பாரம்பரிய பைப்பிலிருந்து இழுத்து அவர்கள் ஊதும் புகையினால் அந்த பிரமாண்டமான கூடம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மரியா பாடி முடித்ததும் யாரும் கைதட்டவில்லை. மீண்டும் அவள் மைக்கை கையிலெடுத்து ஈராக் மீதான தன் போற்றுதலுரையைத் தொடர்கிறாள். அது யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. எல்லார் பார்வையும் அவள் உடல் மீதே பதிந்துள்ளன. அவள் பக்தாதின் தோரா மாவட்டத்தைச் சேர்ந்தவள்.

சராசரியாக இப் பெண்கள் ஒரு நாளைக்கு 50 முதல் 70 டொலர்கள் வரை சம்பாதிக்கின்றனர். 'வியாபாரம்' இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் ஒரு பெண் குறைந்த பட்சம் ஐநூறு லீராக்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும்படி பார்த்துக் கொள்கிறோம். தன் பெயர் ஹஸன் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் விடுதி முகாமையாளர் ஒருவரின் வாக்குமூலம் இது. (சுமார் 10 யு.எஸ். டொலர்களுக்கு சமமானது). நாங்கள் அந்த மக்கள் மீது அனுதாபம் கொண்டவர்களாயிருக்கிறோம். வாழ்வாதரத்துக்காக அவர்கள் படும் பாடு எமக்கு விளங்குகிறது. ஹஸனின் பெருமிதக் குரல் இது. ஹிபாவின் தாய் பார்த்திருக்க ஹிபா வழிமொழிகிறாள். மெனேஜர் மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாடிக்கையாளரும் தரும் பணத்தை யாரும் திருடிச்செல்ல அவர் அனுமதிப்பதில்லை. உம்மு ஹிபாவின் குரல் அழுகையாக வெடித்து ஓலமாக வெளிப்படுகிறது.

'வளைகுடா நாடுகளில் இருந்து வருவோருக்கு இரையாக்கவா எமது பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தோம்?'சபார் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணிபுரியும் ஒரு சிரிய வாலிபன். அங்கிருக்கும் க்ளப்பில்தான் ஹிபா ஆடுகிறாள். அவர்களது பிரதான வருமானம் குடிவகைகள் விற்பனையில் கிடைப்பது. இந்த ஈராக்கியப் பெண்கள் கிளப்பின் வருமானம் கருதி வாடிக்கையாளருடன் இருக்குமாறு தூண்டப்படுகிறார்கள். சமீப காலமாக மலிவாகக் கிடைக்கும் 'ஈராக்கிய பாலியல் பண்டங்கள்' மத்திய கிழக்கின் விபச்சார மையமாக சிரியாவை மாற்றியிருக்கின்றன என்ற கூற்று மிகைப்படுத்திய ஒன்றல்ல.

சபர் கூறுகிறான். எமது விடுதியின் கார் பார்க்கினை நோக்குங்கள். பாதிக்கும் மேற்பட்ட கார்கள் சவுதி அரேபிய இலக்கத் தகடுகளைக் கொண்டவை. டமஸ்கசிலிருந்து ஜோர்தான் ஊடாக சுமார் ஆறு மணித்தியாலப் பயணம்தான் சவுதி போர்டருக்கு. மதுவுக்கும் கிளப்புகளுக்கும் பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லாத சிரியாவில் ஈராக் பெண்களை வைத்து நடத்தும் புதிய வியாபாரமும் சேர்ந்து கொள்ள மத்திய கிழக்கின் மலிவான வார இறுதி களியாட்ட மையமாக சிரியா புதிய உருவம் எடுத்துள்ளது.

நன்றி: இதுதானிஸ்லாம்.காம்

Thursday, May 31, 2007

சில விளக்கங்கள்

ஓர் மீள்பதிவு

பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாறு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தவறானப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்து விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100)

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்.

நன்றி: இதுதானிஸ்லாம்.காம்