Wednesday, March 26, 2008

ஒட்டகச் சிறுநீர்!

இஸ்லாம் மார்க்கத்தின் மீது வழக்கமான புனைதலில் ஒன்று, ஒட்டகச் சிறுநீர் அருந்தினால் உடல் ஆரோக்கியம் பெறும் என்று இஸ்லாம் கூறுவதாக பொய்யுரைப்பது. இஸ்லாம் இவ்வாறு கூறவுமில்லை! ஒட்டகச் சிறுநீர் அருந்தினால் உடலுக்கு ஆரோக்கியம் என முஸ்லிம்களும் நம்பவில்லை!

இது தொடர்பான நபிமொழிகள்:

'உக்ல்' அல்லது 'உரைனா' கோத்திரத்திலிருந்து சிலர் மதீனாவிற்கு வந்திருந்தனர். மதீனா(வின் சீதோசனம்) அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே ஒட்டகங்களிடத்தில் பாலையும் அதன் சிறு நீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். உடனே அவர்கள் அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததும் நபி(ஸல்) அவர்களின் கால் நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டுக் கால்நடைகளைத் தங்களோடு ஓட்டிச் சென்றனர். இச்செய்தி மறு நாள் காலை நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்ததும் அவர்களைப் பின்தொடர்ந்து (பிடித்து வர) சிலரை அனுப்பினார்கள். அன்று நண்பகலில் அவர்கள் பிடித்துக் கொண்டு வரப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களின் கைகளும் கால்களும் வெட்டப்பட்டு, அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன. 'ஹர்ரா' என்ற (கரும்பாறை நிறைந்த) இடத்தில் அவர்கள் எறியப்பட்டார்கள். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படவில்லை" என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார் (புகாரி தமிழாக்கம் பாகம் 1, அத்தியாயம் 4, எண் 233)

"இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தாhர்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போருக்குத் தயாராம்விட்டார்கள்" என்று அபூ கிலாபா கூறினார்.

*****
உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள், அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படி விட்டுவிட்டார்கள். என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி தமிழாக்கம் பாகம் 2, அத்தியாயம் 24, எண் 1501)

*****
'உக்ல்' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்) சூழல் (உடல் நலத்திற்கு) உகந்ததாக இல்லை. எனவே, அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை" என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின நிராகரித்துவிட்டார்கள். ஒருவர் இரைந்து சத்தமிட்டபடி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களின் கைகளையும் கால்களையும் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்துவிட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை. என்று அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி, தமிழாக்கம் பாகம் 3, அத்தியாயம் 56, எண் 3018)

மேற்கண்ட செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ள பெரிய மெஞ்ஞான அறிவோ, விஞ்ஞான விளக்கமோ தேவையில்லை. மதீனாவுக்கு வந்த எட்டுப் பேர் கொண்ட ஒரு குழுவுக்கு மதீனாவின் சிதோசன நிலை ஒத்துக்கொள்ளாமல் நோயுற்றனர். நோயிலிருந்து குணமடைய ஸகாத் எனும் பொது அரசு தர்மச் சொத்துகளாகிய ஒட்டக மந்தையை அணுகி ஒட்டகப் பாலையும், சிறுநீரையும் அருந்த ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் - கட்டளையிட்டார்கள்.

இந்த நபிமொழியைப் பின்பற்றி உலக முஸ்லிம்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் மூன்று வேளை ஒட்டகச் சிறுநீரை அருந்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக அன்று எட்டுப் பேருக்கு மட்டும் நோய் குணமடைய ஒட்டகச் சிறுநீரை அருந்த அனுமதி வழங்கிய, மதீனாவில் நடந்த ஒரு சம்பவத்தை தகவல் என்ற அடிப்படையில் செய்தியாக இந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

எனவே,

இந்தச் செய்தியை விமரிக்க முன் வந்தவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக விமர்சித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தனக்குத் தோன்றியதை எழுதுவது அறிவு ஜீவிகளுக்கு பொருத்தமற்றது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு, மதீனாவின் பருவ நிலை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் நோயுற்ற எண்மர் ஒட்டகப் பால், மற்றும் ஒட்டகச் சிறுநீரை அருந்தி நோயிலிருந்து குணமடைந்து, பருமனடைந்தார்கள் என்று செய்தி தெரிவிக்கிறது. இது உண்மை இல்லை என்று மறுப்பவர்கள் அறிவாளிகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அந்த எட்டுப் பேரையும் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி, இவர்கள் ஒட்டகப் பாலையும், ஒட்டகச் சிறுநீரையும் அருந்தியதால் நோயிலிருந்து குணமடையவில்லை என்று விஞ்ஞான மருத்துவ ஆதாரத்தோடு எழுதியிருந்தால் அது உண்மை விமர்சனமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருந்திருக்கும்.

வருடந்தோறும் உலக நாடுகளிலிருந்து இன்றும் மதீனாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மதீனாவின் சூழல் ஒத்துக்கொள்ளாமல் இவர்களில் எவரும் ஒட்டகச் சிறுநீரை அருந்துவதில்லை. (அப்படிச் செய்தி இருந்தால் அதை எழுதி நிரூபிக்கலாம்) மதீனாவில் மட்டுமில்லை, பருவ நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்று எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் ஒட்டகச் சிறுநீரை அருந்துவதில்லை. இதிலிருந்து இது பின்பற்றத்தக்க செய்தியல்ல அந்த எட்டுப் பேருக்கு மட்டும் சொன்ன ஒரு சம்பவமாகும் என்று முஸ்லிம்கள் விளங்கியே வைத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையறியார் எவரும் உடல் ஆரோக்கியத்தை உள்ளத்தில் நினைத்து ஒட்டகச் சிறுநீரை அருந்திட வேண்டாம்! அப்படி அருந்தினால் அதற்கு இஸ்லாம் பொறுப்பேற்காது.

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை

No comments: