Wednesday, December 04, 2013

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்!

அல்லாஹ்வின் பண்புகளுக்கு நிகராக ஒப்பிட்டு எவரையும் சொல்ல இயலாது. மனிதனின் பண்புகளோடு இறைவனின் பண்புகளையும் சமமாகக் கருதிடக்கூடாது. அன்பு, கருணை, இரக்கம், பரிவு, மன்னிக்கும் தன்மை இவை மனிதர்களுக்கும் உண்டு என்றாலும் இறைப் பண்புகளின் உயர் நிலைக்கு நிகராக இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட, அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்று தமிழில் கூறுகிறோம்.

அன்பு, பாசம், கருணை, இரக்கம், பரிவு என இவ்வாசகங்களுக்கெல்லாம் நூலிழை வித்தியாமேயன்றி இவை நெருக்கமான ஓர் அர்த்தத்தைத் தரும் பல சொற்களாகும்.
 
(நபியே) நிச்சயமாக பூமியில் உள்ளவற்றையும், அவனது கட்டளைப்படியே கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? தனது கட்டளையின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அதனை அவனே தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணையாளன், நிகரற்ற அன்புடையவன். (அல்குர்அன் 022:065)

தனது அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடக்கூடாது என்று வானத்துக்குக் கட்டளையிட்டு இறைவன் தடுத்து வைத்திருக்கிறான். இவ்வாறு தடுத்து வைத்திருப்பது மனிதர்களின் மீதான அளவற்ற கருணையினாலும், நிகரற்ற அன்பினாலுமே என்று விவரித்து இறைமறை வசனங்கள் கூறகின்றன.

இவ்வசனத்தில் அன்பும், கருணையும் சேர்ந்தாற்போல் சொல்லப்பட்டாலும், கருணையைவிட அன்புக்கு ஒருபடி உயர்வுண்டு என்பதை வரும் நபிமொழிகளிலிருந்து விளங்குகிறோம்,

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: (புகாரி 6000, முஸ்லிம் 5310, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், தாரமீ)

தாயின் கால்களுக்கிடையில் விளையாடும் குட்டியை மிதித்து விடுவோமோ என்கிற உள்ளுணர்வில், உயிரினப் பிராணிகளும் கால்களை உயர்த்திக்கொள்வதும், தன் குஞ்சுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அன்னியப் பறவைகள் குஞ்சுகளின் அருகில் வந்தால் தாய்ப் பறவை சீறிப் பாய்ந்து போரிடுவதும் அன்பு எனும் பாசத்தினால் ஏற்படும் உள்ளுணர்வாகும். இது உயிரினங்களின் உறவினால் ஏற்படும் இயல்பு. அல்லாஹ் இரட்சகனாக இருப்பதால் மனிதர்களிடம் அன்பு செலுத்துவது இறைவனின் நியதி எனலாம்.
தாய்மையின் அன்புக்கு நிகராக எவரையும், எவற்றையும் ஒப்பிட்டுச் சொல்லிட இயலாது. தாயின் அன்பைவிட அடியார்கள் மீது அல்லாஹ் மிகுந்த அன்பு வைத்துள்ளான்:

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி) நூல்கள்: புகாரி 5999 முஸ்லிம் 5315)

இறைவன் பூமியில் இறக்கிய நூறில் ஒரு பங்கு அன்பிற்கே உயிரினங்கள் உறவுகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகின்றது என்றால் மீதம் தொண்ணூற்றொன்பது பங்கை தன்னிடம் வைத்திருக்கும் அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையவன் என்று சொல்லுவதே பொருத்தமாகும்.

கருணை

(நபியே) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், ''உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன் என்றும், குற்றவாளிகளான கூட்டாத்தாரை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட மாட்டாது'' என்றும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 006:147)

''இறைவன் விசாலமான கருணையுடையவன்'' என்பதை ''இறைவன் விசாலமான அருளுக்குரியவன்'' என்றும் சொல்லலாம். அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், மிகப் பெரும் கருணையாளன் என்பதால், குற்றவாளிகளுக்கு அவன் அளிக்கவிருக்கும் தண்டனையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதையும் மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது. ஆகவே, குற்வாளியின் மீது நீதிபதிக்கு அன்பு ஏற்பட்டால் சட்டத்தை வளைப்பான் என்பது பூமியிலுள்ள நீதிபதிகளுக்குப் பொருந்துமேயன்றி, வானத்திலுள்ள தன்னிகரற்ற தனி நீதிபதி இறைவனுக்குப் பொருந்தாது.

...நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையோனுமாவான். (அல்குர்ஆன் 6:165)
பாவத்தை மன்னிப்பவனும், மன்னிப்புக் கோரலை ஏற்றுக் கொள்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், அருளுக்குரியவனுமாவான். அவனையன்றி வணங்கப்படத் தகுதியானவன் வேறு யாரும் இல்லை! அவனிடமே மீளுதல் உள்ளது. (அல்குர்ஆன் 040:003)

''அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்'' என்கிற இக்கருத்திலமைந்த ஏராளமான வசனங்களை இறைமறையில் காணலாம். இறைவன் தீர்ப்பளிப்பதில் மேலான நீதிபதி:
 
..தீர்ப்பளிப்போரில் நீ மிகச் சிறந்த தீர்ப்பளிப்பளிப்பவனாவாய்... (அல்குர்ஆன் 011:045) 

அல்லாஹ் தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் மிகச் சிறந்த தீர்ப்பளிப்பாளன் இல்லையா? (அல்குர்ஆன் 095:008)

இறைவனின் பண்புகள் அனைத்தும் அளவற்றவையே ஆனாலும் அவனது பண்புகள் அவனுடைய தீர்ப்புக்கு எவ்வித இடையூறாக அமையாது.
மனிதர்களிடையே எவ்வாறு அன்பு ஏற்படுகின்றதோ அதுபோல் மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நபிமொழி வலியுறுத்துகிறது.

''மக்கள் மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி 7376, முஸ்லிம் 4638,  திர்மிதீ, அஹ்மத்)

''என் மீது அன்பு செலுத்து''
''அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள்'' என்று இஸ்லாம் எங்கும் கூறவில்லை என்பது சரியான புரிதல். ஏனெனில் ''அல்லாஹ் (எவ்வித) தேவையுமற்றவன்" (112:002) அன்பு, கருணை எதுவுமே அவனுக்குத் தேவையற்றதாக இருக்க அல்லாஹ்வின் மீது அன்பு செலுத்துங்கள் எனச் சொல்வதும் பொருத்தமாக இல்லை! - தேவையற்றவனுக்கு அன்பு தேவை இல்லை!. ஆனால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று இறைமறை கூறுகின்றது:

அல்லாஹ் அல்லாதவர்களை (அவனுக்கு) இணையாளர்களாக எடுத்து அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்போரும் மனிதர்களில் உள்ளனர். ஆனால், நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் மிக உறுதியானவர்கள்... (அல்குர்ஆன் 002:165)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்... (அல்குர்ஆன் 003:031)

அல்லாஹ்வை நேசித்தல் என்றால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி இஸ்லாம் வழங்கியுள்ள வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி, இஸ்லாமின் வழிகாட்டல்படி வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வதுமாகும். இவ்வாறு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை அல்லாஹ்வும் நேசிப்பான்.

விரிவஞ்சி இத்துடன் முடிக்கின்றோம்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது. (006:149)
(இறைவன் மிக்க அறிந்தவன்)

குர்ஆனில் இருக்கிறதா?

ஐயம்:
"பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" எனும் வசனத்தை தமிழில் "அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா? - சாணக்கியன்.

தெளிவு:

பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான், அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள் இணைந்து, அரபு மொழியின் சந்தி இலக்கணத்துக்கு இயைந்து, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான தமிழ்சொற்கள் முறையே:

பி=ஆல்
இஸ்மு = பெயர்
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய கடவுள்
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்

அன்பு, அருள், பரிவு, கருணை, இரக்கம் போன்ற பல பொருள்களைத் தன்னகத்தே கொண்ட 'அர்ரஹீம்' எனும் செறிவுச் சொல்லானது 'ரஹிம' எனும் வேரடி வினையிலிருந்து பிறந்த பண்புப் பெயராகும். 'ரஹீம்' எனும் சொல்லோடு இணைந்த 'அல்' எனும் பெயர்ச் சொல், குறிப்பாக உணர்த்துவதற்குப் பயன் படுத்தப்பட்டதாகும். அதாவது குறிப்பாகு பெயர். 'அல்-ரஹீம்' எனும் சொல், அரபு மொழியின் புணர்ச்சி இலக்கணப்படி 'அர்ரஹீம்' என மொழியப்படும்.

எனவே, 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்னும் அரபுச் சொற்றொடருக்கு, "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்" எனும் தமிழ் மொழி பெயர்ப்பு, சரியானதே!

இந்தச் சொல், இறைமறையின் 113 அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இறை வசனங்கள் சிலவற்றின் உள்ளும் இடம்பெற்றுள்ளது. அவையாவன:

"மேலும், உங்கள் கடவுள் ஒரேயொருவன்தான்; அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்" 002:163.

"வணக்க வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்" 059:022.

"(இவ்வேதம்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிமிருந்து இறக்கியருளப்பட்டது" 041:002.

"திண்ணமாக நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன் என்பதை (நபியே!) என் அடியார்களிடம் அறிவித்துவிடுவீராக!" 015:049.

oOo


ஐயம்:

திருக்குரானிலே இறைவன் தன்னைப்பற்றி "அனுவளவும் நீதி தவறாத நீதிமான்" என்று சொல்கிறான். "தீமை செய்தால் நரகம், நன்மை செய்தால் சுவர்க்கம்" என்று செயலும் அதன் விளைவையும் பற்றி தெளிவாக சொல்கிறான். எந்த இடத்திலும் "என் மீது அன்பு செலுத்து" என்று சொல்லவில்லை. நீதிபதிக்கு பயந்தால்தான் சட்டத்தை மனிதன் மதிப்பான். நீதிபதிக்கு அவன் மீது அன்பு வந்துவிட்டால் சட்டத்தை வளைப்பான். "அன்பே சிவம், God is love" போன்ற சிந்தனையெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. "கண்ணன் மீது காதல் வரலாம். அல்லாஹ் மீது பயம் வரவேண்டும்" என்பதுதான் இஸ்லாம்.

அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி. இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன? - சாணக்கியன்.

தெளிவு:

"என் மீது அன்பு செலுத்து" என்று அல்லாஹ் தன் அடியார்களுக்கு எந்தக் கட்டளையும் இடவில்லைதான். மாறாக, "என்னை அஞ்சி வாழுங்கள்" என்பதாகவே இறைமறை நெடுகிலும் கட்டளையிடுகின்றான். அதேவேளை, "பசியுடன் உணவு கேட்டு உங்களிடம் வருபவருக்கு அன்புடனும் பரிவுடனும் உணவளிப்பது என்னிடம் நீங்கள் காட்டும் அன்புக்கு ஒப்பாகும்" என்று அல்லாஹ் கூறுவதாக அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் (முஸ்லிம் ஹதீஸ் 4661 கருவின் சுருக்கம்).

"அல்லாஹ் நிகரற்ற கருணையாளன் என்பதுதான் சரி" என்பதை 'அர்ரஹீம்' எனும் சொல்லுக்குத் தமிழாக்கம் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால், முதல் ஐயத்துக்கான தெளிவைப் படித்துக் கொள்ளுங்கள். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன் என்பது மட்டுமே சரி" என்று ஒற்றைப்படுத்தினால் அது பிழையாகும். "அல்லாஹ், நிகரற்ற கருணையாளன்" என்பதும் சரி. போலவே, அன்பாளன், மன்னிப்பவன், கொடையாளன், நீதிபதி ஆகிய அவனுடைய எல்லாப் பண்புப் பெயர்களுக்கும் நிலைமொழியாக 'நிகரற்ற' வரும். ஏனெனில் அவனே நிகரற்றவன்தான்.

முழுமை பெற்ற ஆதாரம் அல்லாஹ்விடமே உள்ளது... (006:149).

(இறைவன் மிக்க அறிந்தவன்).

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

மேலதிகமாக ஹதீஸ்களின் விளக்கம்: ''அளவற்ற அருளாளனன், நிகரற்ற அன்புடையோன்''

Monday, December 02, 2013

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

ஐயம்:

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது "ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தையை பலியிடுமாறு அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான உங்கள் அல்லாஹ் கட்டளையிடுகிறானே.... இவ்வளவு ஈவு இரக்கமற்ற கடவுள் தேவையா?

அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்டால் பெரிய தியாகமாகி விடுமா?" என்று எனது பிராமின் நண்பர் கேட்கிறார். தயவு செய்து விளக்கம் தரவும். நன்றி. - சாணக்கியன்.

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

"இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு, தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமேயாகும்..." (அல்குர்ஆன் 006:137).

"அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்..." (அல்குர்ஆன் 006:140)

அரபியர்கள் ஏக இறைவனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், எவர் தயவும் தேவையற்ற இறைவன் தன்னைப் பற்றிக் குர்ஆனில் எவ்வாறு குறிப்பிடுகின்றானோ, அந்தப் பொருளில் இறைவனை அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை! எவ்வாறு அவனை வணங்கிட வேண்டுமோ அவ்வாறு வணங்காதவர்களாகவும், இறைவனை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்தாதவர்களாகவும் இருந்ததோடு, இறைவனுக்கு இணைகற்பிக்கும் பல தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. ஏக இறைவனை நம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அவர்களின் சமயச் சடங்குகள், மத ஆச்சாரங்கள், சித்தாந்தங்கள் அனைத்திலும் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்தனர்.

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும், குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

இது நல்ல கேள்வி, தியாகத் திருநாள் என்று சொல்லி, அனுமதிக்கப்பட்டப் பலிப் பிராணிகளை இறைவனின் பெயரால் அறுத்து, அதன் இறைச்சியை சமைத்துச் சாப்பிட்டுவிட்டால் அது தியாகம் ஆகிவிடுமா? இதில் எங்கே தியாகம் இருக்கிறது? என்கிற கேள்வி நியாயமாக இருந்தாலும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கு, ''தியாகத் திருநாள்'' எனும் பெயர் ஏன் நிலைப்பெற்றது? என்பதை அறிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் படித்தால் தெளிவு பெறலாம்!

"என் இறைவா! நல்லெழுக்கமான குழந்தையை எனக்குத் தந்தருள்வாயாக! (என்று பிரார்த்தனை செய்தார்). எனவே, சகிப்புத் தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நற்செய்தி கூறினோம்" (அல்குர்ஆன் 037:100-101)

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக அவரின் சந்ததியாக ஒரு மகன் பிறந்தார். அவரது பெயர் இஸ்மாயீல்.

இஸ்மாயீல் வளர்ந்து தந்தையுடன் இணைந்து செயற்படும் பருவத்தை அடைந்தபோது, "என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?'' எனக் கேட்டார். அ(தற்க)வர், "'என்னருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ், சகித்துக் கொள்ப(வர்களுள் ஒரு)வனாக என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (தம் மகனாகிய) இவரை முகம் குப்புற நிலத்தில் கிடத்தியபோது,

"யா இப்ராஹீம்! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்'' என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும். அவருக்குப் பகரமாக, மகத்தான பலிப் பிராணியை ஆக்கினோம். பின்வருவோரில் அவர்மீது
(புகழ்) நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது சாந்தி உண்டாகட்டும். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்
(அல்குர்ஆன் 037:102-110).

நபிமார்களின் கனவு இறைச் செய்திகளின் முன்னறிவிப்பாகும். அக்கனவு நிறைவேறும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ரீதியில், மகனை அறுப்பதாக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட கனவு இறைவனின் கட்டளை என அதைச் செயல்படுத்திட தந்தையும், மகனாரும் முன்வருகின்றனர். நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு நீண்ட காலம் குழந்தையில்லாமல் இருந்து, பின்னர் குழந்தை பிறந்தது. (மகன் இஸ்மாயீலை அறுக்க முயன்ற நிகழ்வுக்குப் பின்னரே நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனாரின் பெயர் இஸ்ஹாக் 037:112).

ஒற்றைக்கு ஒற்றையான இஸ்மாயீல் என்ற அந்த ஒரு மகனைத் தம் கையாலேயே அறுக்க தந்தை ஆயத்தமாகிறார். அருமை மகனை இழக்க நேரிடுமே என்கிற தயக்கம் ஏதுமின்றி இறைக்கட்டளையே முக்கியம் எனச் செயல்பட முன்வந்த ஒரு தந்தையின் இந்தத் தியாகத்துக்கு ஈடாக எந்தச் செயலையும் குறிப்பிட்டுச் சொல்லிட இயலாது.

இது ஒருபுறமிருக்க:

''இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று தந்தையிடம் மகன் கூறி, 'இறைக் கட்டளைக்கு மிஞ்சியது எதுவுமில்லை' என உயிர் துறக்க முன்வரும் மகனார் இஸ்மாயீலின் உயிர்த்தியாகமோ ஈடு இணையற்றது என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த தியாகமல்லவோ!

இறை அன்பர் என இறைவனால் போற்றப்பட்ட, வாய்மை தவறாத நபி இப்ராஹீம் (அலை) என்கிற நல்லடியாருக்கும், தியாக உள்ளம் படைத்தவரும் சகிப்புத் தன்மை மிக்கவருமான மகனார் இஸ்மாயீலுக்கும் வைக்கப்பட்ட சோதனையாகும் என்றே இறைமறை வசனம் குறிப்பிடுகின்றது. இறைக் கட்டளைக்கு முன்னால் ஈடு செய்ய இயலாத உயிரிழப்பும் துச்சமென மதித்து செயலில் இறங்கிய இரு நல்லடியார்களின் தியாகச் செயல்கள் இடையில் தடுக்கப்பட்டு, அந்த இடத்தில் ''பெரும் பலியாக'' பலிப் பிராணியை தியாக மகன் இஸ்மாயீலுக்குப் பகரமாக்கினான் இறைவன்.

நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் இரு வசனங்களை இறைவன் தன் வேதத்தில் அருளிப் பதித்தான்:

"(நபியே) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நீர் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். மேலும், அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.

மேலும், அவர் தமது குடும்பத்தாருக்குத் தொழுகையையும் ஸகாத்தையும் ஏவக்கூடியவராக இருந்தார். இன்னும் அவர் தன் இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்"
(அல்குர்ஆன் 005:054-055).

இம்மாபெரும் சம்பவத்தின் தியாக வரலாறு மறுமை நாள்வரை நம்பிக்கையாளர்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைத்திருக்க வேண்டும் என இத்தியாக தினத்தை இஸ்லாமிய மரபாக ஆக்கினான் இறைவன். உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையாளர் அனைவரும் அந்நாளில் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை தாமும் புசித்து மற்றவருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அவ்வாறு செய்வதால் ஒவ்வொரு முஸ்லிமும் தியாகம் செய்வதாகவும் பொருளில்லை! மாறாக, படைத்தவனுக்கு அவனின் படைப்புகள் எப்படி கட்டுப்பட வேண்டுமென்பதை நினைவுறுத்தும் விதமாக செயற்கரிய மகத்தான தியாகத்தைச் செய்த இரு நல்லடியார்களின் தியாகங்கள் பிராணிகளின் பலியின் மூலம் எடுத்து சொல்லப்படுகிறது! தியாகத் திருநாள் என்பதன் மூலம் வேண்டுவதும் அதுவே!

மற்றபடி இத்தியாக நாளில் எந்த முஸ்லிமும் தியாகம் செய்திட வேண்டும் என்கிற பொருள் ''தியாகப் பெருநாளில்'' இல்லை! தியாகம் செய்வதற்கென ஒரு தினத்தை இறைவன் நிர்ணயிக்கவில்லை. எந்த நாளும் எந்த நேரமும் இறைவழியில் தியாகம் செய்திட வேண்டும் என்பதே மேற்காணும் நிகழ்விலிருந்து முஸ்லிம்கள் பெறும் படிப்பினையாகும்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம்.காம்