Tuesday, February 21, 2006

பணம் பணமறிய அவா!

கவிதை வடித்தவரை அறிய அவ!

பிடிஎஃபில் எழுதி, நண்பர்களிடமிருந்து வந்த இக்கவிதையை எழுதியவர் யார்? என்று தெரியவில்லை. ஏற்கெனவே வலைப்பூவில் பதிந்திருக்கலாம் தெரிந்தவர்கள் இருந்தால் அறியத்தரவும் நன்றி!

அன்புடன்,
அபூ முஹை


அன்னை தேசத்து
அகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடி வயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறித்தெறிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாம்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!
ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகி விட்டது!

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்று விடுகிறது
நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்...

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்க்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்...

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது...

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக்காற்று தந்த சுகம் கூட
இந் ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?..

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மைக் கட்டிப் போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக...

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும் விரகத்தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...

என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?

********************************************************

7 comments:

b said...

நானும் முன்னர் படித்து இருக்கிறேன் அபூமுஹை அவர்களே.

Chandravathanaa said...

கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி

╬அதி. அழகு╬ said...

திருத்தம் - கொடுவாயூர் மவ்லவீ ஜஃபர் சாதிக் பாக்கவீ

பாபு said...

http://www.ezilnila.com/naan_kavi.htm#3

Jafar ali said...

எழுதியவர்:
கொடுவாயூர் ஜாஃபர்
சாதிக் பாகவி அவர்கள். மிக அழகான கவிதை அது. மனதுக்கு பிடித்த கவிதைகளின் தொகுப்பில் அதை நான் சேகரித்து வைத்திருக்கிறேன்.

அபூ முஹை said...

சந்திரவதனா அவர்களே தகவலுக்கு மிக்க நன்றி!

அபூ முஹை said...

வாருங்கள் மூர்த்தி அவர்களே, உங்கள் வருகைக்கு நன்றி!

வந்ததுதான் வந்தீர்கள் - கவிதையைப் பதிவு செய்யும்போது எழுதியவர் யாரென்று தெரியாமலிருந்தது. ஆனால் கவிதை வரிகளில் அவர் சார்ந்த சமூகம் எதுவென ஊகிக்க முடிந்தது சரிதானா? - புதிரை விடுவித்துச் செல்லுங்களேன். :)

அழகு, பாபு, ஜஃபர் அலி உங்கள் வருகைக்கும் நன்றிகள்!

அன்புடன்,
அபூ முஹை