Wednesday, August 03, 2005

வஹி: இறைச்செய்தியும் - அறிவியலும் -2

வாழத் தகுந்த கோள்-2



ஏ.கே.அப்துர் ரஹ்மான்.

மனித குலத்தின் விஞ்ஞான அறிவு வளர வளர அவன் உள்ளத்தில் சுண்டைக்காய் அளவாக இருந்த நட்சத்திரங்கள் மற்றும் இதர கோள்களின் அளவும் வளரத் துவங்கியது. இந்த வளர்ச்சி மேதகு விஞ்ஞானி ஐசக் நியூட்டன் (கி.பி. 1624 முதல் 1727 வரை) காலத்தில் விசுவரூபம் கொண்டு நாம் வாழும் நிலப் பரப்பைக் காட்டிலும், பெரிய நிலப் பரப்புக்கள் கொண்ட கோள்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன என அறியத் துவங்கினான். இந்த அறிவு மனித உள்ளத்தில் ஓர் ஆசையைத் தூண்டியது. அதாவது பூமியில் இட நெருக்கடி ஏற்பட்டால் அதைச் சமாளிக்க இதர நிலப் பரப்புகளுக்கு குடி பெயர்ந்து செல்லலாமா? என்பதே அந்த ஆசை. இந்த ஆசை நமக்கு நிறைவேறுமா?. பொருட்செலவு ஏராளமாகுமா? அல்லது அங்கு நாம் எதிரிகளை சந்திக்க நேருமா? என்கிற ஐயங்களெல்லாம் அந்த ஆசையின் உடன்பிறப்பாக அப்போதே பிறந்து விட்டன.

இவ்வய்யங்களைத் தீர்க்க பரிசுத்த குர்ஆன் ஏதேனும் கூறியுள்ளதா?. ஏனில்லை?. கூறத்தான் செய்கிறது.

'அவன்தான் பூமியை உங்களுக்கு வாழத்தகுந்த இடமாக்கியவன்..'(அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்க் - 15வது வசனம்).

என்ன இது? பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால் வாழத் தகாத இடமாகக் கூட ஆக்க முடியுமா?. இருக்கட்டும்! வாழத் தகாத இடமாகக் கூட இருக்கலாம். இருப்பினும் பூமியை வாழத் தகுந்த இடமாக்கினான் என்றால், ஏனைய நிலப்பரப்புகள் எல்லாம் வாழத் தகாத இடங்களா?. ஏனைய நிலப் பரப்புகளையும் வாழத் தகுந்த இடமாக ஆக்கியிருந்தால் எல்லாப் பூமிகளையும் (கோள்களையும்) வாழத் தகுந்த இடமாக்கினேன் என்றல்லவா கூறியிருப்பான். ஆகவே இவ்வசனம், 'அனைத்துக் கோள்களிலும் மனிதன் வாழத் தகுந்த சூழ்நிலை உண்டு என்பது தவறு: ஆனால் பூமியில்தான் அந்தச் சூழ்நிலை உண்டு' எனப் பொருள் தருகிறது.

இது மெய்தானா?. சமீப நாட்களில் (1969 ஆம் ஆண்டு ஜுலை மாதம்) சந்திரனுக்கே சென்று வந்தார்களே! எனவே இது பற்றிய ஆய்வில் விஞ்ஞானம் கண்ட உண்மை நிலை என்ன?.

ஆனால் நிலவைப் பற்றிய ஆய்வு மனிதனின் ஆசையில் மண்ணள்ளிப் போடுவதாகவே அமைந்தது. நிலவில் மனிதன் மட்டும் இல்லை: தாவரங்கள் கூட வாழ இயலாத சூழ்நிலைதான் இருந்து வருகிறது. உயிரினங்களின் தேவையாகிய கார்பனும், நீரும் அங்கு சிறிதளவு கூட இல்லை என்பதோடு, தயாரிப்புகள் எதுவுமின்றி உயிரோடு ஒரு மனிதன் அங்கு செல்ல நேர்ந்தால், உடனே இறந்து விடுவான். ஏனெனில் நிலவில் சுவாசிப்பதற்குக் காற்று இல்லை. மேலும் அங்கு பகல் நேர வெப்பம் மனித இரத்தத்தை கொதிக்கச் செய்யும் அளவிற்கு 120 டிகிரி சென்டி கிரேடும், இரவு நேர வெப்பம் இரத்தத்தை உறையச் செய்யும் அளவிற்கு -160 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கின்றன.

நிலவுதான் இப்படியென்றால், அறியப்பட்ட இதர கோள்களின் நிலையும் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. பொருண்மை, விட்டம் ஆகியவற்றில் பூமிக்கு ஒப்பாக உள்ள கோள் வெள்ளி (VENUS). இதன் பகல் நேர வெப்ப நிலை 475 டிகிரி சென்டி கிரேடு ஆகவும், இரவில் 474 டிகிரி சென்டி கிரேடு ஆகவும் இருக்கிறது. பூமியொத்த மற்ற கோள் செவ்வாய். இது பூமியின் காற்று மண்டலத்தில் நூறில் ஒரு பங்கு மட்டுமே கொண்டது. அதிலும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும், 78 சதவீதம் நைட்ரஜனும் இருக்க வேண்டிய இடத்தில், தலா ஒரு சதவீதம் மற்றும் இரண்டரை சதவீதத்தை அளித்துவிட்டு, ஏறத்தாள 96 சதவீதம் கரியமில வாயுவே (Carnbon-di-Oxide) ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

ஏனைய கோள்களில் மெர்க்குரி (Mercury) சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அளவுக்கு மீறிய வெப்பத்துடனும், வியாழன் (Jupitor), சனி (Saturn), யுரேனஸ் (Uranus) நெப்டியூன் (Neptune) ப்ளுட்டோ (Pluto) போன்றவை சூரியனிலிருந்து மிகுந்த தொலைவில் இருப்பதால் மிகுந்த குளிர்ச்சியாகவும் இருக்கின்றன. எனவே சூரியக் குடும்பத்தில் அறியப்பட்ட எந்தக் கோளிலும் மனித வாழ்க்கைக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

இதிலிருந்து சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர மேலும் பல கோள்கள் இருந்தும் அவை எதிலுமே மனிதன் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தாமல் பூமியில் மட்டும் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி வைத்துள்ளான் என்ற கருத்து உணரப்படும். குர்ஆனிய வசனங்கள் நூற்றுக்கு நூறு மெய்யென்பதற்கு நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளே சான்று பகர்கின்றன.

இவ்வளவு ஆழமாக நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளைத் தீர்க்க தரிசனத்துடன் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே படம் பிடித்துக் காட்டிய இந்த பொய்க் கலப்பற்ற ஒப்பற்ற குர்ஆனை மெய்யான இறைவேதம் என ஏற்கத் தயங்குவோரே, அது கூறுகின்ற அற்புதமான விஞ்ஞான நிரூபண உண்மையை மேலும் கவனியுங்கள்:

'அல்லாஹ்தான் இப்பூமியை உங்களுக்கொரு வீடாகவும் - ஆகாயத்தை ஒரு கூரையாகவும் ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமீன் 64வது வசனம்)

இங்கே பூமியை இறைவன் ஒரு வீட்டுக்கு ஒப்பிடுகிறான். இது மனிதன் வாழ்வதற்கேற்ற இடமென்பதால் வீடு என்பது மிகப் பொருத்தமான வார்த்தை. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆகாயத்தை கூரையென்று கூறுகின்றானே? இதன் பொருளென்ன?

நாம் ஒரு வீட்டைக் கட்டுவதாக இருந்தால் வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு அதற்கோர் கூரையமைக்கிறோம். ஆனால் பூமிக்குமா ஒரு கூரை தேவை?. அப்படியே கூரையொன்று இப் பூமிக்கு இருக்குமாயின் வெயிலும், மழையும் இப்பூமியில் விழுகிறதே! இதெப்படி இயலும்?.

மேலே கூறிய வசனத்தைக் கண்டவுடன் சிலர் இப்படியும் சிந்திக்க தலைப்படலாம். ஆனால் இச் சிந்தனையில் உள்ள குறைபாடு நகைப்புக்குரியதே! பூமி வாழத் தகுந்த ஒரு வீடாக இருக்க வேண்டும் என்றாலே இங்கு வெயிலும், மழையும் விழுந்தே ஆக வேண்டும். அவ்வாறு விழாவிடில் இது வீடாக இருக்க முடியாது. இடுகாடாகத்தான் இருக்க முடியுமென்பதை விளக்கத் தேவையில்லை. ஆகவே கூரை என்பது பூமியின் மீது ஏதோ பாதிப்பு ஏற்பட, அதனைத் தடுக்கும் விதத்தில் ஆகாயம் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது கூரையாக இருக்க முடியும்! அப்படிப்பட்ட கூரை இப்பூமியின் மீது எங்கே இருக்கிறது?.

நாம் பார்த்த வரை இப்பூமி பந்தின் மீது வெளிர் நீலப் பட்டொன்று குடை விரித்தாற்போல் - மேகங்களற்ற நிர்மல வானம் காட்சியளிக்கிறது. இதுதான் ஆகாயமா?. இதுதான் அந்தக் கூரையா?. விஞ்ஞானம் என்ன கூறுகிறது?.

கடல் நீரின் மீது படும் சூரியக் கிரணங்களின் பிரதிபலிப்பைக் காற்று மண்டலம் பூமியை நோக்கி எதிரொளிப்பது தான் அந்த நீல வண்ணக் குடையேயன்றி அங்கு வேறெதுவும் இல்லை எனக் கூறுகிறது. அப்படியாயின் ஆகாயம் என்ற சொல்லே அர்த்தமற்றதா?. அப்படியொன்று மெய்யாகவே இல்லையா?. பரிசுத்த குர்ஆன் என்ன சொல்கிறது:

'நிச்சயமாக நாமே ஆகாயத்தை வல்லமை கொண்டு படைத்தோம்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 51 ஸுரத்துத் தாரியாத் - 47வது வசனம்)

ஆகாயம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் அவன் அதைத் தன் வல்லமையைக் கொண்டு நிச்சயமாகவே படைத்திருக்கிறான் எனக் கூறுகிறான்!. அப்படியாயின் நம்முடைய பூமிக்குக் கூரை அமைத்த கீற்றுகள் யாவை?. எங்கே நமது கூரை?.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

3 comments:

புகழேந்தி said...

அன்பர் அபூமுஹை அவர்களே,

கூரை என்பதைப் படிக்கும் போது ஓசோன் படலம் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி, பூமிவாழ் உயிரினங்கள் தோல் புற்று நோய் வராமல் காக்கும் ஓர் அமைப்பு மிகத் தேர்ந்த ஒரு நுண்ணறிவாளனை நினைவுபடுத்துகிறது. அதே போல், பூமியின் வளிமண்டலத்தில் 100% அல்லது 50% என இல்லாமல் 21% ஆக்சிஜன் இருப்பதை எண்ணிப் பார்த்தால் உங்களின் குரான் ஏன் திரும்பத் திரும்ப சிந்திக்க மாட்டீர்களா என மனித இனத்தைத் தூண்டுகிறது என்பதும் புலப்படுகிறது். இதெல்லாம் அப்படியே தன்னால் உருவாயிற்று என்று கூறுவது அபத்தமும் முட்டாள்தனமும் மட்டுமல்ல. வடிகட்டிய அயோக்கியத் தனமும் கூட. நன்றி

வாசகன் said...

சகோதரரே!

துவேஷங் கொள்வோர் துவேஷங்கொள்ளட்டும்!
ஆவேசப்படுவோர்
ஆவேசப்படட்டும்
அவர்களை விட்டு விடுவோம்

இதுபோல் நிறையத் தாருங்கள்
என்னைப் போல் எளியவர்களுக்கேனும்!
எல்லாப்புகழும்,பெருமையும், அந்த ஓரிறைக்கே!

அபூ முஹை said...

அன்பர் இரா.புகழேந்தி, அவர்களே! உங்கள் வருகைக்கும் - கருத்துக்களுக்கும் நன்றி!

ஜமாலுத்தீன் அவர்களே! நீங்கள் கூறியதுபோல், புகழனைத்தும் பெருமைக்குச் சொந்தக்காரனாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே!

அன்புடன்,
அபூ முஹை