Tuesday, December 28, 2004

கடல் கொந்தளிப்பால் உயிரிழந்தவர்களே!

உங்கள் பாவங்களையும், எங்கள் பாவங்களையும் இறைவன் மன்னிக்கட்டும். மரணத்தில் நீங்கள் முந்தியவர்கள், நாங்கள் பிந்தியவர்கள்!

உறவை பறிகொடுத்து கலங்கி நிற்கும் நெஞ்சங்களே! வெறும் ஆறுதல் வார்த்தைகள் உங்களுக்குப் போதாது. வருங்காலங்களின். நல்வரவால் மன நிம்மதியை வழங்கிட உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

Saturday, December 25, 2004

மிர்ஸா குலாமும் - மாற்றாரின் கண்ணீரும்.

மத மாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு அமுல் படுத்தியது என்றால், அங்கே மதமாற்றம் நடக்கிறது என்று தானே அர்த்தம்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களே 'இறுதி நபி' என்ற பிரச்சாரம், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 'இறுதி நபி' இல்லை என்ற பிரச்சாரத்திற்கெதிராக முடுக்கி விடப்பட்டப் பிரச்சாரம் என்று தானே அர்த்தம்! இதில் 'திணிப்பு' என்பது எங்கே?

ஒருவர் 2+3=6 என்று விடை எழுதினால், அது தவறான விடை என்று உறுதியாகத் தெரிந்த மற்றொருவர் 2+3=5 என்று சரியான விடையைக் கூறித் திருத்தினால் இது திணிப்பா? திருத்தலுக்கும், திணித்தலுக்கும் வேற்றுமை தெரியாமல் உளறக்கூடாது.

காதியான் எனும் ஊரிலே பிறந்து, தன்னை நபி என்று பிதற்றிய மிர்ஸா குலாம் அஹமது எனும் நயவஞ்சகரைப் பின்பற்றுபவர்களே 'காதியானிகள்' மிர்ஸா குலாம் நபி அல்ல, முஹம்மது நபி (ஸல்) அவர்களே இறுதி நபி என்றும் இஸ்லாத்தின் ஒளியில் எம்மால் நிரூபிக்க முடியும். இதில் மாற்றுக் கருத்துடைய எவர் வேண்டுமானாலும் தங்கள் தரப்பின் கருத்துக்களை வைக்கலாம். உரைகல் இஸ்லாமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் அவ்விவாதக்களத்தை சந்திக்க நாம் தாயராக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

//முகமது நபிகள் தாம் இறுதித் தூதர் என்ற நம்பிக்கையை ஏனைய முஸ்லீம்கள் அவர்கள் மீது திணித்ததன் காரணமாக அச்சமூகம் சொல்லொண்ணா துயரத்தை பாகிஸ்தானில் அனுபவித்து வருகிறது.//

என்று பிதற்றாமல் மிர்ஸா குலாம் நபி என்பதற்கான இஸ்லாத்தின் ஆவணங்களை வைத்து ஆக வேண்டியதை செய்யட்டும். ஒரு கேள்வி: மிர்ஸா குலாமை நபி என்று நம்பிக்கை கொண்ட 'அச்சமூகம்,' அந்நம்பிக்கையை ஏனைய முஸ்லிம்கள் மீது திணிக்கவில்லையா? பின் 'அச்சமூகம்' செய்யும் பிரச்சாரத்திற்கு என்ன அர்த்தமாம்?

சகோதரர் நேசகுமார் விளக்கட்டும்!

இனி...
இஸலாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும். தொடர்ச்சி அடுத்த பதிப்பில்.

இஸ்லாத்தின் வரலாறும், மாற்றாரின் உளறலும்.

இஸ்லாத்தின் எதிரிகளால் சுமத்தப்பட்ட அவதூறுகளை களைந்த பின் இஸ்லாம் - முஸ்லிம் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று என் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க, இஸ்லாத்தின் வரலாறு என்ற பெயரில் மாற்றாரின் 'உளறல்களை' அடையாளம் காட்டுவோம்.

இஸ்லாத்தின் பர்தா - வரலாறும் நிகழ்வுகளும் என்ற தலைப்பில் வழக்கம் போல் இஸ்லாத்தின் வரலாற்றைத் திரித்து எழுதியிருக்கிறார். முஹம்மது நபி(ஸல்)அவர்களை மீண்டும் இங்கே காமுராக சித்தரிக்க முயன்று. இந்த முயற்சியின் வெளிப்பாடே அல்குர்அன் அந் நூர், அல் அஹ்ஜாப் ஆகிய இரு அத்தியாயங்களையும் ஒரே வரலாறாகக் குழப்பி உளறலின் உச்சக்கட்டத்திற்கே சென்றிருக்கிறார்.

அந் நூர் அத்தியாத்தில் நான்கு முதல் பத்தாவது வசனம் வரை ஒரு நிகழ்ச்சியாகவும், பதினொன்று முதல் இருபதாம் வசனம் வரை வேறொரு நிகழ்ச்சியாகவும், அதைத் தொடர்ந்தே 21,22ம் வசனம் ஆயிஷா (ரலி) யின் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றியும். இந்த சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத மற்றொரு நிகழ்வாகத்தான் 30,31 ஆகிய வசனங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு எல்லா சம்பவங்களையும் ஒரே சமயத்தில் நடந்ததாகக் கூறி தானும் குழம்பி, முஸ்லிம்களையும் குழப்ப முயன்றிருக்கிறார். இது பற்றி விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

முதலாவதாக 24ம் அத்தியாயம் 4லிருந்து 10வது வசனங்களைப் பார்ப்போம்.
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி;

24:7. ஐந்தாவது முறை, ''(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்"" என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, ''நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி;

24:9. ஐந்தாவது முறை, ''அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

24:10.இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

மேற்காணும் இறைவசனங்களின் வரலாற்று பின்னணி.
ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை 'ஷாரீக் இப்னு சஹ்மா' என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்'' என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு 'யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி 'இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், 'காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை'' என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது 'ஷாரீக் இப்னு சஹ்மா'வுக்கே உரியதாகும்'' என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், 'இது பற்றிய இறைச்சட்டம் ('லிஆன்' விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்'' என்று கூறினார்கள். (புகாரி)

இரண்டாவதாக அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் எனும் நயவஞ்சகன் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தினான் அவதூறை நம்பியவர்களில் ஹஸ்ஸான்(ரலி), மிஸ்தஹ் (ரலி) ஆகியவர்களும் அடங்குவர். அல்குர்ஆன் அந் நூர் அத்தியாயத்தில் 11வது வசனம் முதல் 20ம் வசனம் வரை உள்ள வசனங்களைப் பார்ப்போம்.

24:11.எவர்கள் பழி சமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, ''இது பகிரங்கமான வீண் பழியேயாகும்"" என்று கூறியிருக்க வேண்டாமா?

24:13.அ(ப்பழி சமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

25:14.இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.

25:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.

24:16.இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, ''இதைப் பற்றி நாம் பேசவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

24:17.நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.

24:18.இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.

24:19.எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.

24:20.இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான்.

அல்குர்ஆன் 24:11-20 வரை உள்ள வசனங்களின் பின்னணி வரலாறு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனூ) முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அநதப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. எனவே, நான் (திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார்கள்.அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கு அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல் போன) என்னுடைய மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டு விட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். எனவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்க முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில்) விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்.மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. நான் நோயுறும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; ஸலாம் சொல்வார்கள்; பிறகு 'எப்படி இருக்கிறாய்' என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான். இதுதான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.

நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களின் இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸகர் இப்னு ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அப்பாத் இப்னு முத்தலிப்) ஆவார்.(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என்னுடைய வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன்னுடைய ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கேட்டார். 'என்ன கூறினார்?' என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என்னுடைய நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் என்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அப்போது நான் 'என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?' என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.

என் தாயாரிடம், 'அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொண்டடிகிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுப்படுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்.உடனே நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!'' என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.(இதற்கிடையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (இறைச்செய்தி) (தாற்காலிமாக) நின்று போயிருந்தது.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும் நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் துணைவியாரிடமும் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று அப்போது உஸாமா கூறினார்கள்.

அலீ அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக) 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.

எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

அன்றைய தினம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு 'முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.

உடனே (பனூ) அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஅத் அல் அன்சாரி(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனுடைய கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்'' என்று கூறினார்கள்.

உடனே ஸஅத் இப்னு உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தில் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் ஸஅத் இப்னு முஆத் அவர்களைப் பார்த்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது'' என்று கூறினார்.

உடனே உசைத் இப்னு ஹளைர்(ரலி) எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் ஸஅத் இப்னு உபாதா அவர்களிடம் 'நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். எனவேதான் நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்!'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகி விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுதுவிட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருக்கையில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்துவிட்டு, 'ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருக்கால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.அப்போது நான் என் தந்தையார் (அபூ பக்ர்(ரலி) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'நானோ வயது குறைந்த இளம் பெண் குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக அறிவேன். எனவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப்(அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் - அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகிற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகிற ஒன்றைச் சொல்கிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரமநிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கிவிட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை 'ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்'' என்பதாகவே இருந்தது. உடனே என் தாயார் 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்!'' என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்'' என்று சொன்னேன்.

(அப்போது) அல்லாஹ், 'அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர் சித்தீக்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக, அபூ பக்ர்(ரலி) செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் 'உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி), 'ஆம்'' அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள்.(குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன 'அறிந்திருக்கிறாய்?' அல்லது 'பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று கூறினார்கள்.

ஸைனப் அவர்கள் தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ளலானார். என் விஷயத்தில் அவதூறு பேசி அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார். (புகாரி)

ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் அவதூறை - களங்கத்தை ஆர்வத்துடன் கேட்டு இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பதை சிறிதும் சிந்திக்காமல், களங்கத்தைப் பற்றிய எந்த ஞானமும் இல்லாத நிலையிலும் கட்டி விடப்பட்ட கட்டுக் கதையை, சம்பவத்தை நேரில் பார்த்தது போல் மற்றவரிடம் அவசரமாக கிசுகிசுக்கும் ஆவல் உள்ளவர்களை இன்றைக்கும் பார்க்கத்தான் செய்கிறோம்.

அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பவன் கூடவே இருந்து குழி பறிக்கும் நயவஞ்சகனாக இருந்தான். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தமது கூட்டத்தை தவறவிட்ட பின் ஸஃப்வான் என்னும் நபித்தோழர் ஆயிஷா (ரலி) அவர்களை மீண்டும் அவரது கூட்டத்தோடு சேர்க்க உதவுகிறார். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி அப்துல்லாஹ் இப்னு உபை என்ற நயவஞ்சகன் இருவரையும் இணைத்து அவதூறைப் பரப்பி ஊதிப் பெரிதாக்கினான். அவதூறில் அவனுக்கே அதிக பங்கிருந்தது என்பதையே அல்குர்ஆன் 24:11 வசனம் தெளிவு படுத்துகிறது.

''அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு'' எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' என்பானைக் குறிக்கிறது. (புகாரி)

அவதூறை முஸ்லிம்களில் உள்ளவர்களில் சிலர் நம்பினார்கள், இந்த அவதூறையேக் காரணமாக வைத்து ஆயிஷா (ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரித்து விடலாம் என சூழ்ச்சி செய்த ஸைனப்(ரலி) யின் சகோதரி ஹம்னா பற்றியும் மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவதூறை நம்பியவர்களையும் 'ஆய்ந்தறிய வேண்டாமா' எனக் கடிந்துரைக்கிறான் இறைவன்.

அவதூறு கூறிய கவிஞர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மரண வேளையில் ஆயிஷா (ரலி) அவர்களை சந்திக்கிறார்.

ஆயிஷா(ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் '(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறிர்கள்?' என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) 'அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?' என்று கூறினார்கள். 'ஹஸ்ஸான்(ரலி) (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்'' என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.''நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்'' என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து கவிதை பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி), 'ஆனால், நீங்கள் அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி)

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மீது சுமத்தப்பட்ட களங்கமும், அது துடைக்கப்பட்ட உண்மை வரலாறும் இதுதான். இஸ்லாத்தின் எதிரிகள் இதை எப்படித் திரிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

பெண்ணின் மீதும் சுமத்தப்படும் களங்கம், அந்தப் பெண்ணின் உறவினர்கள் அனைவரையும் விட கணவரையே மிக அதிர்ச்சியடைய வைத்துவிடும் இது மனித இயல்பு. இந்த சூழ்நிலையைத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். இது உண்மை என்று ஒத்துக் கொள்ளவும் முடியாமல், அவதூறு எனப் புறக்கணிக்கவும் முடியாமல் நபி(ஸல்) அவர்கள் இருக்கும் நிலையில், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாக கருதப்பட்ட ஸைத்(ரலி)க்கும், நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய உம்முஐமன் என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்) நபி(ஸல்) அவர்களை நெருங்கி ஆறுதல் சொல்கிறார்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும், நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவை மணந்தவருமான அலி இப்னு அபுதாலிப் (ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களை நெருங்கி ஆறுதல் சொல்கிறார்கள்.
இந்த இரண்டு சம்பங்களும் மேலே குறிப்பிட்டுள்ள புகாரியில் இடம் பெற்ற நீண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலி(ரலி) அவர்கள் கூறியதை இஸ்லாத்தின் எதிரிகள் இப்படித் திரிக்கிறார்கள்.

//அவரது நன்பர்கள், அவரைத் தேற்றி, "ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம்" என்று கூறினார்கள் என்றும்,//

இங்கும் நபி(ஸல்) அவர்களை பெண் பித்தராக சித்திரிக்க "ஆயிஷா இல்லாவிட்டால் என்ன, பெண்களுக்கா பஞ்சம்" என்று மாற்றார்கள் தமது கைச்சரக்கை சேர்த்து வரலாற்றைத் திரிக்க முயன்றிருக்கிறார்கள் இதுமட்டுமல்ல கீழ் காணும் திரிபும் அவர்களது கைவரிசையே.

//அப்போது பனி அல் முஸ்தாலிக் ஜாதியினருடன் சண்டையிட்டு, அவர்களது உடமைகளை கைப்பற்றி வெற்றிகொண்டபோது திடீரென மக்காநகர முஸ்லீம்களுக்கும் (முஹாஜிர்), மதீனா வாசிகளுக்கும் (அன்சாரிகள்) உரசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மதீனாவுக்கு திரும்பியவுடன் முஹாஜிர்கள் விரட்டப் படுவார்கள் என்று அன்சாரிகளுள் சிலர் மிரட்டல் விடுத்தனர். இதனை கேள்விப்பட்ட முகமது நபி அவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்காக இரவோடிரவாக மதீனாவுக்கு திரும்ப முடிவெடுத்தார்.//

(இன்னும் வரும்)
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்.
அன்புடன்
அபூ முஹை.

Friday, December 17, 2004

மாற்றாரின் பார்வையில் இஸ்லாம். வன்முறை- தீவிரவாதம்.

ஒவ்வொரு சமுதாயத்திலும் சில 'தறுதலைகள்' இருப்பது போல் முஸ்லிம் சமுதாயத்திலும் சில தறுதலைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அறிவிழந்த தறுதலைகள் செய்யும் தவறை அந்த ஒட்டு மொத்த சமுதாயத் தவறாக வர்ணிப்பது, புண்பட்ட நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது.

முஸ்லிம்களில் சிலர் செய்யும் வன்முறைச் செயல்களை "இஸ்லாமிய வன்முறை, தீவிரவாதம்" என்று மத முத்திரை குத்துவதும் வன்முறைச் செயல்களை வெறுக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை துன்பத்திற்குள்ளாக்குவது. எரியும் புண் காக்கையறியாது, என்பார்களே அதை ஒத்திருக்கிறது. என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் 'தீவிரவாதத்தை" ஆதாரிக்கிறதா..? என்பதைப் பார்ப்பதற்கு முன்..

மத ஆய்வு மனிதனுக்கு அவசியம். ஆய்வின் விமர்சனத்துக்கு அந்த மத ஆதார நூல்களே உரை கல்லாக இருக்க வேண்டும் என்பது அதைவிட அவசியம். எம்மத விமர்சனமும் அம் மதம் போதிக்கும் நூலை நேரடியாக விளங்கி விமர்சிக்க வேண்டும். மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயல்பாடுகளைக் கொண்டு ஒரு மதத்தை விமர்சிப்பது அறிவுடைமையல்ல! என்பதை மனதில் பதித்துக் கொண்டு தொடர்வோம்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று குற்றம் சாட்டுபவர்கள், தமது விமர்சனத்துக்கு சான்றாக இறைவசனமோ, ஆதராப்பூர்வமான நபிமொழியையோ ஒன்றைக் கூட எவராலும் சமர்ப்பிக்க முடியாது. மாறாக தீவிரவாதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு துடைத்து எறிவதையே இஸ்லாம் விரும்புகிறது. என்பதை கீழ்காணும் வசனத்தில் விளங்கலாம்.

''நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும் எவனொருவன் ஒரு மனிதரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்''.. (அல்குர்ஆன் 5:32)

இந்த வசனத்தை ஒரு முறைக்குப் பலமுறைப் படித்துப் பாருங்கள். எந்த விளக்கவுரையும் தேவையில்லாத அளவிற்குத் தெளிவாக - வெளிப்படையாகவே மனிதநேயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்து இயம்புகிறது. தீவிரம் - வன்முறை செயல்களுக்கு சாவு மணி அடிக்கிறது.

தனியொரு மனிதனை எவன் கொன்றானோ அவன் முழு மனித இனத்தையே கொலை செய்து விட்டான் - அதாவது மனிதத்தையே அழித்து விட்டான். அவன் மனிதனாக இருப்பதற்கே லாயக்கற்றவன் என்று ஒதுக்கி விடுகிறது.

எவனொருவன் தனி மனிதனை வாழ வைக்கிறானோ அவன் முழு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போலாவான் அதாவது மனித இனத்தை - மனிதத்தைக் காப்பாற்றி விட்டான். இதைத்தான் இஸ்லாம் வரவேற்கிறது. இந்த வசனம் நேரடியாக மனிதர்கள் என்று மனித இனத்தை நோக்கிப் பேசுகிறது. விசுவாசம் கொண்டவர்கள், விசுவாசம் கொள்ளாதவர்கள் என பிரித்துச் சொல்லவில்லை.

ஒரு மனிதனை இறப்பிலிருந்து காப்பாற்றுவதற்கு பல வழிகள் உள்ளன. ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டவனாகவோ, காயம் பட்டவனாகவோ இருக்கலாம். அவன் எந்த நாட்டை, அல்லது எந்த இனத்தை, அல்லது எந்த நிறத்தைச் சார்ந்தவன் என்பது முக்கியமல்ல. அவனுக்கு உங்களது உதவித் தேவைப்படுகிறது என்று நீங்கள் அறிந்தால், அப்பொழுது அவனது நோய்க்கோ, காயங்களுக்கோ சிகிட்சை அளிக்கும் ஏற்பாடுகளைச் செய்வது உங்கள் மீது கடமையாகும்.

அவன் பட்டினியால் செத்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அவனுக்கு உணவு வழங்கி அவனை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவது உங்கள் கடமையாகும். அவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தாலோ, உயிர் போகும் ஆபத்தில் சிக்கியிருந்தாலோ அந்த ஆபத்துகளிலிருந்து அவனைக் காப்பாற்றுவது உங்கள் மீது கடமையாகும்.

இப்போது சொல்லுங்கள், 'ஜிஹாத்'(?) என்ற பெயரால் வன்முறைகளில் ஈடுபட்டு மனிதக் கொலைகள் புரியும் பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா?

வன்முறைச் செயல்களால் தனக்கு அறிமுகமே இல்லாத மனித உயிர்களைப் படுகொலை செய்பவன் எப்படி உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்?

கொலைக்குப் பதிலாக கொலையாளியின் உயிரைப் பறிப்பதாக இருந்தாலும் சரி. அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பியதற்கான தண்டனையாக இருந்தாலும் சரி, அதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றம்தான் இதைப் பற்றிக் கட்டளையிட வேண்டும். இந்த உரிமை தனிப்பட்ட மனிதனுக்கு வழங்கப்படவில்லை.

இது போல் பிற நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால் அதை முடிவு செய்யும் உரிமை முறையாக அமைக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே உண்டு. பூமியில் குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததற்காக ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையும், அதிகாரமும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதன், உயிரைப் பறித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடாது என்பது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்துப்பட்டுள்ள கடமையாகும்.

யாராவது ஒருவன், ஒரு மனிதனைக் கொன்று விட்டால் அவன் மனித இனம் முழுவதையுமே வெட்டிச் சாய்த்ததுக்குச் சமமாகும். இதே கட்டளை அல்குர்ஆனின் வேறொரு இடத்தில் மீண்டும் சொல்லப்படுகிறது. ''அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொல்லாதீர்கள்" (அல்குர்ஆன் 6:151)

('காஃபிர்களைக் கொல்லுங்கள்' என்ற அல்குர்ஆன் 9:5 வசனத்தைத் ''திரித்து'' விமர்சிப்பவர்கள் அல்குர்ஆன் 5:32, 6:151 ஆகிய வசனங்களை சிந்தித்துணரட்டும்.)

''இணைவைத்தலுக்கு அடுத்தபடியான மிகப் பெரும் குற்றம் மனித கொலையாகும்'' என்று இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அடுத்து
மனிதனின் நீதி பெறும் உரிமையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாருங்கள். இந்த உரிமை மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் மதிப்பும் மிக்கதாகும். இம்மாபெரும் உரிமையை மனிதனுக்கு 'மனிதன்' என்ற அந்தஸ்திலேயே இஸ்லாம் வழங்குகிறது.

''ஒரு சாராரின் மீது நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பு உங்களை அத்துமீறலான செயல்களுக்குத் தூண்டிவிட வேண்டாம்''.

''நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்''. (அல்குர்ஆன் 5:2)

ஓ நம்பிக்கையாளர்களே!... ''எந்தவொரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள், இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்''. (அல்குர்ஆன் 5:8)
ஓ நம்பிக்கையாளர்களே! ''நீங்கள் நீதியைக் கட்டிக் காப்போராக விளங்குங்கள். உங்களுக்கோ, அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்''. (அல்குர்ஆன் 4:135)

இப்படி, மனித நேயத்திற்காக, மனித உரிமைக்காக, இஸ்லாம் வழங்கியுள்ள ''வழிகாட்டல்களை'' எழுதிக் கொண்டே இருக்கலாம்.

சில அறிவிலி முஸ்லிம்களின் செயல்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பீடு செய்வது அறிவு சார்ந்த வாதமல்ல. இஸ்லாம் என்பது 'வழிகாட்டல்' மாத்திரமே. அதைப் பின்பற்றுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. பின்பற்றாதது முஸலிம்களின் தவறே தவிர இஸ்லாத்தின் குற்றமாகாது. ''இஸ்லாமிய வன்முறையின் அடித்தளம்" என்ற தலைப்பு சிறு பிள்ளைத் தனமாக இருப்பதால் இஸ்லாம் - முஸ்லிம் என்பது பற்றி அடுத்த பதிப்பில் விளக்குவோம்.

அதற்கு முன்...
//கா பிர்களின் பெண்டிரெல்லாம் விபச்சாரிகள் என்று கூறியிருப்பதையும்[ திருக்குரான் வசனம் 24:3], அந்தக் காலகட்டத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுந்த ஆழ்வார்களின் பாடல்களோடு ஒப்பிடுவது சரியல்ல.//
மாற்று மத பெண்டிரெல்லாம் எமக்கும் சகோதரிகளே! முஸ்லிம் பெண்களைத் தவிர காஃபிர்களின் பெண்டிரெல்லாம் விபச்சாரிகள் என்று அல்குர்ஆன் 24:3 வசனம் கூறுவதாக சகோதரர் நேசகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இதில் அவர் நேர்மையுள்ளவராக இருந்தால், அந்த வசனத்துக்கு அதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும். இல்லையேல் சகோதரர் நேசகுமார் பொய்யர் என்பதை நாம் நிரூபிப்போம்.

அன்புடன்
அபூ முஹை

Friday, December 10, 2004

போலித் தனமான உறவுகளை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை!

மாற்றாரால் காமுராக சித்தரித்த நபி - ஸைனப் திருமணம். சென்ற பதிவின் தொடர்ச்சி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உண்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தீர்மானிப்பதை விட நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற சந்தர்ப்பங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபி(ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எதுவென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாராமோ தேவைப்படாது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.

ஸைத்(ரலி) அவர்கள் இயல்பிலேயே கோஞ்சம் முன் கோபியாக இருந்தார்கள். ஸைனபைத் திருமணம் செய்வதற்கு முன் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய உம்முஐமன் என்ற பெண்ணை ஸைத்(ரலி) திருமணம் செய்திருந்தார். இவ்விருவருக்கும் 'உஸாமா' என்ற மகன் பிறந்தார். ஸைதைப் போலவே உஸாமாவையும் நபி(ஸல்) அவர்கள் நேசித்தார்கள். அதன் பின்னர் ஸைத்(ரலி) ஸைனபைத் திருமணம் செய்தார். ஸைனபைத் தலாக் - விவாகரத்துக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸுமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸுமையும் விவகாரத்துக் கூறினார். அதன் பிறகு அபூலஹபுடைய மகள் துர்ரா என்பவரைத் திருமணம் செய்தார். (அல் இஸாபா)

இந்த விவரங்களை இங்கே கூறுவதற்குக் காரணம் ஸைத்(ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக்காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும். ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஸைத்(ரலி)அவர்கள் தொடர்ந்து விவாகாரத்து விட்டுக்கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தையே எடுத்துக் காட்டுகிறது.

ஸைனப்(ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷி குலம் பற்றி உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமுகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இந்த இருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபி (ஸல்)அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப் போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போன்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார்கள். ஆனாலும் அவர் விவாகரத்து விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவதுதான் அவ்விருவருக்கும் நல்லது (தாம் திருமணம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட தான் காரணமாகி விட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இதுதான் உண்மையில் நடந்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.

''உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள்! என்று கூறினீர், அல்லாஹ் வெளிப்படுத்துக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர்! அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன்''. (அல்குர்ஆன் 33:37)

ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக் கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதைக் கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்தத் துணிவதில்லை. அனுபவப் பூர்மாக பலரும் இந்த நிமையைச் சந்திக்கின்றனர்.
இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப் படக் கூடிய அளவுக்கு கீழ்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச் செய்தியை முற்றாக நிராகரித்து விடுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம். நபி(ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவகாரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல் படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் காரணத்தையும் அவனே கூறுகிறான்.
நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும், அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக - சுவீகாரப் புத்திரனாக எடுத்துக் கொள்வர். 'வளர்ப்பு மகன்' எனப் பிரகடனம் செய்யப்பட்டவர் பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.

வளர்த்தவர் இறந்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது ''தந்தை மகன்'' உறவு அவ்விருவருக்குமிடையே உண்மையில் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உண்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர். என்பது இவர்களது நம்பிக்கை.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான - தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையிலும் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்த்தெறிவதற்காக நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான 'ஸைது'டைய மனைவியை 'ஸைது' விவகாரத்துச் செய்த பின், நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்குமுன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்பட வேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.

முதல் காரணம்!
தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இவன்தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர்தான் இருக்க வேண்டும். எனக்குத் தம்பியாக இவர்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக் கூடியதாகும். இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

இரண்டாவது காரணம்!
யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது. பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை 'மகன்' என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம்பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனை..

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்ற இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மறைந்து, யாராவது செல்வந்தர்கள் 'தத்து' எடுக்க மாட்டார்களா? என்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடம் மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.

மூன்றாவது காரணம்!
எவ்வளவுதான் பாசத்தைப் பொழிந்து ஒருவனைத் 'தத்து' எடுத்து வளர்த்தாலும் பெற்ற மகன் போல் வளர்பபு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடியாது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?

வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாகப் போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன் அவர் சீக்கிரமாக சாகமாட்டாரா? என்று எதிர்பார்ப்பான். இரத்தம் சம்மந்தம் இல்லாததாலும், இதயப் பூர்வமான நேசம் இல்லாததாலும் சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்வைப் பெறுவதுதான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

நான்காவது காரணம்!
ஒருவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும். அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமெக்கெல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்து விட்டதே என்று எண்ண மாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. எனெனில் மகன் என்ற உறவு மற்ற உறவுகளை விட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து 'மகன்' என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்மந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள். பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?

ஐந்தாவது காரணம்!
மேற்கூறிய காரணங்களால் எப்போழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகைக்கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகி விடுகின்றது. ஒரு போலித்தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.

ஆறாவது காரணம்!
தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். யாரோ ஒருவரைத் தந்தை என்று அதுவும் உண்மையான தந்தை போன்று கருதுவதை விட ரோஷங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும். மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற - இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.

இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித்தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னாள் மனைவியை நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லிக் காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

''ஸைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர் நாம் அவளை உமக்கு திருமணம் செய்வித்தோம். ஏனென்றால் மூஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள். தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாத என்பதற்காக இது நடை பெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்ளை அல்லாஹ் உண்டாக்கவில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப் புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகிறான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான். (அல்குர்ஆன் 33:4)

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். (அல்குர்ஆன் 33:5)

உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 58:2)

உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது. (அல்குர்ஆன் 4:23)

இந்த வசனங்களில் போலித் தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபி (ஸல்) அவர்கள் ஸைனபை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும்தான் சிலருக்கு இன்னமும் இருக்கலாம்! அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டித்தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால், அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் செய்து விடுவார்களே, என்பதே அந்தச் சந்தேகம்.

மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோன்றினாலும் சிந்திக்கும் போது தவறு என்பது தெளிவாகும்.

திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வெண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன் வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களை செய்து தான் ஆக வெண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

காலம் காலமாக 'மகனுடைய மனைவி' என்றே நம்பி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறுவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது, தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் காண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.

உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபி(ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபி(ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.

(''இறைத்தூதர்கள்) இறைவனின் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது. (அல்குர்ஆன் 33:39)
எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து 'அஞ்சுவதற்குரிய' ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.

இனி..
நபி(ஸல்) அவர்கள் தமது அறுபதாம் வயதில் (ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு) ஹுயய் என்பவரின் மகள் ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இது பற்றி அடுத்த பதிப்பில்...

Wednesday, December 08, 2004

மாற்றாரால் காமுகராகச் சித்தரித்த நபி - ஸைனப் திருமணம்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையில் (ஹிஜ்ரி) மூன்றாம் ஆண்டு, நபியவர்களின் ஐம்பத்தாறாவது வயதில், ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் திருமணங்களிலேயே விஷேசமாக மாற்றாரால் விமர்சிக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களைக் காமுராகச் சித்தரிக்க இந்தத் திருமணத்தை சான்றாகக் கூறுகின்றனர்.

இதில் மாற்றாரின் மீது குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயமும் இல்லை. நம்மவர்களே இத்திருமணத்திற்கு கொச்சையானக் கற்பனைக் கதையை உருவாக்கி ஏடுகளில் எழுதி வைத்திருப்பதால் அதனடிப்படையில் இத்திருமணம் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகின்றது. ஆகையால் இது பற்றிய முழு விபரங்களையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
கதீஜா (ரலி) அவர்கள் உக்காழ் எனும் அரேபியாச் சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட ஹாரிஸாவின் மகன் ஸைத்(ரலி) அவர்களை விலை கொடுத்து வாங்கினார்கள். சிறுவரான அவர் கதீஜா(ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்.
கதீஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை மணந்தவுடன் அந்த அடிமைச் சிறுவரை நபி (ஸல்)அவர்களுக்கு வழங்கி, நீங்கள் விரும்பினால் இச்சிறுவரை அடிமையாகவே வைத்துக் கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் இவரை விடுதலை செய்து விடலாம் என்று கூறிவிட்டார்கள்.
இதற்குப்பின் அவர் நபி(ஸல்) அவர்களின் பணியாளராக இருக்கலானார். இந்த நிலையில் தம் மகன் மக்காவில் அடிமையாக இருப்பதை அறிந்த ஹாரிஸாவும் அவரது சகோதரர் கஃபு என்பவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். தம் மகனை விடுதலை செய்யுமாறும், அதற்குரிய விலையைத் தந்துவிடுவதாகவும் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள் ''உங்களுடன் வருவதற்கு ஸைத் ஒப்புக் கொண்டால் நீங்கள் தாராளமாக அவரை அழைத்துச் செல்லலாம். எனக்கு நஷ்ட ஈடு எதுவும் நீங்கள் தர வேண்டியதில்லை. அவர் உங்களுடன் வர விரும்பாவிட்டால் அவரை உங்களுடன் அனுப்ப இயலாது'' என்ற கூறினார்கள்.
இதன் பிறகு 'ஸைத்' அவர்களிடம் வந்தவர்கள் பேசிப் பார்த்தனர். ''முஹம்மது என்னை மிகவும் சிறந்த முறையில் நடத்துகிறார். அவரை விட்டு என்னால் வர இயலாது'' என்று ஸைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் ''ஸைத் இனிமேல் என் மகனாவார் அவர் இனி அடிமை இல்லை. நான் அவருக்கு முன் இறந்து விட்டால் என் சொத்துக்களுக்கு அவர் வாரிசாவார். எனக்கு முன் அவர் இறந்து விட்டால் அவருக்கு நான் வாரிசாவேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் ஸைதுக்குமிடையே உள்ள உறவைப் புரிந்து கொண்ட அவரது தந்தை மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். இந்த நிகழ்ச்சி நடக்கும்போது முஹம்மது (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படவில்லை. (அல் இஸாபா)
அன்றிலிருந்து நபி(ஸல்)அவர்கள் மதீனா வந்து இரண்டு ஆண்டுகள்வரை (ஸைத் இப்னு முஹம்மத்) முஹம்மதின் மகன் ஸைத் என்றே குறிப்பிட்டார்கள்.
''அவர்களை அவர்களின் தந்தையின் பெயராலேயே குறிப்பிடுங்கள்".. (அல்குர்ஆன் 33:5) வசனம் அருளப்படும் வரை ''முஹம்மதின் மகன் ஸைத்" என்றே அவரைக் குறிப்பிட்டு வந்தோம். (புகாரி, முஸ்லிம்)
சொந்த மகனைப் போலவே ஸைதை நபி(ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாம் வயது முதல் ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஸைத் அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபி(ஸல்) அவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அதுபோல் ஸைத் அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபி(ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள் என்பதைத் தெளிவு படுத்திடவே இந்த விபரங்கள்.
நபி(ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதரி 'உஸைமா' என்பாரின் மகள் ஸைனப் அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை ஸைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணை - தமது மாமி மகளை ஒரு அடிமைக்குத் திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய சமூக அமைப்பில் கற்பனை செய்தும் பார்க்க முடியாததாகும்.
ஜஹ்ஷுடைய மகள் ஸைனபுக்கும், ஹாரிஸாவின் மகன் ஸைதுக்கும் நடந்த இத் திருமணம் என்ன காரணத்தாலோ ஓராண்டுக்கு மேல் நீடிக்கவில்லை. அடிக்கடி அவர்களிடையே பிணக்குகள் ஏற்படலாயிற்று. குடும்ப அமைதி குலைந்து போகும் நிலை உருவாயிற்று. இறுதியில் ஸைனபை விவாகரத்து (தலாக்) கூறும் நிலைக்கு ஸைத்(ரலி) ஆளானார். இதுபற்றி திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது.
(நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர், ''அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்'' என்று சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர். ஆனால் அல்லாஹ் அவன் தான் நீர் பயப்படுவதற்குத் தகுதியானவன்,... (அல்குர்அன் 33:37)
ஸைத் தம் மனைவி ஸைனபை விவகாரத்து (தலாக்) கூற விரும்பியதும், அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் அவர் ஆலோசனைக் கலந்ததும் நபி (ஸல்) அவர்கள் ''தலாக்'' கூற வேண்டாம்" என்று அவருக்குப் போதித்ததும் இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.
இதே வசனத்தின் இறுதியில் ''அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்திருந்தீர்'' என்று இறைவன் கடிந்துரைக்கிறான். தம் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட விஷயம் என்ன? என்பது இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்படவில்லை. அதைக் கண்டுபிடிக்க முயன்ற அறிவிலிகள் எவ்வித ஆதாரமுமின்றி பல்வேறு கதைகளைப் புனைந்து தம் திருமறை விரிவுரை நூல்களில் எழுதி வைத்துள்ளனர்.
ஸைத் வெளியே சென்றிருந்த போது நபி(ஸல்) அவர்கள் ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து விட்டார்களாம். ஸைனபின் சொக்க வைக்கும் பேரழகைக் கண்டவுடன் அவர்களை அடைந்து விட வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினார்களாம்! ஸைத் தலாக் கூற முன்வந்ததும் ''தலாக் கூற வேண்டாம்'' என்று வெறும் வாயளவில் கூறிவிட்டு மனதுக்குள் ''அவர் தலாக் கூற வேண்டும்'' அதன் பிறகு தாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களாம். இதைத்தான் இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். இப்படிப் போகிறது கதை.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தம் மனதில் எண்ணியது இது தான் என்று அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்ததாக நபி(ஸல்) அவர்களும் சொல்லவில்லை. ஸைனபும் சொல்லவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த அறிவிப்பாளர் வரிசையும் கிடையாது. ஒரு ஆதாரமுமின்றி இவ்வாறு எழுத எப்படித் துணிந்தார்கள்? நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் மறைத்திருந்த எண்ணத்தை நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் ஊடுறுவி அறிந்தார்களா? அல்லது நபி(ஸல்) அவர்களின் கடந்தகால வாழ்வில் ஏதேனும் களங்கத்தைக் கண்டு அதனடிப்படையில் இவ்வாறு அனுமானம் செய்தார்களா? நபி(ஸல்) அவர்களைக் களங்கப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இஸ்லாத்தின் எதிரிகள் இந்தக் கதையை புனைந்துள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கதை எவ்வளவு பொய்யானது என்பதைத் தக்க சான்றுகளுடன் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், நபி(ஸல்) அவர்கள் உள்ளத்தில் மறைத்துக் கொண்ட மர்மம் என்ன? என்பதையும் கண்டறிய வேண்டும். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
ஸைத்(ரலி) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது ஸைனப்(ரலி) அவர்களின் வயது முப்பத்தி நான்கு அல்லது முப்பத்தி ஐந்து இருக்கலாம். நேரடியாக இது பற்றிக் கூறப்படாவிட்டாலும் கிடைக்கின்ற குறிப்புகளை வைத்து இதை நாம் முடிவு செய்ய இயலும்.
அது வருமாறு:-
ஸைத்(ரலி) அவர்களும் ஸைனப்(ரலி) அவர்களும் ஒரு ஆண்டு அல்லது அதைவிட சற்று அதிகம் இல்லறம் நடத்தியுள்ளனர். (பார்க்க இப்னு கஸீர்) நபி(ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்த போது ஸைனபுடைய வயது முப்பத்தி ஐந்து (பார்க்க அல் இஸாபா) ஸைனப்(ரலி) அவர்களின் இந்த முப்பத்தி ஐந்து வயதில் ஸைதுடன் வாழ்ந்த ஒரு ஆண்டைக் கழித்தால் ஸைதுடன் திருமணம் நடந்த போது ஸைனபின் வயது முப்பத்தி நான்காகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ஸைத் விவாகரத்துக் கூறியவுடன் (இத்தா முடிந்ததும்) உடனேயே நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ததை அல்குர்ஆன் 33:37 வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
ஸைனப்(ரலி) அவர்களுக்கு 34 வயதில் தான் முதல் திருமணம் நடந்திருக்கும் என்பதும் நம்புவதற்குச் சிரமமானது, சாத்தியக் குறைவானது. ஸைதை மணப்பதற்கு முன் அவர்கள் வேறு கணவருடன் வாழ்ந்து விதவையாகி இருக்க வேண்டும் அல்லது தலாக் கூறப்பட்டிருக்க வேண்டும். 34 வயது வரை முதல் திருமணம் நடக்காமலிருக்கும் அளவுக்கு வரதட்சணை போன்ற கொடுமைகள் அன்றைய சமுதாயத்தில் இருந்திருக்கவில்லை. வேறு காரணங்களும் இல்லை. இந்த அனுமானம் தவறாகவே இருந்தாலும் ஸைதைத் திருமணம் செய்யும் போது ஸைனபின் வயது 34 என்பது நிச்சயமான ஒன்று. நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்யும் போது 35 வயது என்பது அதை விடவும் நிச்சயமானது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு அந்தக் கதையின் தன்மையை நாம் அலசுவோம்.
நபி(ஸல்) அவர்களின் மாமி மகளாகிய ஸைனப் (ரலி)அவர்கள் சிறு வயது முதல் நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒருவராக வளர்கிறார். ஸைனப்(ரலி) பதினைந்து வயதில் பருவமடைந்தார்கள் என்று வைத்துக் கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களின் வயது 37, எவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் ஸைனபுடைய 35வது வயதில் அவரைத் திருமணம் செய்த போது நபி(ஸல்) அவர்களின் வயது 56.
நபி(ஸல்) அவர்களின் 37வது வயதில் (56வயதில் நாடுவதை விட அதிகம் பெண்கள் நாடக்கூடிய 37வது வயதில்) பருவ வயதிலிருந்த ஸைனப்(ரலி) அவர்களை சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பை நபி(ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள். மாமி மகள் என்ற நெருக்கமான உறவு அந்த வாய்ப்பை மேலும் அதிகமாக்கியிருந்தது. அவர்கள் நபியாக ஆன பின்னரும் பெண்களின் ஆடைகள் பற்றியும், அன்னிய ஆண்கள் முன்னிலையில் அலங்கரித்துக் கொள்ளலாகாது என்பது பற்றியும் இறைக் கட்டளை இறங்காத மக்கா வாழ்க்கை முழுவதும் ஸைனப் ஆவர்களைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் வாய்ப்பு நபி(ஸல்) அவர்களுக்கு வாய்த்திருந்தது.
நபி(ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்த தமது ஐம்பத்தி மூன்றாம் வயது வரை ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள். 17வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 20வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், 25வயது ஸைனபைப் பார்த்திருக்கிறார்கள், பெண்களின் அழகு பிரகாசிக்கக்கூடிய 15வயது முதல் 30 வரையிலான பல்வேறு பருவங்களில் ஸைனபைப் பார்த்துப் பேசிப் பழகியிருக்கிறார்கள்.
இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஸைனபின் அழகில் சொக்கிவிடாத நபி(ஸல்) அவர்கள் 34 வயதை ஸைனப் அடையும் போது அதுவும் இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் போது அவரது பேரழகில் சொக்கி விட்டார்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஏற்க முடியுமா?
நபி(ஸல்) அவர்களின் 50வயது வரை அவர்ககளுக்கு கதீஜா(ரலி) மனைவியாக இருந்தார்கள். கதீஜா(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் நபி(ஸல்) அவர்களுக்கு மனைவியின்பால் தேவையிருந்தது. கதீஜா(ரலி) மூலம் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவாவது அவர்களுக்கு மனைவி அவசியமாக இருந்தது. ஸைனபின் பேரழகில் மயங்கி விட்டார்கள் என்பது உண்மையானால் கதீஜா(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகாவது ஸைனபை மணந்திருக்கலாமே! அதற்குத் தடை எதுவும் இருக்கவில்லையே! இன்னும் சொல்வதென்றால் கதீஜாவுக்குப் பின் மணந்த ஸவ்தாவைவிட - ஆயிஷாவைவிட - அதிக சிரத்தையுடன் நபி(ஸல்) அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள இவர்களுக்கல்லவா அக்கரை அதிகமிருக்கும். சொந்த மாமி மகள் என்ற உறவு இவர்களுக்கு மட்டும் தான் இருந்தது.
நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஸைனப்(ரலி) அவர்கள் விரும்பாதிருக்கலாம், அதன் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களை மணக்காதிருக்கலாம் அல்லவா? என்ற ஐயம் எழுக்கூடும். அந்த ஐயத்தையும் பின் வரும் சான்று அகற்றி விடுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் (ரலி) மறுத்து விடுகிறார்கள். உடன் பின் வரும் இறை வசனம் இறங்கியது.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36) இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப்(ரலி) அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள். (இப்னு ஜரீர், இப்னு கஸீர்)
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பம் முதலே ஸைத்(ரலி) அவர்களை மணந்து கொள்ள ஸைனப்(ரலி) விரும்பவிலலை என்பதும், நபி (ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காகவே, தமக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ள முன் வருகின்றார் என்பதும் தெளிவாகிறது. நபி(ஸல்) அவர்களின் வற்புறுத்தலுக்காக தமக்கு விருப்பமில்லாத இன்னொருவரைத் திருமணம் செய்ய முன்வந்த ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தால் மறுத்திருக்க முடியாது. ஸைத்(ரலி) விவாகரத்து செய்ததும் ஸைனப்(லி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்ததும், ஸைனப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை மணந்து கொள்ள ஆரம்ப காலத்தில் மறுத்திருக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்கிறது.
இன்னொரு கோணத்தில் சிந்திக்கும் போதும் அந்தக் கதை பொய்யானது என்பதைத் தெளிவாக உணரலாம். ஸைனபைப் பார்க்கத் தகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் பார்த்து ஆசைப்பட்டார்கள் என்றால் அந்தக் கதையை அன்றைய மக்கள் நன்றாகவே அறிவர். (அவர்களில் யாரும் அறியாவிட்டால் இதை எழுதி வைத்த நூலாசிரியர்களுக்குத் தெரிய முடியாது)
இந்தச் செய்தியை ஸைத் அவர்களும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவ்வாறு அறிந்திருந்தால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மீதும் ஆத்திரப்பட்டிருப்பார்கள். அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தையும் சந்தேகித்திருப்பார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காதது மட்டுமின்றி, தம் மனைவியைத் தலாக் கூறுவது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். அதன் பின்பும் நபி(ஸல்) அவர்களுடன் முன்னர் நடந்தது போலவே நடக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில், அன்பில், நடத்தையில் எதிலும் எந்த மாற்றமும் ஏற்படவே இல்லை. இதுவும் அந்தக் கதை பொய் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
இந்தக் கதை பொய்யானது என்று தெளிவான பின், மற்றொரு சந்தேகம் நீக்கப்பட வேண்டியுள்ளது. ''மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனதில் மறைத்து வைத்தீர்'' என்று அல்லாஹ் குறிப்பிடுவது எதை? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும்.
(அடுத்த பதிப்பில்)

Monday, December 06, 2004

தவறான புரிதலுக்கு தக்க பதில்.

சகோதரர் நேசகுமார், விமர்சிக்கும் நோக்கத்தில் இஸ்லாத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கிறார். அவற்றிற்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன் அனைத்து முஸ்லிம் சகோதரர்களையும் அழைத்து அவர் குறிப்பிட விரும்புவது இதுதான்...

//இங்கு நான் சலாஹீதீன் மற்றும் அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்புவது இதுதான். இஸ்லாத்தின் தத்துவக் கொள்கைகளுள் ஒன்று, முகமது நபி அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றவர்தாம் என்பது. அவர் கடவுள் அல்ல. அவர் தப்பே செய்யாதவர் அல்ல. அவர் பல முறை தவறுகள் செய்திருப்பதையும், வருந்தியிருப்பதையும், குழம்பியிருப்பதையும், அவரே தாம் தவறு செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளதையும் ஆரம்ப காலத்திய இஸ்லாமிய ஆவணங்களே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நன்கு இஸ்லாம் அறிந்த எந்த அறிஞரும் இவற்றை எடுத்துரைப்பர். பிற்காலத்திலேயே, இந்த நபி வழிபாடு ஆரம்பித்தது. நபி வழிபாடு என்றால், கோவில் எடுத்து சிலை வைத்து வழிபாடு செய்வது அல்ல. கடவுளைப் போன்று அவரை மானுடப்பிறழ்வுகளுக்கு அப்பாற்பட்ட அமானுடராக கருதுவதே நபி வழிபாடாகும்.//

இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே என்ற மனித இயல்பை இறைத்தூதர் முஹம்மது நபிக்கும் பொருத்துகிறார். இஸ்லாத்தின் தேர்ச்சியின்மை சகோதரர் நேசகுமார் இப்படி ஒரு கருத்தை வைத்திருக்கிறார். அவரின் தவறான கருத்து, முஹம்மது நபி இறைவனிடமிருந்து இறைச் செய்தியாகப் பெற்று மக்களுக்குப் பிரச்சாரம் செய்த முழு இஸ்லாத்தையும் சந்தேகிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதைத் தவிர்க்க இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.

முஹம்மது நபி மனிதரே.
ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும், அந்த மக்கள் பேசுகின்ற மொழியிலேயே, அந்த சமுதாயத்திலிருந்து ஒருவரை நபியாகத் தேர்ந்தெடுத்து அந்த மக்களிடையே இறைத்தூதராக அறிமுகப்படுத்துகிறான் இறைவன். இறைத்தூதர்கள் அனைவரும் மனிதர்களே, என்ற இஸ்லாத்தின் அடிப்படையில் முஹம்மது நபியும் மனிதரே.

(நபியே) நீர் சொல்வீராக, நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே!... (அல்குர்ஆன் 18:110)

முஹம்மது நபியின் பிறப்பு, வளர்ப்பு உண்ணுதல், பருகுதல், தூக்கம், மலஜலம் கழித்தல், இல்லறம், இறப்பு இவையாவுமே மனிதத்தகுதியை கடந்ததாக இருக்கவில்லை - அனைத்து வாழ்வுத்தன்மையிலும் சாதாரண மனிதன் என்ற நிலையிலேயே பலம் - பலவீனத்தைப் பெற்றிருந்தார்.

1.முஹம்மது நபி மக்காவை துறந்து மதீனாவில் அடைக்கலம் புகுந்த ஆரம்ப காலத்தில் மதீனாவாசிகள் விவசாயத்தில் பேரீச்ச மரத்திற்கு மகரந்த சேர்க்கை செய்யும் முறையைப் பார்த்துவிட்டு ''இப்படி செய்ய வேண்டாம்'' என்று நபி கூறியதால் மகரந்த சேர்க்கை முறையைக் கைவிட்ட மதீனாவாசிகள் அந்த முறை விளைச்சலை இழந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட முஹம்மது நபி. ''மார்க்க விஷயத்தில் நான் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உலக காரியத்தில் நீங்கள் அறிந்ததை செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.

2.அடிமையாக இருந்த பரீரா என்ற பெண்மணி விடுதலை அடைந்ததும் தன் கணவர் முஃகீஸ் என்பவரோடு வாழ விரும்பாமல் விவாகரத்து கேட்கிறார். தன் மனைவியைப் பிரிய மனமில்லாமல் மிகவும் துன்பத்திற்குள்ளாகிறார் முஃகீஸ். அவரின் துன்பத்தைக் கண்ட முஹம்மது நபி அவருக்காக பரீராவிடம் ''நீ முஃகிஸிடம் திரும்பிச் செல்லக்கூடாதா?'' என்று கேட்டார். அதற்கு பரீரா ''இறைத்தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?'' என்று கேட்க. முஹம்மது நபி ''(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார். அப்போது பாரீரா ''அவர் எனக்குத் தேவையில்லை'' என்றார்.

மேற்கண்ட இரு சம்பவங்களும் உலக விஷயத்தில் முஹம்மது நபியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. ஆனால் இறைத்தூதர் என்ற பதவில் எவரும் நெருங்க முடியாத அந்தஸ்தை அடைந்திருந்தார்.

இறைத்தூதர் முஹம்மது நபி.
''நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது... (அல்குர்ஆன் 18:110)

இறைவனோடு வஹீ (இறைச் செய்தி) யின் தொடர்பு உள்ளதால் இறைத்தூதர் பதவியில், இஸ்லாம் மார்க்கத்தில் பின்பற்றப்படத் தகுதியான ஒரே மாமனிதராகத் தனித்து விளங்குகிறார் முஹம்மது நபி. தவறு செய்யும் மனிதயியல்பு இறைத்தூதர் முஹம்மது நபிக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே என்ற சந்தேகத்திற்கிடமில்லாமல் இறைத்தூதர் இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கிறார் என்பதை கீழ்வரும் இறைவசனம் விளக்குகிறது.

(நபியே) நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்.. (அல்குர்ஆன் 52:48)
தூதுத்துவப் பணியில் இறைத்தூதருக்கு தவறு ஏற்பட்டு விடாமலும் - தவறு ஏற்பட்டால் உடனடியாக திருத்துவதற்காகவும் இறைவனின் நேரடிப் பார்வை தூதுத்துவத்தின் மீது இருந்தது.

1.நபியின் மக்கா வாழ்க்கை ஆரம்பகால பிரச்சாரத்தில், மேல்தட்டினர் என்று அழைக்கப்பட்டவர்கள் முஹம்மது நபியை சந்தித்து, ''நீர் சொல்வதை நாங்கள் ஏற்கிறோம். நீர் எங்களுக்கென்று தனியாக வகுப்பு நடத்த வேண்டும் அதில் கீழ்தட்டினர் எவரும் கலந்து கொள்ளக்கூடாது'' என்ற நிபந்தனையை வைத்தார்கள். இதைச் சரிகண்ட நபியைக் கண்டிக்கிறான்.மேல்தட்டு, கீழ்தட்டு என மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை இஸ்லாம் கற்பிக்கவில்லை. ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்த எண்ணி செயல்பட்ட உடனேயே தூதரை இறைவன் கண்டித்து விடுகிறான்.

2.உண்ண அனுமதிக்கப்பட்ட தேனை. முஹம்மது நபி இனி உண்ணமாட்டேன் என்று முடிவெடுத்ததை இறைவன் கண்டிக்கிறான்.

இஸ்லாம் மார்க்கத்தை போதிக்கும் இறைத்தூதர் மீது இறைவனின் கண்காணிப்பு தொடர்ந்து இருந்திருக்கிறது. என்பதை மேற்காணும் சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். மனிதன் தவறு செய்பவனே என்ற இஸ்லாத்தின் கருத்தோட்டம், ஒரிறைக் கொள்கையை பிராச்சாரம் செய்த இறைத்தூதர் முஹம்மது நபிக்கு பொருந்தாது - பொருத்தவும் முடியாது.

சகோதரர் நேசகுமார். இறைத்தூதர் அந்தஸ்தை மனிதத்தகுதிக்கு தாழ்த்தி தூதுத்துவத்தை சந்தேகத்திற்குட்படுத்திக் கீழ்கண்ட அவரின் கருத்தை வைக்கிறார்...

//முகமது நபிகளின் வாழ்வு பற்றிய விவாதங்கள், மாறுபட்ட கருத்துக்கள் முஸ்லீம்கள் மற்றும் ஏனையோரிடையே இருந்தாலும், அவர் அப்போது செய்தவையெல்லாம் ஒவ்வொரு முஸ்லீமும் இன்றும் செய்யவேண்டும் என்று வரலாறும், அக்காலச்சூழலும் அறியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மனித குலத்தை 1400 வருடங்கள் பின்னோக்கி கற்காலத்துக்கே எடுத்துச் செல்லும். ஆகவே, அவரது செயல்களின் பிண்ணனியை உணர்ந்து, இக்காலத்துக்கு ஏற்ற உதாரணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை பின் தள்ளுவது இஸ்லாமிய சமுதாயத்திற்கும், ஏனைய சமுதாயங்களுக்கும் நீங்கள் செய்யும் பெரும் சேவையாக இருக்கும். இதை இஸ்லாமிய சமுதாயத்தின் அறிஞர்கள், தலைவர்கள் முன்னெடுத்து செய்ய வேண்டும். இதுவே இறைவனுக்காக நீங்கள் செய்யும் சிறந்த இறைக்கொடை(ஜகாத்) ஆக இருக்கும் என்பதே என் கோரிக்கை.//

இவ்வாறு, இஸ்லாத்தை விட்டு வெளியேற முஸ்லிம்களுக்கெல்லாம் மறைமுக அழைப்பு விடுத்திருக்கிறார். இதை முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும் முன்னெடுத்து செய்ய வேண்டுமாம்.

இஸ்லாத்தை கற்கால மார்க்கமாக்கி, இக்கால உதாரணங்களை மட்டும் நபியின் செயல்களில் முன்மாதிரியாகப் பெற்றுக்கொண்டு மற்ற நபிச்செயல்களைப் புறக்கணிக்கச் சொல்கிறார். இஸ்லாத்தின் ஒரு செயலை வேண்டுமென்றே புறக்கணித்தாலும் அவன் குற்றவாளியாகி விடுவான். என்பதைத் தெரிந்தே இக்கருத்தை வைத்திருந்தால் இது வெளிப்படையான விஷமத்தனம் என்பதை சகோதரர் நேசகுமாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி..
நபி (ஸல்) அவர்கள் தமது 56வது வயதில் ஆறாவது மனைவியாக ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணந்து கொண்டதற்காக செய்யப்படும் விமர்சனத்துடன் இந்தத் திருமணம் மிக விஷேசமாக விமர்சிக்கப்படுவதுண்டு. அதன் உண்மை நிலையை அடுத்த பதிப்பில் பார்ப்போம்.

Saturday, December 04, 2004

முஹம்மது நபியைப் பின்பற்றுவதற்கான இறை வழிகாட்டல்

அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே) கூறும், நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்... (அல்குர்ஆன் 3:31)

மனிதன் இறைவனை நேசிப்பதற்கும், இறைவன் மனிதனை நேசிப்பதற்கும் அளவுகோல் முஹம்மது நபியைப் பின்பற்றுவதுதான் என்பதே இறைவனின் வழிகாட்டல்.

இனி...
நபி மனிதத்தன்மைக்கும் அப்பாற்பட்டவரா?
நபி தன்னைக்கடவுளாக வணங்க கட்டளையிட்டிருக்கிறாரா?
அடுத்த பதிப்பில் இவற்றைப்பார்ப்போம்.

சகோதரர் நேசகுமாரிடம் ஒரு வேண்டுகோள்.
நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஸஃபியாவின் வரலாற்றை கண்டு அதிர்ச்சியுற்றதாக எழுதியிருந்தீர்கள். அதிர்ச்சி தரும் அந்த வரலாற்று சான்று ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்களில் காண முடிகிறது என்றும் உறுதிபடுத்தியுள்ளீர்கள். ஸஹீஹ் முஸ்லிமில் நீங்கள் கண்ட அந்த ஹதீஸ் எண்ணை குறிப்பிட்டு எழுதுங்கள். தேவையான அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
அபூ முஹை.

முஹம்மது நபியை நேசித்தல்

விஷயத்துக்கு வருவோம்.

ஸலாஹுத்தீன் எழுதிய விமர்சனம் பற்றி சகோதரர் நேசகுமார் எழுதியவற்றிலிருந்து, முஹம்மது நபியையும், நபியின் மனைவிமார்களையும், கண்ணியமாக எழுதுங்கள் என்று கேட்டக்கொண்டிருக்கிறார் என்று விளங்க முடிகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் முஹம்மது நபியை தன் உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே) கூறும், உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும்விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)

அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்.
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது மக்களையும்விட நான் மிக்க அன்பானவராக ஆகும்வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவராக மாடடார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அபூஹுரைரா (ரலி) நூல்-புகாரி,)

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும்வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராகமாட்டார். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர், அனஸ்(ரலி) நூல்- புகாரி)

முஹம்மது நபியை நேசிக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமுதாயம் மட்டும் செயல்படுத்த வேண்டிய கட்டளை. பிற சமூகத்தினரை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. நபியை நேசித்தல் - நபியின் சொல், செயல். அங்கீகாரம் இவற்றை அறிந்து பின்பற்றுவதில்தான் முழுமைபெறும். நபியைப் பின்பற்றுவது ஒரு முஸ்லிமின் தலையாயக்கடமை.

இன்னும் வரும்.

Friday, December 03, 2004

இஸ்லாத்தின் மீதான விமர்சன, விளக்கம்

அன்பின் தமிழ் சகோதரர்களுக்கு.
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்.

இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் என்ற தலைப்பில் 'இஸ்லாம் பற்றிய எதிர்மறை விவாதங்கள், கருத்துக்கள். என சகோதரர் நேசகுமார் தனது விமர்சனங்களை இஸ்லாத்தின் மீது பதித்திருக்கிறார். இதுவரை இஸ்லாம் முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லையோ? என்ற சந்தேகம் அவரின் தலைப்பில் தொக்கியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆரோக்கியமான விமர்சனங்களை இஸ்லாம் வரவேற்று, தக்க விளக்கங்களையும் வழங்கியே வந்திருக்கிறது. சகோதரர் நேசகுமாரின் குற்றச்சாட்டுக்கள் எதுவும் புதியதல்ல. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இஸ்லாத்தை நோக்கி எறியப்பட்ட குற்றச்சாட்டுக்களே. சமகாலத்திலேயே பதிலளிக்கப்பட்டிக்கிறது.

இன்னும் வரும்

சுட்டிகள்

    Linked to IslamKalvi.com

    சத்தியமார்க்கம்.காம்

    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிட்டு திரட்டப்படுகிறது